திங்கள், 1 அக்டோபர், 2018

பொய்களின் மொத்த உருவமாய்......

கடந்த செப்டம்பர் 24 தேதியன்று சிக்கிம் மாநிலம் பேக்யாங்கில் பிரதமர் மோடி அம்மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றினார். 
அவ்வுரையில் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு வரையிலான 67 ஆண்டுகளில் வெறும் 65 விமான நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டதாகவும், ஆனால் தனது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 35 விமான நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால், அது முற்றிலும் பொய்யான தகவல் என்பது தெரியவந்திருக்கிறது. 

கடந்த 2017-18 விமான போக்குவரத்துத்துறையின் ஆண்டறிக்கையின்படி இந்தியாவில் 23 சர்வதேச, 78 உள்நாட்டு, 8 சுங்கத்துறை மற்றும் 20 பாதுகாப்புத்துறை விமான நிலையங்கள் என மொத்தம் 129 விமானநிலையங்கள் விமானநிலைய ஆணையத்தின் கீழ் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், கடந்த ஜூலை 19 மற்றும் ஆகஸ்ட் 8 அன்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு 129ல் 28 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.
மேலும், கடந்த 2013-14 விமான போக்குவரத்துத்துறையின் ஆண்டறிக்கையின்படி, இந்தியாவில் 125 விமானநிலையங்கள் இருப்பதாகவும் அதில் 94 செயல்பாட்டில் இருப்பதாகவும், 31 செயல்பாட்டில் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 
அதன்படி, கடந்த 2014 பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து வெறும் 7 விமான நிலையங்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடி திறந்து வைத்த பேக்யாங் விமான நிலையத்திற்கான திட்டம் கூட கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது எனவும், விமான நிலையத்தின் 83% பணிகள் 2014 ஆம் ஆண்டே நிறைவு செய்யப்பட்டதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
"வெளிநாடுகளிலும்,மக்களவைக் கூட்டங்களிலும்,தேர்தல் பரப்புரைகளில் நம் பிரதமர் மோடி பேசுவதெல்லாம் பொய்யாகவே இருக்கிறது அதை சுட்டிக்காட்டினால் மோடி அதை கண்டுகொள்வதில்லை.இந்திய மக்களுக்காக என்று செயல்படும் ஊடகங்களும் உண்மையை மக்களிடம் கொண்டு செல்வதில்லை."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* பொருளாதாரம் அதிக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று மத்திய ஆட்சியாளர்கள் பெருமை பேசுகிறார்களே?
மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது என அரசாங்கம் கூறுவது சந்தேகத்திற்குரியது. அத்தகைய வளர்ச்சி எங்காவது வெளிப்படுகிறதா? அரசு வறுமைக் கோட்டிற்குள்ளே உள்ள மக்களை வெளியே கொண்டு வந்துள்ளது; 28 சதவீத மக்கள் தான் இன்று வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. இது எப்படி சாத்தியம்? இதோ 2014க்கு பிறகு ஏற்றத்தாழ்வுகள் எவ்வளவு விரிவடைந்துள்ளது என்பதைப் பாருங்கள்! 2014ல் 1 சதவீத உயர்தட்டு செல்வந்தர்கள் தேச செல்வத்தில் 48 சதவீதத்தைக் கைவசம் வைத்திருந்தனர். 2016ல் இது 53 சதவீதமாக உயர்ந்தது. 2017ல் 78 சதவீத செல்வம் 1 சதவீதம் பேரிடம் உள்ளது. செல்வந்தர்களின் செழிப்பும், வறுமை ஒழிப்பும் எப்படி ஒரு சேர நடந்தேற முடியும்?
*பொருளாதார வளர்ச்சி பற்றிய அரசின் கூற்று பற்றி என்ன கருதுகிறீர்கள்?
இவர்கள் சொல்கிற வளர்ச்சி, அத்தகைய வளர்ச்சியை உருவாக்குபவர்களுக்கு போய்ச் சேரவில்லை என்பதுதான். மக்களின் வருமானம் வீழ்ச்சியடைந்து கொண்டே பேசுகிறது. பணவீக்கம் மட்டுப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் தினந்தோறும் நாம் நுகரக் கூடிய அத்தியாவசியப் பொருட்களைப் பாருங்கள்! அதன் விலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெட்ரோல் விலை உயர்வு இன்னும் நிலையைச் சிக்கலாக்குகிறது.
இன்னொரு புறம் அரசாங்க இயந்திரம் திட்டமிட்டு தொழிலாளர்களின் வருமானம் மீது தாக்குதல் தொடுக்கிறது. குறைந்தபட்ச ஊதியத்தை மறுப்பது, சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தை அமலாக்க முயற்சி இல்லாமை, எளிதில் தொழில் நடத்துவதை உறுதி செய்தல் என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படுவதற்கு அரசே துணை போதல் ஆகியன அரங்கேற்றப்படுகின்றன.
விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 25 நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை. இதனால் நகரங்களுக்கு இடம்பெயரும் அவர்கள் வேலையில்லா பட்டாளத்தில் சேருகிறார்கள். இது நகர்ப்புற ஊதியங்களையும் குறைத்து விடுகிறது.

* தனியார் துறையே பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வல்லமை பெற்றது என்கிறார்களே!
இப்படிச் சொல்லி எவ்வளவோ சலுகைகள் கொடுத்தும் தனியார் முதலீடுகள் பிக் அப் ஆகவில்லை. பொதுத்துறை நிறுவனங்களே பொருளாதாரம் விழுந்து விடாமல் தாங்கிப் பிடிக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அவர்களை படிப்படியாக நெருக்குகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டு உபரியைக் கொண்டு எந்த பங்குகளை வாங்குவது அல்லது எப்போது அவற்றின் பங்குகளை விற்பது எனக் கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் முதலீட்டு உபரியை சுதந்திரமாக வைத்திருக்க முடியவில்லை. அரசு ஒரு நிறுவனத்தின் பங்கு விற்பனையை மேற்கொள்ளும்போது அதனை வாங்குமாறு மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் வற்புறுத்தப்படுகின்றன. தொழில் நடவடிக்கைகள் வாயிலாக இந்நிறுவனங்கள் உருவாக்கும் உபரியை அரசாங்கம் தட்டிச் சென்று விடுகிறது.
* பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறதே!
அரசாங்கம் புள்ளிவிவர திருகுதாளங்கள் வாயிலாக சில மதிப்பீடுகளைக் கடைந்தெடுத்து தருகிறார்கள். காலாண்டு வேலைவாய்ப்பு சர்வேக்கள் நடத்தப்பட்டு அறிக்கைகள் வெளியிடுவதையே நிறுத்தி விட்டார்கள். ஆனால் நமக்கு கிடைக்கிற தகவல்களும் கூட வேலைவாய்ப்பு அதிகரிப்பிற்கான எந்தவொரு ஆதாரத்தையும் தருவதாக இல்லை. நரேந்திரமோடி, அருண்ஜெட்லி விடுக்கிற அறிக்கைகளில் மட்டுமே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. டீம் லீஸ் என்ற அமைப்பு இடதுசாரி அமைப்பல்ல. அது தருகிற தகவலைப் பாருங்கள்! பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 25 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம்.
* ஜிஎஸ்டி முறைமை வரிவசூலை உறுதி செய்து மத்திய மாநில அரசுகளின் வருவாயை அதிகரிக்கும் என்கிறார்களே !
ஜிஎஸ்டி முறைமை ஏற்றியிருக்கிற சுமைகளைப் பாருங்கள்! ஜிஎஸ்டிக்கு முன் இருந்த மறைமுக வரிகளின் சுமையைக் காட்டிலும் ஜிஎஸ்டிக்கு பின் அதிகமான சுமை உள்ளது. அதைவிட மோசமானது, மாநில ஆட்சிகளுக்கு இருந்த வரி தன்னாட்சி பறிக்கப்பட்டிருப்பதுதான். இடதுசாரிகள் தலைமையிலான ஒரு அரசாங்கம், ஆடம்பரப் பொருட்கள் மீது வரிபோட்டு அதில் கிடைக்கும் வருவாயை ஏழை மக்களுக்கான திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் என்றிருந்த வாய்ப்பை ஜிஎஸ்டி முறை அடைத்துவிட்டது. மருந்துகள் மீது ஏன் இவ்வளவு வரிகள்? அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜீரோ வரிகள் என்பது கொண்டு வரப்பட வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம்.
* வைப்பு நிதி புள்ளி விவரங்களின் படி தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே!
நான் நாடாளுமன்ற நிலைக்குழுவிலேயே 2016 – 17-ல் பிஎப் சந்தாதாரர்கள் 21 லட்சம் அதிகரித்திருப்பதாக தொழிலாளர் நல அமைச்சகம் கூறுகிறதே! இதுவெல்லாம் புதிய வேலைவாய்ப்புகளா? என்று கேட்டேன்.காரணம் “பிரதமரின் ரோஜ்கார் புரேட்சகான் யோஜனா” தொழிலாளர்களுக்காக முதலாளிகள் செலுத்தவேண்டிய பிஎப் தொகையை மூன்றாண்டுகளுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசே செலுத்த வேண்டுமென்று கூறுகிறது. ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்புகளே இத்திட்டத்தின் காரணமாக புதிய வேலைவாய்ப்புகளாகக் கணக்கில் காட்டப்பட்டுள்ளதா என்பதற்காகவே அக்கேள்வியை எழுப்பினேன்.
* அரசு விவசாயக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்றெல்லாம் புதிய திட்டங்களை அறிவிக்கிறதே!
பிரதமரின் பசல் பீமா யோஜனா அரசின் கஜானாவிலிருந்து பயிர்க்காப்பீடைத் தருகிற திட்டம். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு மானியங்கள் தரப்படுகின்றன. அந்நிறுவனங்கள் வசூலித்த பிரிமியம் ரூ.21000 கோடி. ஆனால் விவசாயிகளுக்கு காப்பீடாகக் கிடைத்ததோ ரூ.4000 கோடி. மருத்துவக் காப்பீட்டின் கதையும் இப்படி அமைந்தால் அது பேரிழப்பாக இருக்கும்.
*ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்கிறதே!
வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது. இது ரூபாய் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அரசு இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டும். அமெரிக்காவில் டிரம்ப் “சந்தை பாதுகாப்பைச் ” செய்ய முடியுமெனில் ஏன் நரேந்திர மோடியால் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைத் தடுக்க முடியாது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              -தபன்சென்
(நேர்காணல் – டி.கே.ராஜலெட்சுமி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...