வெள்ளி, 26 டிசம்பர், 2014

அன்றும் 26 டிசம்பர்தான்


 , அதிகாலை நேரம் , 
இத்தனை உயிர்கள் ஒரே நேரத்தில் இயற்கை காவு வாங்கியது கொடூர சுனாமி. 
விடிகாலை சன் செய்திகள் பார்த்துக்கொண்டிருக்கையில் 
"இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்"
செய்தி வாசித்துக் கொண்டிருந்தவர் திடீரென  'என்னப்பா இப்படி தரை அதிர்கிறது "என   அதிர்ந்து எழும் காட்சியும் ஒளிபரப்பாகியது.
அதன் பின்னர்தான் இந்தோனேசிய நிலா நடுக்கம் தமிழகத்தையும் புரட்டி போடுகிறது என்ற உண்மை உறைத்தது .
மெரினாவில் நடை பயிற்சிக்கு சென்றவர்கள் ,கடல் பசிக்கு உணவானது தெரிந்தது.
கடலோர தமிழகம் முழுக்க ஆழிப்பேரலை தாண்டவம்.
தென் மதுரை ,பூம்புகார் ,கொற்கை முதலிட்ட தமிழரின் லெமுரியா கண்டம் கடற்கோளில் காணாமல்  போனது எப்படி என்று கண்ணெதிரே  காணமுடிந்தது.

இப்படியெல்லாம் நடக்குமா என்று சிந்திக்க கூட முடியாத ஒரு பெரும் துயரத்தை பல நாடுகள் சந்தித்தன.
 சொந்த, பந்தங்கள், உறவுகளை மொத்தமாக இழந்த, ஆதரவற்று நிர்கதியானவர்களும் இன்றும் ஆதரவற்ற முகாம்களில் தங்களின் வாழ்வை கழித்து வரும் வேதனைக்கு வழி வகுத்தது . 
2004 டிச., 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் இந்திய கடல் மற்றும் அதனை யொட்டிய குட்டி தீவுகளை ஒரு பதம் பார்த்தது.
 இந்தியா, தாய்லாந்து , இலங்கை, இந்தோனேஷியா ஆகியவை சுனாமியால் கடும் பாதிப்பை சந்தித்தன. 
ராட்சத அலைகள் 20 முதல் 30 மீட்டர் உயரம் வரை எழும்பி அனைவரையும் மிரட்டி , சுருட்டிக் கொண்டது. 

 2 லட்சத்து 28 , 000 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் கடலூர், நாகை கன்னியாகுமரி, குளச்சல் , சென்னை மெரீனா, புதுச்சேரி, என கடலோர பகுதி முழுவதும் காது பொறுக்க முடியாத ஓலம் எழும்பியது. 

இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
 தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர். 
தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சுனாமி என்பது ஜப்பானிய சொல். "துறைமுக அலை' எனப் பொருள். "ஆழிப்பேரலை' எனவும் அழைக்கப்படுகிறது. 
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. 
இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. 
இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.
சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு.
 சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். 
சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய அலைகளாக மாறுகின்றன. சுனாமி ஏற்படும் போது கடற்கரையில், அலையின் உயரம் நிலநடுக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும்.
 கரையில் இருந்து அதன் உயரத்துக்கு ஏற்ப கடல்நீர், தரைப்பகுதிக்குள் ஊடுருவும். பின், இந்த பெரிய அலைகள் தரையில் பரவிய இடத்துக்கு பின்னே, தொடர்ந்து நீர் அலைகள் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கும். 
சுனாமி அலைகளின் உயரத்துக்கு ஏற்ப அதன் சேதம் இருக்கும்.சுனாமி அலைகளின் தாக்கத்துக்கு பின், அந்த தரைப்பகுதியில் பெரிய மாற்றம் இருக்கும். இப்படி கடல்நீர் சுனாமி அலையின் மூலம் இடம் பெயர்வதால், முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும், நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.
பூகம்பம் மூன்று விதங்களில் ஏற்படுகிறது. தரைப்பகுதியில் ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் தரைமட்டமாகின்றன.
 மலைப்பகுதியில் ஏற்படும்போது, எரிமலை உருவாகிறது. 
கடலில் பூகம்பம் ஏற்படும் போது, சுனாமி எனும் ஆழிப்பேரலை உருவாகின்றன. ஆழிப்பேரலையின் வேகம், ஆரம்பித்த இடத்திலிருந்து கரையை நெருங்க, நெருங்க அதிகரிக்கும். 
சாதாரணமாக கடல் அலையின் உயரம் 7 அடி எழும்பும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் 10 அடி இருக்கும். ஆனால் சுனாமி அன்று அலைகள், 100 அடி உயரத்துக்கு எழும்பின. சுனாமி, சில வினாடிகளில் அதிக கொள்ளவு தண்ணீரை கரைப்பகுதியில் தள்ளும் சக்தி படைத்தது. 

=====================================================================================================

புதன், 24 டிசம்பர், 2014

மீண்டும் கொளுத்துவோம்.

‘‘மநுஸ்மிருதி"யிலும் இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள விசயங்கள் நாகரீகமற்றவையாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. 
இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இக்கூட்டம் அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. 
இந்தக் கண்டனத்துக்கு அறிகுறியாக அவற்றை தீயிட்டுக் கொளுத்த தீர்மானிக்கிறது’’ என்று மகாராஷ்டிரா மாநிலம் மஹத் நகரில் கூடிய சத்யாகிரகிகளின் மாநாடு அம்பேத்கர் தலை மையில் மநுஸ்மிருதியை எரித்த நாள் 1927 டிசம்பர் 25. 
மஹத் நகரின் சௌதார் குளம் சாதி இந்துக் களும் எல்லாச்சாதியினரின் விலங்குகளும் புழங்குவதற்குரியது. தலித்துகளுக்கோ புழங்குரிமை இல்லை.
இத்தடையை நீக்குவதென 1924ல் நகரசபை எடுத்த முடிவை நிறைவேற்ற சாதி இந்துக்கள் விடவில்லை. 
1927 மார்ச் 19,20ல் மஹத்தில் கூடிய மாநாட்டில் பங்கேற்ற தலித்துகளும் தலித் அல்லாதார் சிலரும் இரண்டாம்நாள் காலை அம்பேத்கர் தலைமையில் அந்தக் குளத்தில் நீரருந்தி நூற்றாண்டுக்காலத் தடையை உடைத்தனர்.
 ஆத்திரமடைந்த சாதிஇந்துக்கள், தலித்துகள் அடுத்ததாக வீரேஸ்வர் கோயிலுக்குள்ளும் நுழையப் போவதாக வதந்தியைக் கிளப்பி வன்முறையை ஏவினர்.
 ‘எமக்குள்ள இயல்பான உரிமைகளை நிலைநாட்டவே இந்தக் குளத்தில் இறங்கினோம். 
மற்றபடி இந்தத் தண்ணீர் அசாதாரண சிறப்பினை உடையதென நாங்கள் கருதவில்லை’ என்றார் அம்பேத்கர். 
சாதி இந்துக்களோ 108 கலயங்களில் பால், தயிர், மாட்டு மூத்திரம், சாணக்கழிசலை குளத்தில் ஊற்றி பரிகாரித்து தீட்டு கழித்தனர்.இதனிடையே மஹத் நகரசபை தலித்துகளை குளத்தில் புழங்கவிடும் முந்தைய தீர்மானத்தை 1927 ஆகஸ்ட் 4ல் ரத்து செய்தது. 
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்த தலித்துகள் அங்கொரு சத்தியாகிரகத்தை 1927 டிசம்பர் 25, 26 தேதிகளில் நடத்துவதென தீர்மானித்தனர். மஹத் சத்தியாக்கிரகம் வெறும் தண்ணீருக்கானது அல்ல என்பதை உணர்ந்த சாதி இந்துக்கள் நீதிமன்றத் தடையாணை பெற்றனர்.
இடம், தண்ணீர், மளிகைப்பொருட்களை வழங்க மறுத்தனர்.
 ஆனால் ஃபதேகான் என்பவரது இடத்தில் திட்டமிட்டபடி மாநாடு தொடங்கியது. ‘இருண்டகாலத்தில் இயற்றப்பட்ட சாஸ்திரங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் நாம் கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லை’ என்கிற அம்பேத்கரின் பயிலுரையால் மக்கள் ஆவேசமுற்றனர்.
 சகஸ்திரபுத்தே என்கிற பிராமணர், சூத்திரர்களுக்கான நியதிகள் குறித்து மநுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளதை படித்துக் காட்டி அம்பேத்கரின் கருத்துக்கு வலு சேர்த்தார். இந்தப் பின்னணியிலேயே மநுஸ்மிருதி எரிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளில் முன்னின்ற தோழர் ராம்சந்திர பாபாஜி மோரே பின்னாளில் தீரமிக்க மார்க் சிஸ்ட்டாக வாழ்ந்தவர். இறுதிவரையிலும் அம்பேத்கருடன் மாறாத்தோழமை கொண்டிருந்தவர். மநுஸ்மிருதியை கொளுத்தி சாம்பலை கடலில் கரைத்துவிட வேண்டும் என்கிற முதல் கலகக்குரல் 17.10.1927ல் காட்பாடியில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டில் எம்.சி. ராஜாவிடமிருந்து வெடித்தது. 
மஹத்துக்கும் முன்னதாகவே 4.12.1927ல் குடியாத்தத்தில் கூடிய சுயமரியாதைக்காரர் மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர் மநுஸ்மிருதியைக் கொளுத்தினார்.
 மஹத் மாநாட்டின் மீது இந்நிகழ்வுகள் தாக்கம் செலுத்தினவா, இந்த எதிர்வினைகள் 1927ல் முனைப்படைந்தது ஏன் என்பவை ஆய்வுக்குரியவை. மஹத்தில் மநுஸ்மிருதி எரிக்கப்பட்டதால் நாடே அதிர்ந்தது. காலவழிக்கொழிந்து போன மநுஸ்மிருதியை எரித்திருக்க வேண்டுமா என்ற தந்திரமான கேள்விக்கு, இந்த அங்கலாய்ப்பே அதன் இருப்பை உணர்த்துகிறது என்றார் அம்பேத்கர். 
இந்த எரிப்பினால் என்ன கிடைத்தது என்ற கேள்விக்கு ‘அந்நியத்துணி எரிப்பினால் காந்திக்கு எது கிடைத்ததோ அதுவே...’ என்றார்.
நிம்மதியிழந்த பிராமண பத்திரிகைகளால் பீமாசுரன் என்று இகழப்பட்ட அம்பேத்கர் சொன்னார்: மநுஸ்மிருதி எரிப்பு முற்றிலும் திட்டமிடப்பட்ட நிகழ்வே. நூற்றாண்டுகளாக எங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியின் சின்னமாக மநுஸ்மிருதியைக் கருதியதாலேயே எரித்தோம். 
அதன் போதனையின் காரணமாகவே நாங்கள் கொத்தியெடுக்கும் கோரக்கொடுமைக்கு, வன்னெஞ்ச வறுமைக்கு உள்ளாகியுள்ளோம். எனவே அதற்கு எதிராக வரிந்துகட்டினோம். 
உயிர்களை பணயம் வைத்துப் போராட்டத்தில் இறங்கினோம், நினைத்ததைச் செய்துமுடித் தோம்... விலங்குகளை பலியிடும் யாகங்களை நடத்தி தட்சணையாக பொருள் ஈட்டுவதே வேதமதம்.
 அதை எதிர்த்தெழுந்த பௌத்தம்அசோகரால் மகதத்தின் அரச மதமாக்கப்பட்ட தால் உயிர்ப்பலி தடுக்கப்பட்டது. 
அரசுரீதியான ஆதரவுகளை இழந்த பிராமணர்கள் 140 ஆண்டுகள் புரோகிதத்தையும் வருமானத்தையும் அந்தஸ்தையும் இழந்தனர்.
அசோகமித்திரன், பத்ரி சேஷாத்திரி மொழியில் ‘ஒடுக்கப்பட்டனர்’. உயிர்ப்பலியிலும் சோம யாகத்திலும் நம்பிக்கையுள்ள சாமவேதி பார்ப்பனனாகிய புஷ்யமித்திர சுங்கன் அசோகரது வழிவந்த பிருகத்ரதனைக் கொன்று கி.மு.185ல் ஆட்சியைக் கைப்பற்றினான்.
 ஒவ்வொரு பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலைவைத்து கொல்வதாயிருந்தது அவனது பௌத்த வெறுப்பு. 
பார்ப்பனீயத்தின் வெற்றியாக அம்பேத்கரால் சுட்டப்படும் இவனது ஆட்சிக்காலத்தில் சுமதி பார்கவா என்பவரால் கி.மு. 170- கி.மு.150க்குள் எழுதப்பட்டதே மநுஸ்மிருதி.
பூமியின் கடவுள்களாக பிராமணர்களை விதந்துரைத்த மநுஸ்மிருதி மற்றவர்களை கீழ்நிலைப்படுத்தியது.
 யாகங்களால் ஆயுளை நீட்டிக்கவும் ஆட்சியை விஸ்தரிக்கவும் முடியும் என்கிற கட்டுக்கதைகளுக்கு இரையான சத்திரிய மன்னர்களால் அது நாடெங்கும் பரவியது. 
இத்தனைக்கும் அது சத்திரியர்களை, பரசுராமனால் கொல்லப்பட்டவர்களின் விதவைகள் பார்ப்பனர்களுடன் கூடியதால் முறையற்று பிறந்தவர்களென இழிவுபடுத்தியது. 
பட்டத்து மகிஷியைக் கன்னிகழிப்பதையும் அது பார்ப்பனர்களின் உரிமையாக்கியது.
பெண்கள் அனைவரையும் சூத்திரர்களையும் ‘உயிர் வாழ்தலுக்கும் சுதந்திரத்துக்கும் மகிழ்ச்சியை நாடும் வாழ்விற்கும் உரிமையற்றவர்களாக’ மநுஸ்மிருதி மாற்றியதை அம்பலப்படுத்திய அம்பேத்கர் அதை கொளுத்துவதற்கு தலைமையேற்றது பொருத்தமானதுதான். 
ஒரு குறீயீட்டுரீதியான எதிர்ப்பாக மநுஸ்மிருதியை எரித்த போராட்டத்தை குடிமக்கள் யாவரும் சமம் என்கிற ஓர் அரசியல் சட்டத்தை உருவாக்கித் தருவதுவரை அம்பேத்கர் முன்னெடுத்தார். 
அதேவேளையில் மநுஸ்மிருதிக்கு எதிராக கனன்றெரியும் நெருப்பின் உக்கிரத்தில்தான் இந்த சமத்துவத்தை எட்டமுடியும் என்று எச்சரித்தும் வந்தார். அதே டிசம்பர் 25, 1968ல் வெண்மணியில் மநுவாதச்சிந்தனை நம்மில் 44 பேரை எரித்து பழிதீர்த்துக்கொண்டது. 
ஆர்.எஸ்.எஸ் மநுஸ்மிருதியை பகவான் மநு அருளிய சட்டமெனப் போற்றுகிறது. அதேவேளையில் அரவணைத்து நெரிக்கும் தந்திரத்தோடு அது மநுஸ்மிருதியை கொளுத்திய அம்பேத்கரை வணங்குவதாகவும் பசப்புகிறது. பட்டியல் சாதிகளின் பெயருக்கு முன்னே இந்து என்கிற சொல்லைச் சேர்க்கும் அது, தலித்துகள் இந்துக்களல்ல என நிறுவிய அம்பேத்கரை அவமதிக்கிறது. 
இந்த மோசடியை ஜோடிப்பதற்கான நூல்களைப் புளுகியுள்ள பிஜய் சங்கர் சாஸ்திரி, முற்காலத்தில் பிராமண சத்திரிய உயர் சாதி யினரான இவர்கள் இஸ்லாமியராக மாற மறுத்ததால் வந்தேறிகளால் மலமள்ளும் இழிநிலைக்குத் தாழ்த்தப்பட்டனர் என்று திரிக்கிறார்.
 மட்டுமல்லாது, மநுஸ்மிருதியை உயர் சாதியினரின் புனிதநூலென அம் பேத்கரே சொல்லியிருப்பதால் முன்னாள் உயர்சாதியினரான தலித்துகளும் மநுஸ் மிருதியை ஏற்கவேண்டும் என்றும் வாதிடு கிறார்.
இப்படி உண்மைகளைக் கொல்லும் பொய்யர்களின் காலத்திற்கு வந்து சேர்ந் திருக்கிறோம். 
ஏற்கனவே ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் மநுவுக்கு சிலைவைத்த அவர்கள், தொன்மையான சட்ட வல்லுனர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க உச்சநீதிமன்ற வளாகத்தில் மநுவுக்கும் சிலைவைக்கக் கோரும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
 சமூகத்தை மீண்டும் மநுஸ்மிருதிக்குள் மூழ் கடித்துக் கொல்வதற்கான யுத்தத்திற்கு உகந்தகாலம் இதுவென்ற ஆணவம் அவர்களிடம் கொப்பளிக்கிறது.
 நமக்கான நெருப்பு மஹத்திலும், வெண்மணியிலும் இன்னமும் கனன்றுகொண்டே இருக்கிறது.
                                                                                                                              ஆதாரங்கள்: அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்: 7, 35குடிஅரசு:
நன்றி:தீக்கதிர்.
===================================================================================================================================================================

என் பெயர் அலி.


 எனக்கு வயது 12.
அன்றைய தினம் பள்ளியில் எங்கள் வகுப்பறையில் முதல் பாடவேளையின்போது பாடங்களை படித்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென வெடிச்சப்தத்தை கேட்டோம். 
அந்த சப்தம் மிகக் கடுமையாக இருந்தது. 
பயங்கரமாக இருந்தது. 
அது என்ன சப்தம் என ஊகித்திடுவதற்கான நேரம் கூட எங்களுக்கு இருக்கவில்லை.
அடுத்த சில நிமிடங்களுக்குள் அந்த சப்தத்தை எங்களது வகுப்பறைக்கு மிக அருகே கேட்க முடிந்தது. 
எங்கள் எல்லோரையும் மேசைக்கு அடியில் ஒளிந்து கொள்ளுமாறு வகுப்பாசிரியர் கூறினார்.“மேசைகளுக்கடியில் ஒளிந்து கொள்ளுங்கள். வேகமாக ஒளிந்து கொள்ளுங்கள்” என ஆசிரியர் அவசரத்தோடும் திகிலோடும் சொன்னார். 
நாங்கள் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தோம்.
சிலர் குழப்பமடைந்தும், திகிலடைந்தும் நின்று கொண்டிருந்தோம். “என்ன நடக்கிறது” என ஆசிரியரைப் பார்த்து கேட்கத் துவங்கினோம்.
எங்களுக்கு அடுத்திருந்த வகுப்பறையிலிருந்து வந்த மாணவர்களின் அலறல் சப்தம்-மரணஓலம்- எங்களை அதிர்ச்சியடையச் செய்தது. நான் மிகவும் பயந்து போனேன். 
வாயடைத்துப் போய் சப்தம் எதுவும் எழுப்ப இயலாது மௌனமாக நின்றேன்.
எங்களது வகுப்பறையின் கதவை மூடித் தாளிட வகுப்பாசிரியர் முனைந்த தருணத்தில், மூன்று பேர், துப்பாக்கியோடு அங்கு முற்றுகையிட்டனர்.
அவர்கள் தங்களது துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தனர். எனது வகுப்பாசிரியரும், எனது சக மாணவர்களும் நேரடியாகக் காயமடைவதையும், பின் கீழே சரிவதையும் கண்டேன்.
நாங்கள் பலர் எங்களது மேசைகளுக்குக் கீழ் ஒளிந்து கொண்டோம்.பல மணி நேரங்களுக்கு அசைவு எதுவுமின்றி பிணத்தைப் போல நான் நடித்தேன். எனது சகமாணவர்களை, அவர்களது நெற்றியில், நெஞ்சில், தோள்பட்டையில், கால்களில், வயிற்றில் சுட்டனர். 
எல்லோரும் தரையில் கிடந்தனர். எங்களில் பலர் உயிரோடிருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். 
அதன் பிறகு தலையின் கபாலப் பகுதியைக் குறி வைத்து நேராக சுடத் துவங்கினர். 
துப்பாக்கிக் குண்டுகள் எங்களது தலைகளுக்கு மேல் சென்றன. “இறந்ததைப் போல நடி” என எனது உற்ற நண்பனும், வகுப்பறையில் எனக்கு அடுத்து அமர்ந்திருப்பவனுமான இர்ஃபான் உல்லா கூறினான்.
 நான் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தேன்.
 வகுப்பறையின் கடைசி வரிசையில் எங்களது இருக்கைகள் இருந்தன.
“அசையாதிரு அலி, அசையாதிரு” என அவன் எனது காதுகளில் கிசுகிசுத்தான்.
 நான் தலைகீழாகப் புரட்டப்பட்டேன். 
எல்லாம் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 
அவர்கள் தீவிரவாதிகள் என்பதும், தலிபான்கள் என்பதும் எனக்குத் தெரிந்தது.
எனது நண்பனும் துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கப்பட்டான். 
ஆனால், அவனது உடலின் எந்தப் பகுதியை துப்பாக்கிக் குண்டு துளைத்தது என்பது எனக்குத் தெரியவில்லை. 
அவனால் பேச இயலவில்லை. 
எனக்கடுத்து இருந்த அவன் விடும் மூச்சு சப்தத்தை நான் கேட்க முடிந்தது. “அந்தப் பையன் இறந்துவிட்டானா?” 
என தீவிரவாதிகளில் ஒருவன் மற்றொருவனைப் பார்த்துக் கேட்டான். 
அதன் பிறகு குண்டுகள் துளைக்கும் சப்தத்தையும், மேலும் பல முறை சுடும் சப்தத்தையும் கேட்டேன். 
நான் செத்துவிட்டதாகவே உணர்ந்தேன். 
பஸ்டூனிய மொழியில் பேசிய அவர்கள், சல்வார் கமீஸ் அணிந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மிக நீளமான, பழுப்பு நிறத்திலான தாடி வைத்திருந்தார்கள்.
அவர்கள் அந்த அறையைவிட்டு வெளியேறிய பின், நான் இர்ஃபானின் காதுகளில் கிசுகிசுத்தேன்.
ஆனால், அதற்கு அவனிடமிருந்து எந்தவொரு பதிலும் இருக்கவில்லை. இறந்தது போலவே இன்னமும் அவன் நடித்துக் கொண்டிருக்கிறான் என்றே நான் நினைத்தேன். 
நானும் இறந்துவிட்டது போன்ற நாடகத்தைத் தொடர்ந்தேன்.
அவர்கள் அங்கே மீண்டும் திரும்பி வருவார்களோ என எண்ணி நான் மிகவும் பயந்திருந்தேன். 
எனது நண்பன் எப்போது இறந்தான் என்று எனக்குத் தெரியவில்லை. 
அவன் எனது உயிரைக் காப்பாற்றினான்.
நான் இறந்து போய்விட்டதாகவே கருதினேன். 
ஆனால், எனது இதயமோ மிக வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. 
என்னால் அசைய முடியவில்லை.
பல மணி நேரங்களுக்கு உயிரற்ற பிணம் போல அசைவு எதுவுமின்றி நடித்துக் கொண்டிருந்தேன். ஆபத்திலிருந்து காப்பாற்றிட ராணுவ வீரர்கள் அங்கே வந்தபோதும், நான் அசையாது இருந்தேன்.
 அவர்கள் உண்மையான ராணுவ வீரர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. மேலும், என்னால் வாய் திறந்து எதுவும் பேச இயலவில்லை.
எனது வகுப்பறைக்கு வெளியே தொடர்ந்து குண்டுகளின் சப்தத்தை நான் கேட்டேன். 
ஆனால், எனது கண்களைத் திறந்து என்ன நடக்கிறது என்று பார்க்கின்ற துணிவு எனக்கு இருக்கவில்லை. மிகப் பெரிய குண்டு வெடிப்பு அங்கே நிகழ்ந்தது.
உலகமே இன்று வெடித்துச் சிதறிவிடும் என்று கருதினேன். என்னை யாரோ தூக்கியபோது, நான் எனது கண்களை இறுக மூடிக் கொண்டேன். என்னைத் தூக்கியவர்கள் ராணுவ வீரர்கள்.
நான் அழத் துவங்கினேன். 
அவர்கள் என்னை எனது பெற்றோரிடம் அழைத்துச் சென்றனர்.நான் இங்குள்ள மருத்துவமனையை வந்தடைந்துள்ளேன். 
தங்களது ரத்தத்தை பெருமளவு இழந்த எனது சகமாணவர்களில் பலர் இங்கு வந்துள்ளனர்.
அவர்களுக்கு நான் எனது ரத்தத்தை தானமாகக் கொடுக்கின்றேன்.
எங்களது வீட்டிற்கு நாங்கள் சென்றுவிட வேண்டும் என எனது பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். 
அவர்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனர். 
நானும் அஞ்சுகிறேன். 
ஆனால், அதே நேரத்தில் மருத்துவமனையில் உள்ள எனது சகோதர, சகோதரிகள் குறித்து கவலை கொண்டுள்ளேன்.
தலிபான்கள் தீயவர்கள்
எனது நண்பர்களைக் கொன்று குவித்திட்ட இந்த தீவிரவாதிகளை எதிர்த்து நான் போராடுவேன்.
இவர்களை கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

-பெஷாவர் ராணுவப்பள்ளியில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடிய படுகொலையில்உயிர் பிழைத்த 12 வயதேயான அலி என்ற சிறுவனின் வாக்குமூலம். 
கிரண் நாஜிஷ் என்ற பத்திரிகையாளர் இதைப் பதிவு செய்துள்ளார். 
இவர் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்து போர் மற்றும் மனித உரிமை குறித்த செய்திகளைத் தரும் பத்திரிகையாளர்ஆவார்.
========================================================================================================
டிசம்பர் 25: 
  • உலகையே சிரிக்க வைத்த 
  • சார்லி சாப்ளின் 
  • நினைவு தினம் -

துளி மீசை கொண்டிருந்த இருவர் உலகை ஆட்டிப்படைத்தார்கள். ஒருவர் ஹிட்லர், இன்னொருவர் சாப்ளின். ஒருவர் பத்தாண்டுகளில் காணாமல் போய்விட்டார். இன்னொருவர் காலங்களைக்கடந்து கண்கலங்க வைப்பார்.
அப்பாவும் அம்மாவும் பிரிந்த பொழுது பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அம்மாவிடம் வந்து சேர்ந்தது .க்ளப்களில் திருமணத்துக்கு முன் பாடிக்கொண்டிருந்த அவர் மீண்டும் பாடப்போன பொழுது குரலே பண்ணிய குறும்புகள் எல்லாரையும் கவர்ந்துவிட்டன. காசுகளை அவர்கள்வீசிய பொழுது அள்ளிக்கொள்ள குனிந்த அந்த நாயகனை வாழ்க்கை தொடர்ந்து குட்டிக்கொண்டு தான் இருந்தது
பிரிந்த பெற்றோர்,துரத்திய வறுமை ,பசி ,தோற்ற காதல்கள் ,மனநலம் குன்றி நின்ற தாய்,கல்வியே கிடைக்காத வாழ்க்கை இவ்வளவும் இருந்தும் அதன் ஒரு சாயல் கூட இல்லாமல் ஸ்க்ரீனில் ரசிகனை சிரிக்க வைத்த நாயகன் அவர் .
மார்க் சென்னெட்டிடம் நடிக்க சேர்ந்து வேகமான படம் எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் நிதானமான தன் பாணியை காப்பாற்றி கொண்ட இவரின் தனித்துவம்;அன்றைய ஹாலிவூட் நடிகர்களில் அதிக பணம் பெற்ற பொழுதும் ஒற்றை அறையில் வாழ்ந்த எளிமை ,ஒரே வருடத்தில் பன்னிரெண்டு படங்கள் எடுத்து எல்லாவற்றிலும் சமூகத்தின் வலியை சொன்ன சினிமா போராளி !
ஹைட்டியுடன் நிறைவேறாத காதல் ,உலகமே கொண்டாடியும் மனநலம் குன்றிய அம்மாவுக்கு தான் புகழின் உச்சத்தில் இருப்பதை புரிய வைக்க முடியாமல் கதறி அழுத பொழுது அவரின் மனநிலையை நீங்கள் யூகித்து கொள்ளலாம் .
பேசும் படங்கள் உலகை முற்றுகையிட்ட பொழுது மவுனமாக ரசிகனிடம் மவுனப்படங்களின் மூலம் சாதிக்க முடியும் என சவால் விட்டார் .ஒரு அரங்கு கூட கிடைக்காமல் தடுத்தார்கள் .எப்பொழுதும் நிரம்பாத ஹென்றி சி. கோவன் அரங்கு தான் கிடைத்தது ;சிட்டி லைட்ஸ் திரையிடப்பட்டது கூட்டம் அரங்கை தாண்டி அலைமோதியது ; அவரின் மாஸ்டர் பீஸ் என உலகம் கொண்டாடியது . அரசுகள் கலையின் மூலம் குரல் கொடுக்கும் கலைஞர்களை எதிரியாகவே பார்த்திருக்கின்றன. அதிலும் சாப்ளின் எனும் மகா கலைஞனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் என்று அவரை நாடுகள் துரத்திக்கொண்டே இருந்தன
வாழ்க்கை முழுக்க அழுகையால் அவரின் அகவாழ்வு நிரம்பி இருந்தது. ஸ்க்ரீன் முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். ""நான் மழையில் தான் நடக்கிறேன் ;நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது" என்று சொன்னார் அவர்.
பசி என்றால் என்னவென்று சாப்ளினுக்கு தெரியும், வறுமை என்பது என்னவென்று அனுபவித்து உணர்ந்தவர் அவர். எப்படி ஒரு நாயை போல தொழிலாளியின் வாழ்க்கை கழிகிறது என்று ஒரு படத்தில் காட்டினார் என்றால் உலகின் தலைசிறந்த மேதைகள் என கொண்டாடப்பட்ட மக்கள் எழுத்தாளர்களின் எழுத்துக்களை விடாமல் வாசித்தார். அவற்றை திரைக்கு கடத்தினார் அவர்.
தொழிலாளிகளுக்கு நேரும் அநீதிகளை படத்தில் காட்டினார். முதலாளிகளை கிண்டலடித்து மாடர்ன் டைம்ஸ் எடுத்தார் அவர். அதில் எல்லாரும் பேசுவார்கள். சாப்ளின் மவுனமாகவே திரையில் தோன்றுவார். சொந்த மகனின் இறப்பின் வலியைக்கூட திரைப்படமாக எடுக்கும் வித்தை அவரிடம் இருந்தது. அரசாங்கங்களை அவரின் படங்கள் உலுக்கி எடுத்தன. அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும் அவர் பிரிட்டன் குடிமகனாகவே இருந்தார். நம்புங்கள் இன்றைக்கும் ஹவுஸ்புல்லாக ஓடும் அவரின் படங்கள் ஊமைப்படங்கள் அவை பேசிய கதைகள் தான் எக்கச்சக்கம. ஹிட்லரை தி கிரேட் டிக்டேடர் படத்தில் நொறுக்கி எடுத்தார்.
ஹிட்லர் ரஷ்யா மீது பாய்ந்த பொழுது ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது ; எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் அமெரிக்கா உதவிக்கு போக வேண்டும் என்றார் மனிதர். அப்பொழுதே சந்தேக விதை விழுந்தது. கோர்ட்டில் வழக்கு போட்டு பத்து வருடங்கள் அலைய விட்டார்கள். அடுத்தது அவரின் படங்கள் வேறு அவர் ஏழைகளுக்கு ஆதரானவர் கம்யூனிஸ்ட் என்கிற எண்ணத்தை தீவிரமாக்கின.
அமெரிக்கா நாற்பது வருடங்கள் அவர்கள் தேசத்தில் வாழ்ந்து இருந்தாலும் அவரை மீண்டும் தன் மண்ணுக்குள்  அனுமதிக்க மறுத்தது . அப்பொழுது அவரின் ,"அறச்சிந்தனை களங்கப்பட்டு இருப்பதாகவும் ,அவர் அரசியல் சாய்வு தன்மை உள்ளவர் ""என்றும் அமெரிக்கஅரசு தெரிவித்தது. சாப்ளின் ,"நான் புரட்சியாளன் இல்லை !மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே !"என்றார். பின் ஏசுவே ஆண்டாளும் அமெரிக்கா போக மாட்டேன் என அவர்
தெரிவித்து விட்டு சுவிட்சர்லாந்து தேசத்தில் தங்கிவிட்டார்.
அவரின் ஐரோப்பியாவில் இருந்து தயாரித்த முதல் படத்தை அமெரிக்காவில் வெளியிடவே முடியாத அளவுக்கு அவரை வில்லனாக்கி இருந்தார்கள் ! இறுதியில் இறப்பதற்கு 6 வருடங்கள் முன்பு அவருக்கு சிறப்பு ஆஸ்கர் வழங்கி தன் தவறை ஓரளவிற்கு சரி செய்துகொண்டது அமெரிக்கா. அப்பொழுது அங்கே அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று பன்னிரெண்டு நிமிடங்கள் கைதட்டினார்கள்.
தி கிரேட் டிக்டேடர் படத்தில் அவர் எத்தகைய உலகத்தை கனவு கண்டார் என்று பேசியிருப்பார் :
ஹான்னா ! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும் . அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்
                                                                                                                                                             - பூ.கொ.சரவணன்
=============================================================================================================
1968 ஆம் ஆண்டு டி சம்பர் 25 ஆம் நாள் அது நடந்தது. 
கீழ்வெண்மணியில் விவசாயக் கூலிகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 44 பேர் குடிசையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.
 இதில் 20 பேர் பெண்கள். 
19 பேர் குழந்தைகள். 
தீயிட்டு கொளுத்தும் அளவுக்கு அவர்கள் செய்த கொடுமை.?
விவசாய கூலிகளான தங்களுக்கு கால் வயிற்றை கூட  நிரப்பாத கூலி யில் அரைபடி நெல்லை  கூலி உயர்வுக்காக கேட்டுப் போராடியது.அதுவும் பொதுவுடமை கட்சியின் செங்கொடியின் கீழ் திரண்டு பண்ணையார்களுக்கு எதிராக நின்று நியாயம் கேட்டதுதான்.
 செங்கொடியைக் கைவிட மறுத்ததால்தான் இச்சம்பவமே  நடந்தது. அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் சுயமரியாதைக்காக தலை நிமிர்ந்ததால் அது நடந்தது. 
சாதி ஒடுக்குமுறைக்கும் அதற்கு எதிரானப் போராட்டத்திற்குமான நினைவைத் தாங்கி நிற்கிறது கீழ வெண்மணி. 
சாதிக்கும் வர்க்கத்திற்குமான உறவைச் சொல்லும் இரத்த சாட்சியாக வெண்மணி தீ எரிந்து கொண்டிருக்கிறது.

சனி, 20 டிசம்பர், 2014

வா[விமா]னம் தொட்ட ஊழல்...?




காங்கிரசு தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி,தற்போதைய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களுக்கு சொந்தமான விமானங்களில் அடிக்கடி பயணம் செய்த தகவல் அம்பலமாகியுள்ளது. 
இதில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, பலர், தனியார் விமானங்களில் பயணம் செய்ததும், இதற்கான செலவு கணக்கை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யாத அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
பிரபலமான, புலனாய்வு இணையதளமான, 'கோப்ரா போஸ்ட்' மத்திய விமான நிலையங்கள் ஆணையமான, ஏ.ஏ.ஐ., விடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அரசியல்வாதிகளின் விமான பயணங்கள் குறித்த தகவல்களை சேகரித்து, அதில் நடந்துள்ள விதிமுறை மீறல்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
============================================================
கோப்ரா போஸ்ட் பற்றி:

* 'கோப்ரா போஸ்ட்' என்பது, பிரபலமான புலனாய்வு இணையதளம்.

* 'தெஹல்கா' புலனாய்வு இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான, அனிருத்தா பால் தான், கோப்ரா போஸ்ட்டின் நிறுவனர்.
* கடந்த, 2005ல், பார்லிமென்ட்டில் கேள்வி கேட்க, 11 எம்.பி.,க்கள் லஞ்சம் கேட்டதை, 'ஆபரேஷன் துரியோதனா' என்ற பெயரில், கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியது.

* கடந்த, 2013ல், 'ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்' என்ற பெயரில், 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்தி, கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய வங்கிகளின் மோசடியையும், கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியது.
============================================================

பல முக்கியமான அரசியல்வாதிகள், பெரும் தொழில் அதிபர்களுக்கு சொந்தமான விமானங்களில் தான், அடிக்கடி பயணித்துள்ளனர்.
 கட்சி தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமல்லாமல், சொந்த வேலைக்காகவும், தனியார் விமானங்களை இவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு பயணிக்கும் போது, சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனங்களுக்கு, இவர்கள் கட்டணம் அல்லது வாடகை செலுத்தினரா என்ற விவரம் இல்லை.
அமைச்சர் ராஜ்நாத் சிங்

தனியார் விமானங்களில் அடிக்கடி பயணித்தவர்கள் என, 'கோப்ரா போஸ்ட்' வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றவர்கள்.


1. சோனியா

2. ராகுல்

3. வீரப்ப மொய்லி

4. விஜய் பகுகுணா

5. கிரண் குமார் ரெட்டி

6. ஜோதிராதித்ய சிந்தியா

7. முகுல் வாஸ்னிக் (அனைவரும் காங்.,)

8. ராஜ்நாத் சிங்

9. அத்வானி

10. சுஷ்மா ஸ்வராஜ்

11. நிதின் கட்காரி

12. ஜெகதீஷ் ஷெட்டர்

13. சதானந்த கவுடா

14. எடியூரப்பா

15. சிவ்ராஜ் சிங் சவுகான்

16. ரமண் சிங் (அனைவரும் பா.ஜ.,)

16. சரத் பவார்

18. பிரபுல் படேல் (தேசியவாத காங்.,)

19. மாயாவதி (பகுஜன் சமாஜ்)

20. சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்)

21. பிரகாஷ் சிங் பாதல் (அகாலி தளம்)
அரசியல்வாதிகள் பயணிப்பதற்கு, தங்களின் விமானங்களை தொழில் அதிபர்கள் கொடுத்தால், அதற்கு கைமாறாக, அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களுக்கு சலுகை காட்டினரா என்பதை, விசாரிக்க வேண்டிய கடமை அரசுக்கும், விசாரணை அமைப்புகளுக்கும் உள்ளது.
 இவ்வாறு, அரசியல்வாதிகள் பயணித்த விமானங்களில் பல, உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையத்தின் முறையான அங்கீகாரம் பெறாதவை. அரசியல்வாதிகளின் பயணத்துக்கு விமானங்களை கொடுத்த தொழில் நிறுவனங்களில் பல, கடும் நிதி இழப்பில் சிக்கியுள்ளவை. 
அப்படி இருக்கும்போது, அரசியல்வாதிகள் பயணிப்பதற்கு, இலவசமாக விமானங்களை கொடுக்க வேண்டிய அவசியம், இந்த நிறுவனங்களுக்கு ஏன் வந்தது?

இது போன்ற முறைகேடான உதவிகளால்தான் கிங் பிஷர் போன்ற விமான நிறுவனங்கள் நட்டமடைந்த போது ஆளுவோர் 500 கோடி,1000 கோடிகள் என்று வங்கி மூலமாக  வரா கடன் கணக்கில் மக்கள் பணத்தை அள்ளி கடனாகக் கொடுக்க வைக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் பயணிப்பதற்கு, அடிக்கடி விமானங்களை கொடுத்த நிறுவனங்கள்


1. ஏர் ஒன் ஏவியேஷன்

2. இந்தோ பசிபிக் ஏவியேஷன்

3. இந்தியன் ஸ்டீல் ஒர்க்

4. ஜி.வி.கே., ஏவியேஷன்

5. அதானி குரூப்

6. கிங் ரோடர் அண்ட் ஏர்

7. பினாக்கிள் ஏர் சர்வீஸ்

8. ஜி.எம்.ஆர்., குரூப்

9. லைகர் ஏவியேஷன்

10. பிசினஸ் ஜெட்ஸ் இந்தியா

11. எஸ்.ஆர்.சி., ஏவியேஷன்

12. ஜெ.பி., குரூப்

13. ஆர்பிட் ஏவியேஷன் கிராப்ட்

14. இந்தியா பிளைசேப்

15. ஏரோடெக் ஏவியேஷன் இந்தியா

16. ஏர் சார்டர் சர்வீஸ்

17. பிரபாதம் ஏவியேஷன்
காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், வெளியுறவு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சுஷ்மா சுவராஜ் போன்ற அரசியல்வாதிகள், தனியார் நிறுவனங்களின் விமானங்களில் அடிக்கடி பயணித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 
'தேர்தல் நேரங்களில் பிரசாரத்துக்காக தனியார் விமானங்களை பயன்படுத்தினால், அதற்கான செலவு கணக்கை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும்' என்ற விதிமுறை உள்ளது.
 ஆனால், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், விமான பயணத்துக்கான கணக்கு காட்டாத அரசியல்வாதிகளில் முக்கியமானவர்கள். 
இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலும் கூட.அதை தெரிந்தும் கண்டு கொள்ளாத வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் குற்றவாளிகள்தான்.
=========================================================================================================
 தோழர் ஸ்டாலின் !
------------------------------------------------------
1924-ல் லெனின் மறைவுக்கு பின் பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் 
ஏந்திக்கொண்டார்.
 பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச 
பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக
 மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது
 மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். 
ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக 
நிறைவேற்றினார் ஸ்டாலின். 
உலகிலேயே முதலாவதும் மிகப் பெரிய கூட்டுப்பண்ணைகளை ஸ்டாலின்
 உருவாக்கியதும் அந்த ஐந்தாண்டு திட்டத்தில்தான்.இந்தியாவில் நேரு வும் 
இதனைப்பார்த்தே ஐந்தாண்டு திட்டங்களை கொண்டு வந்தார்.
ஸ்டாலின் ஆட்சியில் ரஷியாவில் சோசலிச பொருளாதார வளர்ச்சியை 
பார்ப்பதற்காக முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் 
சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர்.
இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர்
 பயணம் செய்தனர். 
இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்
 பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார்.
தாகூர் தனது பேனாவைக்காட்டி ” இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 
ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்” என்றார்.
உடனடியாக குழந்தைகள் “ஆறுமாதம் சிறை கிடைக்கும்” என்றனர். 
ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு
 விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.
ஸ்டாலின் ஆட்சியில் ரஷ்ய முதலாளித்து பூதம் அரண்டு போயிருந்ததை
அவர்கள் உணர்ந்து கொண்டனர்..
அந்த முதலாள்த்துவ பூதம்தான் இன்று ஸ்டாலினை கொடுங்கோலராக 
காண்பிக்க முயற்சித்து வருகின்றன.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...