திங்கள், 13 ஜூலை, 2015

யாருக்கு இலாபம்?

அதானியின் ‘சோலர்’ மின்சாரம் –

அதானி குழுமத்துடன் 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தினை அரசு செய்து கொண்டிருக்கிறது. மரபுசாரா மின்சாரம் மூலம் தமிழகத்தின் மின் பற்றாக்குறையைத் தீர்க்கப் போவதாக அரசு சொல்கிறது. இது உண்மைதானா என்பதனை ஆய்வு செய்வதுதான் நம் நோக்கம்..முதலிலேயே ஒன்றை வலியுறுத்திவிடுவது நம் கடமையாகும். நாம் மரபுசாரா மின்னுற்பத்திக்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக நாம் அதன் பயன்பாட்டை வலியுறுத்துகிறோம்; வற்புறுத்துகிறோம்.
இது 648 மெ.வா. 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம். ஒரு யூனிட் ரூ 7.01 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமம் 4536 கோடியை முதலீடு செய்யப் போவதாக செய்திகள் சொல்லுகின்றன. அதாவது ஒரு மெ.வா.க்கு ஏழு கோடி மூலதனச் செலவாகிறது. இதில் 3175 (70%) கோடியை கைமுதலீடு, எஞ்சிய பகுதி கடன் என்கின்றனர். ஒரு மெ.வா.க்கு ஓர் ஆண்டில் 15 லட்சம் யூனிட் (1.5 மில்லியன் யூனிட்) உற்பத்தியாகும் என்று கணக்கிடப்படுகிறது. ஓர் ஆண்டில் மட்டும் 972 மில்லியன் யூனிட் (97.2 கோடி)யை அரசு இந்த குழுமத்திடமிருந்து கொள்முதல் செய்யவிருக்கிறது. ஒரு மெகாவாட்க்கு செலவிடப்படும் ஏழு கோடி ரூபாய் மூலதனம் ஆண்டுக்கு 1.05 கோடி வருமானத்தைத் தரும். இந்த மின் உற்பத்தி நிலையத்திற்குத் தோரயமாக 4000 ஏக்கர் நிலம் தேவைப்படக் கூடும். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இது அமையவிருக்கிறது.
guajrat solar park
2012ல் அரசு சூரிய மின் கொள்கையினை அறிவித்தபோது இங்கு 100 மெ.வா. சூரிய மின் பூங்கா அமைக்கப் போவதாக நிலங்களை அரசு கையகப்படுத்திருக்கிறது. இந்த நிலங்கள் அதானி குழுமத்திற்கு தரப்பட போகிறதா என்பது தெரியவில்லை. ஏக்கர் ஒரு லட்சத்திற்கு வாங்கப்பட்டதாக செய்திகள் முன்னதாக இருந்தது. ‘ராசி கிரின் எர்த்’ என்ற நிறுவனமும் அரசும் சேர்ந்து இந்தப் பூங்காவை அமைப்பதாக இருந்தது.
மின்சாரச் சட்டம் 2003_ சூரிய மின்சாரம் போன்று மரபுசார மின்சாரத்தினை மின் வினியோக நிறுவனங்கள் வாங்கி பயன் படுத்த வேண்டுமெனவும், ஆண்டு உபயோகத்தில் இந்த மின்சாரத்தின் அளவை ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கவும் சொல்லுகிறது. 2012ல் அரசு சூரிய மின் கொள்கை அறிவித்தபிறகு பல வழக்குகளுக்குப்பின் இந்த அளவை 0.25% என ஆணையம் நிர்ணயித்தது. இதனை ஒரு விழுக்காட்டிற்கு உயர்த்த ஆணையம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதியாண்டு 2016ல் தமிழகத்தின் மின் தேவை 92,000 மில்லியன் யூனிட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஒரு விழுக்காடு என்ற நிலையில் வாரியம் 920 மில்லியன் யூனிட் (92 கோடி) சூரிய மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும். அதானி குழுமத்துடன் மற்றவர்களுடன் மின்வாரியம் செய்து கொண்ட மொத்த சூரிய மின்சாரத் திறன் 1058 மெ.வா. ஆகும். ஆக 920 மி.யூ. பதிலாக 1587 மி.யூ.டை ரூ7.01க்கு வாரியம் வாங்கும்.
2010 ஆண்டில் சூரிய மின்சாரத்தின் விலை என்பது யூனிட் ரூ18 ஆக இருந்தது. இன்று படு வேகமாகக் குறைந்து 5.86க்கு வந்து விட்டது. உலக அளவில் சூரியத் தகடுகளின் தேவை வெகுவாக குறைந்து விட்டது. சூரிய மின் உற்பத்தியை முன்னெடுத்த ஜெர்மன், ஸ்பெய்ன், இத்தாலி, செக்கோஸ்லோவகியா போன்ற நாடுகள் தற்போது பின் வாங்கி விட்டன. சீனா, ஜெர்மன் நாடுகளில் சூரிய தகடு உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் திவலாகியுள்ளன. இந்நிலையில்தான் இந்தியா ஒரு லட்சம் மெ.வா. சூரிய மின்சாரத்திற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. தகர்ந்து கொண்டிருக்கும் இந்த அன்னிய நிறுவனங்களுக்கு இது ஒர் இன்ப அதிர்ச்சியாகவே அமைந்திருக்கும். (நடுவண் அரசின் இலக்கு எட்ட முடிந்ததல்ல. இதனைத் தனியாகப் பார்ப்போம்.) அதனால்தான் ஆணையம் சூரிய மின்சாரத்தின் விலையை மட்டும் ஒவ்வொரு ஆண்டுக்கும் மாற்றிட விதியினை வகுத்துள்ளது.
முன்னே சொன்னதுபோல இந்த கொள்முதல் விலை யூனிட்க்கு ரூ1.15 அதிகமாக இருக்கிறது.
 ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ 5.50 என்று இருக்கிறது. 
இங்கும் அதானி குழுமம் வெறும் 40 மெ.வா.க்கு மட்டுமே நிலையத்தை அமைத்துள்ளது. 
எதிர்காலத்தில் இந்த விலை மேலும் குறையக்கூடும். 
தமிழக ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கானது.
 இன்றைய சந்தை விலைக்கே கூடுதலாக கொடுக்கும் விலையைத் தான் 25 ஆண்டுகளுக்கும் கொடுக்க வேண்டும். 
ஒவ்வொரு ஆண்டும் 111.72 கோடியை கூடுதலாக அதானி குழுமத்திற்கு தரப் போகிறோம். 
எதிர் காலத்தில் இந்த விலை குறைந்தால் இது மேலும் கூடும்.
 25 ஆண்டுகளில் 2793 கோடியை தமிழகம் கூடுதலாக தர வேண்டியிருக்கிறது. இதற்கான வட்டியையும் சேர்த்தால், 25ஆண்டுகளில் இக்கூடுதல் விலை இரண்டரை மடங்காகும். 
அதாவது 6982 கோடியாக இருக்கும். 
அதானியின் மூலதனத்திற்கு மேலே இருக்கும்.
இன்று இதனை வாங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லாத பொழுது ஏன் இந்த கொள்முதல்?
ஏழு ரூபாய்க்கு வாங்கப்படும் மின்சாரம் பயனீட்டாளர் முனைக்கு வரும் போது ரூ10.50 ஆக மாறும்.
மரபுசாரா மின்சாரத்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வர கொஞ்ச கட்டண உயர்வை ஏற்றுத்தான் ஆகவேண்டுமென்ற சித்தாந்தத்தை அரசு ஒருவேளை முன் வைக்கலாம். இது சரியானால் சந்தைவிலையை விட அதிகம் தருவதின் காரணம் என்ன? மரபுசாரா மின்சாரம் என்ற பெயரில் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதும் அதனை மக்கள் தலையில் கட்டுவதும் எப்படி நியாயமாகும்?
எல்லாவற்றையும் விட தொழில்நுட்ப ரீதியாக, நிறுவப்பட இருக்கும் நிலையத்தின் உற்பத்தியை தமிழகத்தில் பயன்படுத்த முடியுமா என்ற பெரிய கேள்விக்கு விடையளிப்பார் யாரும் இல்லை. பிரச்சினை இதுதான்.
சூரிய மின்சாரம் இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காற்றாலை மின்உற்பத்தி காற்றின் வேகத்திற்கு ஏற்ப மாறுவது போல் இந்த மின்சாரமும் சூரிய ஒளிக்கேற்ப வேகமாக கூடவும் அதே வேகத்தில் குறையவும் செய்யும். இந்த உற்பத்தி மாற்றம் வினாடிகளில் இருக்கும். மின்சாரத்தை பெரிய அளவில் சேமிக்க முடியாது. எனவே மாறும் வேகத்திற்கேற்ப மற்ற உற்பத்திகளைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டும். ஆனால் மாறும் இம் மின்சாரத்தின் வேகத்திற்கு ஏற்ப வினாடிகளில் இதனைச் செய்ய இயலாது. அப்படிச் சரி செய்யும் பொழுதும் கூட நிலையற்ற இம் மின்சாரம் எதிர்த்திசையில் மீண்டும் மாறக்கூடும். இந்த காரணத்தாலும் செக்கஸ்லாவோக்கியா போன்ற நாடுகள் இம் மின்சார உற்பத்தியிலிருந்து பின் வாங்கின.
மின்சாரத்தின் தேவையும், உற்பத்தியும் மின் அலையால் (Hertz) கட்டுப்படுத்தப்படுகின்றன. 49.5 - 50.2 அலைக்குள் மாநிலத்தின் மின் கட்டமைப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும். 50 அலைக்குமேல் இருந்தால் உற்பத்தி, தேவைக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருளாகும். 50.2 அலைக்குமேலே சென்றால் மாநில மின்கட்டமைப்பு மற்ற மாநிலங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடும் ஆபத்து உண்டு. ஒருவேளை மாநிலமே இருளில் மூழ்க வேண்டியும் வரலாம். அது மட்டுமல்ல. 50.2 அலை வரிசையை எட்டும் போது எந்த மாநிலமும் கூடுதல் உற்பத்தியை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த மின்சாரம் இலவசமாகும். அதற்கு விலையைக் கோர முடியாது.
தமிழகத்தின் மின்கட்டமைப்பு 500 - 700 மெ.வா. அளவுக்கு மட்டுமே இந்த நிலையற்ற மின்சாரத்தினை ஏற்க முடியும். ஆனால் நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. தமிழகத்தில் 7440 மெ.வா. காற்றாலைகள் இருக்கின்றன. சூரிய மின்சாரம் போன்றே இந்த உற்பத்தியும் நிலையற்ற மின்சாரமாகும். காற்றாலை மின்சாரத்தை தமிழகம் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இதன் விலையோ யூனிட் ரூ 3.12 தான். இந்த உற்பத்தியை முடக்குவதாக காற்றாலை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். பல நேரங்களில் 1,200 மெ.வா. உற்பத்தி முடக்கப்படுகிறது. அவசர காலத்தில் காற்றாலைகளையாவது உற்பத்தி செய்யாமல் நிறுத்த முடியும். ஆனால் சூரிய மின்சாரத்தில் இது சாத்தியமில்லை. அதானியின் 4000 ஏக்கருக்கும் உடனடியாக பந்தல் போட்டு மூட வேண்டும். இது நடக்கக் கூடியதல்ல. இந்த மின்சாரம் கட்டமைப்பில் வீணாகப் போவதற்கே, விலையில்லாமல் போவதற்கே சாத்தியம் அதிகம்.
அப்படியானால் சூரிய மின்சாரத்தினை தமிழகம் பயன்படுத்தவே முடியாதா, இந்த வளம் வீணாக வேண்டியது தானா என்ற கேள்வி மிக முக்கியமானது.
இல்லை. இந்த வளம் தமிழகத்தின் பெரிய வரமாகும். திட்டமிடுதலில் தான் தவறு இருக்கிறது. நாட்டின் எந்தத் தேவையையும் முதலாளியிடமிருந்து ஆரம்பிப்பதில் தான் இந்தத் தவறு இருக்கிறது. மாறாக மக்களிடமிருந்து துவங்கினால் மிகப் பெரிய பயனை நாம் பெறமுடியும்.
2013ல் தமிழகத்தில் மாதத்திற்கு 50 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் 89.45 லட்சம் வீடுகளாகும். வாடகை வீட்டில் பொது மின் இணைப்பில் இருப்போரை கணக்கில் எடுத்தால் இது இன்னமும் கூடும். இந்த மின் இணைப்பில் உள்ளோர் பகுதியில் சூரிய தகடுகளை அமைத்து அவர்களுக்கு மின்சாரம் வழங்கலாம். அவர்கள் வாரிய பொது கட்டமைப்பில் இணைக்கப் படவேண்டியதில்லை. இதற்கு ஸ்டேன்ட் எலோன்(stand alone) என்று பெயர். சிறிய கிராமமாக இருந்தால் அந்த கிராமத்திற்கே தனியாக மின்கட்டமைப்பை ஏற்படுத்தலாம். இது மைக்ரோ கிரிட் (micro grid) எனப்படும். சூரியத் தகடுகளை வீட்டின் கூரையில் கூட அமைக்கமுடியும். நிலத்தின் பயன்பாடும் குறையும்.
மாநிலத்தின் கட்டமைப்பிலிருந்து விடுபட்டுவிடுவதால் மின் உற்பத்தியின் ஏற்ற இறக்கங்கள் மாநில கட்டமைப்புக்கு வராது. சிறியளவிலான உற்பத்திக்கு சேமிப்பு மின்கலங்கள் சாத்தியமாகும். இதில் ஏற்படும் மின் இழப்பு குறித்து கேள்வி எழுப்பப்படலாம். இந்த இழப்பும், பொது கட்டமைப்பிலிருந்து மின்சாரம் கொண்டு வரப்படும் இழப்பும் ஒன்றாகவே இருக்கும். எனவே புதிய இழப்பு என்று சொல்வதற்கு ஏதுமில்லை. அத்துடன் எளிய மக்களுக்கு 24*7 மின்சாரம் வழங்க முடியும். சூரிய மின்சாரத்தில் இருக்கும் வசதியே சிறு, குறு மின்உற்பத்தி செய்ய முடிவதுதான். இந்த வசதியைப் பயன்படுத்தியே திட்டமிடப்பட வேண்டும். முதலாளிகளுக்கு லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக இது மாற்றப்பட்டதுதான் இத்தனை துயரத்திற்கும் காரணமாகிறது
பொருளாதார அடிப்படையிலும் அரசுக்கு லாபமானது. 89.45 லட்சம் வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ரூ1.20 ஆகும். தற்போது இவர்கள் முனையில் வாரிய மின்சாரத்தின் விலை ரூ6.20 ஆகிறது. அரசின் மானியம் மற்றும் தொழில், வணிக கட்டணங்களிலிருந்து ஒரு பகுதி என யூனிட்க்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது. 89.45 லட்சம் வீடுகள் ஆண்டுக்கு பயன்படுத்தும் மின்சாரம் 5330 மில்லியன் யூனிட் (533 கோடி) ஆகும். மானிய செலவில் ஆண்டுக்கு 533 * 5 = 2667 கோடி மிச்சமும் ஆகும். இந்தத் தொகையில் ஆண்டுக்கு 388 மெ.வா. சூரிய நிலையம் அமைக்க முடியும். 5330 மில்லியன் யூனிட்க்கு செலவிடப்படும் மூலதனம் மானியச் சிக்கனத்தின் மூலமே 10 ஆண்டுகளில் ஈடு கட்டப்பட்டு விடும். (2667/7= 388 மெ.வாட். 5330/1.5 = 3553 மெ.வாட்.) ஆண்டு மின் கட்டணமான 640 கோடி வருமானமும் குறையாமல் கிடைத்துக் கொண்டிருக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக 25 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு கட்டண உயர்வும் இருக்காது. சமூகத்தின் எளிய மக்களுக்கு தொழில்நுட்பம் இவ்வாறு தான் பயன்பட வேண்டும்.
இது போன்றே ஆண்டுக்கு 12,000 மில்லியன் யூனிட் செலவாகும் 20 லட்ச விவசாய இணைப்புகளையும் தனித் தனி 5 கிலோவாட் மின் உற்பத்தி நிலையமாக்கிவிட முடியும். நடுவண் அரசு மானியத்தில் சிறிய அளவில் நடைமுறையிலும் இத்திட்டம் உள்ளது.
கேரளத்தின் ‘விழிங்ஞம்’ துறைமுக ஒப்பந்தத்தினை அதானி குழுமம் பெற்றுள்ளது. கிழக்கு கடற்கரையில் ஆந்திரத்தின் ‘கங்காவரம்’, புதுச்சேரி துறைமுகங்களைப் பெறுவதில் இதனால் வெற்றி பெற முடியவில்லை. தற்போது எண்ணூர் துறைமுகம் இதன் குறியாக இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. நடுவண் ஆளும் கட்சிக்கு கேரளமும், தமிழகமும் தீவாக உள்ளது. அரசியல் மூலதனத்திற்கு அதானியா(?) என்று தமிழக அரசியல் வட்டம் இதனைக் கணிக்கிறது. இதன் பின்னணி பல யூகங்களுக்கு விதையாக இருப்பது உண்மைதான்.
                                                                                                                                           - சா.காந்தி
நன்றி:கீற்று.
========================================================================
========================================================================
இன்று,

ஜூலை-14.

  • ஈராக் குடியரசு தினம்
  • நாசாவின் சேர்வெயர் 4 எனும் ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது(1967)
  • பிரெஞ்சுப் புரட்சியின் 200வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது(1989)
  • ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன(1933)

  • மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு இயற்கை எய்தினார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொஞ்சம் உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறிய நிலையில் காலமாகியுள்ளார்.
    மெல்லிசை மன்னருக்கு தற்போது 87 வயதாகிறது .கடைசிவரை தொலைகாட்சிகளில் இசை நிகழ்சிகள் நடத்திவந்துள்ளார்.
    இதுவரை 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
    தனது தோழர் ராமமூர்த்தியுடன் இணைந்து விஸ்வனாதன் -ராம மூர்த்தி என்ற பெயரில் 700 படங்களுக்கும்,தனியாக 500 படங்களுக்கு ம் இசையமைத்துள்ளார்.
    இவரின் சொந்த ஊர் கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி ஆகும்.
    இவரின் முழுப்பெயர்  பெயர்
    மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வனாதன் ஆகும்.
    தமிழ் மட்டுமின்றி மலயாளம்,இந்தி,கன்னடம் தெலுங்குப் படங்களுக்கும் விஸ்வனாதன் இசையமைத்துள்ளார்.
    உலகநாயகன் கமல்ஹாசனின் காதலா,காதலா,காதல் மன்னன்,உட்பட 11 பட்னக்களில் நடித்துள்ளார்.


    =======================================================================

பூமி மீண்டும் நீரில் மூழ்கும்?

பூமியிலுள்ள நிலப்பரப்புகள் மறைந்து, மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

நேச்சர் ஜியோசைன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருவதாகவும், 2 பில்லியன் ஆண்டுகளில், பூமி முழுவதும் மீண்டும் தண்ணீரால் சூழப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவரத் தொடங்கியது. கண்டங்களின் மேலோட்டின் தடிமன், அதன் அதிகபட்ச அளவான 40கி.மீ., அளவை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எட்டியது. 

அதன் பின் அதன் தடிமன் குறைந்தபடியே உள்ளதாகவும், கண்டங்களின் மேலோடுகள் அரிப்படைந்து வருவதால், பூமி மீண்டும் நீரில் மூழ்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
========================================================================

ஞாயிறு, 12 ஜூலை, 2015

சின்ன மோடி! பெரிய மோடி!!

"ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் என்று பீற்றிக் கொள்ளும் மோடியின் ஆட்சி, கருப்புப் பண கிரிமினல் லலித் மோடியைக் காப்பாற்றினால்தான் கட்சி, ஆட்சி இரண்டின் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நகைக்கத்தக்க நிலையில் தடுமாறுகிறது."
லித் மோடி – சுஷ்மா சுவராஜ், லலித் மோடி – வசுந்தரா ராஜே உறவு விவகாரங்களில் அம்பலத்துக்கு வந்திருக்கும் திரைமறைவு இரகசியங்கள் பா.ஜ.க.வோடு, ஊழலுக்கு எதிரானவராகவும், வலிமையான தலைவராகவும் முன்நிறுத்தப்பட்ட நரேந்திர மோடியின் டவுசரையும் உருவிவிட்டன. லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே – இந்த மூவரில் யார் மீது நடவடிக்கை எடுத்தாலும், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொண்டது போன்ற நிலையை உருவாக்கிவிடும் என்ற நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட மோடி, வழக்கமாக காது வரை கிழியும் தன் வாய்க்குப் பூட்டுப்போட்டு “மன்மோகன் சிங்” ஆகிவிட்டார். அவரது அமைச்சர்களெல்லாம் ஊடகங்களின் கண்ணில் படாமல் தப்பித்து ஓடுகின்றனர்.
லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.
அப்பாடக்கராக முன்நிறுத்தப்பட்ட மோடியின் டவுசரை உருவிய மும்மூர்த்திகள் : லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.
“பொதுப் பணத்தை நானும் தின்னமாட்டேன், மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என்று ஊழலுக்கு எதிராக உதார்விட்டு ஆட்சிக்கு வந்தவர் மோடி. ஆனால், அவரது அமைச்சரே – சுஷ்மா சுவராஜ் – பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிக்கு நெருக்கமாக இருந்து உதவி புரிந்திருக்கிறார். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்டுக் கொண்டு வருவோம்” எனச் சவடால் அடித்த மோடி, கருப்புப்பணக் குற்றவாளியான மோடியைக் காப்பாற்றுவதா, தனது அமைச்சர்களைக் காப்பாற்றுவதா, காற்றுப் போன பலூனாகிவிட்ட தனது இமேஜைக் காப்பாற்றுவதா என்று தெரியாத நகைக்கத்தக்க கேவலமான நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.
***
லித் மோடியின் மீது 16 பொருளாதாரக் குற்றங்கள் நிலுவையில் இருப்பதால், அவரது கடவுச்சீட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் (காங்கிரசு ஆட்சியின் போது) முடக்கிவைத்திருப்பதை எதிர்த்து லலித் மோடி தொடுத்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்ற அதே நேரத்தில், தனது அமைச்சகத்தின் நிலைக்கு எதிராகவும், வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங்கிற்குத் தெரியாமலும், லலித் மோடிக்கு ஆதரவாக பிரிட்டிஷ் அரசிடம் பரிந்துரை செய்திருக்கிறார். மேலும், இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து லலித் மோடிக்கு உதவும்படிக் கோரியிருக்கிறார். இது குறித்து நிதியமைச்சருக்கும் சுஷ்மா தெரிவிக்கவில்லை. காரணம், சுஷ்மாவுக்கும் அருண் ஜெட்லிக்குமிடையிலான கோஷ்டி தகராறு மட்டுமல்ல, ஐ.பி.எல். இலிருந்து லலித் மோடியை விரட்டிய முக்கிய எதிரி அருண் ஜெட்லி என்பதும்தான்.
லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.லலித் மோடிக்கு உதவியது குறித்து கடந்த ஒரு வருடமாக வாய் திறக்காமலிருந்த சுஷ்மா, பூனைக்குட்டி வெளியே வந்தவுடன், “லலித் மோடி மனைவிக்கு போர்ச்சுகல் மருத்துவமனையில் புற்றுநோ அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகவும், அதற்கு லலித் மோடி மருத்துவமனைக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டியிருந்ததால், மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியைச் செய்ததாகவும்” விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால், இந்த விளக்கம் வெளிவந்தவுடனேயே இது பொய் என்பது அம்பலமாகிவிட்டது.  மனைவியின் அறுவை சிகிச்சைக்கு கணவனின் கையெழுத்து தேவை என்று போர்ச்சுகல் நாட்டு சட்டங்கள் கூறவில்லை. கையெழுத்துப் போடுபவர்கள் அதனை இணையத்தின் வழியாக அனுப்பலாம் என்றும் அந்நாட்டின் விதிகள் அனுமதிக்கின்றன என்ற விவரங்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தி விட்டன. மேலும் லலித் மோடிக்கு சுஷ்மா செய்திருக்கும் ‘மனிதாபிமான’ உதவியின் விளைவாக, போர்ச்சுகலுக்கு சென்று வருவதற்கு மட்டுமல்ல, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று வருவதற்கான பயண ஆவணம் பிரிட்டிஷ் அரசால் லலித் மோடிக்கு வழங்கப்பட்டிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.
மனைவியின் அறுவை சிகிச்சை நடந்ததாகக் கூறப்பட்ட மூன்றாவது நாளே, போர்ச்சுகலுக்கு அருகிலுள்ள இபிஸா என்ற உல்லாசத் தீவில் தனது குடும்பத்தாரோடு கேளிக்கை விருந்தைக் கொண்டாடியிருக்கிறார் லலித் மோடி. இதுமட்டுமல்ல, இங்கிலாந்திலிருந்து வெளியேற அனுமதி கிடைத்த இந்த ஓராண்டுக்குள் லலித் மோடி உலகெங்குமுள்ள 25-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றிருக்கிறார். அங்கெல்லாம் கேளிக்கை விருந்துகளில் கும்மாளமடித்திருக்கிறார்; வியாபார பேரங்களை நடத்தி முடித்திருக்கிறார். மேற்கண்ட காரியங்களுக்காக இங்கிலாந்திலிருந்து வெளியேறுவதற்கு லலித் மோடிக்கு அனுமதி வாங்கிக் கொடுப்பதுதான் சுஷ்மா சுவராஜின் நோக்கமென்பதும், புற்றுநோய் என்பதெல்லாம் மட்டரகமான செண்டிமெண்ட் நாடகம் என்பதும் அம்பலமாகியிருக்கின்றன.
விசயம் இத்தோடு முடியவில்லை. மேற்கண்ட மனிதாபிமான உதவியின் பின்புலமும் அம்பலமாகியிருக்கிறது. சுஷ்மாவின் உறவினர் ஒருவருக்கு இலண்டனில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் கல்லூரியில் இடம் வாங்கித் தந்திருக்கிறார் லலித் மோடி. சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கௌசல் கடந்த 22 ஆண்டுகளாக லலித் மோடியின் வழக்குரைஞர். சுஷ்மாவின் கணவரும் மகள் பான்சுரி சுவராஜும் லலித் மோடிக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கடவுச்சீட்டு முடக்கப்பட்ட வழக்கில் டில்லி உயர்நீதிமன்றத்தில் வாதாடியவர்கள். இன்டோபில் என்ற தனது நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி ஏற்குமாறு ஏப்ரல்-15, 2015 அன்று சுஷ்மாவின் கணவருக்கு லலித் மோடி கடிதம் அனுப்பியிருக்கிறார். தான் அந்தப் பதவியை வேண்டாமென்று மறுத்துவிட்டதாக தற்போது சுவராஜ் கவுசல் விளக்கமளித்த போதிலும், லலித் மோடிக்கும் சுஷ்மாவுக்கும் இடையிலான கொடுக்கல் – வாங்கல் உறவுகளை இவை அம்பலமாக்குகின்றன.
***
சுஷ்மா – லலித் மோடிக்கு இடையேயான உறவைவிட, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் லலித் மோடிக்கும் இடையேயான உறவு அசாதாரணமானது. பனியா தரகு முதலாளியான கே.கே.மோடியின் மகனும், படிப்புக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டு அங்கே போதை மருந்து வழக்கில் சிக்கி, தந்தையின் செல்வாக்கினால் இந்தியாவுக்குத் தப்பித்து வந்தவனுமான, பணக்கார வீட்டு உருப்படாத பிள்ளைதான் லலித் மோடி. அடையாளம் தெரியாமல் கிடந்த லலித் மோடி இந்திய கிரிக்கெட் அரங்கையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு வளர்ந்ததற்கு அடித்தளமிட்டுக் கொடுத்ததே வசுந்தரா ராஜேதான். பத்தாண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே, ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் அம்மாநில கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல் விதிகளை மாற்றி, 2005-ல் லலித் மோடியை அதன் தலைவராக்கினார். சூப்பர் சீஃப் மினிஸ்டர் என்று ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கூறும் அளவுக்கு அரசு நிர்வாகத்தில் மட்டுமின்றி, ராஜஸ்தான் பா.ஜ.க. விலும் மோடியின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது.
இதனைத் தொடர்ந்து லலித் மோடி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் பதவியைப் பெற்றதும், அதற்கு இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், காங்கிரசின் ராஜீவ் சுக்லா, பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி மற்றும் சரத் பவார் உதவியதும், இந்த கோஷ்டி இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தமக்கு எதிரான டால்மியா கோஷ்டியைத் தோற்கடித்ததும், 2008-ல் லலித் மோடி ஐ.பி.எல். என்ற பெயரில் மாபெரும் சூதாட்டத்தை அறிமுகப்படுத்தியதும், ஒரு கட்டத்தில் சீனிவாசன்-லலித் மோடி கோஷ்டிகளுக்குள் தகராறு ஏற்பட்டு, லலித் மோடி ஓரங்கட்டப்பட்டு, அவரது தில்லுமுல்லுகளும் மோசடிகளும் அம்பலப்படுத்தப்பட்டதும், காங்கிரசு ஆட்சியில் மோடியின் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பாய்ந்ததும், மோடி நாட்டைவிட்டுத் தப்பியோடியதும், அருண் ஜெட்லி அங்கம் வகித்த கமிட்டியே லலித் மோடிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஆயுட்காலத் தடை விதித்ததும் இந்திய கிரிக்கெட் சூதாட்ட வரலாற்றில் கல்வெட்டுகளாகப் பதிவாகியிருக்கின்றன.

ஊழல் –
மோடியின் ஸ்டைல்!


த்தனை குறைகள் இருந்த போதிலும், மோடியின் ஓராண்டு ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்று கார்ப்பரேட் முதலாளிகள் கொண்டாடுகின்றனர். அவர்கள் கொண்டாடக் காரணம் இருக்கிறது. இறக்குமதிப் பொருட்களின் மதிப்பைக் கூட்டி பல ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அதானி மீது தொடரப்பட்ட வழக்கு நிதியமைச்சகத்தில் தூங்குகிறது. சில ஆயிரம் கோடி மதிப்புள்ள வர்த்தக சாம்ராச்சியத்தை நடத்தும் பாபா ராம்தேவ் மீது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க கருப்புப்பண வழக்கு இருந்தது. அதனை மோடி அரசு ரத்து செய்து விட்டது. அலைக்கற்றை வழக்கில் ராசா மீதான வழக்கு தீவிரமாக நடத்தப்படுகின்ற அதே நேரத்தில், அலைக்கற்றை விற்பனையிலும், பின்னர் நிலக்கரி வயல் ஏலத்திலும் ஆதாயமடைந்த தரகு முதலாளிகள் பலர் மீதான கருப்புப் பண வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளுடைய வாராக்கடன் 5 இலட்சம் கோடியில் பெரும்பகுதியைத் தரவேண்டிய 12 தரகு முதலாளிகளின் பிடியில்தான் சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட கேந்திரமான பல துறைகள் இருக்கின்றன. இந்த ஊழல்களுக்குப் பொறுப்பான குற்றவாளி சின்ன மோடி அல்ல, பெரிய மோடி.
லலித் மோடியுடனான இத்தகைய நீண்டகால உறவின் அடிப்படையில்தான் மோடி இலண்டனில் தங்குவதற்கு அனுமதி கேட்டு பிரட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் செய்தபொழுது, அவருக்குச் சாட்சியம் அளித்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார், வசுந்தரா ராஜே. இந்தப் பிரமாண பத்திரத்தை அவர் ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரிட்டிஷ் அரசிடம் தாக்கல் செய்ததோடு, இது இந்திய அரசுக்குத் தெரியக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். லலித் மோடி இலண்டனை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருந்தபொழுது, ராஜே அவரது மனைவியைப் புற்றுநோய் சிகிச்சைக்காக போர்ச்சுகலுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். அடுத்த இரண்டு மாதங்களுக்குள், ராஜஸ்தான் மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வழங்குவதற்காக என்று கூறிக்கொண்டு, மோடிக்கு சிகிச்சை அளித்த போர்ச்சுகல் மருத்துவமனை ஜெய்ப்பூரில் ஒரு கிளையைத் தொடங்குவதற்கு 96,000 சதுரமீட்டர் நிலத்தை ஒதுக்கியிருக்கிறார் ராஜே. அதே சமயத்தில் சிகரெட் மீது முந்தைய காங்கிரசு அரசு விதித்திருந்த வரியை 20% குறைத்து, மோடியின் சிகரெட் கம்பெனிக்கு கோடிக்கணக்கில் ஆதாயத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.
வசுந்தரா ராஜேயின் மகனும் பா.ஜ.க.வின் எம்.பி.யுமான துஷ்யந்த், தனது மனைவியைப் பங்குதாரராகக் கொண்டு நிகந்த் ஹெரிடேஜ் என்ற ஆடம்பர விடுதியை நடத்தி வருகிறார். இது ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் காட்டப்பட்ட உப்புமா நிறுவனங்களைப் போன்றது. இந்த நிறுவனத்தில் வரவு-செலவு எதுவுமே நடந்ததில்லை எனக் கூறப்படுகிறது. இப்படிபட்ட உப்புமா நிறுவனத்தின் 10 ரூபாய் பெறுமான பங்கை 96,160 ரூபாய் கொடுத்து வாங்கி, அந்நிறுவனத்தில் 11 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறார், லலித் மோடி. இந்த முதலீட்டிற்கான பணம் கருப்புப் பண சோர்க்கமான மொரிஷியஸிலிருந்து வந்திருக்கிறது. இது மட்டுமல்ல, அரசுக்குச் சொந்தமான தோல்பூர் அரண்மனை கட்டிடத்தை வசுந்தராவின் மகனும் லலித் மோடியும் தங்களுடையதாக்கிக் கொண்டு விட்டனர். ராஜஸ்தானில் இவர்கள் நடத்தியிருக்கும் கூட்டுக்கொள்ளையின் ஒரு சிறிய பகுதிதான் இது என்று தெரிகிறது.
சுவராஜ் கவுசல், பான்சுரி சுவராஜ், துஷ்யந்த்
சுஷ்மா சுவராஜின் கணவரும் லலித் மோடியின் வழக்குரைஞருமான சுவராஜ் கௌசல்; லலித் மோடியின் கடவுச்சீட்டு வழக்கில் அவருக்காக வாதாடிய சுஷ்மாவின் மகள் பான்சுரி சுவராஜ்; லலித் மோடியின் வியாபாரக் கூட்டாளியும் வசுரந்தரா ராஜேயின் மகனும் பா.ஜ.க எம்.பி.யுமான துஷ்யந்த்.
கிரிக்கெட் தொடர்பான விவகாரங்களில் மட்டும், லலித் மோடி மீது அந்நியச் செலாவணி மோசடி உள்ளிட்டு 16 பொருளாதாரக் குற்றங்கள் விசாரணையில் உள்ளன; 1,680 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கிறது. மோசடிக் குற்றத்துக்காக சென்னையில் ஒரு கிரிமினல் வழக்கு 2010-இல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாக் கட்சிகளிலும் மோடிக்கு கூட்டாளிகள் இருப்பதாலும், இந்த கொள்ளைக்கூட்ட வலைப்பின்னலில் அங்கம் வகிக்கும் காங்கிரசு, பா.ஜ.க. தலைவர்கள் முதல் பவார் உள்ளிட்ட அரசியல்வாதிகள், பாலிவுட் நடிகர்கள், தரகு முதலாளிகள், கிரிக்கெட் பிரபலங்கள் போன்ற பலரும் இந்த விவகாரம் கிளறப்படுவதை விரும்பவில்லை என்பதாலும்தான் மோடிக்கு எதிரான குற்றங்கள் எதுவும் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
இப்படிபட்ட குற்றவாளிக்குத்தான் சுஷ்மா சுவராஜும், வசுந்தரா ராஜேயும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவியிருக்கிறார்கள். இந்த அதிகார துஷ்பிரயோகம்தான் 2 ஜி ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுவரும் ஆ.ராசாவின் மீது உள்ள குற்றச்சாட்டு, ராசா கையூட்டு வாங்கினார் என்பதல்ல. ஆ. ராசா தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அலைக்கற்றையை ஏலம் எடுக்க உதவினார் என்பதுதான். ஆனால் சுஷ்மா, வசுந்தரா ராஜேவுக்கு எதிரான குற்றங்களோ மிகக்கடுமையானவை. ஒவ்வொரு வழக்கிலும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கத்தக்க கருப்புப்பணத்தை வெள்ளையாக்கும் குற்றங்கள் பலவற்றை செய்து விட்டு, எல்லா கட்சிகளிலும் அதிகார வர்க்கத்திலும் தனக்கு இருக்கும் செல்வாக்கினால் தண்டிக்கப்படாமல் தப்பி வரும் ஒரு கிரிமினலுக்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள். இந்த உதவிக்காக, சுஷ்மாவும் ராஜேவும் மோடியின் மூலம் பெற்றிருக்கும் ஆதாயங்களும் நாள்தோறும் அம்பலமாகி வருகின்றன.
ஆனாலும், ஆ.ராசாவுக்கு எதிராகப் பெருங்கூச்சல் போட்ட பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் இவர்களுக்கு வக்கீலாக நின்று வாதாடுகிறது. ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், சுஷ்மா சுவராஜின் ‘மனிதாபிமான உதவி’யை நியாயப்படுத்துகிறார். லலித் மோடி மீதான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு, மோடி மீது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டிருக்கிறதா, அவர் தேடப்படும் குற்றவாளியா என்று லலித் மோடியின் வக்கீலாகவே கேள்வி எழுப்புகிறார்கள் பா.ஜ.க. வின் பிரதிநிதிகள்.
***
அருண் ஜெட்லி, சீனிவாசன், ராஜீவ் சுக்லா, சரத் பவார்.
ஐ.பி.எல் போட்டிகளைத் தொடங்கியதில் லலித் மோடிக்கு ஆதரவாக நின்ற பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சுக்லா மற்றும் தேசியவாத காங்கிரசு கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவார்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடி அரசு – இம்மூன்றும் ஒரே குரலில் சுஷ்மாவையும் ராஜேவையும் ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டாலும், நாளுக்கொன்றாக வெளிவரும் ரகசியங்களும் சங்க பரிவாரத்தை பீதிக்குள்ளாக்குகின்றன. பிள்ளையைக் கிள்ளிவிட்டது யார் என்ற கேள்வி பா.ஜ.க.விற்குள்ளேயே எழுப்பப்படுகிறது. டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க விவகாரத்தில் அருண் ஜெட்லியிடம் மண்ணைக் கவ்விய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க.வின் தர்பங்கா தொகுதி எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத், “இவை போன்ற பிரச்சினைகளைக் கட்சிக்குள் ஏற்படுத்தி, மோடி அரசுக்குத் தலைவலி ஏற்படுத்தி வருவது அருண் ஜெட்லிதான். அவர் தன்னை மிஞ்சி யாராவது கட்சியிலும் ஆட்சியிலும் வளர்ந்துவிட்டால், அவர்களைக் காலி செய்ய தந்திரமான காரியங்களைச் செய்யத் தொடங்கி விடுவார்” என வெளிப்படையாகக் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, அருண் ஜெட்லியைப் புல்தரையில் மறைந்திருக்கும் பாம்பு எனச் சாடியிருக்கிறார்.
இது மட்டுமின்றி, “ஐ.பி.எல். போட்டிகளை ஆப்பிரிக்காவுக்குக் கொண்டுபோனதில் நடந்துள்ள முறைகேடுகளுக்காக லலித் மோடியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ள அமைப்புகள், ஐ.பி.எல். போட்டிகளை ஆப்பிரிக்காவில் நடத்த அனுமதி கொடுத்த இந்திய கிரிக்கெட் வாரிய கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்த அருண் ஜெட்லியை, சரத் பவாரை, ராஜீவ் சுக்லாவை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை?” எனக் கேட்டு, இந்த விவகாரத்தின் இன்னொரு பக்கத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
ஸ்மிருதி இரானி, பங்கஜா முண்டே
கல்வித் தகுதி மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் 200 கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜா முண்டே
சுஷ்மா, வசுந்தரா ராஜே தொடர்பான செய்தியை வெளியிட்ட இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகை ரூபர்ட் முர்டோக்கிற்கு சொந்தமானது என்றும், ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையைத் தனக்குத் தரவில்லை என்பதற்குப் பழிவாங்கத்தான் முர்டோக் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே கிளறியிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் லலித் மோடி.
“காங்கிரசு ஆட்சியில் அமைச்சராக இருந்த சசிதரூர் தனது மனைவி சுனந்தா பெயரில் ஐ.பி.எல். கொச்சி அணியை ஏலம் எடுத்ததை அன்று நான் அம்பலப்படுத்தியதனால்தான், அன்று நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அடுக்கடுக்காக என்மீது வழக்கு போட்டார். தற்பொழுது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் தனிச் செயலர் ஓமிதா பாலுக்கு சர்வதேச ஹவாலா கடத்தல் பேர்வழி நாக்பாலுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தியாவிலிருந்து கருப்புப் பணம் வெளியேறி, அது சுவிஸ் வங்கிகளில் போடப்படுவதற்கு நிதியமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். மறுக்க முடியுமா?” என்று இன்னொரு குண்டையும் வீசியிருக்கிறார் லலித் மோடி.
சுஷ்மா-லலித் மோடி உறவு அம்பலமான அடுத்த நாளிலேயே, லலித் மோடிக்கும் வசுந்தரா ராஜேக்கும் இடையேயான முப்பது ஆண்டு கால நட்பும், வர்த்தக உறவுகளும் வெளிச்சத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து லலித் மோடியைத் தேசியவாத காங்கிரசு கட்சித் தலைவர் சரத் பவார், இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான், மும்ப போலீசு கமிஷனர் ராகேஷ் மிஷ்ரா உள்ளிட்டுப் பலரும் இலண்டனில் சந்தித்திருப்பது வெளியானது. லலித் மோடிக்கு ஆதரவாக பத்திரிகையாளர் பிரபு சாவ்லா, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றோர் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.
ஒருவகையில் லலித் மோடியை ஜெயலலிதாவுடன் ஒப்பிடலாம். கட்சிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகிய அனைத்திலும் உள்ள பிரமுகர்களைத் தனக்காக அணிவகுத்து நிற்க வைத்திருக்கிறார். தன் மீது தாக்குதல் வரும் பட்சத்தில் யாருடைய இடுப்புத் துணியை உருவுவதற்கும் அவர் தயங்கமாட்டார்.
***
03-modi-captionலித் மோடி மலத்தொட்டிக்குள் கிடக்கும் குண்டு. அவர் மீதான விசாரணையை மன்மோகன் சிங் ஆட்சியும், மோடி ஆட்சியும் கிடப்பில் போட்டிருப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் பல இருக்கக் கூடும். எனினும், அந்த குண்டு வெடித்தால் அத்தனை பேரும் மக்கள் மத்தியில் நாறி விடுவோம் என்ற காரணத்தினால், ‘பொது நன்மை கருதியே’ யாரும் அவரை சீண்டத் தயங்குகிறார்கள். கெடு வாய்ப்பாக சின்ன மோடி என்ற இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பொறுப்பு பெரிய மோடியின் தலையில் விடிந்துவிட்டது.
பிரதமர் பதவியையும் கட்சித்தலைவர் பதவியையும் சதித்தனமாக கைப்பற்றியிருக்கும் மோடி – அமித் ஷா கும்பல், ஒரே ஆண்டில் இப்படி சிக்கித் தவிப்பது குறித்து காங்கிரசை விடவும் மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் பா.ஜ.க. தலைவர்களாகத்தான் இருப்பர் என்பதில் ஐயமில்லை. அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மா, சவுகான், ராஜே போன்ற பலரும் தங்களது எதிரிகள் என்று மோடி-ஷா கும்பலுக்கு தெரியும். ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வைத் தன் செல்வாக்கின் கீழ் வைத்துக் கொண்டுள்ள வசுந்தரா ராஜே, “நானாகப் பதவி விலக மாட்டேன்” என்று மோடிக்கு தண்ணி காட்டுகிறார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ராஜேவை நீக்கலாம். ஆனால் அவர் மோடிக்கு வெளிப்படையான சவாலாகி விடுவார். கட்சியும் கலகலத்து விடும்.
ராஜேவை நீக்கினால் சுஷ்மாவை நீக்காமலிருக்க முடியாது. இரண்டு பேரை மட்டும் நீக்கினால், பிறகு வியாபம் ஊழல் சவுகான், மகாராஷ்டிராவில் பங்கஜா முண்டே என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி, மகாராஷ்டிரா கல்வியமைச்சர் வினோத் டாவ்டே, கோவா பொதுப்பணித்துறை அமைச்சர் சுவின் தவாலிகர் ஆகிய மூவரும் தமது கல்வித் தகுதி குறித்து பொய்த்தகவல்களையும், போலிச்சான்றிதழ்களையும் தந்திருப்பது அம்பலமான பிறகும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காங்கிரசு கூட்டணி ஆட்சியிலாவது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆ.ராசா, பவன் குமார் பன்சால், அஸ்வின் குமார் ஆகியோரை நீக்க முடிந்தது. மோடியின் தனிப்பெரும்பான்மை ஆட்சியோ தடுமாறுகிறது. ஏற்கெனவே மோடியைப் பயந்தாங்கொள்ளி என்று காங்கிரசு கேலி பேசுகிறது. கட்சிக்குள்ளேயும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்புகின்றன.

ல. மோடியை இலண்டனுக்குத் துரத்திய ந.மோடி!

ன்று லண்டனில் இருக்கும் சின்ன மோடியைப் பிடித்துக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு பெரிய மோடியின் தலையில் விழுந்திருக்கிறது. ஆனால், லலித் மோடி இலண்டனுக்கு ஓட நேர்ந்ததற்கு காரணமே நரேந்திர மோடிதான் என்ற விவகாரம் எத்தனை பேருக்குத் தெரியும்?
2008-ல் ஐ.பி.எல். சூதாட்டம் லலித் மோடியால் தொடங்கப்பட்டு, ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா போன்றோரெல்லாம் ஆளுக்கு ஒரு டீமை விலைக்கு வாங்கி கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்த நிலையில், தானும் ஒரு டீமை விலைக்கு வாங்கவேண்டுமென அதானி ஆசைப்பட்டார். எனவே, நரேந்திர மோடியும் அவ்வண்ணமே ஆசைப்பட்டார். ந.மோடிக்கு ஒரு அணியை வாங்கித்தருவதாக ல.மோடி வாக்களித்திருந்த நிலையில், அதனை கொச்சி அணி என்ற பெயரில் லவுட்டிக் கொண்டு போய் விட்டார் சுனந்தா புஷ்கர். ஆத்திரமடைந்த ல.மோடி, ஐ.பி.எல். நிர்வாகக் குழுவின் விதிகளை மீறி, ஏலம் தொடர்பான உள் விவகாரங்களைப் போட்டு உடைத்ததுடன், புஷ்கருக்குப் பின்னால் இருந்தது அன்றைய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் என்றும் குற்றம் சாட்டினார். சசி தரூர் பதவி இழந்தார். அதன் தொடர் விளைவாக லலித் மோடி ஐ.பி.எல் இலிருந்து வெளியேற்றப்பட்டார். அதானி விவகாரத்துக்காக அன்று ல.மோடி மீது நடவடிக்கை எடுத்தவர்களில் முக்கியமானவர் அருண் ஜெட்லி.
தோல்வியைச் சீரணிக்க முடியாதவரான அன்றைய குஜராத் முதல்வர் ந.மோடி, சசி தரூரின் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கேர்ல் பிரண்டு என்று சுனந்தா புஷ்கரை கீழ்த்தரமான முறையில் ஏசினார். இன்று சுனந்தா புஷ்கரின் சந்தேக மரணத்துக்காக சசிதரூர் விசாரிக்கப்படுகிறார்.
பெரிய மோடியின் ஆசையை நிறைவேற்ற முனைந்து, அதன் விளைவாக பதவி இழந்து இலண்டனுக்கு ஓட நேர்ந்த சின்ன மோடியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய துர்ப்பாக்கியமான சூழலில் இருக்கிறார் பெரிய மோடி.
அலட்சியப்படுத்தப்பட்டு குமுறிக் கொண்டிருந்த அத்வானி அதனை தொடங்கிவைக்கிறார். தன் மீது ஹவாலா குற்றச்சாட்டு வந்தபோது, தான் உடனே ராஜினாமா செய்ததை நினைவு கூர்ந்து, “பொதுவாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிப்பது அவசியம்” என்று கூறி, மோடிக்கும் தன்னைக் கைவிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும் சேர்த்து அல்லையில் ஒரு குத்து குத்துகிறார். மோடியை பேசச்சொல், அமித் ஷாவைப் பேசச்சொல் என்று ஆளாளுக்கு தொலைக்காட்சிகளில் சவால் விடுகிறார்கள்.
இதற்கு மேலும் பேசாமலிருக்க முடியாது, பேசவும் முடியாது என்ற நிலையில் இருக்கும் சங்க பரிவாரத்தின் தலைமை, கோவிந்தாச்சார்யாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. “சுஷ்மாவும் ராஜேவும் ராஜினாமா செய்யவேண்டும். இந்த அரசு மதிப்பீடுகளை இழந்து விட்டது. தன்னுடைய கவுரவம் போக்கொண்டிருக்கிறது என்பதை நரேந்திர மோடி உணரவேண்டும்” என்று பேட்டி கொடுக்கிறார் கோவிந்தாச்சார்யா.
ஊழல் இல்லை என்பதுதான் ஒரு ஆண்டு ஆட்சியின் முக்கிய சாதனை என்று சொல்லி வாய் மூடுவதற்குள் கிளம்பி விட்டது சின்ன மோடி விவகாரம். பதினைந்து நாட்களுக்கும் மேலாக எல்லாத் திசைகளிலிருந்தும் அன்றாடம் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. யார் மீது யார் கல்வீசினாலும் அந்தக்கல் கடைசியில் பிரதமரின் மண்டையைத்தான் பதம் பார்க்கிறது. சர்வதேச யோகா தினம், பெண் குழந்தைகள் தினம், மன் கி பாத், “டிஜிட்டல் இந்தியா” என்று எத்தனை நாட்கள்தான் வடிவேலு கணக்காக வலிக்காதது போல நடிக்க முடியும்?
தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில், உறுதியான நடவடிக்கையாக எதையாவது செய்ய வேண்டும். இறுதியில் பார்த்தால், எதுவும் செய்திருக்கக்கூடாது. இதை எப்படிச் செய்வது என்பதுதான் நரேந்திர மோடியின் முன் உள்ள கேள்வி.
                                                                                                                                              -திப்பு
_____________________________----
புதிய ஜனநாயகம், ஜூலை 2015

ஞாயிறு, 5 ஜூலை, 2015

ஊழல்களின் தாய்

" 'வியாபம் ஊழல் 2ஜியில் நடந்ததாக  முறைகேடு கணக்கை தாண்டி விடும் என்று சொல்லப்படுகிறது.இந்த ஊழல்களில் சம்பத்தப்பட்ட வர்கள் பட்டியலில் உள்ளவர்களில் இதுவரை 80 பேர்கள் திடீரென மர்மமான முறையில் இறந்துள்ளனர்.வியாபம் ஊழலை ஊழல்களின் தாய்என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. இங்கே பிரம்மாண்டம் என்பது புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.சம்பந்தப்பட்ட காவிக்குமபலையும் சேர்த்துதான்."
நீ ங்கள் ஒரு மருத்துவராக, பொறியியலாளராக அல்லது அரசு ஊழியராக என்ன செய்ய வேண்டும்?
வியாபம் மெகா ஊழல்
வியாபம் மெகா ஊழல்
பதில்: உங்கள் ஏரியா ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் அல்லது பாரதிய ஜனதா தலைவர் எவருக்காவது ‘காணிக்கை’ கொடுத்தால் போதுமானது.
என்ன குழப்பமா? 
பாரதிய ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தில் உள்ள நிலைமையைத் தான் சொல்கிறோம். விளக்கமாகவே சொல்கிறோம்.
எட்டாம் வகுப்பிலிருந்தே மருத்துவம் போன்ற துறைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு பிள்ளைகளை தயாரிக்கும் வேலைகள் நடக்கிறது. நீங்கள் விரும்பும் துறைக்கான படிப்புகளுக்கு அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் தான் சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்தில் இடம் கிடைக்கும்.
தங்களை ஊழல்களுக்கு எதிரானவர்கள் என்று  முழுக்க தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் மோடி கட்சியான பாஜக ஊழல்கள் 2-ஜி,3-ஜி,நிலக்கரி சுரங்க ஊழல்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவு ஒவ்வொன்றாக வெளி வருகிறது.

போட்டித் தேர்வுகளில் நடந்த மாபெரும் ஊழல் 
மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்பக் கல்வி மற்றும் அரசுத் துறை வேலைகளுக்கான போட்டித் தேர்வை நடத்துவது ’மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம்’ (Madhya Pradesh Professional Examination Board – MPPEB) அதன் இந்தி மொழி பெயர்ப்பு– 
வ்யாவ்சாயிக் பரிக்ஷா மண்டல் 
சுருக்கமாக – "வியாபம்".
வியாபம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடந்த மாபெரும் ஊழல் தற்போது வட இந்திய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. வியாபம் ஊழல் என்பதைச் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், தகுதியற்றவர்கள் பணம் கொடுத்தோ அல்லது வேறு குறுக்கு வழிகளிலோ அரசு வேலை அல்லது மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் இடம் பிடிப்பது என்று சொல்லலாம்.
இந்த எளிய விளக்கத்தைத் தாண்டி வேறு சிக்கலான பரிமாணங்களும் இதற்கு உண்டு. அவற்றைப் பார்க்கும் முன், கீழ்மட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளின் செயல்பாட்டு முறை (Modus Operandi) என்னவென்பதைப் புரிந்து கொள்வோம்.
வியாபம் மெகா ஊழல்
தேர்வுகளை குறுக்குவழியில் வெல்ல வியாபம் வடித்துக் கொடுத்திருக்கும் வழிமுறைகள்.
தேர்வுகளை குறுக்குவழியில் வெல்ல வியாபம் வடித்துக் கொடுத்திருக்கும் வழிமுறைகள் :
1)   ஆள்மாறாட்டம் : தேர்வு எழுத வேண்டியவருக்கு பதிலாக, தேர்வு எழுதுவதையே தொழிலாக கொண்ட வேறு ஒரு ‘திறமைசாலி’ தேர்வை எழுதுவது. தேர்வு மைய நுழைவுச் சீட்டை போர்ஜரி செய்வது, மேற்பார்வையாளருக்கு காந்தி தாள் சப்ளை செய்வது மற்றும் மேல் மட்ட ‘கைகளை’ கவனித்துக் கொள்வது மூலம் இது நிகழ்த்தப்படுகிறது.
2)   ரயில் இன்ஜின் / ரயில் பெட்டி (Engine Bogie System): தேர்வு மையத்தில் உண்மையாகவே தேர்வு எழுத வந்திருப்பவர்களுக்கு இடையில் சம்பந்தமில்லாத (ஆனால், அந்த துறை பற்றி நன்கு அறிந்த ஒருவரை)  நுழைத்து அவர் எழுத (இன்ஜின்) மற்றவர்கள் காப்பி அடிக்க (இன்ஜினைத் தொடரும் பெட்டிகள்) செய்வது. – உதாரணமாக, ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வு என்றால், தேர்வு எழுத வந்த ஒருவர் 4 அல்லது 5 லட்சம் கொடுத்து இன்னொருவரை இன்ஜினாக அமர்த்திக் கொள்ளலாம்
3)   காலி விடைத்தாள்கள் : அதாவது தேர்வு எழுத வந்தவர் விடைத்தாளை காலியாக வைத்து விட வேண்டும். தேர்வு நேரம் முடிந்து தேவையான மதிப்பெண்களை முதலில் வழங்கி விடுவார்கள் – பின்னர் அரசின் பாதுகாப்பில் உள்ள அந்த காலித் தாள்களில் கிடைத்த மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல் விடை எழுதி, அதைத் திருத்துவது போல் திருத்தி, மதிப்பெண் போடுவது போல் போட்டு – தலைசுற்றுகிறதல்லவா? ஆனால், இப்படித் தான் நடந்துள்ளது.
மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு உயர் கல்விப் பிரிவு அல்லது அரசுத் துறை ஒன்றில் வேலைக்கான போட்டித் தேர்வுகள் எழுதும் ஒருவர், அதற்காக சிரமப்பட்டு படிக்கத் தேவையில்லை – அதாவது காசு இருக்கும் பட்சத்தில். பையில் தயாராக பணக்கட்டுகளோடு இருப்பவரைத் தேடி இடைத் தரகர்கள் வருவார்கள். நீங்களே தேர்வை எழுதுவதானால், உங்களுக்கு முன்னோ பின்னோ ஒருவர் அமர்ந்து உங்களுக்குத் தேவையான பதில்களைத் தருவார்கள்.
வியாபம் ஊழல்
வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன.
இல்லையென்றால், உங்கள் பெயரில் வேறு ஒருவர் தேர்வை எழுதிக் கொடுப்பார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட துறையின் தேர்வாணையத்தை சரிக்கட்டுவது, தேர்வு நிலைய கண்காணிப்பாளர்களைச் சரிகட்டுவது, விடைத்தாள் திருத்துபவர்களைச் சரிகட்டுவது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அல்லது கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் வரை விட்டமின் ‘ப’ பாய்ச்சும் வேலையை இடைத்தரகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. வியாபம் ஒரு பிரம்மாண்டமான ஊழல் – ஆனால், இங்கே பிரம்மாண்டம் என்பது இந்த ஊழலில் புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.
முன்னெப்போதும் இல்லாத வகையில் வியாபம் ஊழல் புகாரில் இதுவரை சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது பட்டியலில் உள்ள சுமார் 300 பேர் தலைமறைவாக உள்ளனர். மத்திய பிரதேச ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி சுதர்ஷன், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா உள்ளிட்டோர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள பெரும் புள்ளிகளில் சிலர். தமக்கு வேண்டியவர்கள், தாம் கைநீட்டி லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களை இந்த ‘பெரும்’ புள்ளிகள் தேர்வுகளில் வெற்றி பெற இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே ஷிவாரே, புகழ்பெற்ற மருத்துவர் வினோத் பண்டாரி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சுரங்க முதலை சுதீர் ஷர்மா ஆகியோர் அடங்குவர்.
முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா
கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா
வேறெந்த வழக்கிலும் நடந்திராத வகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் வழக்கின் சாட்சிகள் உள்ளிட்ட 40 பேர் மர்மமான முறைகளில் இறந்துள்ளனர் – அதாவது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவும் அடங்குவார்.
வியாபம் பாணி முறைகேடு – அதாவது மத்திய பிரதேச ஊழல் மாடல் – தற்போது பிற வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்திர பிரதேசம், குஜராத், தில்லி, ஹரியானா மற்றும் பீகாருக்கும் மிக வேகமாக பரவியுள்ளது என்கிறார் காங்கிரசு தலைவரான திக்விஜய் சிங். கூடுதலாக இந்த ஊழலில் கீழ்மட்ட காங்கிரசு தலைவர்களும் சிலர் இருக்கிறார்கள்.
2009-ம் ஆண்டு வியாபம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை விசாரிக்க கோரி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மருத்துவ வினோத் ராய் பொது நல வழக்கொன்றை ம.பி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அதிலிருந்து 2013-ம் ஆண்டு வரை சுமார் 45 பொது நல வழக்குகள் இது குறித்து விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒருபக்கம் ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் இருக்க, இன்னொரு பக்கம் மாநில அரசாங்கம் மேலும் 64 அரசுத் துறைகளில் பணி நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை வியாபத்திடம் அளித்துள்ளது.
2009-ம் ஆண்டு வியாபம் முறைகேடுகள் குறித்து முதன் முறையாக பொது நல வழக்கைத் தொடர்ந்த வினோத் ராய், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 கோடியை இருக்கை ஒதுக்கீடுகளின் மூலம் குவிக்கிறது என்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட 42 சதவீத இடங்களுக்கும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 43 சதவீத இடங்களுக்கு ஏராளமான தொகை கணக்கில் காட்டாமல் வசூலிக்கப்படுகிறது. 15 சதவீத இடங்கள் (அதாவது 300) தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றது – ஆக மொத்தம் மத்திய பிரதேசத்தில் மருத்துவப் படிப்பில் 100 சதவீத இடங்களும் காசு கொடுப்பவர்களுக்கே என்று நிலைநாட்டியுள்ளனர்.
வியாபம் ஊழல்
மோடியின் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஆளும் மாநிலத்தில், ’நல்லவர்களை’ பிரசவிப்பதற்காகவே (Man making) செயல்படுவதாக பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கேற்போடும், ஆசியோடும் வியாபம் ஊழல்.
இது மருத்துவத்துறையில் மட்டும் தான். இன்னும் பிற உயர் கல்வி நிலையங்களில் செய்யப்படும் இருக்கை ஒதுக்கீடுகள், போட்டித் தேர்வுகள் மூலம் அரசு வேலைகளுக்கு செய்யப்படும் பணி நியமனங்கள் என்று தொகுப்பாக பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கோடி கொள்ளையடிக்கப்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.
அவ்வளவும் கருப்புப் பணம். யாருடைய ஆட்சியில்? கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ள மோடியின் ஆட்சியில், மோடியின் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஆளும் மாநிலத்தில், ’நல்லவர்களை’ பிரசவிப்பதற்காகவே (Man making) செயல்படுவதாக பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கேற்போடும், ஆசியோடும்!
இது தொடரும் பட்சத்தில் நாடெங்கும் உள்ள அரசுத் துறைகளில் காசுள்ளவர்கள் அமர்வார்கள் – காசுள்ளவனுக்கே உயர் கல்வி என்பது நிலைநாட்டப்படும். உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மருத்துவமனைக்கு ஓடினால், அங்கே பல லட்சங்கள் லஞ்சம் கொடுத்து குறுக்குவழியில் கல்லூரியில் இடம் பிடித்த மேட்டுக்குடி குலக்கொழுந்து அமர்ந்திருப்பார். தான் கொடுத்த லஞ்சத்தையும் தனது பிள்ளைக்கு எதிர்காலத்தில் கொடுக்கவுள்ள லஞ்சத்தையும் உங்களிடமிருந்து வசூலிப்பது எப்படி என்பதே அவரது அக்கறைக்குரியதாக இருக்குமே ஒழிய உங்கள் உடல் நலனாக இருக்காது.
வியாபம் ஊழல்
வியாபம் ஊழல் பல்வேறு அரசுத் துறைகளையும் இணைத்துக் கொண்டு ஒரு தொழிற்சாலையின் உற்பத்தியில் இருக்கும் ஒழுங்கமைப்பு நேர்த்தியோடு நடந்துள்ளது.
கல்வி என்பதோ உழைக்கும் மக்கள் அணுக முடியாத இடத்திற்கு ஏற்கனவே சென்று விட்டது. எல்.கே.ஜி வகுப்பில் மூன்று வயது குழந்தையைச் சேர்ப்பதற்கே சாதாரணமாக முப்பதாயிரத்திலிருந்து இரண்டு லட்சம் வரை விலை பேசப்படுகிறது. அதற்கு மேல் மருத்துவமோ தொழில்நுட்பக் கல்வியோ அல்லது பிற கல்விப் பிரிவுகளிலோ தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க நடுத்தர வர்க்க மற்றும் அடித்தட்டு வர்க்கப் பிரிவு மக்கள் அண்டா குண்டா தொடங்கி தங்கள் சேமிப்பு, உழைப்பு, எதிர்காலம் என்று சகலத்தையும் அடகு வைக்கிறார்கள். கல்வித் துறைக்கென விதிக்கப்பட்டதாக சொல்லிக் கொள்ளப்படும் அற மதிப்பீடுகள் அனைத்தும் காற்றில் பறந்து அந்தத் துறையே முக்கால் நிர்வாணமாக நிற்கிறது.
மேற்படி அரை மற்றும் முக்கால் நிர்வாணத்தை மறைத்து சுற்றிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச கந்தல் துணிகளையும் உருவியெறிந்துள்ள வியாபம் ஊழல், அவற்றை முழு நிர்வாணப்படுத்தியுள்ளது.
வியாபம் ஊழல் பல்வேறு அரசுத் துறைகளையும் இணைத்துக் கொண்டு ஒரு தொழிற்சாலையின் உற்பத்தியில் இருக்கும் ஒழுங்கமைப்பு நேர்த்தியோடு நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தனி நபரையும் இணைத்து, அவர்களின் செயல்பாடுகளின் ஒத்திசைவையும் தொழில் நேர்த்தியையும் கவனித்தால் இந்த கும்பல் – அதாவது, அரசியல் வாதிகள், ஆர்.எஸ்.எஸ் காரர்கள், அரசு அதிகாரிகள் – மொத்தமும் ஒரு நிழல் அரசாங்கம் போல் செயல்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ராம் நரேஷ் யாதவ்
வியாபம் ஊழலில் சிக்கிய ம.பி ஆளுனர் ராம் நரேஷ் யாத்வ், சிவ்ராஜ் சிங் சவுகானுடன்
எனவே தான் தவிர்க்கவே இயலாத வகையில் பல்வேறு பொதுநல வழக்குகளுக்கும், எதிர்கட்சிகளின் அழுத்தங்களுக்கும், நீதி மன்றங்களின் உத்தரவுகளுக்கும் பின் மத்திய பிரதேசத்தின் சிறப்புக் காவல் துறையின் விசாரணைக்கு உள்ளாகியுள்ள இந்த ஊழல் மிகத் தெளிவாக தவறான திசையை நோக்கிச் செல்கிறது. குற்றம் இழைத்த ஒரு சிலரோடு சேர்த்து குற்றத்தால் பாதிக்கப்பட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக உடகங்கள் சில தெரிவிக்கின்றன. மேற்கொண்டு மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் ஏதும் எழாமலிருக்க, அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே கைதுகள் செய்யப்படுகின்றன.
இது ஒருபக்கமென்றால், ஊழல் குறித்த விவரங்களை அம்பலப்படுத்திய  பிரஷாந்த் பாண்டே என்ற முன்னாள் காவல்துறை அதிகாரியின் (பாரன்சிக் பிரிவு) மேலும் முதல் பொதுநல வழக்கைத் தொடர்ந்த மருத்துவர் வினோத் ராயின் மேலும் பல கொலை முயற்சிகள் நடந்துள்ளன. கைது செய்யப்பட்ட முன்னாள் கல்வியமைச்சர் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்படாமல் சிறையில் ஐந்து நட்சத்திர வசதிகளை அனுபவித்து வருகிறார். வழக்கின் முக்கிய சாட்சியங்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள்.
வியாபம் மெகா ஊழல்
இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது “இட ஒதுக்கீடு என்றால் தகுதியின்மை – போட்டித் தேர்வு முறை என்பது திறமை” என்று கூரையேறி கூவிக் கொண்டிருந்த பார்ப்பனக் குஞ்சுகளும் பார்ப்பன பத்திரிகைகளும் சாதிக்கும் ஆழமான கள்ள மௌனம்.
இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது “இட ஒதுக்கீடு என்றால் தகுதியின்மை – போட்டித் தேர்வு முறை என்பது திறமை” என்று கூரையேறி கூவிக் கொண்டிருந்த பார்ப்பனக் குஞ்சுகளும் பார்ப்பன பத்திரிகைகளும் சாதிக்கும் ஆழமான கள்ள மௌனம் ஒருபக்கமென்றால் – மோடியின் கருப்புப் பண சாகசத்தை விதந்தோதியவர்களின் ஆழ்ந்த மௌனம் இன்னொரு பக்கம். இந்த இரண்டிலும் எது பெரியது என்பதை கண்டுணர முடியாத வகையில் ஒன்றை ஒன்று விஞ்சுகிறது.
மோடியின் தலைமையில் குஜராத் காவல்துறை மொத்தமும் மாஃபியா கும்பலின் ஒழுங்கமைவை அடைந்தது என்றால், அவரது வழிகாட்டுதலில் அவரது கட்சியைச் சேர்ந்தவர் ஆளும் மாநிலத்தில் அரசு நிர்வாகத்தில் ஊழல் நிறுவனமயமாகியுள்ளது. குருவுக்குத் தப்பாத சிஷ்யன்.
அவர்கள் தங்கள் வேடத்தை எப்போதோ கலைத்து விட்டார்கள் – அவர்களை நம்பியவர்கள் எப்போது தமது நம்பிக்கையைக் கலைக்கப் போகிறார்கள்?
                                                                                                                                    –    தமிழரசன்,
நன்றி:வினவு.
========================================================================
     அடுத்த சுற்றுப்பயணம் ஆரம்பமாகி விட்டது.எப்போ இந்தியா வருவீங்க பிரதமர்?



.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...