புதன், 31 மே, 2017

மாடுகளும் மனிதர்களும்...

காவிப்படையினர் இந்திய மக்கள் மீது ஒரு உணவுக் கட்டுப்பாட்டைத் திணிக்கத் தொடர்ந்து முயன்று வந்திருக்கின்றனர். 
அந்த முயற்சிகளை, இப்போது மத்திய அரசே கையிலெடுத்துக்கொண்டுள்ளது. 

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் ஒரு அக்கிரமமான திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம். மோடி அரசின் மூன்றாண்டு நிறைவுக் கொண்டாட்டம் தொடங்குவதையொட்டி மே 25 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை, பகுத்தறிவற்ற, தாறுமாறான செயல்களுக்குத்தான் இந்த அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பதற்குச் சான்றளிக்கிறது.

ஏற்கெனவே விரிவாக வந்துள்ள செய்திகளின்படி, ‘கால்நடை விதிகள் முறைமை -2017’ எனப்படும் இந்த 396வது அறிவிக்கை இந்தியா முழுவதும் கசாப்பு செய்வதற்காகக் கால்நடைகளை விற்பதற்குத் தடை விதிக்கிறது. 
கால்நடைகள் என்று இந்த அறிவிக்கையில் காளைகள், பசுக்கள், எருதுகள், எருமைகள், கிடாரிகள், கன்றுகள், இளங்கன்றுகள், ஒட்டகங்கள் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிக்கையின் தாக்கங்கள் என்ன? 
இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும்?விலங்குகள் கசாப்புக்குத் தடை விதிப்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உரியது. 
இந்தக் காரணத்திற்காகத்தான், இமாசலப்பிரதேச உயர்நீதிமன்றம் 2016 இல் பிறப்பித்த ஒரு ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பசுக்கள் கசாப்பு செய்யப்படுவதற்கு எதிராக ஒரு தேசிய சட்டம் இயற்ற வேண்டும் என்பது மத்திய அரசுக்கு இமாசலப்பிரதேச உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை. மத்திய அரசுக்கு அவ்வாறு சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
அந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.ஆனால், மத்திய அரசின் தற்போதைய அறிவிக்கை உச்சநீதிமன்றத் தடையாணையின் கண்ணில் மண்ணைத் தூவுகிறது. பசுக் கசாப்புக்கு தேசியத் தடை என்பதற்கு மாறாக, எல்லாக் கால்நடைகளையும் கசாப்புக்காக விற்பனை செய்ய ஒரு தேசியத் தடையை விதிக்கிறது. தற்போது பசுவதைத் தடைச் சட்டம் இல்லாத 6 மாநிலங்களையும் இந்த அறிவிக்கை உள்ளடக்குகிறது.
எடுத்துக்காட்டாக வங்கம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் மாடுகளைக் கசாப்பு செய்யத் தடை எதுவும் இல்லை. ஆனால், வங்கத்திலோ கேரளத்திலோ கால்நடைச் சந்தை ஒன்று நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம்.
கால்நடைகளின் உரிமையாளர் ஒருவர் தன்னுடைய கால்நடைகளை அந்தச் சந்தைக்குக் கொண்டுவருகிறார் என்றால், வாங்க வந்த ஒருவர் அவற்றைக் கசாப்புக்காக வாங்குகிறார் என்றால் அவர் விற்பதும் இவர் வாங்குவதும் இந்த அறிவிக்கையின்படி சட்டவிரோதச் செயல்களாகும்.அடுத்து, எருமைகளை கசாப்பு செய்யக்கூடாது என்ற தடை எந்த மாநிலத்திலுமே இல்லை. 
தற்போதைய அறிவிக்கையோ நடைமுறையில் அதற்குத் தடை போடுகிறது. பயனற்றதாகிவிட்ட ஒரு எருமையை, கசாப்பு நோக்கமன்றி வேறு எதற்காக விற்கப்போகிறார்கள்? 
ஆக, இந்த அறிவிக்கை மாநிலங்களின் உரிமைகள் மீதும், அரசமைப்பு சாசனக் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதும் ஒரு நேரடி ஆக்கிரமிப்பேயாகும்.

கால்நடை வணிகத்தையே குற்றமாக்குகிற ஒரு கொடூரமான செயல்முறையை இந்த அறிவிக்கை ஏற்படுத்துகிறது. அத்துடன், விற்கப்படுகிற ஒரு விலங்கு விவசாய நோக்கத்திற்குத்தான் பயன்படுத்தப்படுமேயன்றி கசாப்புக்காக அல்ல என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை விற்பவர் மீது சுமத்துகிறது.
கால்நடைச் சந்தைக்குத் தனது விலங்கைக் கொண்டுவரக்கூடிய ஒரு விவசாயிக்கு, அதை வாங்குகிறவரின் நோக்கம் என்ன என்பது எப்படித் தெரிந்திருக்க முடியும்?

வாங்குகிறவரின் பிரச்சனையைப் பார்த்தால், எப்படிப்பட்ட ஒரு அவசரக் காரணம் ஏற்பட்டாலும் கூட, அவரால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு தான் வாங்கிய கால்நடைகளை விற்கமுடியாது. விலங்குகள் விற்கப்படுவதிலும் வாங்கப்படுவதிலும் ஒரு தீவிரமான அரசாங்கக் கண்காணிப்பு இருக்கும். 
பெருமெடுப்பில் அதிகார வர்க்கத்தின் பிடி இருக்கும். ‘சிறிய அரசாங்கம்’ ஏற்படுத்தப்படுவதாகவும், ‘அதிகாரிகள் ராஜ்யம்’ முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாகவும் சொல்லிக்கொண்ட ஒரு அரசு இப்படி அதிகார வர்க்கத்தின் பிடியை இறுக்குவது வேடிக்கைதான்.விவசாயிகள் இதனால் வீண் தொந்தரவையும் ஊழலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அப்படிப்பட்ட நிலைமை மட்டும் ஏற்படாதென்றால் சோதனை அதிகாரிகள் மாட்டுத் தொழுவத்திற்கு வெளியேயிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பது நகைப்புக்குரியதாகத்தான் இருக்கும்.ஏற்கெனவே பசுக் காவல் என்ற பெயரில் கட்டுக்கடங்காத ரவுடித்தனம் பரவியிருக்கிறது. 

இந்த அறிவிக்கை அப்படிப்பட்ட பசுக் காவல் கும்பல்களுக்கு ஒரு ஊக்க மருந்தாக வந்திருக்கிறது. 
இனி அவர்கள், விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பது என்ற போர்வையில் எல்லோரையும் பீதி வசப்பட வைப்பதற்கு உரிமம் பெற்றவர்களாகிவிடுவார்கள்.

எடுத்துக்காட்டாக ஹரியானா மாநிலத்தை, ஏன் குஜராத் மாநிலத்தையே கூட எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டு மாநிலங்களிலும் பசும் பால் உற்பத்தியைவிட, எருமைப் பால் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இது இந்த மாநிலங்களில் விவசாயிகளிடையே எந்த மாட்டை வளர்ப்பது என்பதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது. இந்த இரண்டு மாநிலங்களில்தான் தெருவில் திரியும் பசு மாடுகள் மிக அதிகம். கவனிப்பாரின்றி, அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்டுத் திரிகிற பசுக்கள் அவை.
இதற்கு மாறாக வங்கம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் எருமைப் பால் உற்பத்தியை விட பசும் பால் உற்பத்தி அதிகம். 

தெருக்களில் திரியும் பசுக்களின் எண்ணிக்கையோ குறைவு.இந்தியாவின் விவசாயிகள் ஏற்கெனவே பெரும் துயரத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 

சராசரியாக நாளொன்றுக்கு 32 தற்கொலைகள்.விவசாய மேம்பாட்டுக்காக எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் அளித்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்ற தனது வாக்குறுதியிலிருந்து மத்திய அரசு பின்வாங்கிவிட்டது.

இதனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு விவசாயமே இழப்பை ஏற்படுத்தும் தொழிலாகிவிட்டது.
விவசாய விளைபொருட்களுக்குக் கொள்முதல் விலை நிர்ணயிப்பதில், அதன் உற்பத்திச் செலவோடு, குறிப்பிட்ட அளவுக்கு குறைந்தபட்ச லாபம் கிடைக்கத்தக்க வகையில் கூடுதல் விலை முடிவு செய்யப்படுவதே ஒரு அடிப்படை அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தது. 

அத்தகைய ஆதரவு இல்லாத நிலையில் கால்நடை வளர்ப்பும், விற்பனையும்தான் விவசாயிகளுக்கு ஒரு முக்கியமான மாற்று வருவாய் வழியாக இருக்கிறது. இத்தகைய நிலையில் விலங்குக் கசாப்புக்கு எதிரான கடும் சட்டங்களின் காரணமாக, பல மாநிலங்களில் காளைகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ள சூழலில், கால்நடை விலைகள் செங்குத்தாகச் சரிவடைந்துள்ளன.

மாட்டிறைச்சி உணவுப் பழக்கத்திற்கு எதிராக ஒரு உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதை நியாயப்படுத்துவதற்குத் தங்களது மத நம்பிக்கையையும் உணர்வையும் பயன்படுத்துகிறவர்கள், எப்படிப் பார்த்தாலும் இந்தியாவில் பொதுவாக எருமைக் கறி உணவுதான் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற உண்மையை மறைக்கிறார்கள். 

மாட்டுக்கறி என்பதற்குள் எருமைக் கறி உள்ளடங்குகிறது என்ற உண்மையையும் மறைக்கிறார்கள். பக்தகோடிகள் செய்கிற வெறித்தனமான பிரச்சாரத்தில், பசுக் கொலைக்காக மனிதக் கொலை நியாயப்படுத்தப்படும் நிலையில், உண்மைகள்தான் எப்போதுமே பலியாகின்றன.
கசாப்பு செய்யப்படும்
கால்நடைகள் (காளை, பசு இரண்டுமே) ஒட்டுமொத்த கால்நடை எண்ணிக்கையில் 1.6 விழுக்காடு மட்டுமே என அமைச்சகத்தின் வலைத்தளம் காட்டுகிறது. மொத்தமுள்ள எருமைகளில் கசாப்பு செய்யப்படுபவை 10.2 விழுக்காடு. சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிற, நாடு முழுவதும் சாதி, இன வேறுபாடின்றி கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கிற பகைமைப் பிரச்சாரம் எவ்வளவு போலித்தனமானது என்பதைத்தான் இது காட்டுகிறது. 

இந்த அறிவிக்கையை எதிர்ப்பதில் முன்னால் நிற்கிறது கேரள அரசு. மத்திய அரசு இதனை விலக்கிக் கொண்டாக வேண்டும்.
                                                                                                                                          - பிருந்தா காரத் 

தமிழில்: அ. குமரேசன்,
ரா.குமாரவேல் ,

செவ்வாய், 30 மே, 2017

என்ன வகை மக்களாட்சி?

இந்திய பாமர மக்களுக்கு எதிரான ஆணைகளை போட்ட விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போய்விடுவதே மோடியின் ராஜ தந்திரமாய் போய்விட்டது.

பணமதிப்பிழப்பு காலங்களில் 500,1000 செல்லாது என்று இரவில் அறிவித்து விட்டு பகலில் விமானம் ஏறி விட்டார்.இந்தியாவில் உள்ள மக்களில் 90% வாங்கி வரிசையில் சாப்பிட கூட இயலாமல்  காத்துக்கிடந்து மயங்கிய போதும் ,பணம் செல்லாதா என்று பலர் உயிரை இழந்து அவர்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்த போதும்  இப்படித்தான் ஒடி வெளிநாடுகளில் போய் ஒளிந்து கொண்டார்.


அந்த பணமதிப்பிழப்பு மக்களை கொடுமைப்படுத்தியதை பற்றி  இந்திய வந்த பின்னரும் வாயே திறக்கவில்லை.

பாராளுமன்றத்தில் கேள்விகள்,ஆர்ப்பாட்டங்களும் நடந்த போதும் மன்மோகன் சிங்குக்கு அண்ணனாக வாயில் சூயிங்கம் போட்டு ஒட்டிக்கொண்டார்.

அனால் இன்றுவரை கறுப்புப்பணம் ஒழிந்ததாக ஆய்வுகள் அறிவிக்கவில்லை.மாறாக கறுப்புப்பணம் அதிகரித்திருப்பது வருமான,அமுலாக்க துறையினர் சோதனைகள் மூலம் தெரிகிறது.
இதுவரை 64 தடவைகள் வெளிநாடுகள் ,பயணங்கள்,ஒப்பந்தங்கள் இந்திய மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது.?

ஐ.டிதுறையில் வெளிநாடுகளின் முடிவால் பல லட்சம் பேருக்கு வேலை போகப்போவதுதான் உண்மை நிலவரம்.

அதை தடுத்து நிறுத்த கூட இப்போதைய மோடி பயனநிரலில் எந்த திட்டமும் இல்லை.

லட்சம் பேருக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு என்ற மோடியின் மூன்றாண்டு சாதனை  ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு என்ற கணக்கில் ஆறு லட்சம் பேர்கள் ஏற்கனவே தங்கள் பார்த்த வேலைகளை இழந்து தேருக்கு வரப்போகிறார்கள் என்பதுதான்.

மோடியின் பயணங்கள் அம்பானி,அதானி,டாடாக்களுக்குத்தான் பணம் மேலும் குவிக்க வைக்கிறது.பயணச்செலவு மட்டும் ஏழை மக்களின் வரிப்பணம்.

ஏழைகள் மதிப்பு கூட்டப்பட்ட உணவாக இருப்பது மாட்டிறைச்சிதான் .அவர்கள் உணவுக்காக பசுக்களை கொல்வதில்லை.பசுக்களின் பால் அவர்களுக்கும் தேவைதானே.

ஆனால் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸின் கொள்கைகளை தலை மேற்கொண்டு அட்டகாசம் செய்கிறது.தேவையே இல்லாமல் மாட்டினத்தை கடவுள் உயரத்துக்கு கொண்டு சென்று கொலைவெறியோடு அலைகிறது.

ஆட்சியை கைப்பற்றியதால் பாஜக,ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை,மாட்டை வணங்குவதை  இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்பது என்ன வகை மக்களாட்சி?

பாஜக ஆட்சியை கைப்பற்றியது என்றால் 100% மக்கள் ஆதரவில் அல்ல.வெறும் 35% வாக்குகள்தான்.
மீதி 65% பாஜக எதிர்ப்புதான் மக்களாட்சி முறையில்  மக்கள் வாக்காளர்  தொகையில் முக்கால்வாசி பாஜக ஆட்சியை விரும்பாதவர்கள்தான்.ஆனால் இந்த அடிப்படையை மோடி ஒதுக்கி வைத்து விட்டு ஒருமனதாக தேர்வானவர் போல் நடந்து கொள்கிறார்.

இதற்கு சரியான பெயர்  சர்வாதிகாரி என்பதுதான்.

உண்மையில் தன்  ஆட்சி மீதான விமர்சனங்களை மக்களவையில் எதிர் கொள்ளும் திராணியற்றவராகவே அவர்  உள்ளார்.

மக்களவையில் ஆட்சி,நிர்வாகத்தை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு பாஜக கூட்டங்களில் கூட பதில் சொல்லாத மோடி வெளிநாடுகளிலும்,இந்தியாவிலும் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் தன்னையும்,தமது ஆட்சி திறனையும் தானே  வானளாவ புகழ்ந்தும் எதிர்க்கடசியினரை தரக்குறைவாக ஆதராமே இல்லாமல் தாக்குவதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஆக களத்தில் எதிராளி வாளுடன் காத்திருக்கையில் அந்தப்பக்கமே திரும்பி பார்க்காமல்,போட்டி காலம்  முடிந்த பின்னர் தனியாக ஆவேசத்துடன் வாள்  வீசி வெற்றி வாகை சூடும் மாவீரன்தான் மோடி.



தமிழ் நாட்டில் ஆள்வது அதிமுக அல்ல. பாஜக அடிமை ஆட்சி  என்பதை உறுதி செய்யும் ஒப்புதல்கடிதம்.

திங்கள், 29 மே, 2017

கடைசி காலத்துலேயாவது தான தர்மம்....

 தான தர்மம் பண்ணுங்க
ரஜினிக்கு,
ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவது
தங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற முறையில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்! வீட்டில், படப்பிடிப்பில் விழாக்களில், எப்போதுமே தாங்கள் பதற்றம் நிறைந்தவராகவே காணப்பட்டீர்கள்.
கொடி பறக்குது, படப்பிடிப்பின் போது வெள்ளை பேண்ட்டில் இருந்து, காக்கி பேண்ட்டிற்கு மாறியபடி என்னிடத்தில் பேசினீர்கள்.  அந்த எளிமை எனக்கு பிடித்திருந்தது.
"ரஜினி ரசிகன்" பத்திரிகை ஆசிரியர் துரை
தங்களது இமேஜை காப்பாற்றி கொள்ளக்கூட பொய் சொல்லத் தெரியாதவர்கள் நீங்கள். என்னை பொறுத்தவரை அடிப்படையிலேயே ‘யூவார் எ டிஸ்டர்ப்டு சைல்டு’ எப்போதுமே பதற்றம் நிறைந்தது. தங்கள் நடவடிக்கை என்பது எனது பார்வை.
தவிர்க்கவே முடியாமல் எம்.ஜி.ஆரை குறித்து சில விஷயங்களை பேசியாக வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே வறுமை, பசி, பட்டினியை அறிந்தவர் கஷ்டமறிந்து பலருக்கு உதவியவர்.
தனது 20 வயதிற்குள்ளாகவே அரசியல் குறித்து அவருக்கு ஒரு கனவு இருந்தது. அதற்காக திட்டமிட்டு கட்சியில் இணைந்தார். தனது படங்களில் வசனங்களில் பாடல்களில் கட்சி கொள்கையை பரப்பினார்
அவரது படங்களில் அவரது பெயரே கூட உதயசூரியன், கதிரவன் இப்படி இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
5 ரூபாயிலிருந்து வசூலிக்க கூட்டங்களில் பங்கேற்றார். தலைவர்களோடு பேசிப் பழகினார்.
நடித்து சம்பாதித்த பணத்தை உதவி வள்ளல் என்று பெயர் எடுத்தார். கட்சியில் தன் முக்கியத்துவத்தில் எப்போதுமே கவனமாக இருந்தார். அமைச்சரவையை தீர்மானிக்கும் சக்தியாக கூட இருந்தார்.
தி.மு.கவிற்கும் அவரது ரசிகர் பட்டாளம் பலமாக விளங்கியது.
கட்சியில் இருக்கும்போதே சில மாறுபட்ட அதிரடி கருத்துக்களை முன்வைத்து தன் பலத்தை சோதித்து பார்த்தவர், எம்.ஜி.ஆர்
இதையெல்லாம் தாண்டி நாடோடி மன்னன் படத்திலேயே தனது அரசியல் ஆட்சி கருத்துக்களை ஆழமாக மக்கள் மனதில் பதிவு செய்தார்.
பெண்களின் வாக்கு வங்கி எம்.ஜி.ஆரைப் போல சாதகமாக வேறு யாருக்கும் இருந்ததில்லை
கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றவர்களின் தொடர் பிரச்சாரத்தால் கூட இதைக் கலைக்க முடியவில்லை.
96ல் உங்களுக்கு இருந்த செல்வாக்கு வேறு; இப்போதைய நிலவரம் வேறு;
திரையுலகில் பாட்ஷா தான் உங்களது உச்சம்.
அதற்கு பின் வந்த படங்கள் எல்லாம் ஊதிபெருக்கி காட்டப்பட்டவையே. இன்றைக்கு
இதற்குள் உங்களுக்கும், உங்கள் ரசிகர்களுக்குமே கால இடைவேளி, வயது எல்லாம் மாறி விட்டது
நீங்கள் கார்ட்டூன் கேரக்டராக மாறி விட்டீர்கள்.
அதன் உச்சபட்சம் தான் கோச்சடையான் படுதோல்வி
ஜெயலலிதாவின் மறு எழுச்சிக்கு பின் உங்களுக்கு அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் இடமேயில்லை.
உங்களுக்கு பின் அரசியலில் குதித்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்து சரிந்து விட்டார்.
சினிமா வியாபாரத்தில் உங்களது பழைய பிம்பத்தை வைத்து சுமாரான பிசினஸ் இருக்கு. அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
நீங்கள் அரசியல் தெரிந்து கொள்வது யாரிடம் வைரமுத்து விடம் தானே.
அவரால் தனது சொந்த ஊரில் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட முடியாது.
அரசியலில் இரவல் மூளை பயன்படாது.
எம்.ஜி.ஆர். ஒரே நாளிதழை இரண்டு பேரை படிக்கச் சொல்லி கருத்துக் கேட்டு மூன்றாவதாக தனதாக ஒன்றை உருவாக்கி படிக்கப்பட்டவர்
கட்சி தொடங்கி 6 மாதத்தில் இடைத் தேர்தலில் தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்தது எம்.ஜி.ஆரின் பலம் மட்டுமல்ல; கருணாநிதிக்கு அப்போதிருந்த அதிகாரமானதை ஆளாவதும் கூட.
இருபத்தி நாலுமணி நேரமும் எல்லோருடனும் இருந்தாலும் எம்.ஜி.ஆர் எப்போது எதைச் செய்வார் என்ன அறிவிப்பார் என்று கூட இருந்தவர்களுக்கு புரியாத புதிராக இருந்தவர், அவர் உண்மையிலேயே லஞ்சம், ஊழலுக்கு  எதிராக 2 ஆண்டு ஆண்டார்.
அந்த ஆட்சி கவிழ்ந்த பின் பணமில்லாமல் அரசியல் பண்ண முடியாது என்று அவர் சரிந்தது தான் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, இத்தனை பொறியியல் கல்லூரி
இதையெல்லாம் தாண்டி, அவரிடம் ஏழை மக்களிடம் தணியாத அக்கரையும், கனிவும் இருந்ததை பல சாட்சிகளோடு சொல்ல முடியும்.
உங்களது 67 வயது வாழ்க்கையில் அதற்கான சிறு வெளிப்பாடு கூட பார்த்ததோ, கேட்டதோ இல்லை
அமிதாப் பச்சன் போல வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடியுங்கள்; சம்பாதியுங்கள்; சந்தோஷமாக இருங்கள்.
அரசியலுக்கு அடிப்படை தேவை, பொறுமை அது உங்களிடம் எப்போதுமே இருந்தது கிடையாது. இதுவரை பொறுமையாகத் தானே இருந்தார் என்று சொல்லலாம். இதுவரை அவரிடம் இருந்தது பயம். பொறுமையல்ல. ஜெயலலிதா இல்லை. சசிகலா, தினகரன் சிறையில், இரட்டை இலை முடக்கப்பட்டு விட்டது. அதிமுக இரு அணிகளாக உள்ளது. இதுதான் தருணம் என்று பயம் கலைந்து இருக்கிறார் என்பதே உண்மை.
உங்கள் பெயரையே ஒரு தாளில் நூறு முறை எழுதச் சொன்னால் அந்த தாளை கிழித்து எறிந்து விடக் கூடியவர், நீங்கள்.
பாபா பட வெளியீட்டிலேயே ஸ்டிக்கர், டிசர்ட், கீ செய்ன் விற்பனையில் ஈடுபட்ட உங்கள் மனைவியை தட்டிக் கேட்க முடியாதவர் நீங்கள்.
ஐ.நா. சபையிலே உங்கள் மகளை பரத நாட்டியம் ஆட வைத்தீர்களே! அது  ஒன்று போதும் தமிழர்களுக்கலைக்கும் நீங்கள் செய்த புண்ணியம்.
தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான். இது பஞ்ச் டயலாக் அல்ல; தமிழர்களின் முதுமொழி.
பச்சைத் தமிழன்னு அறிவிச்சச மேடையிலேயே தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ் தரமாக இருக்கிறாங்கண்ணு பேசினீங்க
அதே வார்த்தையை உண்மையான தமிழர்களோ அல்லது  சீமானோ, பாரதிராஜாவோ, சரத்குமாரோ, கமல்ஹாசனோ வாக இருந்தால் நம்மாளுங்க ஏன் இப்படி கீழ் தரமாக இருந்தாங்கன்னு பேசியிருப்பாங்க
உங்கள் உள்ளத்தில் உள்ளதே உதட்டில் வந்தது.
இதுவரை உங்கள் நண்பர் கமல்ஹாசன் அவ்வப்போது எதிர்ப்புகளை கண்டு அசராமல் கருத்துக்களை அரசியலில் தெரிவிப்பதுபோல் நீங்கள் இதுவரை ஒரு முறைகூட சொன்னதில்லை.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு ,அவர் மீண்டும் ஆட்ச்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா தைரிய லட்சுமி,அதிர்ஷ்டலட்சுமி என்று பல்டி அடித்ததை மக்கள் பார்க்கத்தான் செய்தார்கள்.
காவிரி பிரசனையில் ஒட்டுமொத்த தமிழகமும் கர்நாடகாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கையில் நீங்கள் அதில் கலந்து கொள்ளாமல் மக்கள் அசிங்கமாக திட்ட ஆரம்பித்தால் தனியாக உண்ணாவிரத நாடகம் நடத்தினீர்கள்.அதிலேயே உங்கள் கன்னடராகத்தான் இங்கு வாழ்கிறீர்கள் என்பது வெட்ட வெளிச்ச்சமாகி விட்டது,
காவிரி பிரச்னைக்கு ஒரு கோடி ரூபாய தருவதாக அறிவித்து கோடி நாட்களாகியும் உங்கள் கோடி என்னவாயிற்று என்பது உங்களுக்கே வெளிச்சம்.
எதிர்ப்பு மூலதனம் என்று ஆயிரம் பேர் முன்னால பேசி கைதட்டல் வாங்கலாம். நடைமுறைக்கு சாத்தியமல்ல.
எம்.ஜி.ஆர். உயிருக்கு குறி வைக்கப் பட்டது, அதையும் மீறி அவர் ஜெயித்தார்.
காலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும். நல்ல ஆசிரமம் அமைச்சு கடைசி காலத்துலேயாவது தான தர்மம் பண்ணுங்க
போகிற வழிக்கு புண்ணியம் சேரும்.
போங்க ரஜினி போங்க பேரன் பேத்திகளோட விளையாடி சந்தோஷமா இருக்குற உங்க ரசிகர்களை நிம்மதியா வாழ விடுங்க
ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு நினைச்சி குதிச்சிராதீங்க!
அன்புடன்,
துரை,
ரஜினி ரசிகன் ஆசிரியர்.
 நன்றி:பத்திரிகையில் இருந்து                                           - ரா.குமரவேல் 

சனி, 27 மே, 2017

சாதனை........ ,கள்.

அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. 


அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு கண்டுள்ள தோல்வியை மூடி மறைக்க, நாளேடுகளில் பகட்டான விளம்பரங்களைக் கொடுத்துள்ளது. 

உதாரணமாக, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பல வருடங்களாக சுமார் 7 ஆயிரம் கோடி பாக்கிவைத்துவிட்டு, தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பிறகு அதில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தியதைச் சாதனையாக விளம்பரப்படுத்தியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை, பிறகு அவரது மரணம், அதன் பிறகு அக்கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப்போட்டி ஆகியவற்றால் பெரும்பாலான காலம் செயல்படாத அரசாகவே இருந்துள்ளது.
வறட்சி, விவசாயம் பொய்த்துப் போனது ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டோ, அதிர்ச்சியாலோ இறந்து கொண்டிருக்கும்போது விவசாயிகள் யாரும் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. 

தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்து அதிமுகவின் அணுகுமுறைக்கு இது ஒரு சோறு பதம்.
விவசாய வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையிலிருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் அளிப்பதற்கு, சட்டத்தைக் காட்டி மறுத்த அரசாங்கம், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கே வேலை அளிக்க மறுத்ததோடு, வேலை செய்த நாட்களுக்கான கூலியையும் 5 மாதங்களுக்கு மேல் கொடுக்காமல் துயரப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பொதுவிநியோக முறையையும் சீரழித்திருக்கிறது இந்த அரசு. ஏறத்தாழ ஏழு மாதங்களாக உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை அடியோடு நிறுத்தப்பட்டிருக்கின்றன. 

அரிசிக்கு பதிலாக கோதுமையை திணிக்கும் நிலை உள்ளது. ஆதாரைக்காட்டி 13 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன்பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது.

கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் ரூ. 5 - 10 விலைக்கு விற்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரையும் சேர்த்து ஒரு கோடி பேருக்கு வேலை இல்லை. உலக முதலீட்டாளர் மாநாடு, தொலைநோக்கு திட்டம்- 2023 என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்தாலும் சில 100 பேருக்காவது வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் இந்த காலத்தில் துவங்கப்படவில்லை.

மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறைகள் தொடர்கின்றன. கூலிப்படையினரால் கொலைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்டு நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் மக்கள் மீது காவல்துறையை மாநில அரசு ஏவி விடுகிறது. 

ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சென்னை பள்ளிக்கரணை, மதுரை காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடி வரும் பெண்கள் மீது காவல்துறை அத்துமீறியும், அநாகரிகமாகவும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள 3000த்திற்கு மேற்பட்ட கடைகளை மக்கள் வசிக்கும் பகுதிகளில் திறப்பதன் மூலம் படிப்படியான மதுவிலக்கு என்ற தனது கொள்கைகளிலிருந்து அதிமுக அரசு விலகிச் செல்கிறது.

ஊழல், முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் அரசின் எல்லாத்துறைகளிலும் கோலோச்சுகிறது. பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் முதல் கீழ்நிலை பணியாளர் வரை அரசுப்பணிகளில் ஒவ்வொரு நியமனத்திற்கும் விலை தீர்மானிக்கப்பட்டு கையூட்டு கொடுத்தால்தான் வேலை என்பது விதியாகிவிட்டது.

கிரானைட் கொள்ளை சம்பந்தமாக சகாயம் ஐ.ஏ.எஸ். நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்து 6 ஆயிரம் கோடி அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதேபோன்று தாதுமணல் கொள்ளை சம்பந்தமாக ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். அளித்த அறிக்கையை அதிமுக அரசு இன்று வரையில் சட்டமன்றத்திலும் வைக்கவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

ஆற்று மணல் கொள்ளை தங்குதடையின்றி தொடர்கிறது.

எந்த வித கூச்சமும் இல்லாமல் 100 நாள் சாதனை? மலர் வெளியீடு 
தமிழகத்தின் நிர்வாகம் எத்தனை சீர்கெட்ட நிலையில் இருக்கிறது என்பதற்கு போக்குவரத்துத்துறை நல்ல உதாரணம். 

ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள், ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை என்பதோடு தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் கட்டவேண்டிய தொகையை கூட போக்குவரத்து நிர்வாகங்கள் அரசின் வழிகாட்டுதலின் படியே, அன்றாடச் செலவுகளுக்கு கபளீகரம் செய்தன.

பள்ளிக்கல்வித்துறையில் வரவேற்கத்தக்க சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், உயர்கல்வி மற்றும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவற்றில் எல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளாமல் காலம் கடத்துகிறது.

ஆளுங்கட்சியில் ஏற்பட்ட பிளவை மத்தியில் ஆளும் பாஜக பயன்படுத்தி அச்சுறுத்தி இரண்டு கோஷ்டிகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. 

சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச்செயலாளர், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வீட்டில் நடந்த சோதனை, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததற்காக தினகரன் மீது வழக்கு, சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் 300 கோடி ரூபாய் அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக இருந்த பதிவு ஆகிய ஊழல் முறைகேடுகள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மத்திய பாஜக இந்த இரண்டு கோஷ்டிகளையும் மிரட்டி தனது கைக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளும் மாநில மக்களின் நலன்களை காவு கொடுத்து விட்டு பாஜகவோடு நெருக்கமாக செல்வதற்கு போட்டி போட்டு வருகின்றனர். 

நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, உதய் மின்திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் உணவுப்பொருள் ஒதுக்கீட்டை குறைப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், வர்தா புயல் - வறட்சி நிவாரணத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பது போன்ற மத்திய அரசின் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமான நடவடிக்கைகளை எதிர்ப்பதற்குப் பதிலாக இரண்டு கோஷ்டிகளும் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.

தமிழக மக்கள் தாங்கொணாத் துயரங்களில் தவித்துக் கொண்டிருக்கும்போது, அதிமுகவின் இரு அணிகளும், ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பாதுகாக்கவும், அரசு நிர்வாகத்தை ஊழல் சாம்ராஜ்யமாக நடத்துவதற்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளதுதான் கடந்த ஓராண்டில் நாம் கண்டுவருவது. மொத்தத்தில் அதிமுகவின் ஓராண்டு ஆட்சி மாநில மக்களுக்கு வேதனையிலும் வேதனையே.
                                                                                                                    - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அறிக்கை   
===============================================================================================
         பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு  உலகநாயகன் கமல்ஹாசன்  பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கேள்வி: நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?
பதில்: நான் அரசியலுக்கு வந்து வெகுநாட்களாகி விட்டது. 21 வயதில் என் கையில் எப்போது மை வைத்தேனோ அப்போதிலிருந்தே அரசியலில் இருக்கிறேன், ஆனால் போட்டி போடும் அரசியலில் இல்லை. யார் வருவார்கள், யார் வரக்கூடாது என்று முடிவு பண்ற வெகுஜன கூட்டத்தில் நானும் நின்று கொண்டிருக்கிறேன்.
ரஜினி அரசியலுக்கு வரலாம் என நினைக்கிறீர்களா..?
ரஜினி வரலாமா என்பதை 5 வருடங்கள் வரும் போது சொல்கிறேன்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழ் உணர்வோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம். காந்தி தமிழனா, நேரு தமிழனா, சுபாஷ் சந்திர போஸ் தமிழனா?. ஆனால் போஸ் என்ற பெயரில் என் ஊரில் நிறையப் பேர் இருக்கிறார்கள். காந்தி என்ற பெயரில் இந்தியா முழுக்க பலர் இருக்கிறார்கள். அக்கருத்தை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். என்னைப் பொறுத்தவரை கேரள மக்கள் என்னை மலையாளியாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அந்த ஊருக்கு முதல்வராக ஆவீர்களா என்று கேட்டால் எனக்கு ஆர்வமில்லை.
21 வயதிலிருந்து அரசியலில் இருக்கிறேன் என்கிறீர்கள். போட்டி போடும்அரசியலுக்கு எப்போது வரப்போகிறீர்கள்?
போட்டி என்ற வார்த்தையே தவறு. அரசியல் என்பது சேவை சம்பந்தப்பட்டது என்று நினைக்கும் போது, அதை சம்பாதிக்கக் கூடியஒரு அரங்கமாக நினைத்துக் கொள்வது தவறு.
இன்றைய அரசியல்வாதிகள் சேவையாக நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக இல்லை என்பது நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?
ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று கூறியுள்ளார். அதைப் பற்றி உங்களுடைய கருத்து?
அது எல்லாரும் சொல்லும் குற்றச்சாட்டு தான். அவரும் சொல்லியிருக்கிறார். வித்தியாசமாக ஒன்றும் சொல்லவில்லை. தவறாகவும் சொல்லவில்லை.
என்ன சிஸ்டம் மாற வேண்டும் என நினைக்கிறீர்கள்?
அரசியல் என்பது சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு இனிமேல் வரப்போகும் முதல்வருக்கோ, மந்திரிக்கோ நல்ல சம்பளம் கொடுத்து, எங்களுக்காக வேலை செய்கிற நீ என்று சொல்லிவிட வேண்டும். நீங்கள் தியாகம் செய்யுங்கள், சேவை செய்யுங்கள் என்று சொல்வதினால் சேவை செய்வதாக நினைத்துக் கொண்டு வேறு விஷயங்கள் செய்கிறார்கள். இதே போன்று பல விஷயங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளது.
இனி அரசியலுக்கு வருபவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்திருக்க வேண்டும்?
அது தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா?
அரசியலுக்கு திரையுலக பிரபலங்கள் வந்து நாசமாக்கி விட்டார்கள் என்று பல அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவருடைய ஆட்சி எப்படியிருந்தது?
அதெல்லாம் என்னை ஏன் கேட்கிறீர்கள். அதைப் பற்றி நிறைய சொல்லிவிட்டேன்.
உங்கள் நண்பர் ரஜினிக்கு ஆதரவோ, ஆலோசனையோ வழங்குவீர்களா?
அதை தனியாக வழங்குவேன்.
கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன?
கலைஞரைப் பற்றி ஒரு குறும்படமே இயக்கி அனைவருக்கும் அனுப்பியுள்ளேன். கூடிய விரைவில் வந்துவிடும்.

எம்.ஜி.ஆருடைய நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. கலைத்துறை சார்பாகவோ, தமிழக அரசு சார்பாகவோ எந்தவிதமான கொண்டாட்டமோ, விழாவோ இல்லையே?
கொண்டாடும் அளவிற்கு இப்போது அவருடைய பிறந்த நாள் ஒன்றுதான் இருப்பதாக தோன்றுகிறது. வேறு எந்தவொரு கொண்டாடும் நிகழ்வும் இல்லை என்பது எனது கருத்து.
================================================================================================================================================

கடந்த முப்பது முப்பத்தியைந்து வருடங்களாக கலைஞரின் அதி தீவிர ஆதரவோடு மாவட்ட செயலாளராக இருந்து தூத்துக்குடி தி.மு.க-வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் கலைஞரின் முரட்டுப் பக்தன் என்றழைக்கப்படும் என்.பெரியசாமி,

எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்பது. எதிரியையும் நண்பனாக்குவது போன்ற கலைஞரின் அரசியல் சாணக்கியத்தனத்தை பின்பற்றியவர் ‘அண்ணாச்சி’ பெருசு . 

அந்த வகையில் பெரியசாமியை எதிர்த்தவர்கள் சிலர் அரசியலை விட்டே காணாமல் போயிருக்கிறார்கள். 

அதேபோல் அவரை நம்பியவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில்எந்தவித போட்டியையும் வளரவிடாமல் தடுத்து சிங்கமென கர்ஜித்துவந்த பெரியசாமியின் மறைவு கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. 

      பெரியசாமி  அண்ணாசிக்கு அஞ்சலிகள்!
நியூஸ் 7 சேனல்  விவாதத்தில் ......
"அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மீது கலைஞர் போட்ட வழக்கு அது" அதிமுக தீரன்
"கலைஞர் போட்ட வழக்கா அது?"  சுப. வீ
"கலைஞர் வழக்கு போடல. அவர் அரசு போட்ட வழக்கு தானே அது..?" தீரன்
"அவர் அரசு போட்ட வழக்கா அது. நல்லா ஞாபகப்படுத்தி சொல்லுங்க"சுப.வீ.
"அரசு போட்ட வழக்கு இல்லே. அவங்க ஆளுங்க போட்ட வழக்கு தானே அது?"  தீரன்
"அந்த வழக்கு சுப்பிரமணியம் சாமி போட்ட வழக்கு" சுப.வீ.
"யாரோ போட்டாங்க. அப்ப அது அரசியல் காழ்ப்புணர்ச்சி வழக்குதானே அது?"  தீரன்.

த்தூ.. வழக்கை பற்றியம்,விவாதப்பொருள் பற்றியும் அடிப்படை அறிவே இல்லாதவர்களை விவாதத்தில் கலந்து கொள்ளவைப்பது எந்தவகையில் நியாயம்.அது எப்படி விவாதமாக அமையும்.

வியாழன், 25 மே, 2017

சட்டமன்றத்தில் படம் ?

"கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை."


தேவையே இல்லாமல் சொலவடை நினைவுக்கு வருகிறது.ஒரு வேளை "சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு" செய்தியை படித்ததால் இருக்கலாம்.

தற்போதைய அதிமுகவின் செயல் தலைவர் மோடியை முன்னாள் தலைவர் ஜெயலலிதா படத்தை திறக்க கூப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை கட்சிக்காரர்கள்  தங்கள் வீட்டில்,கட்சி அலுவலகத்தில் திறக்கட்டும்.

ஆனால் அதை ஒரு நாட்டின் அரசியலமைப்பை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பிரதமர் திறப்பது என்றால் கண்டிப்பாக மிகைத்தவாறு.

தனது நாட்டின் சட்டத்த்திட்டங்களை,அரசியல் அமைப்பை தானே கிழித்து எறிவது போல்தான்.

ஜெயலலிதா தமிழ் நாட்டினமுதல்வராக பல முறை இருந்திருக்கலாம்.

ஆனால்  முன்பும் ஊழலுக்காக் சிறை சென்று பதவியில் உட்காரமுடியாமல் பினாமியை வைத்து இருமுறை ஆட்சி செய்த இரும்பு மனுசி.

கடைசியில் மைக்கேல் குகாவால் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை ,100 கோடிகள் அபராதம் என தீர்ப்பை பெற்ற நிதி தேவதை.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று தலைக்கு மேல் கத்தியுடன் ஆட்சியை தேர்தல் ஆணைய உதவியுடன் கைப்பற்றி ஆள ஆரம்பித்தார்.

அப்போலோவில் அவர் மரணிக்கும் வரை பொறுமைக்காத்த உச்சம் இறந்தவுடன் தீர்ப்பை வாசித்து குற்றம் குற்றமே.தண்டனை தண்டனையே என்று உறுதி செய்தது.ஆனால் அவர் தலையை சாய்த்து விட்டதால் நான்காண்டு சிறையை கொடுக்க வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கூறிவிட்டது.


ஆக அமரரானாலும் ஜெயலலிதா தண்டனை பெற்ற குற்றவாளிதான்.A 1 தான்.


அவர் முதல்வர் பதவி பறிப்புட ன் ஐந்தாண்டுகள் தேர்தல்களில் போட்டியிடும் தகுதியும் பறிக்கப்பட்டவர்.
சாதாரண ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினராக  கூட அவர் இல்லை.

அப்படி பட்ட ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் படம் திறப்பு என்பது எவ்வளவு விதி,சட்ட,அரசியலமைப்பு மீறல்கள்.கேவலமான செயல்.


அதை விடக்  கேவலம் ஒரு ஊழல் குற்றத்தால் முதல்வர் பதவியை இழந்தவர்,தேர்தல்களில் நிற்க தகுதியற்றவர் படத்தை திறந்து வைக்க இந்திய நாட்டின் பிரதமரை அழைப்பது.

இங்கு சிலருக்கு ஒரு கேள்வி எழலாம்.அப்படி பட்ட படத்தை திறக்க பிரதமர் எப்படி ஒப்புக்கொள்வார் ,அந்த அளவு மரபு,சட்டம் தெரியாதவரா மோடி? என்று.

இந்திய பிரதமர் அப்படி செய்யலாம்.ஆனால் ஆர்.எஸ்.எஸ் ,கண்ணாடி  அணிந்த மோடி?இந்திய விடுதலைப்போராட்டத்தை எதிர்த்து செயல் பட்ட சர்க்கார்,காந்தியை சுட்ட நாதுராம் கோட்ஸே க்களை சிலைகளாகவும்,படங்களாகவும் திறந்துவரும் இந்துத்துவா கூட்டத்தை சேர்ந்தவர் ,அதன் தலைவர்களை  ராஜரிஷிகளாகக் கொண்டு ஆள்பவர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடியை வைத்துப்பாருங்கள்.


மேலும் தற்போது எதிரவரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் எவ்வளவு முக்கியாயத்துவம் வாய்ந்தவை என்பதை அமித் ஷா மோடிக்கு சொல்லாமலா இருப்பார்.

கவுதமி,சச்சின் ,ஓ.பி.எஸ்,இ.பி.எஸ்  மைத்ரேயன் போன்றவர்களை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க நேரம்,காலம்தரும் பிரதமர் மோடி...காவிரி பிரசனைகளில்,விவசாயிகள்,மக்கள்,குடிநீர்  பிரசனைகளில் மனு வாங்கக்கூட  யாரையுமே  சந்திக்காதவர் அதிகபட்சமாக 89 சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்ட தமிழக எதிர்க்கடசித்தலைவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கூட சந்திக்காதவர்.

ஆனால்  எந்த பதவியிலும் இல்லா சாதா ச.ம.உ ஓ.பி.சை அந்த காலக்கட்டத்தில் மூன்று முறை சந்தித்து அளவளாவி இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

காரியம் ஆக கழுதை காலைக்கூட பிடித்து குட்மார்னிங் சொல்லுவான் புத்திசாலி.
அவனே காரியம் முடிந்தால் கழுதைக்கு காயடித்தும் விடுவான்.

 மொத்தத்தில் ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறப்பது மொள்ளமாரித்தனம் என்றால்.அதற்கு பெருசுகள் வந்து செல்வது கடைந்தெடுத்த கேப்மாரித்தனம்.

அசிங்கப்படப்போவது இந்திய அரசியல் அமைப்பு,அரசியியல் சட்டத்திட்டங்கள்,தேர்தல் ஆணையம் இவற்றை விட உச்சமாக இத்தீரப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம் தான் .

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்பது,மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தாவூத் படம் திறப்பது,பாராளுமன்றத்தில் நாதுராம் கோட்ஸே படம் திறப்பது எல்லாமே  ஒரே நிலைதான்.
அதிலும் மோடி கலந்து கொள்வாரா?

புதன், 24 மே, 2017

அன்றைய செய்தி இன்றைய வரலாறு

வரலாறு கேட்கக் கதை போல் இருந்தாலும் அதை அனுபவித்தவர்கள் துன்பங்கள் தழும்புகளாக மாறுவதுடன் அவர்களை இந்த உலகை புரிய வைத்து பக்குவவப்படுத்தி விடுகிறது.

அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாதது நமது தவறுதான்.

இயற்கையும் காலமும் நமக்கு நாளத்தூரும் பாடங்களை நடத்தி நமக்கு  பகுத்தறிவை தந்து  பக்குவப்படுத்தி வைக்கத்தான்  செய்கிறது.

கடந்த கால அனுபவங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடம் படித்ததே இல்லை.
அவர் எம்.ஜி.ஆருடன் ,கலைஞருடன் அரசியல் செய்தும் இருவரின் பெருந்தன்மையை அவர்  கொஞ்சமாவது கற்றுக்கொண்டதில்லை.

அதிகாரம் இருக்கிறது என்பதால் காரணமே இல்லாமல் நள்ளிரவில் கலைஞரை வீட்டை உடைத்து,அவரை அடித்து உதைத்து இழுத்து கைது செய்தார்.

ஆனால் அவர் மீது குற்றம் சாட்ட காரணம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்தது.

ஆனாலும் ஜெயலலிதா கடைசிவரை ஆணவத்தின் உச்சமாகத்தான் இருந்தார்.அதனாலே அழிந்தரர்.
எப்படி இறந்தோம் ,என்று இறந்தோம்,என்பதையே அறியா இழி மரணம்.

ஆனால் அவர் அழிக்க நினைத்த கலைஞரோ  ஜெயலலிதா மரணத்துக்கும் அஞ்சலி செலுத்தும் உயரத்திலேயே வாழ்கிறார்.

இனி அன்றைய 2001 கரும் நள்ளிரவு வரலாறு..

நள்ளிரவில் கொலைகார காவல்துறையால் குண்டுகட்டாக கலைஞரை தூக்கி எறியப்பட்ட அவரின் காரினுள் இரண்டு மஃப்டியில் இருந்த காவல்துறையினர் அமர்ந்து கொள்ள வேப்பேரி காவல்நிலையத்துக்கு போனதும் காவல்நிலையத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டன.

வெளியே நிருபர்கள் மீதும் கழகத்தினர் மீதும் லத்திசார்ச்.. கேட் இடுக்கில் மாட்டிக்கொண்ட பெண் நிருபர் மீது தடியடி நடத்த.. அவரது கால் முறிகிறது.
சாலையே தெரியாத அளவுக்குக் குவிந்துகிடந்த போலீஸார், நீதிபதியின் குடியிருப்புக்கு 100 அடி தூரத்திலேயே நிருபர்களைத் தடுத்து நிறுத்தினர்.

''செய்தி சேகரிப்பது எங்கள் உரிமை!'' என்றபடி நிருபர்கள் முன்னேற, '
'உங்களைத் தடுப்பது எங்கள் கடமை!'' என்று வக்கிரமாகச் சொன்ன ஒரு போலீஸ் அதிகாரி,
 லத்தி சார்ஜுக்கு உத்தரவு போட்டார்.
 
போலீஸ் ஸ்டேஷனை நெருங்க முயன்ற நிருபர்களுக்கு, அங்கேயும் காட்டுத்தனமான தாக்குதல் பரிசாகக் கிடைத்தது.

விழுந்த அடிகளில் இரண்டு மூன்று கேமராக்கள் நொறுங்க, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கிடைத்த இண்டு இடுக்கில் எல்லாம் புகுந்து ஓடினார்கள் நிருபர்கள்.

அதில் பெண் நிருபர்களைக்கூட விடாமல்... அவர்கள் தரையில் தடுக்கி விழுந்தபோதும் லத்தியால் தாக்கித் தள்ளியது போலீஸ்.
''சிறையில் அடைக்கப்படும்வரை கலைஞரை யாரும் ஒரு புகைப்படம்கூட எடுத்துவிடக் கூடாது. அவருடன் யாரும் ஒரு வார்த்தைகூட பேசிவிடக் கூடாது.


அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்'' என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனிடம் இருந்து வந்த உத்தரவுதான் இத்தனைக்கும் காரணம் என்று பிற்பாடுதான் புரிந்தது.
கலைஞரை அப்படியே நிற்க வைத்து இருப்பதை பார்த்த அவரது மருத்துவர்.. "சார் அவருக்கு "வார்டிகோ" பிரச்சினை இருக்கு.

பத்து நிமிஷத்துக்கு மேல அவர் நிற்கக் கூடாது " என்ற போது.. "ஆங்.. அவரை பட்டு மெத்தையில் வச்சி பராமரிக்கவா" ன்னு கமென்ட் வந்த போது காவல்துறையின் கொடூற குணம் புரிய ஆரம்பித்தது.
கலைஞருக்கு என்னவேனாலும் ஆகும் நிலை..
அடுத்தடுத்து வந்த கார்களில் கலைஞரின் குடும்பத்தினர்..
கடைசியாக வந்த காரில் மாறன் வந்திறங்கிய போது ஒட்டுமொத்த கூட்டமும் நடுங்கித்தான் போனது.
நார்நாராக வேட்டி கிழிந்து உள்ளே இருக்கும் அன்டர்வேர் தெரிய தள்ளாட்டத்துடன்... ஓட்டமும் நடையுமாக வந்தவர் " நான் வயசானவன்.. ஹார்ட் பேஷன்ட்... மார்பில குத்திட்டாங்க.

ரொம்ப அடிச்சிட்டாங்க... முடியல, என்னால முடியல" ன்னு கதறிய போது.. அருகிலிருந்த துரைமுருகன் வாய்விட்டு "அய்யோ... அண்ணா... அய்யோ" என்று தலையில் அடித்துக்கொண்டு ஓலமிட்டு அழத் தொடங்கி விட்டார்.
உரத்த குரலில் கேள்விகள் கேட்ட முரசொலி மாறனின் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினார் ஒரு போலீஸ்காரர்.
இன்னொருவர் ஸ்டேஷனுக்குள் இருந்த நாற்காலியை அவரை நோக்கி எட்டி உதைக்க, மாறனின் காலில் சுளீரெனத் தாக்கியது அந்த நாற்காலி.

இதனைத் தொடர்ந்து மாறன் வாய்விட்டு அலறியது ஸ்டேஷனுக்கு வெளியிலும் கேட்டது.
"தலைவரின் செருப்பை கூட போட்டுக்க அனுமதிக்கல பாவிங்க.
இந்தா கொண்டாந்துருக்கேன்" என்று அவர் கையிலிருந்த கலைஞரின் வெள்ளை நிற செருப்பை நீட்ட.. அவரின் பேச்சை கூட கேட்கிற நிலையில் இல்லாத மாறன் கண்கள் குத்திட்டு வெறிக்க வெளிவாணத்தை பார்த்தவாறே நீதிபதியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ரிமாண்ட் போடப்பட்டு வெளியே வந்த கலைஞரின் சட்டை கிழிந்து.. வேட்டியை மார்புவரை அவரே தூக்கி பிடித்து தள்ளாடி நடந்து வந்த போது, குடும்பத்து பெண்கள் கதறியழ, கலைஞர் கைகளால் ஆறுதல் சொல்லி போலீஸ் வண்டியில் ஏறினார்.
கலைஞரை பொதுமருத்துமனைக்கு மருந்துவ சோதனைக்கு அழைத்து போவதாக சொன்ன பாவிகள் அரைமணிநேரம் அவரை அலைகழித்து... யாருடைய உத்தரவை பெற்றனரோ, மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொன்ன மாஜிஸ்திரேட் உத்தரவை மீறி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜெயில் வளாகத்தை நெருங்க முடியாத அளவில் பாலத்துக்கருகே அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன.
"தலைவா.. நீ சம்பளத்தை உயர்த்தி கொடுத்த போலீஸ்காரனே உன்னை அடிக்கறதை தாங்க முடியலையே" ன்னு தொண்டர் ஒருவர் மயங்கி விழ அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
சிறையின் முன்பு இருந்த சிமென்ட் தளத்தில் அப்படியே சப்பணமிட்டு அமர்ந்த கலைஞர் ஓங்கி உயர்ந்த சிறைக் கட்டடத்தை ஒரு தரம் நிமிர்ந்து பார்த்தார். குடும்ப டாக்டர் கோபாலும், கனிமொழியும் அடக்க மாட்டாமல் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட கனிமொழி, மேலே நிமிர்ந்து பாலத்தின் மேலே இருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து, ''தலைவருக்கு சிறைச்சாலை பயம் இல்லை... ஆனால், நீதிபதி உத்தரவு போட்ட மருத்துவ வசதி எதுவும் சிறைச்சாலைக்குள் அவருக்குக் கிடைக்கப்போவது இல்லை. அவரைச் சிறையில் தள்ளினால் மறுபடி பார்க்க முடியுமா என்பதே சந்தேகம்தான்...'' என்று சொல்லிக் கதறினார்.
அதே சமயம் அங்கு வந்து சேர்ந்தார் துர்கா. அவர் மகன் உதயநிதியும் மகள் செந்தாமரையும் இறங்​கினர்.
''போட்டுட்டாங்களா... நிஜமாவே தலைவரை உள்ளே போட்டுட்டாங்களா?'' என்று நம்ப முடியாதவராக மறுபடி மறுபடி நிருபர்களிடம் கேட்டார் துர்கா.
''உங்கள் வீட்டுக்குள்ளும் போலீஸ் புகுந்ததாமே...?'' என்று நிருபர்கள் கேட்க,

''ஆமாம். மேயரைத் தேடிக்கிட்டு வர்றதா சொன்னாங்க. அவர் வீட்டில் இல்லைனு சொன்னபோதும், எங்களைத் தள்ளிவிட்டுட்டு உள்ளே புகுந்து சூறையாடினாங்க. வாசல் கேட்டில் தொடங்கி, உள்ளே இருக்கிற அறைகள்வரை கைக்குக் கிடைத்ததை எல்லாம் உடைச்சுத் தள்ளினாங்க.

பொம்பளைனுகூடப் பார்க்காம திரும்பத் திரும்பக் கையைப் பிடித்து இழுத்து. 'உன் புருஷன் எங்கேனு சொல்லு!?’னு என்னை சித்ரவதை பண்ணாங்க...'' என்று துர்கா சொல்ல,
மகள் செந்தாமரை, ''இவ்வளவு பத்திரிகைகாரங்க நாட்டில் இருக்கீங்களே... இந்தக் கொடுமையை யாருமே தட்டிக் கேட்க மாட்டீங்களா?''
என்று தாயின் தோளில் சரிந்து விம்மினார்.
ஸ்டாலின் மகன் உதயநிதி நம்மிடம், ''எதுக்குக் கைது... வாரன்ட் இருக்கா? என்பது போன்ற எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை. '

உங்கப்பன் பயந்து ஓடிட்டானா?’னு எகத்தாளமா என்னைக் கேட்டாங்க. இப்ப எங்க அப்பா எங்கே இருக்கார்னே தெரியலை...'' என்று உதயநிதி குமுறி அழுதார்.

அப்போது சென்னைக்கு உள்ளேயே தளபதியை மடக்கிக் கைது செய்யப்பட்டதாக செல்போனில் ஒரு தகவல் வந்து சேர்ந்தது. அனால், அது உண்மை இல்லை என்பது பின்னர் தெரிந்தது
நீதி கேட்டு வாசலில் அமர்ந்து கொண்ட கலைஞருடன் போலீஸார் கைகளை நீட்டி வாக்குவாதம் செய்ய.. அதே வேகத்தில் கலைஞரும் ஆக்ரோஷமாக பேசுவதை தூரத்தில் இருந்து காண முடிந்தது.
ஒரு போலீஸ்காரர் உள்ளே போய் ஃபைபர் சேர் ஒன்றை கொண்டு வர. . அவரின் அதிகாரி அந்த போலீஸை அடிக்க பாய்ந்தார்.
ஒரு வழியாக மறுநாள் காலை 7 மணிக்கு சிறையின் வாசல் திறந்து கலைஞரை அது உள்வாங்கி கொண்டது.
என்னண்னே நடக்குது இந்த நாட்டிலே? என்று வீரபாண்டியரை பார்த்து கேட்ட செல்விக்கு பதில் சொல்லும் முன்பே அவரின் வாய் அதிர்ச்சியில் கோனிக்கொண்டது.
காலை 8.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்த தளபதி அங்கு வந்த இல.கணேசனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். '
'தலைவரை அராஜகமாக அடித்து, இழுத்துக் கைது செய்து கொண்டு போயிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்துப் பெண்களிடம் போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டனர்.
எல்லா வெறியாட்டத்துக்கும் காரணமானவர்களைத் தண்டிக்காமல், எனது அரசியல் வாழ்க்கை இனி ஓயாது.
நானும் இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதி முன்பு சரண்டர் ஆகப் போகிறேன்...'' எனப் படபடப்புடன் நிருபர்களிடம் சொல்லி முடித்தார்.

ஆனால் கலைஞர்,தளபதி இருவர் மீதும் போய் வழக்கு கூட போட இயலாமல் ஜெயலலிதா தவிக்க நீதிமன்றம் இருவரையும் விடுவித்தது.
 ஜெயலலிதா அழிக்க நினைத்த இருவரும் அரசியலில் இன்றும்  சக்திகளாக உள்ளனர். 
இருவரையும் அழிக்க எண்ணிய ஜெயலலிதா ?
நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட  என்னும் அவலத்தின் மூலம் மையமாகி  போனார்.

பகுத்தறிவாளர் கலைஞரை  ஒழிக்க நடத்திய மித்ரு சம்ஹார யாகம் எத்தனை,?

தன்னை வளர்த்துக்கொள்ள,நீதிமன்ற தண்டனைகளில் இருந்து தப்பிக்க செய்த யாகங்கள் எத்தனை?

தவவாழ்க்கை வாழ குவித்த பண,சொத்து மூட்டைகள் எத்தனை?
,
சோதிடர்கள் கூறியதால் நடத்திய  பரிகாரங்கள் எத்தனை,கொடுத்த யானைகள் எத்தனை ?

ஆனால்  நடந்தவைகள்  என்ன?

தவ வாழ்க்கை தவறாக வாழ்ந்து காட்டிய  வாழ்க்கையாக அல்லவா போனது!

ஜெயலலிதா அழித்தொழிக்க நினைத்த திமுக ஆளுங்கட் சிக்கு இணையாக ச.ம.உ,க்களை கொண்ட எதிர் கடசியாக பணிபுரிகிறது.

கலைஞர் தனது 60 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர் பணிக்கு வைர விழா நாயகனாக இருக்கிறார்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே தொடர்ந்து போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடிய பெருமைக்கு சொந்தக்காராகி காட்சியளிக்கிறார்.


இதை எல்லாம்  கூற வேண்டியதில்லை.அத்தனையும் கண் முன்னாள் கண்ட சாட்சிகள் நீங்கள்.ஆனாலும் சில ஊடகங்கள் இவற்றை மக்கள் மறக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபட்டு தேவையற்ற கருத்துக்களை,பொய்களை செய்திகளாக்கி வருகின்றன.
ஆனால் இதுதான் அன்றைய செய்தி

 இன்றைய வரலாறு.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...