வெள்ளி, 30 ஜூன், 2017

பணமதிப்பிழப்பும்...., ஜி.எஸ்.டி ,யும்......!

வரி சம்மந்தமான எந்த ஒரு திட்டத்தையும் அல்லது மாற்றத்தையும், நிதியாண்டு தொடக்கத்தில் அமல்படுத்துவது தான் மத்திய மாநில அரசுகளின் நடைமுறை. 

ஆனால் நிதி ஆண்டின் மத்தியில் , ஜூலை 1 ம் தேதி ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமலுக்கு கொண்டு வருகிறது பாஜக அரசு. 2011ம் ஆண்டு முதலாகவே காங்கிரஸ் அரசு முன் வைத்த திட்டம் தான் ஜிஎஸ்டி. திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கான சாஃப்ட்வேர் இன்னும் தயாராகவில்லை. ஆனாலும் அவசர அவசரமாக ஜிஎஸ்டியை அமல்படுத்த அரசு காட்டும் வேகம் குறித்து கேள்வி எழுகிறது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, எக்சைஸ் டூட்டி முற்றிலும் ஒழிக்கப்படுகிறது. எக்சைஸ் டூட்டி சட்டத்தின் படி, வரி செலுத்தாமல் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் வாசலை தாண்ட முடியாது. 
அரசு அலுவலர்கள் எக்சைஸ் டூட்டி கட்டியதற்கான சான்றிதழை சரிபார்த்தப் பிறகே, பொருட்களை வெளியே அனுப்புவார்கள். 

ஜிஎஸ்டி சட்டத்தின் படி, எந்த நிறுவனத்திலும் முன்னால் எக்சைஸ் டூட்டி அதிகாரிகளோ அல்லது ஜிஎஸ்டி வரி அதிகாரிகளோ சோதனை செய்யப் போவதில்லை. திட்டம் முழுவதும், முழுக்க முழுக்க E Form என்று சொல்லப்படுகிறது படிவத்தில் நிறுவனங்கள் அளிக்கும் விவரங்களைப் பொறுத்தே செயல்படுத்தப் படுகிறது. 

இந்த E Form ஐ பூர்த்தி செய்து , சரக்குடன் அது சென்று சேருமிடம் வரை, சரக்கு வாகனத்துடன் அனுப்ப வேண்டும். 

வழியில் சோதனை செய்யப்படும் போது அதைக் காட்ட வேண்டும்.E Form இல்லாவிட்டால் சரக்குகள் பறிமுதல் செய்யப்படும். இரண்டு வாரங்களுக்கு முன்னால் தான் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஒரு குண்டைத் தூக்கி போட்டார். 

அதாவது E Form க்கு உரிய சாஃப்ட்வேர் இன்னும் தயாராக வில்லை. அதற்கான டெண்டர் கூட இன்னும் விடப்படவில்லை. எந்த நிறுவனம் அதை வடிவமைக்கும் என்பது கூட இன்னும் தெரியாது என்றெல்லாம் கூறியிருந்தார். 

நாடு முழுவதும் ஒரே வரி என்பதுடன் வரி ஏய்ப்பை தடுப்பதுவும் ஜிஎஸ்டி திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். E Form மூலம், நிறுவனங்களின் சரக்கு போக்குவரத்து, யாரிடமிருந்து யாருக்குச் சென்றது போன்ற விவரங்கள் அரசின் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். 

அதைக் கொண்டு, நிறுவனங்கள் தாக்கல் செய்யும் விவரங்களுடன் ஒப்பிட்டு வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க முடியும். அரசிடம் தகவல்கள் ஏற்கனவே இருப்பதால் நிறுவனங்களும் வரி ஏய்ப்பு செய்ய மாட்டார்கள். 
இன்னும் E Form சாஃப்ட்வேர் ரெடியாகவில்லை என்பதால், அச்சடிக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். வழியில் சோதனை செய்யாவிட்டால் நிறுவனங்கள் அதை கிழித்துப் போட்டு விட்டு வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்புள்ளது.

 ஜிஎஸ்டியின் அடிநாதமான E Form க்குரிய முக்கியமான சாஃப்ட்வேர் இல்லாமலே அரசு ஏன் இத்தனை அவசரமாக ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டும். அதுவும் 7 ஆண்டுகளாக இழுபறியாக இருக்கும் இந்தத் திட்டத்திற்கு, நிதியாண்டின் மத்தியிலேயே என்ன அவசரம். 

ஏப்ரல் 1ம் தேதி வரை காத்திருக்க முடியாதா என பல கேள்விகள் எழுகின்றன. தற்போது சுமார் 40 சதவீத பொருளாதாரம் அரசின் கணக்கில் வரவில்லை. 

அரசு காட்டி வரும் பொருளாதார குறியீடு உண்மையான அளவை விட குறைவாகும். உதாரணத்திற்கு உண்மையான பொருளாதார குறியீடு 100 என்றால் அரசுக் கணக்கில் வருவது 60 மட்டுமே. 
நாற்பது சதவீத நிறுவனங்கள் பொருளாதார குறியீட்டுக் கணக்கில் வராமல் இருப்பவைகள். எக்சைஸ் டூட்டிக்கு 1 கோடி ரூபாய் உற்பத்தி வரைக்கும் விலக்கு அளித்த அரசு, ஜிஎஸ்டிக்கு 20 லட்சமாக குறைத்துள்ளது.

இதன் மூலம் அனைத்து நிறுவனங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வைக்கிறார்கள். இதுவரையிலும் பொருளாதார குறியீட்டுக் கணக்கில் வராத நிறுவனங்களை உள்ளே கொண்டு வருகிறார்கள். 
500.1000 பணமதிப்பிழப்புக்குப்  பிறகு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதை அனைவரும் அறிவார்கள். 

இது வரையிலும் கணக்கில் வராத நிறுவனங்களின் பொருளாதார கணக்கையும் கொண்டு வருவதன் மூலம், அரசின் மொத்த பொருளாதார குறியீட்டுக் கணக்கை ஒரளவுக்கு அதிகமாக்கிக் காட்ட இயலும்.. பாஜக அரசு பொருளாதாரத்தை மீட்டுவிட்டது. 

எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் என்றெல்லாம் காட்டுவதற்கு இத்தகைய மோசடி வித்தைகள் உதவும். 

கணக்கை மாத்திக்காட்டி மக்களை ஏமாற்றும் வித்தைக்காகத் தான் அவசரக் கோலத்தில் ஜிஎஸ்டியை நிதியாண்டின் மத்தியிலேயே அரசு செயல்படுத்த முன்வந்துள்ளது. 
பணமதிப்பிழப்பு  மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை மூடி மறைக்கவே, பாஜக அரசு ஜிஎஸ்டி திட்டத்தை அசுர வேகத்தில் செயல்படுத்துகிறது. 

எந்த ஒரு திட்டத்தையும் ' Right at First Time' 'முதல் தடவையே முற்றிலும் சரி' அடிப்படையில் செயல்படுத்துவது தான் பொருளாதாரத்தின் முக்கிய கோட்பாடு ஆகும். 
சரியான திட்டமிடுதல், செயலாக்கம் இல்லாததால் தான் பணமதிப்பிழப்பு   மிகப்பெரும் தோல்வியை தழுவியது. 

பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுத்தது பணமதிப்பிழப்பு வழியில் தற்போதைய ஜிஎஸ்டியும் செல்வதற்கான அத்தனை அறிகுறியும் தெரிகிறது. அவசரக்கோலத்தில் செய்யும் காரியம் சரிவராது என்பதை பாஜக முன்பே அறிந்தும் இப்படி அவசரப்படுவது பணமதிப்பிழப்பில் பெயர் கெட்டது போல்  ஆபத்தாகவே முடியும்.

அவசரத்தில் அண்டாக்குள் கூட கை  போகாது.
                                                                                                                                            - கரிசல் பிரபு
ஆசிரியர் பிரஸ் ஏட்டய்யா குமாரவேல்.








வியாழன், 29 ஜூன், 2017

கேடில் வீழ் செல்வம் மாடு ,,,,,,

பழனியில் விவசாயி ஒருவர் தனது 3மாடுகளை பண்ணைக்கு கொண்டு செல்கையில் வந்தவழியே வந்த ஜீயர் எனப்படும் பார்ப்பன சாமியார் இந்து முன்னணி ஆட்கள் துணையுடன் அந்த லாரியை காவல் நிலையம் அழைத்து சென்று புகாரை கொடுத்துள்ளார்.

"தனது மாடுகளை தான் பண்ணைக்கு கொண்டு செல்ல யார் அனுமதி வேண்டும்"என்று விவசாயி கேள்வி எழுப்ப அவருக்கு துணையாக கம்யூனிஸ்ட் கடசியினர்,விவசாயிகள் பொதுமக்கள் கூட காவல் அதிகாரி மாடுகளை விடுவித்தார்.
ஆனால் ஜீயர் அடியாட்கள் இந்து முன்னணியினர் சாலை மறியல்,அரசுப்பேருந்து கண்ணாடியை கல் வீசி தாக்குதல்கள் நடத்த காவலர்கள் அவர்களை அடித்து கலைத்து விரட்டியுள்ளனர்.
கலவரத்தை உருவாக்கிய ஜீயரோ பாதுகாப்புடன் தூசி கூட படாமல் காரில் ஏறி பறந்து விட்டார்.
அவர் கார் மீது செருப்புகள் வீசப்பட்டது வேறு.
ஆக மடாதிபதிகள் ,பார்ப்பன சாமியார்கள் மாடுகள் தொடர்பாக பிரசனைகளை கிளப்பி விட்டு தங்கள் ஒதுங்கிக்கொள்கிறார்கள்.அடிபடுவது என்னவோ சூத்திர இந்து வெறியர்கள்தான்.காரணம் பகுத்தறிவை மதத்தின் பெயரால் இழந்து விடுகிறார்கள்.
பசுவை கோமாதா என கும்பிடுவது பார்ப்பனர்கள் ஆனால் அதை காக்க கொலை செய்வதும்,கொலைக்கு ஆளாவதும் சூத்திரர் எனப்படும் தீண்டத்தகாத இந்துக்கள் எனப்படுபவர்கள்தான்.
பழனியில் இப்படி என்றால் பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி என்றாலே கொலையாகும் நிலை.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் பரப்பிய பகுத்தறிவுதான் பசுக்காவலர்கள் எழாமல் தடுக்கும் இந்த  நிலைக்கு காரணம்.
பா.ஜ. ஆளும் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார்க் மாவட்டத்தில் பஜார்டாங்க் என்ற பகுதியில் வேன் ஒன்றில் மாட்டிறைச்சி கொண்டு செல்லப்படுவதாக பாஜக,ஆர்.எஸ்.எஸ். கும்பல் வேனை மறித்து டிரைவர் அலிமூதீன் என்பவரை  கடுமையாக தாக்கினர்.
பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இன்று காலைதான் குஜராத் கூட்டத்தில் ஒன்றும் அறியத உத்தமர் போல் 'பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனித உயிர்களை எடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது' என்று வேதம் ஓதினார் பிரதமர் மோடி.


ஆனால் அவரது இந்துத்துவா அரசுதான் பசு பாதுகாப்பு சட்டத்தையே  வெளியிட்டுள்ளது.
பிள்ளையை கிள்ளி விட்டு விட்டு,தொட்டிலை ஆட்டும் சேவையை செய்கிறார் மோடி.அவரின் இந்துத்துவா ஆடசியின் கொடூர  முகத்தின் வெளிப்பாடுதான் இந்த படுகொலைகள்.

மனிதர்களை கொன்று மாடுகளை பாதுகாப்பது அறிவுள்ள மனிதன் செய்யும் காரியம் அல்ல.

காட்டுமிராண்டிகள் செயல்.இந்தியாவை 29ம் நூற்றாண்டில் இருந்து 10ம்  நூற்ராண்டுக்கு கொண்டு செல்லும் காரியத்தை மோடி அரசு செய்கிறது.
 மாட்டுக்காக பசு பாதுகாப்பு தீவிரவாத அமைப்பின் கீழ் 16 வயது முதல் 60 வயது வரை கொல்லப்பட்டவர்கள் மற்றும் கடுமையாக தக்கப்பட்டு காயமடைந்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அவையாவன;
ஜூன் 2014 முஹ்சின் சாதிக் சேக் வயது 24 - புனேவில் கொல்லப்பட்டார்.
மார்ச் 2015 செய்யது ஷரீபுத்தீன் கான் நாகலாந்தில் மாட்டுக்காக ஒரு கும்பலால் கொல்லப்பட்டார்.
மே 2015 அப்துல் ஜப்பார் குரைஷி வயது 60. ராஜஸ்தான்
செப்டம்பர் 2015 முஹம்மது அக்லாக் வயது 50 உத்திர பிரதேசம் தாத்ரி
அக்டோபர் 2015 ஜாஹித் ரசூல் பட் வயது 16 உதம்பூர்
அக்டோபர் 2015 நோமன் அக்தார் வயது 28. ஹிமாச்சல் பிரதேசம்
நவம்பர் 2015 முஹம்மது ஹம்சாத் அலி வயது 55 மனிப்பூர் .
மார்ச் 2016 முஹம்மது மஜ்லூம் வயது 35. மற்றும் முஹம்மது இனாயத்துல்லாஹ்கான் வயது 12. ஜார்கண்ட்.
ஏப்ரல் 2017 பெஹ்லுகான் ராஜஸ்தான்.
ஏப்ரல் 2017 அபூ ஹனீபா மற்றும் ரியாசுத்தீன் அலி. அஸ்ஸாம்.
மே. 2017 முன்னா அன்சாரி வயது 39. ஜார்கண்ட்.
ஜூன் 2017 ஜாஃபர் ஹுசைன் ராஜஸ்தான்
ஜூன் 2017 ஹாஃபிஸ் ஜுனைது வயது 16
ஜூன் 2017 நசீருல் ஹக், முஹம்மது சமீருத்தீன், முஹம்மது நசீர் மேற்கு வங்கம்.
ஜூன் 2017 முஹம்மது சல்மான் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்
ஜூன் 2017 உஸ்மான் அன்சாரி ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்.
பாஜக அரசு போட்ட மாட்டிறைச்சி சட்டம் தான் இந்த படுகொலைகளுக்கு மூலம்.
இந்த படுகொலைகள் அனைத்தும் மோடியின் பாஜக கணக்கில்தான் சேரும்.

அவர் அரசின் மீது சாதனைகள் பதக்கங்கள் அல்ல.ரத்தக்கறைதான்..



"FIR" பார்ப்பனர்கள்

சிலநாட்களுக்கு முன்பு டிவி விவாதமொன்றில் தோழர் மதிமாறன் மற்றும் பாஜக நாராயணனுக்கும் இடையில் நடந்த விவாதம் தொடர்பாக தோழர் மதிமாறனை கண்டித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காமெடி நடிகர் எஸ்வி.சேகர் வீடியோ ஒன்றினை நேற்று பதிவு செய்துள்ளார்.
அதில் சிலகேள்விகளையும் முன்வைத்துள்ளார்..
"சுகந்திர இந்தியாவில் FIR பதிவு செய்யப்பட்ட ஒரு பார்ப்பனர் உள்ளாரா? "என்று எஸ்.வி.சேகர் கேட்டுள்ளார்..
நீங்கள் சுகந்திர இந்தியாவில் என்று குறிப்பிட்டதால் நானும் சுகந்திரத்திற்கு பின்பு இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்த மற்றும் தமிழகத்தை தலைகுனிய வைத்த இரண்டு நிகழ்வுகளை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்
சுதந்திர இந்தியாவையே அதிர வைத்த காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுதந்திர இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கோட்ஸேவும் நாராயண ஆப்தேவும் யாரென்பது உங்களுக்கு மறந்துவிட்டதா? 
இல்லை மறந்துவிட்டது போன்று நடிக்கிறீர்களா? 
குறைந்தது அதில் குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட சாவர்க்கரையாவது யாரென்று உங்களுக்கும் ஞாபகம் இருக்கிறதா? 
ஞாபகம் இல்லையென்றால் நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் வரலாற்றை கொஞ்சம் படியுங்கள்..
இரண்டாவது ஒட்டுமொத்த தமிழகமே ஒருவரின் செயலுக்காக இன்று தலைகுனிந்து நிற்கிறது.. சுதந்திர இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் போதே ஊழல்குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் முதலமைச்சர் ஜெயலலிதா பார்ப்பணத்தி,சங்கரராமன் கொலையில் உங்களின் மனிதக்கடவுள் ஜெயேந்திரர் சிறை சென்று பாஜக ஆடசி வந்த பின்னரே விடுதலையானார்,அவர் உலகறிந்த பார்ப்பனர் , என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டிர்கள் என்று நினைக்கிறன்.. உண்மையில் மறந்திருந்தால் விரைவாக நல்ல மருத்துவரை அணுகவும்..சங்கரராமன் இன்றைய நிலவரப்படி தன்னைத்தானே கழுத்தை வெட்டிக்கொண்டுதான் கொலையாகியிருக்கிறார்.?
இரண்டாவது நாங்கள் 99 .9 மதிப்பெண்கள் பெற்றாலும் எங்கள் மாணவர்களுக்கு படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை..
உங்களின் ஆதங்கத்தையும் உங்கள் சுயசாதியின் மீதான பற்றையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது..நீங்கள் சொல்வது உண்மையென்றால் கோவில்களில் இருக்கும் பார்பனர்களெல்லாம் எந்த பல்கலைகழகத்தில் 99.9 மதிப்பெண் பெற்று அங்கு இருக்கிறார்கள்...
குறைந்தபட்சம் இதற்கான விளக்கத்தையாவது உங்களால் தரமுடியுமா?
சாதியை முன்னிலைப்படுத்தி இன்னமும் தமிழகத்தில் ஆணவப்படுகொலைகள் நடந்துவருகிறது.. நந்தினிகள் மண்ணுக்கு அடியிலும் கௌசல்யாகள் மண்ணுக்கு மேலேயும் நடைபிணங்களாக வாழ்ந்துவருகிறார்கள்..இதைப்பற்றி சராசரி மனிதனாக ஒருவார்த்தை பேசியதுண்டா? 
நீங்கள் எப்படி பேசுவீர்கள் உங்களுக்குத்தான் "சாதியும் மதமும் தாயும் தந்தையை போலவே"
உங்களிடம் நாங்கள் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது..ஏனென்றால் நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கமே வரலாற்றை திரித்து பேசியும், மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டிம் அதன்முலம் அதிகாரத்திற்கு வந்தவர்கள்.. 
அவர்களின் வார்ப்பு நீங்கள் மட்டும் எப்படி இருப்பீர்கள்? 
இனியாவது வரலாற்றை தெரிந்தது கொண்டு பேசுங்கள்..
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்..
நீங்கள் ஸ்டாலினிடம் மட்டுமல்ல விருப்பப்பட்டால் கலைஞரிடம் கூட இதைப்பற்றி பேசுங்கள்.. 
அதைப்பற்றி ஒருநாளும் தோழர்.மதிமாறன் கவலைப்பட போவதுமில்லை..
அதற்கு அஞ்சி உங்களின் போலி முகத்திரையை கிழித்து மக்களுக்கு காண்பிக்காமல் விடப்போவதுமில்லை..
ஏனென்றால் அவர் பெரியாரை மூச்சாக சுவாதித்தவர்.. 
உங்களின் மிரட்டலுக்கு ஒருபோதும் அவர் அஞ்சமாட்டார்..
                                                                                                                                                                        - மணிகண்டன் ராஜேந்திரன்,
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தன்னோட அம்மா தற்கொலைக்கு காரணமானவங்க யார் என்பதை கண்டுபிடிக்கக் கோரி, தான் சேத்து வைத்திருந்த உண்டியல் பணத்தை லஞ்சமாக கொடுக்க முன்வந்த 6 வயது சிறுமியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது.
உத்தரபிரதேச ஸ்டேட்மீரட் அருகே வசித்து வந்த சீமா கௌசிக் எனும் பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 
அவர் தற்கொலை செய்து கொள்ள சீமாவின் கணவர் சஞ்சீவ் மற்றும் அவரது சகோதரர்கள் தான் காரணம் என்பதால், சீமாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை சீமாவின் தந்தை சஞ்சீவை மட்டும் கைது செய்தது. 
அவருடைய சகோதரர்களையும் கைது செய்ய வேண்டுமென்றால் 50,000 ரூபாய் லஞ்சம் வேண்டுமென்று காவலர்கள் கேட்டுள்ளனர்.
இதனால் அப்செட்டான சீமாவின் தந்தை சீமாவின் ஆறு வயது மகள் அதாவது, தனது பேத்தி மான்வியுடன் ஐ.ஜி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். 
அப்போசிறுமி மான்வி தன்னுடன் கையில் தனது உண்டியலையும் கொண்டு சென்றுள்ளார். கையில் உண்டியலுடன் நின்று கொண்டிருந்த மான்வியை ஐஜி ராம்குமார் அழைத்து விசாரித்துள்ளார்.
அப்போது சிறுமி மான்வி, எனது அம்மாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். 
அதனால் என் உண்டியலை வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார்.
சிறுமி பேசுவதை கேட்டு அதிர்ந்து போன ஐஜி அவரது அம்மாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 
மேலும் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆசிரியர்:ரா.குமரவேல்.
======================================================================================================================

ஞாயிறு, 25 ஜூன், 2017

பிளாஸ்டிக் அரிசி,புரோட்டா அரசியல் .

இன்றைய தேதியில் பயனுள்ள தகவல் குறிப்பு என்றால் அது, “பிளாஸ்டிக் அரிசையை கண்டுபிடிப்பது எப்படி?” என்பது தான். 
அந்த அளவுக்கு பிளாஸ்டிக் அரிசி குறித்த பீதி பரப்பப் பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பிளாஸ்டிக் அரிசி குறித்த தகவல்கள் உலவிக் கொண்டிருந்தன என்றாலும் தற்போது தமிழக அரசே இதை முன்னின்று பரப்பியதைப் போல தெரிகிறது. 
வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், பிளாஸ்டிக் அரிசியைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய குழு அமைத்து நடவடிக்கை, பிளாஸ்டிக் அரிசி குறித்து தகவல் கொடுக்க தனி தொலைபேசி இலக்கம் அறிவிப்பு என தமிழக அரசின் நடவடிக்கைகள் மக்களை பீதிக்கு உள்ளாக்கின.
அது என்ன பிளாஸ்டிக் அரிசி?
 சமூக ஊடகங்களில் ஒரு காணொளிக் காட்சி பரவி வருகிறது. ஓர் இயந்திரத்தின் ஒரு முனையில் பிளாஸ்டிக் தாளை உள்ளிடுகிறார்கள். 

அப்படியே காமிரா நகர்ந்து செல்கிறது, அந்த பிளாஸ்டிக் தாள் பிரிந்து உடுட்டப்பட்டு அரிசி போல் சிறுசிறு துண்டுகளாக வெளிவருகிறது. இந்த இடத்தில் அது அரிசி தானா என்பதை உறுதி செய்ய காமிரா அதை நெருங்கிச் செல்லவில்லை. கழிவு பிளாஸ்டிக் தாளை பிளாஸ்டிக் துருவல்களாக மாற்றும் வேலை நடக்கிறது எனக் கருதுகிறேன். ஆனால் அதை பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் தொழிற்சாலை என்ற தலைப்பில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
 ஒரு கிலோ அரிசி தோராயமாக 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை ரகம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ கச்சா பிளாஸ்டிக் துருவலின் விலை 100 ரூபாய்க்கும் அதிகம். இதில் கலப்படம் செய்து லாபம் பார்க்க வேண்டுமென்றால் ஒரு கிலோ பிளாஸ்டிக்கைக் கொண்டு எத்தனை கிலோ அரிசி தயாரிப்பார்கள்? 
எளிமையான இந்தக் கேள்வி கூட எழுப்பப்படாமல் தான் அந்த காணொளிக் காட்சி ஊரெங்கும் உலா வருகிறது.
பிளாஸ்டிக் அரிசி என பரப்பப்படும் இந்த அரிசியை செயற்கை அரிசி என்று சொல்லலாம். உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றிலிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் அரிசி தான் பிளாஸ்டிக் அரிசி என தூற்றப்படுகிறது. சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
அரிசியிலிருக்கும் கார்போஹைட்ரேட் தான் உருளை கிழங்கு, மரவள்ளிக் கிழங்குகளிலும் இருக்கிறது என்றாலும் நெல் அரிசியோடு ஒப்பிட்டால் கொஞ்சம் சத்துக் குறைவானது. 
அதேநேரம் இன்று பீதியூட்டப்படுவது போல இந்த செயற்கை அரிசியை உண்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. இந்தியாவின் பழைய பஞ்ச காலங்களில் உருளைக் கிழங்கும், மரவள்ளிக் கிழங்கும் தான் அரிசிக்குப் பதிலாக உணவாக பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.
என்றால் ஏன் இவ்வாறு பீதியூட்டப்படுகிறது? 
அது தான் இதன் பின்னாலிருக்கும் அரசியல். ஊடகங்களில் பரபரப்பாக திரும்பத் திரும்ப காட்டப்படும் எதுவும் உண்மையாகத் தான் இருக்கும் எனும் பொதுப் புத்தி மிகக் கவனமாக உருவாக்கி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருக்கிறது என்று கூறித் தான் ஈராக்கின் மீது படையெடுத்தது அமெரிக்கா. 
ஒரு பேனாக் கத்தியைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தது  என்பது பொதுப் புத்தியாக நிலைப்படுத்தப் பட்டிருக்கிறது. ஸ்டாலின் கோடிக் கணக்கில் படுகொலைகளைச் செய்தார் என்று பரப்பட்டிருக்கிறது. 
அவ்வாறு எழுதியவர்களே பணம் வாங்கிக் கொண்டு தான் அவ்வாறு எழுதினோம் என்று வாக்குமூலம் கொடுத்து விட்ட பிறகும், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் ஸ்டாலின் கோடிக் கணக்கில் மக்களை படுகொலை செய்தார் என்பது பொதுப் புத்தியாக நிலைப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது ஊடகங்களை கையில் வைத்திருப்பதன் மூலம் நம்முடைய மூளையை கட்டுப்படுத்துகிறார்கள். 
அது தான் இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.
மரபணு மாற்றப் பயிர்கள் என்பது இன்று சாதாரணமாகி இருக்கிறது. இந்த மரபணு மாற்றப் பயிர்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளை உண்பதன் மூலம் உடலுக்கு எவ்வளவு தீங்கு நேர்கிறது? 
என்னென்ன நோய்கள் ஏற்படுகின்றன என்றெல்லாம் ஆய்வுகள் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் அவை எந்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை. 
தெளிவாகச் சொன்னால், மரபணு மாற்று பயிர்களுக்கு, விதைகளுக்கு எதிராக பேசினால் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. அண்மையில் தெலுங்கானாவில் மரபு சார்ந்த மிளகாய் விதையை பரப்பினார் என்பதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 
ஊடகங்களில் அந்தச் செய்தி போலி மிளகாய் விதைகளை விற்றவர் கைது என வெளிவந்திருக்கிறது. அது என்ன போலி மிளகாய் விதை? 
மரபணு மாற்ற விதைகளை பற்றி மக்களிடம் விழுப்புணர்வு செய்யக் கூடாது. பாரம்பரிய விதைகளை வைத்திருந்து விற்றால் கைது. இந்த இரண்டையும் இணைத்துப் பார்த்தால் என்ன முடிவுக்கு வர முடியும்? 
முதலாளிகளுக்கு, ஏகாதிபத்தியங்களுக்கு எதுவெல்லாம் லாபத்தைக் கொட்டிக் கொடுக்குமோ அவைகலெல்லாம் – அவைகளில் உடலுக்கு தீங்கு இருந்தாலும் – உலகில் நல்லவைகளாக பொதுப் புத்தியில் உருவாக்கப்படும். 
ஏகாதிபத்தியங்களுக்கு லாபத்தை கொட்டிக் கொடுக்காத எதுவும் – அவைகளில் உடலுக்கு நன்மை இருந்தாலும் – உலகில் கெட்டவைகளாக பொதுப் புத்தியில் உருவாக்கப்படும்.
சில நாட்களுக்கு முன்னால் புரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்றொரு செய்தி தீயாய் பரவியது. 

மைதா மாவு எப்படி உருவாக்கப்படுகிறது? 
அதில் என்னென்ன வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன? 
அவை என்னென்ன விதங்களில் உடலுக்கு தீங்கு செய்கின்றன என்று விரிவான ஆய்வுக் கட்டுரை போல அந்தச் செய்தி அமைந்திருந்தது. 
படித்துப் பார்த்த பலர் புரோட்டா சாப்பிடுவதையே விட்டு விட்டார்கள். மைதாவுக்கு மெருகூட்ட, அதை வெண்மையாக்க அந்த வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும், அவைகளை உண்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்பதும் உண்மை தான். 
இதை புரோட்டாவுக்கு எதிராக மட்டும் ஏன் பயன்படுத்தினார்கள்? 
கேக் வகைகளிலிருந்து மேற்கத்திய உணவுகளான பீட்சா வகைகள் வரை அனைத்திலும் மைதா கலந்திருக்கிறது. மைதாவை பயன்படுத்தாதீர்கள் என்று பரப்பினால் அது விழிப்புணர்வு, 
புரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்று பரப்பினால் அதை விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள முடியுமா? 
ஏழைகளின் உணவாக மலிவான விலையில், உடலுக்கு உடனடி தெம்பளிக்கும், பரவலாக உண்ணப்படும் உணவான புரோட்டாவை ஒழித்து விட்டு அந்த இடத்துக்கு பீட்சாவைக் கொண்டு வர செய்யப்படும் சதித் திட்டம் என்பதாகத் தானே அதை புரிந்து கொள்ள முடியும்.
இதேபோலத் தான் அஜினாமோட்டாவுக்கு எதிரான பிரச்சாரமும். கரும்பு மரவள்ளிக் கிழங்கு ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உப்பு. 
இதன் வேதிப் பொருள் மோனோ சோடியம் குளூட்டமைட் என்பது. அஜினாமோட்டோவுக்கு எதிரான பிரச்சாரங்களில் எல்லாம் தவறாமல் பயன்படுத்தப் பட்டிருக்கும் ஒரு வாசகம், ‘அதில் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் தீங்கான பொருள் கலக்கப்பட்டிருக்கிறது எனவே அதை பயன்படுத்தாதீர்கள்’ என்பது தான். 

ஆனால் அஜினாமோட்டோவின் ஒவ்வொரு பாக்கெட்டிலும் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் பெயர் தவறாமல் அச்சிடப்பட்டிருக்கும். அதாவது அஜினோமோட்டோவில் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் பொருள் கலந்திருக்கவில்லை. 

அஜினாமோட்டோவின் பெயரே மோனோ சோடியம் குளூட்டமைட் தான் என்பதே அதன் பொருள். சாதாரண உப்பை பயன்படுத்தாதீர்கள் அதில் சோடியம் குளோரைடு எனும் தீங்கான பொருள் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது எவ்வளவு நகைப்புக்கு இடமானதோ அதே போலத் தான் அஜினாமோட்டோவில் மோனோ சோடியம் குளூட்டமைட் கலந்திருக்கிறது என்பதும். 
இது உணவில் சுவை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஓர் உப்பு. 
சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பலநூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒரு துணை உணவுப் பொருள். அளவோடு பயன்படுத்தினால் எந்தத் தீங்கும் இல்லை.
இப்படி உடல்நலம் எனும் பெயரில் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான செய்திகள் தொடர்ந்து பரப்படுகின்றன. மீண்டும் மீண்டும் திணிப்பதன் மூலம் மக்களின் மூளையைக் கட்டுப்படுத்தும் வேலை நடந்து வருகிறது. அதற்கு எளிமையான இன்னொரு எடுத்துக்காட்டு தான் உப்பு. சமையலில் சாதாரண உப்பின் பயன்பாடு முழுவதுமாக ஒழிந்து விட்டது என்றே சொல்லலாம். 
அந்த அளவுக்கு அயோடின் உப்பின் ஆதிக்கம் இருக்கிறது. அயோடின் உப்பை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆய்வுகள் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் அயோடின் உப்பை பயன்படுத்துவதே உடலுக்கு நல்லது என எண்ணி பயன்படுத்துகிறார்கள்.
 இது எப்படி நடந்தது? 
இந்தியாவில் 7 சதவீத குழந்தைகள் அயோடின் குறைபாட்டுடன் இருக்கின்றன என்றொரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதைக் கொண்டே இந்தியாவின் மொத்த மக்களும் அயோடின் உப்பை பயன்படுத்துவதே நல்லது என்று பிரச்சாரம் செய்தார்கள். 

இன்று டாடா உட்பட பல நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளில் அயோடின் உப்பு வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
எல்லாம் இருக்கட்டும், பிளாஸ்டிக் அர்சியிலும், மைதாவிலும் அஜினாமோட்டோவிலும் என்ன ஏகாதிபத்திய ஆதாயம் இருக்கிறது என எண்ணுகிறீர்களா? 
பொதுவாக தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் பெயரில் எல்லா நாடுகளிலும் மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா. இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதிலிருந்து, விவசாய மானியங்களை ஒழிப்பது வரை எல்லா நாடுகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் தன்னுடைய நாட்டில் விவசாய மானியங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருக்கிறது. 
இந்த விசயத்தில் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலாக இருப்பது சீனாவின் உற்பத்திப் பொருட்களே. உலகில் சீனப் பொருட்கள் இல்லாத இடங்களே இல்லை எனும் அளவுக்கு அது தன் எல்லையை விரித்துக் கொண்டிருக்கிறது. 
இதை தடுப்பதற்காக சீனம் சார்ந்த பொருட்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 
செயற்கை அரிசி, அஜினாமோட்டோ போன்றவை சீன உற்பத்திப் பொருட்களே.
இன்னொரு முக்கியமான அம்சமும் இதில் இருக்கிறது. 

பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூகத் தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அது தற்போது திடீரென வேகம் பெற்றதற்கான காரணத்தை நாம் பதஞ்சலியோடு இணைத்துப் பார்க்க வேண்டும். மோடி பிரதமராக உருவாக்கப்பட்டதில் அதானிக்கு இருக்கும் தொடர்பைப் போலவே பதஞ்சலி நிறுவனத்துக்கும் தொடர்பு உண்டு.
 மோடி பிரதமரானதற்கு பிறகு தான் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் வெகுவாக கவனம் பெற வைக்கப்பட்டன. 
அந்த அடிப்படையில் பதஞ்சலி அரிசி விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. 
பதஞ்சலி அரிசி என்ற பெயரில் விற்கப்படும் அரிசிக்கான சந்தையை உறுதிப்படுத்தவே, பிளாஸ்டிக் அரிசி என்ற பெயரில் அரிசி குறித்த பீதி திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது.
எனவே, நாம் நாமாக நீடிக்க வேண்டுமென்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி நம்முடைய மூளையை பிறர் கைப்பற்றி விடாமல் தடுப்பது மட்டுமே. நம்மைச் சுற்றி நிகழும் எதுவானாலும், முதலில் அதில் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். 
அரசியல் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. எல்லாவற்றிலும் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள அவை குறித்து பருண்மையாகவும் நுணுக்கமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். 
சுருக்கமாகச் சொன்னால் சமூகத்தில் நடப்பவைகளை நாம் சரியாக உள்வாங்காமல் போனால் நம்முடைய மூளையை பிறர் கைப்பற்றுவதை நம்மால் தடுக்க முடியாமல் போகும்.
                                                                                                                           நன்றி:செங்கொடி.தளம்.
=========================================================================================================

சனி, 24 ஜூன், 2017

யோகத்தில் ‘தெய்வத் தன்மை’

உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை.

மூச்சடிக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீர திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு “தெய்வீகத்தன்மை” யாதொன்றுமில்லை யென்பதே நமது அபிப்பிராய மாகும். 
யோகா உடலை இளமையாகவும்,சுறு,சுறுப்பாக வைத்திருக்க உதவும் சிறப்பான  உடற்பயிற்சி மட்டுமே.அதில் தெய்வீகம் என்பது ஏதும் கிடையாது.மூச்சுப்பயிற்சி மூலம் மனதை அமைதி படுத்தலாம்.
ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை முதலியவை களைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ “தெய்வீகத்தன்மை” இருப்ப தாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். 
ஜன சமூகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.
இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித் தால் விளங்கும். “ஹட யோகம்” என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி யென்பவர் சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம். 
இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய் விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமையைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.
ஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார். 
இதற்குக் காரணம் விஷம் உண்டவுடன் ‘ஹட யோகம்’ பண்ணுவதற்குக் கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்றது. 
ஆனால், அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளுவதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.
யோகத்தில் ‘தெய்வத் தன்மை’ உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. 
சாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களையெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதையென்றும், தெய்வசக்தியென்றும் சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமூகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வேண்டு கிறோம். 
ஆகையால் இனியேனும் இது போன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 03.04.1932
இப்போது மோடி அரசு செய்வது யோக பயிற்சி அல்ல.விளம்பர யுக்தி.மேலே உள்ள படத்தைப்பார்த்தாலே பாஜக யோக பக்தி புரியும்.

புதன், 21 ஜூன், 2017

திமுக ;தலித் விரோதியா ?

 இப்போது திமுகவில் விடுதலை சிறுத்தைகளை சேர்ப்பது குறித்து முகநூல் வாதம் நடக்கிறது.

அதில் வி.சி.ஆதரவாளர் ஒருவர் திமுக தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தது என்று கேடகப்போக திமுகவினர் பொங்கி பல தகவல்களை இடுகையிட்டது விட்டனர்.
அதில் ஒன்று.

"திமுக தலித்துகளுக்கு என்ன செய்தது என்று முன்பு பார்ப்பனர்கள் வாயால் ஏரோப்ளேன் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பார்ப்பனர்கள் சொன்னால் பரமனே சொன்னமாதிரி என்று நம்பும் தலித்துகளுக்கு இப்போது ஹெலிகாஃப்டர் ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். 
இந்தியாவிலேயே திமுக அரசு அளவுக்கு தலித்துகளுக்கு நலத்திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தியவர்கள் வேறெங்கும் இல்லை.
சில உதாரணங்கள் :

- நாட்டிலேயே ஆதிதிராவிடருக்கு என்று தனியாக நலத்துறை அமைத்து அதற்கு பிரத்யேகமாக அமைச்சரை நியமித்தது திமுகவே.
- கலப்பு மணத்தை சட்டரீதியாக அங்கீகரித்ததோடு மட்டுமின்றி, கலப்புமணம் செய்துக் கொள்வோர்களுக்கு பரிசுகள், தொழிற்கடன் போன்றவற்றை வழங்கும் திட்டங்களை தொடங்கியதே திமுக அரசுதான்.
- ஆதிதிராவிடருக்கு என்று தனியே வீட்டு வசதிக்கழகம் உருவாக்கியது திமுக ஆட்சி. இந்த திட்டத்தால் கவரப்பட்ட மத்திய அரசு, அதை நாடெங்கும் விரிவுப்படுத்தி ‘இந்திரா வீட்டுவசதித் திட்டம்’ என்று கொண்டுச் சென்றது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலங்களில் மட்டுமே ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட கான்க்ரீட் இல்லங்கள் இந்த திட்டத்தின் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 16% ஆக இருந்த இடஒதுக்கீடை 18% ஆக உயர்த்தியது திமுக அரசே. 1989ல் ஆட்சிக்கு வந்தவுடன் பொதுப்பிரிவில் இருந்து 1%ஐ எடுத்து பழங்குடியினருக்கு தனிஒதுக்கீடு கொடுத்து, ஆதிதிராவிடருக்கே ஒட்டுமொத்த 18% இடஒதுக்கீடும் கிடைக்க வழிசெய்தது. பிற்பாடு அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்ததும் திமுக அரசே.
- மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களின் முதல் தலைமுறைக்கு மட்டும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடஒதுக்கீடு என்றிருந்த நிலைமையை மாற்றி, எல்லா தலைமுறையினருக்கும் இடஒதுக்கீடு என்கிற ஆணையை பிறப்பித்தது திமுக அரசாங்கம்.
- அரசுப் பதவிகளில் ஆதிதிராவிடர்/பழங்குடியினருக்கான பதவிகள் நிரப்பப்படாத நிலை இருந்தால், அந்த காலியிடங்களையே இடஒதுக்கீட்டில் இருந்து எடுத்துவிடும் நிலை இருந்தது. ஓர் அரசாணையின் மூலம் அந்த போக்கினை மாற்றி ஏராளமான SC/ST இளைஞர்கள் அரசுப்பணிகளில் சேர காரணமாக இருந்தது திமுக அரசே.
- திமுகவின் கனவுத்திட்டமான பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் ஆதிதிராவிடர்களுக்கு 40% வீடுகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டன.
- 96ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் சுமார் 3 லட்சம் ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது.
- ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தனிப்பள்ளிகள், கணினிக் கல்வி கற்க ஆய்வகங்கள், மாணவ/மாணவியர் விடுதிகள், உணவுச்சலுகை என்று கல்விரீதியாக தலித் மக்களை முன்னேறச் செய்த திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியின் சிந்தனைகளே.
- சென்னை வியாசர்பாடியில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் கலைக்கல்லூரி, அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி சென்னை சட்டக்கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர், அம்பேத்கரின் பெயரில் இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக்கழகம், கக்கனுக்கு மதுரையில் சிலை நினைவு மண்டபம், வீரன் சுந்தரலிங்கம் பெயரில் பாஞ்சாலங்குறிச்சி அருகே நகரம் என்று தலித் தலைவர்களின் நினைவைப் போற்றும் ஏராளமான செயல்பாடுகளை திமுக ஆட்சி அமைத்தபோதெல்லாம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
திமுகவின் சாதனைத் துளிகளில் இவை குறைவே. கடலளவு திட்டங்களும், செயல்பாடுகளும் இன்னும் உண்டு. அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்ல தனிநூல் தான் எழுத வேண்டும்.
தலித்துகளின் காவலன் திமுகவே. அந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கல்வி கற்க வேண்டும், நல்ல பணிகளில் சேரவேண்டும் என்கிற அக்கறை கொண்ட ஒரே இயக்கம் தமிழகத்தில் திமுக மட்டும்தான். மற்ற கட்சிகளை போல அவர்களை வெறும் ஓட்டு வங்கியாகவும், கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்தும் இயக்கம் திமுகவல்ல.
என்று நிறுவ முற்படுபவர்கள், இவ்வளவு திட்டங்களை தலித்துகளுக்காக முன்னெடுத்த அரசு ஏதேனும் இந்தியாவில் உண்டா என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும்.

ஞாயிறு, 18 ஜூன், 2017

காலங்கனியவில்லை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ஏப்ரல் 18ம் தேதி அனுப்பிய கடிதத்தில் 

 'ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு  பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை நிரூபிக்கும் ஆவணங்கள் சிக்கியுள்ளதை ஏப்ரல் 9ம் தேதி வருமான வரித்துறையினர்  தெரிவித்தனர். பணம் கொடுத்தது நிரூபிக்கவும் பட்டது.
வாக்ககிளர்களுக்கு பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவது இபிகோ 171பி  பிரிவின் கீழ்  குற்றமாகும். 
இந்த விவகாரத்தில் கிடைத்துள்ள தகவல்களை பரிசீலித்த தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே வழக்குப்பதிய ஆர்.கே .நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உத்தரவிடுகிறது. 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது 

உடனே வழக்குப்பதிந்து காவல்துறை  எடுத்த நடவடிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு  தமிழ் நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி, விரைவில்தகவல் தெரிவிக்க வேண்டும். "
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

அக்கடிதம் ஏப்ரல் 18ம் தேதியே தொலைநகல் ,மின்னஞ்சல்  மூலம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு கிடைத்துள்ளது.
ஆனால் அவர் அக்கடிதப்படி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பதிலும் அனுப்பவில்லை.
ஆர்கே நகர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பியதுடன் தனது பணியை முடித்துக்கொண்டார்.
என்னவாயிற்று என்று கேட்கவில்லை.

ஆர்கே நகர தேர்தல் அலுவலரோ மாநில அரசின் எடுபிடி அதிகாரி அவர் எப்படி முதல்வர்,அமைச்சர்கள் மீது  வழக்கு பதிவார்.?

இதை ராஜேஷ் லக்கானி அல்லவா நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாகவே தனது தேர்தல் ஆணையப் பணிக்காலத்தை அர்ப்பணித்த அவரும் கண்டு கொள்ளவில்லை.
அது கூட ஜெயலலிதாவால் அப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இரு மாதங்களாக தனது ஆணைக்கு எந்த வித நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட்டது என்று இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை கேட்காதது ஏன்?

நடவடிக்கையை விரைவாக்க என்ன அறிவுரைகளை ராஜேஷ் லக்கானிக்கு வழங்கியது.?

இந்த வழக்கு பதிவு ஆணையே தகவல் உரிமை சட்டத்தின் கீழ், சென்னையை சேர்ந்த வழக்குரைஞர், வைரக்கண்ணன் இந்திய தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்காமல் இருந்தால் வெளியே தெரிந்திருக்காது.

அதிமுக முதல்வர் எட்டப்பாடியும்,அமைச்சர்களும்,ராஜேஷ் லக்கானியும் தங்கள் பதவிக்காலத்தை நினைவூட்டு அனுப்பியே அனுபவித்து கவிழ்ந்திருப்பார்கள்.
அப்படி இந்த ஆட்சி கவிழ்ந்த பின்னர் வழக்கு பதிவை பார்த்துக்கலாம் என்று நாஞ்சில் சம்பத் வழியில் காத்திருந்திருப்பார்களோ?

இப்படி இந்திய தேர்தல் ஆணையம் ஆமை அல்லது மங்குணித்தனமாக செயல்பட்டால் அதன் மீது தேர்தலில் போட்டியிடும் பணமுதலைகளுக்கு ,பணப்பட்டுவாடா நபர்களுக்கு எங்கிருந்து பயம் வரும்.
தடாலடி நடவடிக்கையை கையில் ஆதாரத்தை வைத்துக்கொண்டும் எடுக்காமல் இருந்தது தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனம் என்பதா?

இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது என்ற குற்றசாட்டு உண்மைதான் என்பதாகுமா?

மத்திய ஆளுங்கட்சி கண்ணசைவுக்கேற்ப இந்த தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் நடந்து கொள்வது உண்மைதான் என்று எடுத்துக்கொள்வதா?

மொத்தத்தில் தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் வாக்களிக்கும் மக்களிடம் இந்திய தேர்தல் ஆணையம் மீது நல்லெண்ணத்தை உண்டாக்குவதாக இல்லை.

வாக்குகளிக்க பணம் பெற்றால் கைது என்று பூச்சாண்டி காட்டிய தேர்தல் ஆணையம் பணம்கொடுத்தவர்களை கடைசி வரை கொடுக்கவிட்டு வேடிக்கை பார்த்து விட்டு தேர்தலுக்கு முதல் நாள் தாளமுடியாத ஆதாரங்களால் தேர்தலை நிறுத்துவது அதன் பெருமைக்கு அழகல்ல.சேஷன் போன்றவர்கள் சிங்கமாக ஒளிர்ந்த தேர்தல் ஆணையம் அசிங்கமாக போய் கொண்டிருக்கிறது.

துணை ராணுவம் வரை கொண்டுவந்து தேர்தல் நடத்தும் வசதி உள்ள தேர்தல் ஆணையம்,தீவிரவாதிகள்,நக்சல்கள் பகுதியிலும் தேர்தலை நட்ச்த்திக்காட்டும் தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் போன்ற சின்ன தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்கமுடியவில்லை என்று புலம்புவது ,அங்கு தேர்தல் நடத்த இன்னும் காலங்கனியவில்லை என்று அறிக்கை விடுவதும்.இந்திய மக்களாட்ச்சி தத்துவத்தை பெரிதாக இன்னமும் எண்ணிக்கொண்டிருக்கும் பாமரனால் நம்ப முடியவில்லை.

யானை தனது பலம் அறியாமல் சின்ன மனிதனுக்கு அடங்கி நடப்பது போல் இந்திய தேர்தல் ஆணையம் இருக்கிறது என்பது கவலைதருகிறது.

அதிமுகவினரால் உயிருக்கு குறிவைக்கப்பட்டபோதும் நடுநிலையுடன் செயல்பட்ட சேஷன் போன்ற சிங்கங்கள்  தேர்தல் ஆணையத்துக்கு இனி வருவார்களா என்பதே இன்றைய மக்களின் பெரு மூச்சு விடும் எதிர்பார்ப்பு.

வாய் திறக்காத ஒரு கோடி

தற்போது விவசாயிகள் சங்க அய்யாக்கண்ணுவை அரசியல்வாதியாக அரிதாரம் பூசப்போகும் நடிகர் ரஜினிகாந்த் காவிரி நீர் விவகாரம் பற்றி பேச திடீரென அழைத்தாராம்.


அடித்து பிடித்து துண்டோடு போய் ரஜினிக்கு போர்த்தியதும்.

"காவிரி மற்றும் நதிநீர் இணைப்புக்கான ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்னேன் அல்லவா.."

 அய்யாக்கண்ணுக்கு உதறல் .

"அந்த ஒரு கோடி ரூபாயை தந்தால் தனது கணக்கில் போடலாமா,விவசாயிகள் சங்க கணக்கில் போடலாமா என்று ..என்ன இருந்தாலும் பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான் "

"ஆமாம்"

"அந்த பணத்தை கேட்டு நீங்கள் கூட பேட்டி கொடுத்திர்களே?"

"ஆமாம்.அதை..."

"அதைப்பற்றியும்,அதை கொடுப்பது பற்றியும்தான் சொல்ல கூப்பிட்டேன்."

"ஆகா.ரொம்ப நல்லது.அதை எப்படி தருகிறீர்கள்.(செக்கா,2000 நோட்டுகளா?அதாவது கருப்பா,வெள்ளையா?)"

"அவசரம் வேண்டாம்.நிச்சயம் நதிகளை மோடி இணைக்கப்போகிறார்.அப்போது நான் கொடுக்கிறேன்"பணம் வங்கியில் இருக்கிறது.பத்திரமா"
 அய்யாக்கண்ணு மனதுக்குள்.

"கிழிஞ்சது போ.இதைத்தான் பத்து ஆண்டுகளா சொல்லிக்கொண்டுதானே இருக்கிறீர் .ஒரு பொன்னாடை காசு வீண்."

"சரி.அப்படியே மோடி யிடமே கொடுங்கள்.விவசாயிகள்,தொழிலாளர்களைத்தான் பார்க்க நேரம்  கிடையாது.நடிகை,நடிகர் என்றால் உடனே நேரம் தருவார்.நாம் போவோம்.கொடுப்போம்."

"அவசரம் வேண்டாம் மோடி இந்தியாவில் இருக்கும் போது ,நதிகளை இணைக்கும் போது முதல் ஆளா போய் கொடுப்போம்.
  
விளங்கும்.இரண்டுமே நடக்கப்போவது இல்லை.அதை சொல்லி நீரும் கோடி ரூபாய் கொடுக்கப்போவது கிடையாது.

தேவையே இல்லமால் சால்வை,கார் பெட்ரோல் செலவு.

அய்யாக்கண்ணு ,மற்ற விவசாயிகளும் நடிகர் ரஜினி காந்துக்கு டாட்டா போட்டுவிட்டு வெளியேறுகிறார்கள்.

இதுதான்  உண்மைக்கதை.

ஆனால் அய்யாக்கண்ணு தானே போய் சந்தித்து கோடி ரூபாயை கேட்டதாக மீசை மண்ணை தட்டி விட்டுக்கொள்கிறார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரஜினிக்கு பி.ஆர். பாண்டியன் கேள்வி
"மோடி தலைமையிலான மத்திய அரசு, நதிகளை தேசியமயமாக்க தயாராக இல்லை.ஆனால் நடிகர்  ரஜினிகாந்தும்,அய்யாக்கண்ணும் நாடகமாடுகிறார்கள் . "
என தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அது குறித்து பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
"காவிரி நீர் தமிழகம் வருவதை தடுத்து, அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு மறுக்கிறது; காவிரி நீர் கேட்டதால் தமிழன் சொத்துக்கள் சூரையாடப்பட்டது.  
தீ வைத்து கொளுத்தப்பட்ட போதும் வாய் திறக்காத ரஜினி 1 கோடி கொடுத்து நதிகளை இணைக்கப் போறாராம்.காவிரி பிரசினை தமிழம் கொழுந்து விட்டு எறிந்த போது அனைத்து தரப்பினரும் போராடிய போது நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் கன்னடர் என்ற முறையில் கலந்து கொள்ளாமல் தவிர்த்த ரஜினி மக்களிடம் எழுந்த தனக்கு எதிரான விமர்சனங்களுக்கா க தனியே உண்ணாவிரதம் என்ற நாடகம் நடத்தி ஒருகோடி ரூபாய் தருவதாக சொன்னார்.
அதன் பின்னர் இதை பற்றியே பேசாமல்  பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாயை திறக்காமல் இருக்கிறார் ரஜினி.தற்போது அரசியலில் குதிப்பதால் அப் பேட்சை மறு ஓலிப்பதிவு செய்கிறார்.அதையும்  விவசாயிகள் சங்கம் நம்புகிறதா?"என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அதே அறிக்கையில், "அய்யா அய்யாக்கண்ணு அவர்களே, காவிரியில் அணை கட்டாதே என்று ரஜினியை வாய் திறக்க சொல்லுங்கள்
நதிகள் இணைப்பதை அப்புறம் பார்க்கலாம் காவிரி நீரின்றி தமிழகம் இல்லை அதை விடுத்து விளம்பரத்திற்காக காவிரி போராட்டத்தை திசை திருப்ப வேண்டாம்" 
என்றும் பி.ஆர்.பாண்டியன் கோரியுள்ளார்'
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சமூக ஆர்வலர் மற்றும் வழக்குரைஞர்,திமுகழக செய்தி தொடர்பாளர். கே.எஸ். ராதாகிருஷ்ணன், அவர்கள், “மக்களுடைய அன்றாட வாழ்க்கையை திரைபடத்துறையே காப்பாற்றும்  ! “ என்ற தலைப்பில் எழுதியுள்ள முகநூல் பதிவை உங்களுக்காத்தருகிறோம்.
“ரஜினிகாந்த் ,சிம்பு  , லாரன்ஸ் , . பாலாஜி , நயன்தாரா , விஜய் , சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, கவுதமன்… இப்படி நடிகர்கள் இயக்குனர்கள் என திரை நட்சத்திரங்கள் பலர் போராட்டத்தில் அக்கறையோடு அரிதாரம் பூசிகொண்டார்கள் .
கோடம்பாக்கம் என்ற புண்ணியஸ்தலத்தில்  இருந்தாலே ஆசிர்வாதம் தருகின்றவர்கள் என்று நம்மில் பலர் நம்புகின்னறனர் .இவர்கள் ஏதோ தமிழ்நட்டு மக்களுக்கு தியாகங்களும் , பணிகளும் ஆற்றியவர்கள் போல சிலிர்த்து கொள்கின்றனர் .
கேவலமாக இருக்கின்றது…  நாடு எங்கே செல்கிறது?
ரஜினிகாந்த் சம்மந்தமாக ஒரு வேதனையான ஒரு விடயத்தை  சொல்ல வேண்டும்.
காவிரி விவகாரத்தில் தனியாக ரஜினி உண்ணாவிரதம் இருந்தார்.
ரஜினிகாந்த் நதிநீர் பிரச்னையில் அக்கறை கொண்டிருக்கிறார் என்றும், நதி நீர் இணைப்பில் உண்மையில் ஆர்வமாயிருக்கிறார் என்றும் நான் நம்பியிருந்தேன்.
கங்கை ,கிருஷ்ணா , காவிரி ,வைகை , தாமிரபரணி , நெய்யாறோடு தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 30 ஆண்டுகள் போராடி  அதற்கு சாதகமான தீர்ப்பை பெற்றிருந்த நேரம்.  அந்த உத்தரவு நகலை கடிதக் குறிப்புடன் ரஜினிக்கு அனுப்பி வைத்தேன் அத்துடன் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை…  நதி நீர் இணைப்பில் அக்கறை கொண்டவர் என்று நம்பி தகவலுக்காக  மட்டுமே அவருக்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால்…  அந்த தீர்ப்பு நகலை கூட  பிரித்து படித்து, “ தீர்ப்பு நகல்  கிடைத்து” என்று  ஒருவரிகூட  எழுதவில்லை ரஜினிகாந்த். இவர் எப்படி இதயம் சுத்தியோடு நதிநீர் பிரச்சினையை ஆதரிப்பார்?

இதே தீர்ப்பு நகலை தலைவர் கலைஞரிடமும்,ஏ.பி.ஜே அப்துல் கலாமிடம் 2012ல் வழங்கியபோது தலைவர் கலைஞர் அவர்கள் இது பெரிய விசயம்யா!என்று சொல்லி நதிநீர் இணைப்பு குறித்து அவருடைய அறிக்கையில் என்னை குறிப்பிட்டு இருந்தார் .அப்துல் கலாமோ நீங்கள் நாட்டுக்கு நல்ல பணியைசெய்துள்ளீர்கள் என்று  தட்டிக்கொடுத்தார்.
இந்த பெருந்தன்மை ரஜினியிடம் இல்லையே….  அப்படியானால் நதி நீர் இணைப்பு என்பது  எல்லாம் வெற்றுப் பேச்சுத்தானா ?.
இத்தனைக்கும் ரஜினி என்னை அறியாதர் அல்ல.
1998ம் ஆண்டு.  அவர் நடித்த படையப்பா திரைப்பட ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டார்கள். படம்  வெளியாக இரண்டு மூன்று நாட்களே இருக்கின்றன.
படம், தணிக்ககைக்கு (சென்சார்) வருகிறது. அப்போது  திரைப்பட தணிக்கைத்துறை உறுப்பினர் .(censor bord member  )களில் நானும் ஒருவவன்..
கே.எஸ். ஆர்.
அந்த படம் தணிக்கைக்கு வருகிறது. சகக உறுப்பினர் ஜெயா அருணாசலம் அவர்கள், படையப்பா படத்தை பார்த்துவிட்டு, “நீலாம்பரி  பாத்திரமும் வசனமும் ஜெயலலிதாவை குறிப்பதாக இருக்கிறது . அந்த பகுதிகை நீக்க வேண்டும்” என்று கூறினார்.
அப்போது அரசியல் ரீதியாக கொந்தளிப்பு நிலவிய காலகட்டம் வேறு. ஆனால் ஜெயா அருணாசலம் அவர்களின் கருத்தை நான் கடுமையான குரலில் ஆட்சேபித்தேன். இதனால்,  சென்சார் அதிகாரியும்  அந்த காட்சிகள் நீக்க தேவையில்லை என்று கூறினார்.
அப்போது மிக பதட்டமாக இருந்த காலம்  . இதை குறித்து தணிக்கை குழுவின் ஆவனங்களை பார்த்தாலே தெரியும்.
நீலாம்பரி குறித்த காட்சிகளை நீக்க வேண்டும்” என்பது சென்சாரின் முடிவாக இருந்தால், படையப்பா படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.  என் உரத்த கருத்தால், அந்த பிரச்சினைகளில் இருந்து படையப்பா தப்பித்தது.
இந்த செய்தி தினமலர் சென்னைபதிப்பில்வெளியாகி இருந்தது .இதற்க்காக எனக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இப்படி என்னையும் ரஜினிக்கு தெரியும். தவிர, அவரே நதிநீர் பிரச்சினையில் ஆர்வமாய் இருப்பதாய்  சொல்லி வருகிறார்.
                               கே.எஸ்.ஆர். பதிவு அப்படியே:-


ஆனால் முப்பது வருடங்கள் போராடி, நதிநீர் இணைப்புக்காக நான் பெற்ற அரிய தீர்ப்பை அவர் பொருட்படுத்தவே இல்லை.
எல்லாமே வேஷம்.
ஹூம்… மக்களுடைய அன்றாட வாழ்க்கையை திரைபடத்துறையே காப்பாற்றும்  !  வாழ்க ஜனநாயகம் !!
தீதும்நன்றும்பிறர்தரவாரா!”
–    இவ்வாறு சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான  கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...