சனி, 22 ஆகஸ்ட், 2015

மது விலக்கு?

 அதிமுக ஆட்சி இருக்கும்வரை முடியாது!



இந்தியா முழுவதும் மத்திய அரசு மது விலக்கை அமல்படுத்தினால் தமிழகத்திலும் மதுக்கடைகளை மூடுவோம் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார். 
இது ஒரு காலும் நடக்காது என்பதை அறிந்தே இவ்வாறு கூறியுள்ளார்.
ஆட்சிப் பீடத்தில் அதிமுக இருக்கும்வரை மது விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இதைவிட உறுதியாகவும் தெளிவாகவும் யாரும் சொல்லமுடியாது.  கலால் துறையை கையில் வைத்திருக்கும் விசுவநாதன்  முதல்வரின் வலது கரம் போன்றவர். வசூல் மன்னர்.    ஓ.பன்னீர்செல்வத்தை விட செல்வாக்கு மிக்கவர்.  
 ஜெயலலிதாவின் மனம் தெரியாமல் எதையும் பேசமாட்டார்.
மொத்த மாநிலமே மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும்போது இவ்வளவு வெளிப்படையாக ஒரு அமைச்சர் பேசுகிறார் என்றால், அதற்கு நிறைய துணிச்சல் வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மேலிடத்தின் ஆதரவும் உண்டு என்பதே.
ஒரு புறம் போராட்டம் நடந்துகொண்டிருந்தாலும், மறுபுறம் மது விற்பனை சக்கை போடு போடுகிறது. மது ஆலைகளின் உரிமை யாளர்கள் கல்லாவில் கனமாக காசு பார்க்கிறார்கள்.   வசூல் குவிகிறது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்வதில் முன்னணியில் உள்ள கம்பெனிகள் மிடாஸ், கோல்டன் வாட்ஸ், எம்பீ குழுமம், எஸ்என்ஜே டிஸ்டிலரீஸ், எலைட் டிஸ்டிலரீஸ் ஆகியவை.
இதில் எலைட் டிஸ்டிலரீஸ் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது.   கோல்டன் வாட்ஸ் டி.ஆர்.பாலுவின் உறவினர்களால் நடத்தப்படுகிறது. எம்பீ குழுமம் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் உறவினர்களால் நடத்தப்படுகிறது. எஸ்என்ஜே டிஸ்டிலரீஸை நடத்துவது கருணாநிதி கதை வசனத்தில் பெண் சிங்கம் திரைப்படத்தை தயாரித்த ஜெயமுருகன்.
சில்லரை மது விற்பனையை கையகப்படுத்த அதிமுக அரசு எடுத்தமுடிவே மிடாஸ் நிறுவனத்தை வளம் கொழிக்கச் செய்வதற்குதான் என்கிறார் ஒரு தொழிலதிபர்.  2002 அக்டோபரில் மிடாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.  அடுத்த ஒரு வருடத்தில் மது விற்பனையை அரசுடமை ஆக்கினார் ஜெயலலிதா.
மிடாஸ் நிறுவனத்தில் 48 சதவீத பங்குகளை வைத்திருப்பது ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் கம்பெனி.   இந்த கம்பெனியில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் சசிகலாவும் இளவரசியும்.    இந்த ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம்தான் ஜாஸ் சினிமாஸ் என்று பெயர் மாற்றம் அடைந்தது என்பதை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள்.
மிடாஸ் கம்பெனியில் 38 சதவீத பங்குகளை வைத்திருப்பது ஸ்ரீ ஜெயா ஃபினான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனம்.  அந்த ஜெயா ஃபினான்ஸ் நிறுவனத்தில் ஜெயலலிதா 1.90 கோடி கடன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஜெயலலிதா மட்டுமல்ல.  சொத்துக்குவிப்பு வழக்கில் பினாமி நிறுவனங்கள் என்று சொல்லப்பட்ட லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடன் பெற்றுள்ளன.    இந்த ஃபினான்ஸ் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பது, இளவரசி என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி மொத்தமாக சசிகலாவும் அவரது உறவினர்களும் நடத்துவது தான் மிடாஸ் நிறுவனம்.
Accounts - Sri Jaya Finance - 2011-12_Page_8
ஜெயா ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆண்டறிக்கை
2006ம் ஆண்டில் திமுக அரசு எங்களுக்கு சரிவர ஆர்டர்கள் வழங்கவில்லை என்று மிடாஸ் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடுத்தது.  மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அந்த வழக்கில் மிடாஸ் சார்பில் ஆஜரானவர் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆட்சியில் மிடாஸ் கம்பெனிக்கு கணிசமான ஆர்டர்கள் கொடுப்பதற்காக ஏனைய பிரபலமான கம்பெனிகள் ஓரங்கட்டப்பட்டன.  திமுக காலத்தில் 17 சதவீத மது பானங்களை டாஸ்மாக்குக்கு சப்ளை செய்த விஜய் மல்லய்யாவின் யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனம் அப்படி ஓரங்கட்டப்பட்ட பிரபல நிறுவனங்களில் ஒன்று. அதை தனது  ஆண்டறிக்கையில் வெளிப்படையாக விமர்சனம் செய்தது யுனைடெட் ப்ரூவரீஸ். “தேசிய அளவில் பிரபலமான நிறுவனங்களை ஓரங்கட்டி விட்டு, உள்ளுரிலேயே இருக்கும் நிறுவனங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டது.
எனினும், 2011 டிசம்பரில் சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்துக்கு மீண்டும் யோகம் அடித்தது. இந்த காலகட்டத்தில் மிடாஸ் நிறுவனத்தில் சசிகலா நியமித்த நபர்கள் வெளியேற்றப்பட்டு, துக்ளக் சோ ராமசாமி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.  சசிகலாவின் உறவினர் பிரபாவதியின் கணவரான டாக்டர் கே.எஸ்.சிவக்குமார்தான் இப்போதும் மிடாஸ் இயக்குநராக உள்ளார்.
Reference-4_Midas-Golden_Annual-Return-2013_Page_3
 இந்திய அளவில் பிரபலமாக உள்ள பிராண்டுகள் எதுவும்  டாஸ்மாக் கடைகளில் அறவே கிடைப்பதில்லை. மிடாஸ் போன்ற வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக பிரபல பிராண்டுகள் முடக்கப்பட்டன. இதனால் 2011ல் 360 கோடி ரூபாயாக இருந்த மிடாஸ் வருமானம் 2013ல் 1077 கோடிகளாக எகிறியது.
மதுவால் சாக்கடையில் வீழ்ந்து கிடப்பது தமிழக எதிர்காலமும்தான்.
மிடாஸ் நிறுவனத்துக்கு எல்லையற்ற தாராளம் காட்டப்படுவதாக கோல்டன் வாட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி தனபாலன் “சரக்கு கொள்முதல் செய்வதற்கு எந்தவிதமான அடிப்படை நியதிகளையும் டாஸ்மாக் பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது. கோல்டன் வாட்ஸ் நிறுவனத்திடமிருந்து 28,300 பெட்டிகள் வாங்கிய அதே ஆறு மாதத்தில் மற்ற நிறுவனங்களிடம் 10 லட்சம் பெட்டிகள் வாங்கியுள்ளது. இது சரியல்ல. அனைத்து நிறுவனங்களுக்கும் உரிய வாய்ப்பை  டாஸ்மாக் அளிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பினாமி நிறுவனங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்ட பல நிறுவனங்களில் இன்று இயக்குநர்களாக உள்ள கார்த்திகேயன், கலியபெருமாள் மற்றும் கே.எஸ்.சிவக்குமார் ஆகியோர்தான் மிடாஸ் நிர்வாகத்தை இன்று கவனித்துவருகின்றனர்.   இந்த நிறுவனத்தின் வருமானம் நின்று விடப்போகிறது என்ற ஒரே காரணத்தாலேயே, மதுவிலக்கு கோரிக்கைக்கு பாராமுகம் காட்டி வருகிறது அதிமுக அரசு.
இதனால்தான் ஜெயலலிதா சொல்கிறார், மதுவாவது விலக்காவது…
                                                                                                                                       -சவுக்கு சங்கர்.

========================================================================

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

நாலாபுறமும் வளர்ச்சி ?

தமிழ்நாடு மின்சார வாரியம் அல்லது

அம்மா “கமிசன்” மண்டி!

ம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இருவர் அக்காமாலா, கப்சி குளிர்பானம் தயாரிப்புப் பற்றிய தங்களது திட்டத்தை அரசரிடம் விளக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை இடைமறித்து, “அது கிடக்கட்டும்; அதில் எனக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்?” என்று கேட்பான் அரசன். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தில், ஜெயாவைப் பொருத்திப் பாருங்கள்; சற்றேறக்குறைய அதே காட்சிதான் தமிழகத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற உண்மை விளங்கும்.
பொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்பது ஏற்கெனவே அம்பலமான ஒன்று. வசூலித்தக் கப்பம், முழுமையாக போயஸ் கார்டனுக்குப் போய்ச்சேரவில்லை என்பதற்காகத்தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்பது சமீபத்திய சான்று.
அதானி ஒப்பந்தம்
சூரியஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொள்ளு்ம தமிழக முதல்வர் ஜெ. மற்றும் அதானி குழுமத்தின் அதிகாரிகள்.
பொதுவில், தமக்குச் சேரவேண்டிய கமிசனைக் கொடுத்தால் நாட்டையே எழுதிக் கொடுக்கத் துணியும் நாலாந்தரமான கொள்ளைக்கும்பலின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது, தனியார் மின்சாரக் கொள்முதலில் நடைபெறும் கொள்ளையும் ஊழலும்.
“மின்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள்; மின்சார மீட்டர்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் – என தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர் த.செல்வராஜ்.
இந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சந்தை விலையைக் காட்டிலும் கொள்ளை விலை கொடுத்து அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது, தமிழக அரசு. இதே அதானி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ 5.50 காசுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் அதானியின் சூரிய ஒளி மின்சாரத்தை  யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 விலையில் வாங்கப் போகிறது தமிழக அரசு.
அதானியிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பதில் விதிமீறலும், முறைகேடுகளும் நடந்திருப்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அடுக்கி கருணாநிதி தொடங்கி ராமதாசு, இளங்கோவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சூரிய மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்வதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, தனிப்பட்ட முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக சூரிய மின்சார உற்பத்தி மாற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி. என்றாலும், இவை எவற்றையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை அம்மாவின் அரசு.
கமிசனுக்காகவே ஆட்சியை நடத்திவரும் அம்மாவின் அரசு இதற்கெல்லாம் பதில் சொல்லுமா, என்ன? “மின்பற்றாக்குறையைச் சமாளித்து தடையற்ற மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமானால், அதிக விலை கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டது.
அம்மாவைப் பொறுத்தவரையில் மின்துறை என்பது பொன்முட்டையிடும் வாத்து. பொதுப்பணித்துறையில் 100 டெண்டர்கள் ஒதுக்கி 10 கோடி ரூபாய் கமிசன் பார்ப்பதற்குள், மின்துறையில் ஒரே கையெழுத்தில் 100 கோடிகளில் கமிசனாகத் தேற்றிவிடலாம் என்பதுதான் யதார்த்தம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை யூனிட்  ஒன்றுக்கு ரூ 3.00-க்கும் குறைவு தான். நீர்மின்நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான அடக்கச் செலவு வெறும் 50 பைசா. ஆனால், அரசுத்திட்டங்களைத் தொடங்குவதால் அம்மாவுக்கு கமிசன் கிடைக்கப்போவதில்லையே. தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்வதற்கேற்ப அரசுத் திட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டன.
தமிழகத்தில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. யூனிட் ஒன்றுக்கு ரூ 3.10 பைசாவிற்கு கிடைக்கும் இந்தக் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாக கொள்முதல் செய்யாமல், பெரும்பகுதியை முடக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. “தம்மிடமிருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டுமானால் கமிசன் தரவேண்டுமென்று” மின்வாரிய அதிகாரிகள் வெளிப்படையாகவே பேரம் பேசுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்.
திட்டப்படி, 2008-ல் வேலையைத் தொடங்கி 2011-ல் முடிவடைந்திருக்க வேண்டிய, வடசென்னை அனல்மின் நிலையம் (தலா 500 மெகாவாட் வீதம் – இரண்டு யூனிட்கள்) மற்றும் மேட்டூர் அனல்மின்நிலையம் (500 மெகாவாட் – மூன்றாவது யூனிட்) ஆகிய திட்டங்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் தாமதத்திற்குப்பிறகு 2014-ல்தான் உற்பத்தியைத் தொடங்கின.
எண்ணூர் அனல்மின் நிலைய (660 வாட்) விரிவாக்கத்திட்டம்; வட சென்னை காட்டுப்பள்ளி சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் (1600 மெகாவாட்); உப்பூர் அனல் மின் நிலையம் (1600 மெகாவாட்) ஆகிய திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு, மாநில அரசு நிதி ஒதுக்கி, திட்டங்களை தொடங்கிட வேண்டிய நிலையில்தான் 2011-ல் இருந்தது. இத்திட்டங்கள் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, முடக்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் தாமதம், அதை திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், திறந்த ஒப்பந்தப்புள்ளிகளின் மீது முடிவெடுப்பதில் தாமதம் என்று எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. பேரத்திற்கான தாமதங்கள்தான் இவையென்பது சொல்லாமலே விளங்கும்.
2012-லேயே உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டிய உடன்குடி அனல்மின்நிலையத் திட்டம் இன்றுவரையில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் விவகாரம் ஒன்றே, மின்துறையில் நிலவும் பகற்கொள்ளையை அம்பலமாக்குவதற்குப் போதுமான சான்றாகும்.
நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக, முந்தைய தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட உடன்குடி மின்திட்டத்துக்காக பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. பொதுத்துறை நிறுவனம் என்பதால் தாங்கள் கோரும் சதவீதத்தில் கமிசனைப் பெற முடியாது என்பதாலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ஜெயா. பின்னர் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் புது டெண்டர் விடப்பட்டது. மத்திய அரசின் பெல் நிறுவனமும், ‘பவர் மேக்’ என்ற வெளிநாட்டு நிறுவனமும் இணைந்து டெண்டர் தாக்கல் செய்தன. சீன அரசு நிறுவனமும், எஃப்.கே.எஸ். என்ற இந்திய நிறுவனமும் இணைந்து இன்னொரு டெண்டர் தாக்கல் செய்தன. அதன்பிறகும், ஜெ. அரசு எதிர்பார்த்த பேரம் படியாததால், இவ்விரு நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்த ஒப்பந்தப் புள்ளிகளைத் திறப்பதையே இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தள்ளிப்போட்டு வந்தது. பின்னர், இந்த டெண்டரையும் ரத்து செய்வதாக அறிவித்தது ஜெ.அரசு.
நாகல்சாமி
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகளோடு முரண்படும் அவ்வாணையத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான நாகல்சாமி.
“டெண்டர்களைப் பற்றியே கவலைப்படாமல் வேறு விசயங்களை எதிர்பார்த்துக் காத்திருந்ததன் விளைவும், அது பூர்த்தி செய்யப்படாததால் ஏற்பட்ட விரக்தியும் சேர்ந்து, 2015-ம் ஆண்டு மார்ச்-13-ந்தேதி அந்த டெண்டரையே ரத்து செய்ய வைத்தது.”  என்று ஆனந்த விகடனே (29-07-2015) அங்கலாய்க்கும் அளவிற்கு அம்மாவின் கமிசன் விவகாரம் நாறிக்கிடக்கிறது.
அரசுத் திட்டங்களை இவ்வாறு முடக்கிவிட்டு, மறுபுறம் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. தனியார் மின்கொள்முதல் தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்திருக்கும் வரம்புகள் மீறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த காலத்தையும் தாண்டியும் அந்நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதத்தை குறிப்பிட்ட சில தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிடுவதால்தான், மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் மின்கட்டணங்களை உயர்த்திய போதிலும், மின்வாரியத்தின் கடன் அதிகரித்துச் செல்வதோடு, மாநிலத்தின் மொத்தக் கடனில் சரிபாதி அளவாக உயர்ந்திருக்கிறது.
நாம் செலுத்தும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தில், குறிப்பிட்ட தொகையை போயஸ் கார்டனுக்கும் சேர்த்தேதான்  செலுத்திவருகிறோம் என்பதில் உண்மையில்லையா, என்ன?
                                                                                                                                             – இளங்கதிர்______________________________
நன்றி:புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
_______________________________

நாலாபுறமும் வளர்ச்சி இதுதானோ?

2-வது இடம்

விபச்சாரத்திற்கு ஆட்கடத்தலில் தமிழகம்


நாட்டிலேயே விபச்சாரத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில்உள்ளதாக தேசிய குற்றப்பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது. 
கடந்த ஆண்டு 2014ல் மட்டும் தமிழகத்தின் 509கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் குற்றங்களில் விபச்சாரத்திற்காக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் கடத்தப்பட்டு அவர்கள் விற்கப்படுவது மற்றும் விபச்சார சந்தைக்கு அனுப்புவது ஆகிய குற்றங்கள் அடங்கும்.கடந்த ஆண்டு இது போன்ற குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 590 ஆகும்.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 392 வழக்குகளும்அக்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 591ம், ஆந்திராவில் 326 வழக்குகளும் பாதிக்கப்பட்டவர்கள் 410ம் தெலுங்கானாவில் 311வழக்குகளும் பாதிக்கப்பட்டவர்கள் 328 ம் கேரளத்தில்140 வழக்குகளும் பாதிக்கப்பட்டவர்கள் 155ம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற குற்றங்களில் வெளிவந்திருப்பது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே என்று சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை பேராசிரியர் எஸ்.ராமதாஸ் கூறுகிறார். இந்த வழக்குகளும் குற்றங்களும்தொடர்ந்து கண்காணிக்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவியோ, உளவியல் ஆலோசனையோ அல்லது ஆற்றுப்படுத்துதலோ மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களே மீண்டும் கடத்தப்படுவதும் நிகழ்கிறது என்றும் ராமதாஸ் கூறுகிறார்.இதைவிட அதிர்ச்சிக்குரிய விசயமாக, கடத்தப்பட்டவர்களில் 20 விழுக்காட்டினருக்கு எச்ஐவி தொற்றுநோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்பதுதான். ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட `கடத்தலும் எச்ஐவியும்‘ என்ற ஆய்வில் இதை குற்றவியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ஆர்.திலகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆய்வில் காவல்துறை நீதித்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர் கடத்தப்படுவதை தடுப்பது தொடர்பாக பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதை பரிந்துரையாக முன்வைத்தது. ஆனால் இந்த பரிந்துரை அரசினால் இதுவரைஏற்றுக்கொள்ளப்படவில்லை .
நாலாப்புறமும் வளர்ச்சியில் இது சேருமா?
=======================================================================

அதிமுக ஏ[கா]வல் துறை?
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவான செயல்பாடுகளால்,தமிழ் நாடு காவல்துறையின் அதிமுக,அம்மா பாசத்தை வெளிப்படுத்தி வருபவர்  தேனி போலீஸ்காரர் வேல்முருகன்,
இவர்  தமிழக காங்., தலைவர் இளங்கோவனை கைது செய்யக் கோரி, நேற்று, தேனி கலெக்டர் அலுவலகம் முன், உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் இவர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுப்பது பற்றி கூற  எஸ்.பி., மகேஷ் மறுத்துவிட்டார்.

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் வேல்முருகன், 42. இவர், நேற்று பகல், 12:00 மணிக்கு போலீஸ் சீருடையில், சிலருடன் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தார்.நுழைவுவாயில் முன் அமர்ந்த வேல்முருகன், ''முதல்வர் ஜெயலலிதாவை அவதுாறாக பேசிய, இளங்கோவனை கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கிறேன். நாளை, என்னைப் போல், இன்னும் பல போலீசார் உண்ணாவிரதம் இருப்பர்,'' என்றார்.
அடுத்த சில நிமிடங்களில், தேனி இன்ஸ்பெக்டர் சுகுமார், அவரை வேனில் அழைத்துச் சென்றார். 
சில மாதங்களுக்கு முன், ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையானதும், நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறி, தேனி, நேரு சிலை அருகே, சீருடையில் வந்து மொட்டை அடித்தார்.அதற்கு முன், ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் இருந்த போது, சென்னை, போலீஸ் ஐ.ஜி., அலுவலகம் முன், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 
அரசியல்வாதி போல், போலீஸ்காரர் ஒருவர், சீருடையில் தொடர்ந்து நன்னடத்தை விதிகளை மீறி, உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.ஆனால் இதுவரை, அவர் மீது, துறை சார்ந்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஒரு வேளை காவல்துறையின் சார்பாகத்தான் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறாரோ?

இது குறித்து, நடவடிக்கை இதுவரை இவர் மீது ஏன் எடுக்கவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்கு தேனி எஸ்.பி., மகேஷ் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
கண்டிப்பாக இவர் போகிற வேகத்துக்கு தனது பதவி அவருக்கு போய் விடுமோ என்ற அச்சம் தற்பொதைய எஸ்.பி.க்கு வந்திருக்கலாம்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

நான்காண்டு சாதனைகள்....?

டு சாதனைகள் பட்டியல்?


தமிழ் நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களையும் சந்தித்து அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிப்பில் இறங்க அதிமுக செயலாளரும்,முன்னாள் மக்களின் முதல்வரும்,இந்நாள் தமிழ் நாடு முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
தெருக்கு இரு மதுக்கடைகள் திறந்ததை விட்டால் வேறு சாதனை கண்ணுக்கெட்டிய தூரம் வரை நமக்கு தெரியவில்லை.
இலவசங்கள் கொடுக்க மதுக்கடைகள் நடத்துவதை தவிர வேறு அழியில்லை என்று அமைச்சர் பேசியுள்ளார்.
சரி .
அம்மையாரின் இந்த அறைகூவலுக்கு இலண்டனில் இருந்து தோழர் தமிழ் செல்வன்  தினமலர்நாளிதழுக்கு  வாசகர் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதம் உங்கள் பார்வைக்கு அப்படியே :

tamilselvan 
- london,யுனைடெட் கிங்டம்
17-ஆக-201509:05:06 IST Report Abuse
tamilselvanதிமுகவின் 1996-2001ம் ஆண்டு சாதனைக்கு பதிலடியாக அம்மையாரின் இன்றைய சாதனையை பட்டியலிடலாம்..
.திமுகவின் இந்த சாதனையில் அதிமுக 1% மதிப்பெண் எடுத்தாலும் அது சாதனை தான்... திமுகவின் இந்த சாதனையில் மென்பொருள் நிறுவனங்களை தவிர்த்து நான் குறிப்பிட்டுள்ளேன்...
அம்மாவின் அடிமைகள் அம்மையார் கொண்டு வந்த மென்பொருள் நிறுவனங்கள் இருந்தால் அதையும் சேர்த்து அம்மையாரின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சி காலாமான 2001-06....2011-15ம் ஆண்டுகளில் அம்மையாரால் கொண்டு வரப்பட்ட தொழிற்ச்சாலைகளோடு சேர்த்து  பட்டியலிடலாம்...
 .1996-2001 ஆண்டுகளில் 118 தொழிற்சாலைகளின் மூலம் நேரடியாக 19 ஆயிரம் பேர் நேரடியாக வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்..
மறைமுகமாக 1 லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பை பெற்றனர்..
. 91-96 அம்மையாரின், ஐந்து ஆண்டுகளில், 22 தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்டு அவற்றின் மூலம் 4,230 பேர் மட்டுமே வேலை வாய்ப்பைப் பெற்றனர்..
..தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகள் வழங்க புதிய விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டது...
.ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இருங்காட்டுக் கோட்டையில் புதிய கார் தொழிற்சாலை ஒன்றை 2,450 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 1 இலட்சத்து 20,000 கார்களை உற்பத்தி செய்யும் திறனுடன் தொடங்கியது. வெளிநாடுகளுக்கு இக்கார்களை ஏற்றுமதி செய்வதின் மூலம் அன்னியச் செலாவணியும் கணிசமான அளவில் கிடைக்கிறது.
ஏறத்தாழ 2,500 தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பினையும், 25,000 தொழிலாளர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பினையும் இத்தொழிற்சாலை வழங்கியது....திருவள்ளூரில் மிட்சுபிசி லேன்சர் கார் தொழிற்சாலை ஆண்டுக்கு ஒரு லட்சம் கார் தயாரித்திடும் ஆற்றலுடன், ஏறத்தாழ 320 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. 14.4.1998 அன்று உற்பத்தியைத் தொடங்கியது.
800 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பையும், 6,400 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பையும் அளித்துள்ளது....ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலை மறைமலைநகரில் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டது. இந்நிறுவனம் ஆண்டுக்கு 1 லட்சம் கார்களைத் தயாரித்திடும் திறனுடன் 19.3.1999 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.
இதன் மூலம் 2000 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பும் 10,000 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது...டான்டெக் அக்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் 12.16 கோடி ரூபாய் முதலீட்டில் கடலூரில் தொடங்கப்பட்டது..
..ப்ளூமிங் மெடோஸ் லிமிடெட் - மலர் பதப்படுத்தும் தொழிற்சாலை. இது 100 விழுக்காடு ஏற்றுமதி அடிப்படையில் ஆனது.
ஓசூருக்கு அருகே 5.42 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு, 1997 ஜனவரியில் உற்பத்தியைத் தொடங்கியது....எஸ்.கே.எம். எக் புராடக்ட்ஸ் தொழிற்சாலை - 100 விழுக்காடு ஏற்றுமதி பொருள்களைத் தயாரித்திடும் இத்தொழிற்சாலை, 35 கோடி ரூபாய் முதலீட்டில் ஈ.ரோடு மாவட்டம், சோளங்கபாளையத்தில் 12.7.1997 அன்று தொடங்கப்பட்டது....பாரத் டெக்ஸ் ஃபேஷன்ஸ் லிமிடெட் தொழிற்சாலை 5.10 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபுண்ணியம் கிராமத்தில் 1997 அக்டோபரில் தொடங்கியது..
..தாப்பர் டூபான்ட் லிமிடெட் தொழிற்சாலை கும்மிடிப்பூண்டியில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டது...ஏசியன் லைட்டிங் ரிசோர்சஸ் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 27 கோடி ரூபாய் முதலீட்டில் தாம்பரம் ஏற்றுமதி வளாகத்தில் 26.3.98 அன்று உற்பத்தியைத் தொடங்கியது....கரூர் யார்ன் லிங்க்ஸ் லிமிடெட் தொழிற்சாலை ஏற்றுமதி அடிப்படையிலானது.
கரூர் மாவட்டம் அப்பர்பாளையத்தில் 4.5 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 மார்ச் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கியது...டவுரஸ் நவல்டீஸ் லிமிடெட் தொழிற்சாலை ஓசூருக்கருகில் சொக்கராசன்பள்ளி கிராமத்தில் 10.20 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியைத் தொடங்கியது....ஸ்ரீராம் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை திருப்போரூர் அருகில் இடையன்குப்பம் கிராமத்தில் 21 கோடி ரூபாய் முதலீட்டில் 25.6.1998 அன்று உற்பத்தியைத் தொடங்கியது..
..வி.எஸ்.என்.எல். எர்த் ஸ்டேஷன் 110 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு, பி-டிஷ் பிரிவு 1998 ஜூன் மாதத்திலும், ஏ-டிஷ் பிரிவு 1999 ஜூன் மாதத்திலும் செயல்படத் தொடங்கியுள்ளன....லுமெக்ஸ் சாப்ளிப் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 8.6 கோடி ரூபாய் செலவில், இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது....ரமணசேகர் ஸ்டீல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை சென்னை மணலியில் 10.18 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 அக்டோபரில் உற்பத்தியைத் தொடங்கியது....ஜே.பி.எம். சங்வூ லிமிடெட் தொழிற்சாலை தகடு உலோகப் பாகங்கள் தயாரிக்கும் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்சாலை இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டு உள்ளது....ஜே.கே.எம். டெரிம் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருங்காட்டுக்கோட்டையில் 17 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ளது....மெட்-டெக் புராடக்ட்ஸ் லிமிடெட் தொழிற்சாலை திருப்பெரும்புதூர் அருகில் மானூர் கிராமத்தில் 27.70 கோடி ரூபாய் முதலீட்டில் 20.8.98 அன்று உற்பத்தியைத் தொடங்கியது....இல்ஜின் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 40 கோடி ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக்கோட்டையில் 1998ல் உற்பத்தியைத் தொடங்கியது..
.டைனமேட்டிக் குரூப் கம்பெனி வாகன உதிரிபாகங்கள் தயாரித்திட 23 கோடி ரூபாய் முதலீட்டில், இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது..
..கார் கதவுகள் தயாரிக்கும் எச்.சி. மேனுபேக்சரிங் லிமிடெட் தொழிற்சாலை 9 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டு உள்ளது....உலோகத் தகடு பாகங்கள் தயாரிக்கும் டோங்கி விஷன் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலை 43 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது....கார் எக்சாஸ்ட் (Car Exhaust) தயாரிக்கும் ஷார்தா மோட்டார் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தொழிற்சாலை 9 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது.
ஆர்க்கிட் கெமிக்கல்ஸ் மற்றும் பார்மசூடிகல்ஸ் தொழிற்சாலை சென்னைக்கருகில் ஆலந்தூரில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு, 1998 நவம்பரில் செயல்படத் தொடங்கியது....சிட்டிசன் வாட்சஸ் - வாட்ச் அசெம்ப்ளிங் புராஜக்ட் தொழிற்சாலை சென்னையில் 8 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 டிசம்பரில் செயல்படத் தொடங்கியது.
சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமொபைல் பவுண்ட்ரி தொழிற்சாலை ஓசூரில் 1998 டிசம்பரில் உற்பத்தியைத் தொடங்கியது...சாம் க்ரீவ்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ட்ராக்டர் மற்றும் அசெம்ப்ளிங் பிரிவு ராணிப்பேட்டையில் 44 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 டிசம்பரில் திறக்கப்பட்டது...அம்பிகா சர்க்கரை ஆலை 40 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையில் 1999 மார்ச்சில் தொடங்கி வைக்கப்பட்டது..
.டேன்பேக் இண்டஸ்ட்ரீஸ் (ப்ளோரோ பென்சீன் புராஜக்ட்) தொழிற்சாலை 11.60 கோடி ரூபாய் முதலீட்டில் கடலூரில் 1999 பிப்ரவரியில் உற்பத்தியைத் தொடங்கியது. ..டேன்பேக் இண்டஸ்ட்ரீஸ் (ஹைட்ரோ ப்ளோரிக் ப்ராஜக்ட்) தொழிற்சாலை கடலூரில் 1999 மார்ச்சில் தனது உற்பத்தியைத் தொடங்கியது...சேலம் அயர்ன் அண்டு ஸ்டீல் கம்பெனி லிமிடெட் தொழிற்சாலை 500 கோடி ரூபாய் முதலீட்டில் 31.3.99 அன்று தொடங்கப்பட்டது...எபாக்சி ரெசின் புராஜக்ட்-பெட்ரோ அரால்டைட் கம்பெனி மணலியில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது..
.அசோசியேட்டட் சிமெண்ட் கம்பெனியின் மதுக்கரை சிமெண்ட் புராஜக்ட் தொழிற் சாலை 33 கோடி ரூபாய் செலவில் 1999 மார்ச் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கியது...ஹைதராபாத் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் Autoclayed Aerated Concrete Block Project தொழிற்சாலை ஏறத்தாழ 25 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது..
.லட்சுமி ஆட்டோ காம்பொனன்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 43 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் 1999 மார்ச்சில் செயல்படத் தொடங்கியது...ஜி.எம்.ஆர்.வாசவி தனியார் மின் உற்பத்தித் திட்டம் 825 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை பேசின் பிரிட்ஜில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது...
திரு.ஆரூரான் சுகர்ஸ் சர்க்கரை ஆலை 22.90 கோடி ரூபாய் முதலீட்டில் தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் 1999 ஜூன் திங்களில் செயல்படத் தொடங்கியது. விஸ்டன் பவர்ட்ரைன் சிஸ்டம் இந்தியா லிமிடெட் கம்பெனி 275 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் இயங்கத் தொடங்கியது. விஸ்டன் ஆட்டோமோடிவ் சிஸ்டம் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 325 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது...மஹிந்த்ரா இண்டஸ்ட்ரியல் பார்க் லிமிடெட் தொழிற்சாலை சென்னைக்கு அருகில் சிங்கப் பெருமாள் கோவிலில் 210 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு 1999 செப்டம்பரில் செயல்படத் தொடங்கியது...
.மட்சுசிட்டா ஏர் கண்டிஷனர் ப்ராஜக்ட் தொழிற்சாலை அறைகளுக்கு வைக்கக் கூடிய ஏர்கண்டிஷன் இயந்திரங்களைத் தயாரிக்கும் இத்தொழிற்சாலை இருங்காட்டுக் கோட்டையில் 59.54 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் செயல்படத் தொடங்கியது.
மேண்டோ ப்ரேக் சிஸ்டம் இந்தியா நிறுவனத்தின் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 30 கோடி ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக் கோட்டையில் 1999ல் செயல்படத் தொடங்கியது....வேலியோ இந்தியா ப்ரிக்சன் மெட்டீரியல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மறைமலை நகரில் 27 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் உற்பத்தியைத் தொடங்கியது..
.Schwing Stetter GmbH எனும் ஜெர்மனி நாட்டு கட்டுமான கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை 18 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் ஒரு பகுதி செயல்படத் தொடங்கி யது. ஆட்டோலெக் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய் மற்றும் தண்ணீர் பம்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை 5 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் 1999 அக்டோபரில் தனது உற்பத்தியைத் தொடங்கியது..
.தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில் துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டம் 202 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 நவம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது...
இந்தியன் அண்டு நேச்சுரல் மெடிகல் புரொடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை சென்னைக்கருகில் 5.60 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 டிசம்பர் முதல் செயல்பட்டு வருகிறது. இன்வோல் மெடிக்கல் (இந்தியா) லிமிடெட் தொழிற்சாலை: திருப்பெரும்புதூரில் 15 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 ஆண்டு மார்ச் திங்களில் உற்பத்தியைத் தொடங்கியது..
.ரினால்ட்ஸ் பால் பென் காம் பொனன்ட்ஸ் தொழிற்சாலை இருங்காட்டுக் கோட்டை யில் 30 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியைத் தொடங்கியது...சிங்கப்பூரைச் சேர்ந்த செம்பவாங் ஸ்ரீராம் பொருள் விநியோகத் தொழிற்சாலை 33 கோடி ரூபாய் செலவில் புழல் கிராமத்தில் நிறுவப்பட்டது. மார்க்யூப் இந்தியா காகித அட்டை தயாரிக்க உதவும் எந்திர உற்பத்தித் தொழிற்சாலை 50 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் 2000-மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது..
.கோவேமா வுட் பிளாஸ்ட் பி.வி.சி. தகடுகள் தயாரிக்கும் தொழிற்சாலை 44 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் 2000 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது...
.இன்ட்ஸில் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வாகன உதிரிபாகங்களைத் தயாரிக்கக்கூடிய இத்தொழிற் சாலை 12.5கோடி ரூபாய் முதலீட்டில் மார்ச் திங்களில் உற்பத்தியைத் தொடங்கியது....ஆப்டிக் பைபர் கேபிள் தொழிற்சாலை தமிழ்நாடு அரசு நிறுவனமான டிட்கோ, மத்திய அரசு நிறுவனமான டி.சி.ஐ.எல். (Telecommunications Consultants India Limited) மற்றும் ஜப்பான் நாட்டின் ஃப்யூஜிகூரா நிறுவனம் ஆகியவை இணைந்து மிக நவீனமான ஆப்டிக் பைபர் டெலிகாம் கேபிள்ஸ் (Optic Fibre Telecom Cables) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 28.50 கோடி ரூபாய் செலவில் 26.5.2000 அன்று நிறுவியது..
..ப்ராக்ஸ் ஏர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (PRAX AIR INDIA PRIVATE LIMITED) தொழிற்சாலை 60 கோடி ரூபாய் முதலீட்டில் திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் அமைக்கப்பட்டு, அதனை நான் 21.8.2000 அன்று திறந்து வைத்துள்ளேன்.
இது தொழிற்சாலைகளுக்கான வாயுக்களை (Industrial Gases) தயாரித்து வழங்குகிறது. ப்ராக்ஸ் ஏர் நிறுவனம் மொத்தம் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு தொழில் பிரிவுகளை அமைத்துள்ளது. செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பிரெஞ்சு நாட்டுத் தொழில்நுட்பத்துடன் 525 கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டு 27.9.2000 அன்று தொடங்கப்பட்டது.
ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் அளவுக்கு அன்னியச் செலாவணி கிடைக்கச் செய்யும்...24.85 கோடி ரூபாய் முதலீட்டில் மலர் பதப்படுத்தும் டான்ப்ளோரா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்க் - மலர்த் தொழில் பூங்கா ஓசூரில் 220 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.
2001 மார்ச்சில் ஏற்றுமதியைத் தொடங்கும். இத்திட்டத்தின் மூலம் 500 பேருக்கு நேரடியாகவும்,1000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்...தமிழ்நாடு அரசு, டிட்கோ ஆகியவை இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்துடன் (ITPO) இணைந்து கண்காட்சி மற்றும் மாநாட்டுக் கூடத்துடன் கூடிய இந்திய வர்த்தக மையம் ஒன்றினை சென்னைக்கருகே நந்தம்பாக்கத்தில் அமைக்கிறது. இவ்வளாகம் 2 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடனும், சாதனங்களுடனும் அமையும்.
முதல் கட்டத்தில் 50000 சதுர அடி பரப்புடைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது....மெட்ராஸ் ரீபைனரீஸ் லிமிடெட் - இருங்காட்டுக் கோட்டையில் செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலைக்கு அருகில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தர மோட்டார் ஸ்பிரிட், அதிவேகப் பயணத்திற்கு உகந்த டீசல் ஆகியவற்றின் விற்பனை மையத்தினை அமைத்து வருகிறது...
.சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மெட்ராஸ் ரீபைனரீஸ் நிறுவனத்தின் மணலி தொழிற்சாலை பிரிவு 2360 கோடி ரூபாய் செலவில் 30 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணையை சுத்திகரிப்பு செய்யும் திறனுடையதாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது....எபோமின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தொழிற் சாலை திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் 2 கோடியே 88 லட்சத்து 59ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது....முக்குட்ஸ் பேக்கேஜிங் லிமிடெட் தொழிற்சாலை திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது..
..கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் கிராமத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பென்னார் ரிபைனரீஸ் லிமிடெட் கம்பெனியின் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை 3480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 6.5 மில்லியன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவி வருகிறது....கும்மிடிப்பூண்டியில் 224 ஏக்கர் பரப்பில் 19 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்றுமதி தொழில் மேம்பாட்டுப் பூங்கா (Expert Promotion Industrial Park) அமைப்பதில் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகமும் சிப்காட்டுடன் பங்கெடுத்து வருகிறது..
..நர்மதா டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி ஆடைகள் ஏற்றுமதியில் ஒரு முன்னணி நிறுவனம். 80 கோடி ரூபாய் முதலீட்டில் நர்மதா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு நவீன ஆடை தயாரிப்புப் பிரிவினை அமைத்திட “டிட்கோ” திட்டமிட்டது. 33.64 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள முதல்கட்ட திட்டப் பணிகள் 2001 மார்ச் மாதத்தில் முடிவடையும்...தர்மபுரி மாவட்டத்தில் 377 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் நூறு சதவீதம் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒருங்கிணைந்த ஜவுளி ஆலை (Composite Textile Mills) ஒன்றினை அமைத்திட, “டிட்கோ” நிறுவனம், திருவாளர்கள் வாசவி தொழில் குழுமத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது.
வர்த்தக ரீதியிலான உற்பத்தியினை இந்நிறுவனம், அடுத்த ஆண்டில் (2001-2002) தொடங்கும்...உலகச் சந்தையில் போட்டியிடும் நோக்கில், ஆடைகள் தயாரிக்கும் பூங்கா ஒன்றை 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிட்கோ கூட்டுத் துறையில் சென்னைக்கருகே அமைக்கவுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த ஆடைகள் பூங்கா வர்த்தக ரீதியில் செயல்படத் துவங்கும்..
.நாங்குனேரியில் உயர் தொழில்நுட்பத் தொழிற்பூங்கா: அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஃபேக் இந்தியா குரூப் மற்றும் ஆக்ஸஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனங்களுடன் சேர்ந்து இணைத் துறையில் டிட்கோ இப்பூங்காவை அமைத்து வருகிறது. இந்தத் தொழிற்பூங்காவில் அமெரிக்கா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். இங்கு அமையவுள்ள தொழிற்சாலைகளில் 8000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்படும்.
.மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.முரசொலி மாறன் 31.3.2000 அன்று அறிவித்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கொள்கையில் (EXIM POLICY) நாங்குனேரி உயர்தொழில் நுட்பத் தொழிற்பூங்காவைச் சிறப்புப் பொருளாதார மண்டலமாக (SPECIAL ECONOMIC ZONE) அறிவித்துள்ளார்.
இதனால், இந்தத் தொழிற்பூங்காவில் உருவாகும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தேவையான சாதனங்கள் இறக்குமதி எளிதாக அமையும்...ஏறத்தாழ 2 இலட்சத்து 22 ஆயிரத்து 569 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டிலான 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு 37 புதிய தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன..
 ..இதனை முழுமையாக அதிமுகவினர்  படித்து இருந்தால்...சமுதாய அக்கறை இருந்தால்....தமிழகத்தின் மீது பற்று இருந்தால்.. உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது...


ஆமாம் இதை எல்லாம் படித்து விட்டு இந்த அதிமுக ஆட்சியின் நான்காண்டு சாதனைகளாக எதை கூறுவார்கல்?
தெருருக்கு இரண்டு டாஸ்மாக் கடைகளைத் திறந்ததை விடவா மேலே உள்ளவை சாதனை களாகி விடும்.
குடி மக்களுக்கு அதை விட வேறு என்ன வேண்டும் .
முகனூல் கூறுவது.



========================================================================
இன்று,
ஆகஸ்ட்-18.

  • தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
  • லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)
  • செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த[தாகக் கூறப்படும்] தினம்(1945)


                               15-08-1947வெள்ளையர்களுக்கு வழியனுப்பு விருந்தின் போது .
========================================================================

இது இந்தியாவுக்கு போற காரா/நான் இங்கேயே இறங்கிடுறேன் .
இந்த சுற்றுலாவில் இந்தியா போறதா இல்லையே!
=======================================================================


புதன், 12 ஆகஸ்ட், 2015

உங்கள் சிறுநீரகத்தை காக்க 7 வழிகள்!


1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல்

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். 
சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். 
உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். 
உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.

2. ரத்தத்தில் சர்க்கரை அளவு


சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. 
எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. 
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு

சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். 
உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். 
பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். 

சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே. 
வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. 
வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் (Diuretics) என்கிற பொருள் அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது.

4. குடிநீர் அளவு


வெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். 
(சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). 
அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை. 

இன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களுக்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 
இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். 
சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். 
சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

5. புகை பிடிக்காதீர்கள்!


புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். 
குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

6. சுய மருத்துவம் வேண்டாம்


மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். 
எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். மாற்று மருத்துவம் என்ற பெயரில் தகுதிஇல்லாத ஒரு சிலர் தயாரிக்கும் லேகியங்களில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. 
இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவை. 
எனவே, கவனம் தேவை.

7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய…

சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. 
எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள்  சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ரத்தம்  சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம். இதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 
50 வயது கடந்த ஆண்களுக்கு விந்துச்சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வரலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக்குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும். 
எனவே, ஏழு விதிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால் சிறுநீரகப் பிரச்னை வராமல் காத்துக்கொள்ள முடியும்.
நன்றி:தினகரன்.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-13.

  • ஹரி பிரியர்லி, துருப்பிடிக்காத எஃகுவை கண்டுபிடித்தார் (1913)
  • பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது(1954)
  • மத்திய ஆப்ரிக்க குடியரசு விடுதலை தினம்(1960)
  • சர்வதேச இடது கையாளர்கள் தினம்.

  • நைட்டிங்கேல்,

நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவு தின சிறப்பு பகிர்வு

இங்கிலாந்தின் உயர்குடியை சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் - பிரான்சஸ் ஸ்மித் தம்பதி இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை ப்ளோரன்ஸ் நகரில் பிறக்கவே அந்த பெண் குழந்தைக்கு அப்பெயரையே சூட்டினார்கள். பருவ வயது வந்ததும் அவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார்கள்.

"என்னிடம் மனம் முழுக்க அன்பு செலுத்து என்கிற குரல் தான் கேட்கிறது ! அதற்கான விடை கிடைத்த பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் !" என்று உறுதியாக மறுத்துவிட்டு செவிலியர் பணிப்பயிற்சியில் இவர் இணைந்தார். செவிலியர் பணி என்பது அன்றைக்கு ஏழைப்பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இழிவான தொழிலாக பார்க்கப்பட்டது. இவர் அதைப்பற்றி கவலைப்படாமல் சேவைப்பயிற்சியை முடித்தார். புன்முறுவலோடு நோயாளிகளிடம் ஆறுதல் வார்த்தை பேசினார் ; அவர்களின் காயங்களை துடைத்து மருந்து போட்டார். அவர்களுக்கு ஆறுதல் தந்தார்.
ரஷ்யா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த கிரிமியன் போரில் வீரர்கள் காயம்பட்டு உதவ ஆளில்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிந்து முப்பத்தி எட்டு செவிலியரோடு துருக்கி போனார். அங்கே வீரர்களுக்கு உதவிகளை போர்க்களத்தில் அஞ்சாமல் செய்தார். அவர்களின் வீட்டு முகவரியை கேட்டு கடிதம் மற்றும் பணம் அனுப்பினார். இரட்டை இலக்கத்தில் இருந்த மரண சதவிகிதம் இவரால் ஐந்து சதவிகிதத்துக்கும் கீழே போனது. இரவெல்லாம் கூட கையில் விளக்கேந்தி வீரர்களுக்கு சேவை செய்ததால் அவரை கை விளக்கேந்திய காரிகை என்று போற்றினார்கள்.

திருமணமே செய்து கொள்ளாமல் தொடர்ந்து நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டார். அவர் எழுதிய நோட்ஸ் ஆன் நர்சிங் நூல் இன்றைக்கும் இத்துறைக்கு வருகிறவர்களுக்கு வேதநூல். பன்னிரெண்டு வருடங்கள் எழுந்து நடமாட முடியாத சூழலில் கூட செவிலியர்களின் செயல்பாடுகள் எப்படி அமையவேண்டும் என்பது போன்ற வெவ்வேறு தலைப்புகளில் இருநூறு புத்தகங்களுக்கு மேலே எழுதியவர் அவர்.

அவரின் சேவைகளை பாராட்டி வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் டாலரை மிகப்பெரிய நர்ஸ் பயிற்சி நிறுவனம் அமைக்க முழுக்க கொடுத்துவிட்டார் அவர். "காலம் மிகக்குறைவு ! ஆகவே,எல்லாரையும் அன்பு செய்யுங்கள் !" என்கிற தாரகமந்திரத்தை போதித்து அப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அவரை நினைவு கூர்வோம்.

- பூ.கொ.சரவணன்
பர்மாவில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 69 பேர் பலியாகி உள்ளனர். 
2 லட்சத்து 50 ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 
இந்நிலையில் ஐராவதி பிராந்தியத்தில் உள்ள ஹிந்தாட நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள காலியான தண்ணீர் பாட்டில்களை மிதவையாக பயன்படுத்தி தப்பிக்கும் சிறுவன்.

========================================================================

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...