திங்கள், 11 மே, 2015

20% தள்ளுபடி.



நீதிபதி அல்லது நீதியரசர் குமாரசாமி தனது தீர்ப்பில்,'குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65,654 பணத்துக்கு, கணக்கு காட்டப்பட்டுள்ளது. கணக்கில் வராத தொகை ரூ.2,82,36,812 ஆகும். இந்த வகையில், மொத்த வருவாயில், ஜெயலலிதா கணக்கு காட்டாத சொத்துக்களின் மதிப்பு 8.12 சதவீதம் மட்டுமே.
கணக்கில் வராமல் 20 சதவீதம் கூடுதல் சொத்துக்கள் இருப்பதில் தவறில்லை என்று கூறப்பட்டு உள்ளது.
எனவே, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்கப்பட்டுள்ள ஜெயலலிதா விடுதலை செய்யப்படுகிறார். அவர் விடுதலையவதால் மற்ற மூவரும்விடுவிக்கப்படுகின்றனர். 
என்று பதவுரை எழுதியுள்ளார்.
குமாரசாமியின் இந்த தீர்ப்பு உண்மையில் அதிமுக தொண்டர்கள் கூட எதிர்பாரா இன்ப அதிர்ச்சி.
அவர்கள் இன்னமும் நீதித்துறையின் மீது வைத்திருந்த சிறிதளவு நம்பிக்கையையும் கூட சிதறடித்து விட்ட தீர்ப்பு.
என்ன முறைகேடுகளை,ஊழல்களை செய்தாலும் தங்கள் தலைவி யை எந்த சட்டமும்,நீதியும் ஒன்றும் செய்துவிடாது ,செய்ய முடியாது.தங்கள் தலைவி இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவரல்ல என்ற உண்மையை முற்றிலுமாக உணர்த்தி விட்டது.
சும்மாவே துறைகள் தொறும் புகுந்து விளையாடும் அவர்களுக்கு ம் ,காவடி எடுக்கும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் இனி ஏழரை பொங்கு சனிதான்.

இதன் மூலம் நீதியரசர் குமாரசாமி மூலம் இந்த உலகுக்கு சொல்லப்படும் 
கருத்துகள் யாதெனில் 
1.நீங்கள் செய்யும் ஊழல் உங்கள் சொத்து மதிப்பை விட 20% சதம் மட்டும் கூட இருக்கும்படிகணக்கு வழக்குகளை சரி பார்த்து 
வைத்து க்கொள்ளுங்கள்..

2.வழக்கை நீங்கள் 20 ஆண்டுகள் இழுத்தடித்தாலும் கூட,முதலில் தீர்ப்பு உங்களுக்கு ஆப்பு வைத்தாலும் கூட விடா[?] முயற்சியுடன் முயன்றால் நீங்கள் சட்ட்டத்துக்கே ஆப்பு வைக்கலாம்.


3.ஊழல் செய்வது கண்டிக்கப்படவேண்டிய குற்றம் அல்ல.
மக்கள் சொத்தை அதிகாரத்தில் உள்ளவர்கள் தனதாக்கிக் கொண்டு சொத்துக்களை குவிப்பதுதான் பொற்கால ஆட்சி முறை .

இதுவரை குற்றம் செய்து விட்டு 18 ஆண்டுகள் இழுத்துவந்த ஜெயலலிதா முன்பே இந்த உண்மைகளை உணராமல் இதுவரை இருந்து விட்டார்.
குமாரசாமி போன்ற சட்டத்தை கரைத்து குடித்த நீதியரசர்கள், பவானி சிங் 
போன்ற அரசு   பணத்தை வாங்கிக்கொண்டு குற்றவாளிக்கு ஆதரவாக வாதாடும் அரசு வழக்குரைஞர்கள் இங்கு நிறைய கிடைப்பதை அறியாமல் 
இத்தனை காலம் வீணடித்தது தவறு என்று கடந்த 20 ஆண்டுகள் அவருக்கு உணர்த்தியிருக்கிறது.
லாலு பிரசாத் யாதவ்,சவுதாலா போன்றோர் எப்படி ஜெயலலிதா போல் சட்டம் தெரியாதவ்ர்களாகிப்போனார்கள் .
ஆனால் சில போக்கத்தவர்கள் அவர்கள பிராமணர்களாகப் பிறக்காததுதான் அவர்கள் சட்டப்படி செய்த தவறு என்று சொல்லித்திரிகிறார்கள்.அது உண்மையாக இருக்கும் என்பதை உங்களில் சிலர் இதுவரை நடந்தவைகளை கூட்டிக் கழித்துப் பார்த்து எண்ணி விடக்கூடாது.
அது தவறு.இந்திய நீதித்தேவதைக்கு தன கண்ணைக் கட்டியுள்ள  துணியின் 
கருப்பு நிறத்தை விட்டு வேறு  வர்ண வேறுபாடுகள் கிடையாது.
18 ஆண்டுகள் 130 வாய்தாக்கள் சில நீதிபதிகள் என்று நடந்த வழக்கை நீதிபதி மைக்கேல் டி குன்கா விசாரித்து அலசி ஆராய்ந்து நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதிய ஆணித்தரமான தீர்ப்பை அய்யா நீதியரசர் குமாரசாமி சில நாட்களில் பவானிசிங் வாதாடலில் தெளிவு பெற்று உச்ச நீதிமன்றம் சொல்லிய நாட்களுக்குள் தீர்ப்பை சொல்லி குற்ற மற்ற ஜெயலலிதா மற்றும் மூவரையும் புனிதர்களாக மாற்றி வெளியே அனுப்பியுள்ளார்.
இந்த சரித்திர சாதனையை அதிமுகவினர் மட்டும் வெடி,வெடித்து கொண்டாடினால் போதுமா?
கருணாநிதி 150 முடிச்சுகள் உள்ளதாக குமாரசாமி சொன்னாரே அந்த முடிச்சுகள் என்னவாயிற்று எப்படி அவிழ்ந்தது என்று கேட்டுள்ளார்.
அந்த முடிச்சவிழ்க்க தெரியாமலா ,அவிழ்க்காமலா நீதியரசு குமாரசாமி நீதிபதியாக தன தீர்ப்பை எழுதுவார்.எப்படியோ ஒரு வகையில் அவிழ்ந்திருக்கும்.
அதுதான் 20% தள்ளுபடி என்று தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டு விட்டாரே.

விசாரணையின் போது இவ்வழக்கை முதலில் தொடர்ந்த சுப்பிரமணிய சாமியையும்,அதன் பின் இணைந்து கொண்ட பேராசிரியர் அன்பழகனையும் இந்த வழக்கில் உள்ளே வர நீங்கள் யார் என்று கேட்ட கேள்வியிலேயே பாதி வழக்கு முடிந்து விட்டது.தீர்ப்பின் தன்மையும் புரிந்து விட்டது.
குற்றவாளி தரப்பே அரசு வழக்குரைஞராக  பவானி சிங்கை நியமித்ததை எதிர் தரப்பினர் சுட்டிக்காண்பித்து எதிர்ப்பு தெரிவித்த போது அவர்களின் பொறாமையை தன் சட்ட அறிவினால் கண்டு கொண்டு குற்றவாளிக்கு ஆதரவாக அவரையே வாதாட வைத்த போது நீதிபதியவர்களின் பெருந்தன்மையை கண்ட போது பலருக்கு இவ்வழக்கின் தீர்ப்பு சத்தியத்தாய்க்கு பெருமை சேர்க்கும் என்பது முற்றிலுமாக புரிந்து விட்டது.
பொச்சாப்புக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகிய போது அங்கும் இரு நீதிபதிகளில் மாதர்குல மாணிக்கம் பானுமதி பவானி சிங்குக்கு ஆதரவாக தீர்ப்பை தந்த போதும் சட்டம் பற்றிய போதிய அனுபவம் இல்லா மற்றொருவர் எதிர்த்தார்.இதனால் மூவர் குழுக்கு போனது.
 நீதிக்கரசி பானுமதி 'புரட்சித்தலைவி 'என்று மேடையிலேயே தான் நீதிபதி என்பதை கூட விட்டு விட்டு பாராட்டிய  பெருந்தன்மையாளர் என்ற தகுதி 
உள்ளவர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
மூவர் தீர்ப்பு பவானி சிங் நியமனத்துகுக்கு எதிராக வந்தாலும் அவர்கள் சத்தியத்தின் பக்கம்,புரட்சியின் பக்கம் நின்றதால் பவானி சிங்க நியமனம் செல்லாது.அது ரத்து செய்யப்படுகிறது.
ஆனால் மாறு விசாரணை செய்யக் கூடாது.ஆசைப்பட்டால் அன்பழகன் 80 பக்கமும்,ஆச்சார்யா [புதிய கர்நாடக அரசு நியமனம்]80 பக்கமும் ஜெயலலிதாவை திட்டி நீதிபதி குமாரசாமியிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வைக்கலாம்.அதை அவர் தீர்ப்புகொடுத்தப்பின் போரடிக்கும் போது படித்து பார்த்துக்கொள்ளலாம்  என்று புல்லரிக்கும் தீர்ப்பை வழங்கினர்.
அதன் பின்னர் தாட்கள் அவசரத்துக்கு கிடைக்காததால் ஆச்சார்யா 18,அன்பழகன் 78 பக்கங்கள் ஜெயாவை தாக்கி கொடுத்தனர்.
ஆனால் நீதியரசர் குமாரசாமி அவர்கள் உச்ச நீதிமன்றம் குறித்த நாட்களுக்குள் முன்பே தயாரித்த தாட்களை வாசித்து தீர்ப்பு வழங்கி 
விட்டார்.
இது மனிதர் புரிந்து கொள்ள மனிதத் தீர்ப்பு அல்ல.
அதையும் தாண்டி புனிதமானத் தீர்ப்பு.
அதைத்தான் அதிமுகவினர் வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள்.
அதை சகிக்காமல் புலம்பித்திரிவோரை நாம் புறந்தள்ள வேண்டும் .
குமாரசாமி தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா புடம் போட்ட 81 கிலோ தங்கமாக உலாவருகிறார்.
மீண்டும் முதல்வராகி கருணாநிதி யின் 5 முறை முதல்வர் என்ற இதுவரையிலான சாதனையை சமன் செய்கிறார்.அதுவும் ஒரே ஆட்சிக்காலத்தில் இருமுறை முதல்வர் பொறுப்பேற்பு.
அதுவும் சட்ட மன்ற உறுப்பினராக ஒரு முறை,இப்போது சும்மா ஒரு முறை.எப்பேர்ப்பட்ட சாதனை இதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதை விட நோபல் பரிசு கொடுத்து பாராட்டலாம்.
இந்த நீதியை நிலை நாட்டியத்தில் மன்னிக்கவும் நாட்டியதில் மோடி அரசின் அருண் ஜெட்லிக்கும் பெரும் பங்கு உண்டு .
அதை ஜெயலலிதா மனதளவிலும்,தமிழக மக்கள் மனசாரவும் இந்நேரம் பாராட்டி நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும் .
அருண்ஜெட்லி போன்ற முக்கிய அமைச்சர் அப்போதைய குற்றவாளி ,சிறைத்தண்டனை பெற்று பிணையில் வெளியெ வந்தவர் ,
முதல்வர் பதவியை இழந்தவர் வீட்டுக்கு வந்து சந்திப்பது எவ்வளவு பெருந்தன்மை.
அவர் கேட்டுக்கொண்டபடி ஜெயலலிதாவும் விவசாய நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பறித்து தொழிலதிபர்களிடம் கொடுக்கும் புனிதமான மசோதாவை ஆதரித்து தான் செய்நன்றி மறவாதவர் என்பதை காட்டி விட்டார்.
ஆனால் முன்பே ஆதரித்து தீர்ப்பு வரும் வரை பட்ட திகில் நாட்கள்  அனுபவித்த துன்பம் அதிகம்தான்.ஆனால் மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை மக்களுக்கு,
கூட்டணி கட்சிகளிடம்   நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ ஜெயலலிதாவுக்கு நிறைவேற்றி தாங்கள் நாணயமானவர்கள் என்பதை காட்டி விட்டார்கள்.

இன்னும் ரியல் எஸ்டேட்,போக்குவரத்து மசோதாக்கள் பாக்கி இருக்கும் கவலை அவர்களுக்கு இப்போது.
ஆனால் ஜெயலலிதா மோடியை போலவே தன்னிலை முன்னிலைக்கு விரும்புவர்.கை விட மாட்டார்.
நீதிபதி குமாரசாமி எதிர்பார்த்த தீர்ப்பை வழங்கி அதை நியாயப்படுத்த 8%,20% என்று கணக்கை காட்டியுள்ளார்.அவர் கணக்கை நேர் செய்ய வேண்டிய பொறுப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது.
அதாவது மீண்டும் அரியணை ஏறல் தான்.
உடனே நாற்காலியில் அமர்ந்து விடலாம்.ஆறுமாதம் மீண்டும் ச.ம.உ.ஆக காலம் இருக்கிறது.
முதலில்  முதல்வராகி விட்டு சில மாதங்களில் பொதுத்தேர்தலை நடத்தி விடலாம்.
இப்போது புடம் போடப்பட்டு தங்கமாக ஜொலிக்கும் ஜெயலலிதா 
இதையே மக்கள் மத்தியில் சொல்லி 6 முறை முதல்வராகி கருணாநிதியின் சாதனையை முறியடித்து அவருக்கும்,மக்களுக்கும் வேதனையைத் தரலாம்.
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ஜெயலலிதாவை புடம் போடப்பட்ட தங்கமாக்கி விட்டது.
அப்படி யென்றால் மைக்கேல் டி குன்கா தீர்ப்பு?
என்கிறீர்களா?

குன்காவா ?தீர்ப்பா?

விவீகனாந்தர் தெரு,
விவேகானந்தர் குறுக்கு சந்து,
துபாய் பஸ்ஸ்டாண்ட்,
துபாய்  
முகவரியில் போய்தான் விசாரிக்க வேண்டும் .
=================================================================================

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...