வியாழன், 25 ஜூன், 2015

புர்ரட்ச்ச்சி தலைவி

2001-ம் ஆண்டில் ஜெயா மீண்டும் தமிழக முதல்வராக அமர்ந்தவுடன், அவருக்கு எதிராக நடந்துவந்த ஊழல் குற்ற வழக்குகள் அனைத்தையும் சட்டமன்றத் தீர்மானம் ஒன்றின் மூலம் மூட்டை கட்டிவிடலாம் என அப்பொழுது ராதாபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (சுயேட்சை) இருந்த அப்பாவு கோரிக்கை வைத்திருக்கிறார். 
இதனை நிராகரித்த ஜெயா, “தான் இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதியாக வெளியே வருவேன்” எனத் தன்னடக்கதோடு கூறியிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, அம்மாவைச் சட்டத்திற்கும் நீதிக்கும் தலைவணங்கும் கண்ணியமிக்கவராகக் காட்டுகிறார்கள்,
 அ.தி.மு.க.வினர். இது மட்டுமல்லாமல், உச்சநீதி மன்றம் எந்தவிதமான நிபந்தனையின்றிப் பிணை வழங்கியபோதும், தனக்குத் தானே நிபந்தனை விதித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெருந்தகையாக ஜெயாவிற்கு மகுடம் சூட்டி வருகிறார்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெயா மீது சுமத்தப்பட்டன. “வாடா, வா, உன்னைக் கவனிச்சுக்கிறேன்” என்ற விதத்தில்தான் இந்த வழக்குகளை அவர் நீதிமன்றத்தில் சந்தித்தாரேயொழிய, சட்டப்படியெல்லாம் அவர் நடந்து கொள்ளவில்லை. “சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயா நீதிமன்றத்தில் எதிர்கொண்ட விதத்தை முழுவதுமாக விளக்கினால், அது கிரிமினல்களுக்குச் சாதகமாகப் போய்விடும் என்பதனால், அதனை நான் அதிகம் விளக்கவில்லை” என சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 
அவரது கூற்று மிகையானதல்ல. ஜெயா, தன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் சிலவற்றைச் சந்தித்த விதத்தை கீழே தொகுத்துக் கொடுத்துள்ளோம். கிரிமினல் கும்பலுக்குத் தலைவியாக இருக்கும் தகுதியை மட்டுமே கொண்டவர் ஜெயா என்ற உண்மையை அவை உங்களுக்குப் புரிய வைக்கும்.
ஜெயாவின் முதல் தவணை ஆட்சியின் பொழுது (1991-96) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளிலிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயா – சசி கும்பல் இலஞ்சம் வாங்கியது, 
ஜெயா பதவியில் இருந்த பொழுதே அம்பலமாகியது. மறைந்த தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இந்த ஊழலை விசாரிக்க தொடுத்த வழக்கில், உயர்நீதி மன்ற நீதிபதி இலட்சுமணன், நிலக்கரியை இறக்குமதி செய்யக்கூடாது என இடைக்காலத் தடை விதித்தார்.
நீதிபதி தினகர்
டான்சி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயாவைச் சட்டத்தை வளைத்து விடுதலை செய்தார் நீதிபதி தினகர்
ஜெயா, இந்த இடைக்காலத் தடையை சட்டத்தின் பொந்துகளில் புகுந்து உடனடியாக உடைத்துவிட்டாலும், தனக்கு எதிரான இந்த ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிடும் என பீதியடைந்து போயிருந்தார்; நீதிபதி இலட்சுமணன் வேறு சில வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருந்ததால், அவரை மிரட்டிப் பணிய வைப்பது என்ற சூழ்ச்சியை மேற்கொண்டது ஜெயா – சசி கும்பல்.
இச்சதியின்படி நீதிபதி இலட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா – கள்ளச்சாராயம் வியாபாரத்தில் ஈடுபட்டதாகப் பொய் வழக்கு சோடிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது பொய்வழக்கு என்பது விரைவிலேயே அம்பலமாகி, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டாலும், ஜெயா கும்பலின் நோக்கம் நிறைவேறியது. “நீதிமன்றத்துக்கு வெளியே நடக்கும் சில சம்பவங்கள் தன்னைப் பாதிப்பதாக” க் கூறி, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி இலட்சுமணன் விலகிக் கொண்டார்.
  • 1996-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய தி.மு.க., ஜெயா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது. இச்சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதை எதிர்த்து ஜெயா தொடர்ந்த வழக்கில் அப்பொழுது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த லிபரான், “சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது சட்டப்படி செல்லும்” எனத் தீர்ப்பளித்தார். இதனால் ஆத்திரமடைந்திருந்த ஜெயா, தனது ஆதரவோடு நடந்துவந்த பா.ஜ.க. கூட்டணி அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி லிபரானை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்குத் தூக்கியடித்து பழி தீர்த்துக் கொண்டார். ஜெயாவின் பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து வந்த மற்றொரு நீதிபதி, ஜெயாவின் நிர்ப்பந்தங்களுக்கு பணிய மறுத்ததால், அசாமுக்கு மாற்றப்பட்டார்.
  • “கொடைக்கானல் ப்ளஸண்ட் டே” விடுதி ஊழல் வழக்கில், ஜெயாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூவரும் அ.தி.மு.க. காலிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 
  • 2001-ல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பின்பு இந்த வழக்கின் போக்கே தலைகீழாக மாறியது. அ.தி.மு.க. குண்டர்களின் மிரட்டலுக்குப் பயந்து, 22 அரசு சாட்சிகளும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக பல்டியடித்தனர். \
  • இதனால் கொல்லப்பட்ட கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி, இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 
  • 2001 இறுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் விசாரணை, அ.தி.மு.க. அரசின் இழுத்தடிப்புகளால் ஒன்றரை ஆண்டுகள் நடந்தது. “இவ்வழக்கை சேலத்திற்கு மாற்றியும், சீனிவாசன் என்ற குற்றவியல் வழக்குரைஞரை அரசு வழக்குரைஞராக நியமித்தும்” சென்னை உயர்நீதிமன்றம் 22.08.03 அன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி அருணா ஜெகதீசன்
சொத்துக்குவிப்பு வழக்கில் சட்டவிரோதமான முறையில் ஜெயாவின் பினாமி கம்பெனிகளை விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி அருணா ஜெகதீசன்.
எனினும், வழக்குரைஞர் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்தரவு வழங்காமல் இழுத்தடித்ததன் மூலம், சேலம் நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற முடியாமல் முடக்கி வைத்தது, அ.தி.மு.க. அரசு. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 14 மாதங்கள் ஆன பிறகும் கூட வழக்குரைஞர் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கப்படாததை எதிர்த்து, கோகிலவாணியின் தந்தை மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் பொழுது, மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட மூல வழக்கைக் குழி தோண்டிப் புதைத்துவிடும் நோக்கத்தோடு, “மூல வழக்கின் கேஸ் கட்டு காணாமல் போய்விட்டது; அதனை டிசம்பர் 2003-லிருந்து தேடிக் கொண்டிருக்கிறோம். புதிதாகக் கேஸ் கட்டுத் தயாரிக்கக் கால அவகாசம் வேண்டும்” எனக் குண்டைத் தூக்கிப் போட்டது தமிழக அரசு.
இப்படி அ.தி.மு.க.வால் அரசு அதிகாரத்தோடு உருவாக்கப்பட்ட எல்லா தடைகளையும் மீறி அக்கட்சியைச் சேர்ந்த 28 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகும் கூட, ஜெயா “நீதி”க்குத் தலை வணங்கவில்லை. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பங்களுக்குப் பல இலட்ச ரூபாய் கருணைத் தொகை ஏற்பாடு செய்து கொடுத்ததன் மூலம், நீதிமன்றத் தீர்ப்பை எள்ளி நகையாடி விட்டார்.
  • தமிழக முதல்வர் என்ற பதவியைப் பயன்படுத்தித் தான் அடித்தக் கொள்ளையைப் பகிரங்கமாகக் காட்டிக் கொள்ளும் விதமாக, தனது “வளர்ப்புப் பிராணி” சுதாகரனின் திருமணத்தை 1995-ம் ஆண்டின் இறுதியில் நடத்தினார் ஜெயா. அந்தத் திருமணம் தொடர்பாக நடந்து வந்த அதிகார முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தும்படி கோரி, பல வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணையின் பொழுது, “வழக்குத் தொடுத்தவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கே என்ன பாதுகாப்பு?” என நீதிபதி புலம்பியதிலிருந்தே, நீதிபதிகள் – நீதிமன்றங்கள் மீதான ஜெயாவின் ‘பாசத்தை’ப் புரிந்து கொள்ள முடியும். “அதிகார முறைகேடுகள் நடந்திருந்தாலும், அவற்றுக்கு முதல்வர் ஜெயா பொறுப்பல்ல” எனத் தீர்ப்பெழுதி, தனது தோலைப் பாதுகாத்துக் கொண்டார், நீதிபதி.
அருண் ஜெட்லி - ஜெயா
நிதியமைச்சர் அருண் ஜெட்லி போயசு தோட்டத்தில் ஜெயாவைச் சந்தித்த சில நாட்களிலேயே அவர் வருமான வரி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
  • டான்சி நில பேர ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபொழுதே அதில் தலையிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். இவ்வழக்கிலிருந்து ஜெயாவை விடுதலை செய்த உயர்நீதி மன்ற நீதிபதி தங்கராசு, “டான்சி நிலத்தை வாங்கியதில் ஜெயா எவ்வித மோசடியிலும் ஈடுபடவில்லை; மாறாக, வழக்குதான் மோசடியானது” எனப் பொருள்படும்படி தனது தீர்ப்பை அளித்தார். நீதிபதி தங்கராசு, அ.தி.மு.க.வின் மந்திரி ஒருவரின் சிபாரிசின் பின்னணியில்தான் நீதிபதி பதவியைப் பெற்றார் என்பதும்; டான்சி நிலபேர வழக்கில் தீர்ப்புக் கொடுக்கும் முன் உல்லாசச் சுற்றுலாவாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதும் பின்னர் அம்பலமாகியது.
  • நீதிபதி தங்கராசின் தீர்ப்பை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபொழுது, “தனி நீதிமன்றத்தில் 80 சதவீத அளவு விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில், அதில் உயர்நீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டாம் என்று நாங்கள் கருதுகிறோம். இது எங்கள் தீர்ப்பு அல்ல; கருத்துதான். உங்கள் கட்சிக்காரர் (ஜெயா) மீண்டும் சிறப்பு நீதிமன்ற விசாரணையைச் சந்திக்க விரும்புகிறாரா?” எனக் குற்றவாளியிடமே தீர்ப்பைச் சொல்லும் உரிமையை வழங்கினார்கள் நீதிபதிகள்.டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பெற்ற ஜெயா, அத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 
  • இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தினகர், “டான்சி நிலம், அரசு சொத்தே அல்ல; அரசு ஊழியர், அரசு சொத்தை வாங்கக் கூடாது என்பது நன்னடத்தைக் குறித்த விதிமுறைதானே தவிர, சட்டமல்ல” எனச் சட்டத்தையே வளைத்து, புதிய விளக்கம் கொடுத்து, ஜெயாவை வழக்கில் இருந்தும், தண்டனையிலிருந்தும் விடுதலை செய்தார்.
  •  நீதிபதி தங்கராசு தீர்ப்புக்கு முன் சிங்கப்பூர் சென்று வந்தார்; நீதிபதி தினகர் தீர்ப்புக்குப் பின் ஒரு மாத ஓய்வில் போனார்.நீதிபதி தினகரின் தீர்ப்பை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையும், அதனின் தீர்ப்பும் மிகவும் விநோதமாக அமைந்தன. சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த “பந்த்”-ஐ தடை செய்து ஞாயிற்றுக்கிழமை கூடி தீர்ப்பு அளித்த உச்சநீதி மன்றம், டான்சி நில பேர வழக்கில் விசாரணை முடிந்த பிறகும், தீர்ப்பு வழங்காமல் 14 மாதங்கள் இழுத்தடித்தது. அதன்பின் வந்த தீர்ப்போ, ஜெயாவின் விடுதலையை உறுதி செய்ததோடு, அவரின் மனசாட்சியிடம் மண்டியிட்டது.
    “முதல் குற்றவாளியான ஜெயலலிதா குற்றமிழைத்திருக்கிறாரா, இல்லையா என்கிற உண்மைக்கு அப்பாற்பட்டு, அவர் தமது மனசாட்சிக்குப் பதில் அளிக்கும் வகையில் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி டான்சி நிலத்தைத் திருப்பிக் கொடுப்பதே பரிகாரமாக அமையும்.” – இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதிய வெங்கடராம ரெட்டி, ராஜேந்திரபாபு என்ற இரு நீதிபதிகளுக்கு ஜெயாவிடமிருந்து என்ன பரிகாரம் கிடைத்ததோ, அது அந்த “ராமனுக்கு”த்தான் தெரியும்!
நீதித்துறையை விலை பேசும் ஜெயா
சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தபோது, ஜெயா-சசி கும்பலின் லெட்டர் பேடு கம்பெனிகளை அவ்வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது, ஜெயா-சசி கும்பல். இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்குத் தெரியாமல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்ததையும்; இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் சென்னை உயர்நீதி மன்றத்திற்குக் கிடையாது என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது சென்னை உயர்நீதி மன்றம். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங்கிற்குப் பதிலாக, வேறொரு அ.தி.மு.க. கைக்கூலி வழக்குரைஞர் ஆஜரானதையும் சென்னை உயர்நீதி மன்றம் அனுமதித்தது. இப்படி சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட இவ்வழக்கில் நீதிபதி அருணா ஜெகதீசன் அந்த லெட்டர் பேடு கம்பெனிகளை வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்த கேலிக்கூத்தும் அரங்கேறியது.
  • சொத்துக் குவிப்பு வழக்கைப் போலவே, வருமான வரி வழக்கிலிருந்தும் ஜெயா-சசி கும்பல் விடுவிக்கப்பட்டிருப்பது விநோதங்களும் மர்மங்களும் நிறைந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்த சமயத்தில் வருமான வரி வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். பின்னர் தேர்தல்கள் நடைபெறவிருப்பதைக் காட்டி விசாரணைக் காலத்தை நீட்டிக்க வேண்டுமென ஜெயா கேட்டுக் கொண்டவுடன் தனது தீர்ப்பையே மாற்றிக் கொண்டது உச்சநீதி மன்றம்.இவ்வழக்கை விசாரித்த சென்னை பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு திரும்ப திரும்ப உத்தரவிட்டதை ஜெயாவும் சசியும் ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை. 
ஒருபுறம் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்துவந்த ஜெயா, இன்னொருபுறம் பா.ஜ.க. அரசில் தனது நண்பரான அருண் ஜெட்லி நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதைப் பயன்படுத்திக் கொண்டு இந்த வழக்கையே குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் இறங்கினார். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாத குற்றத்திற்கு உரிய அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக ஜெயா-சசி கும்பல் வருமான வரித் துறைக்கு மனுச் செய்ய, அந்த மனுவை ஏற்றுக் கொள்வதாக நிதியமைச்சகம் தடாலடியாக அறிவிக்க, வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வேறுவழியின்றி வழக்கை முடித்து வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ்வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டிய ஜெயா-சசி கும்பல் பா.ஜ.க. அரசின் தயவால் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டுத் தப்பித்துக் கொண்டது.
***
ஜெயா வழக்கைச் சந்தித்த விதம் ஒவ்வொன்றும் சட்டம், நீதித்துறை ஆகியவற்றின் வரம்பு மற்றும் கையாலாகாத்தனத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அதற்கும் அப்பாற்பட்டு, இன்றைய அதிகார அமைப்பில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் உள்ளிட்டு யாரையும் எந்த விலை கொடுத்தும் வாங்க முடியும் என்றும் அவர் எடுத்துக் காட்டிவிட்டார். ஜெயா போன்ற சாதி, பணம், அரசியல் செல்வாக்கு கொண்ட கிரிமினல்களை இன்றுள்ள சட்டம், நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டு தண்டித்துவிட முடியாது எனப் புரட்சியாளர்கள் கூறிவருவதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களைக்கூட, சட்டத்திற்கு சவால் விடும் தனது நடவடிக்கைகளின் மூலம் திணறடித்து வருகிறார், அவர். அந்த வகையில் ஜெயா புர்ரட்ச்ச்சி தலைவிதான்!
– திப்பு____________________________
புதிய ஜனநாயகம்
========================================================================
இன்று,
‘அப்பா தினம்’, ‘அம்மா தினம்’, ‘எய்ட்ஸ் தினம்’, ‘உலக சுற்றுச்சூழல் தினம்’, ‘யோகா தினம்’ என கொண்டாடப்படுவது போல, நகை கொள்ளை தினம் என்று ஒன்றை கொண்டாடலாம் போல...! 
அந்தளவுக்கு 2015ம் ஆண்டு நகைக்கொள்ளை ஆண்டாகவே மாறி விட்டது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கணக்கிட்டால் சுமார் 10 ஆயிரம் பவுன் வரை (மதிப்பு சுமார் ரூ.22 கோடி) கொள்ளை அடிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 
இன்றைய சூழலில் பெண்கள் வெளியே போய்ட்டு வீட்டுக்கு வந்தாலோ, அல்லது நாம் வெளியூர் போய்ட்டு வீட்டுக்கு வந்தாலோ நகைகள் பத்திரமாக இருந்தால் நாம்தான் உலகத்திலேயே கொடுத்து வைத்தவர் என்று எண்ணிக்கொள்ளலாம். 
தமிழ் நாட்டில் நகைக்கொள்ளை என்பது அன்றாடம் தவிர்க்க முடியாத ஒரு சம்பவமாகவே மாறி விட்டது. 
ஜெயலலிதா முன்பு பதவியேற்றவுடன் கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓ டி விட்டதாகக் கூறினார்.இந்த முறை பதவியேற்பில் வாழ்த்த ஆந்திரக் கொள்ளையர்களுடன் வந்து விட்டார்களோ?

========================================================================

வியாழன், 18 ஜூன், 2015

மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு

ஜெயா விடுதலை :-

 ருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தது மற்றும் கூட்டுச் சதி ஆகிய கிரிமினல் குற்றங்களுக்காக ஜெயாவிற்கும் அவரது பினாமிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை முற்றிலுமாக ரத்து செய்து குற்றவாளிகள் நால்வரையும், அவர்களது பெயரில் இருக்கும் சொத்துக்களையும் விடுவித்து தீர்ப்பளித்திருக்கிறது, கர்நாடகா உயர்நீதி மன்றம்.

நீதிபதி குமாரசாமி
நீதிபதி குமாரசாமி : கத்துக்குட்டியா, ஜெயாவின் கைக்கூலியா?
நீதிபதி குமாரசாமி அளித்துள்ள இத்தீர்ப்பு பிழையானது, மோசடியானது எனக் கூறுவதற்கு பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை, சாதாரண கூட்டல் கழித்தல் தெரிந்திருந்தாலே போதும். ஜெயாவும் அவரது பினாமிகளும், அக்கும்பல் உருவாக்கி வைத்திருந்த லெட்டர் பேடு கம்பெனிகளும் அரசு வங்கிகளில் வாங்கிய கடன்களின் கூட்டுத் தொகையை 10,67,31,274 ரூபாய் எனக் காட்டுவதற்குப் பதிலாக, அதனை 24,17,31,274 ரூபாயாகத் தனது தீர்ப்பில் (பக்.852) காட்டி, அதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஜெயா-சசி கும்பலை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்திருக்கிறார்.
வரியைக் கட்டாமல் ஏய்க்கும் பண முதலைகள் அனைவரும் அதற்காக வருமானத்தைக் குறைத்து, செலவுகளைக் கூட்டிக் காட்டும் உள்குத்து வேலைகளைச் செய்வது வாடிக்கையான ஒன்று. அதனையொத்த உள்குத்து வேலையைத் தலைகீழாகச் செய்துதான் – ஜெயாவின் செலவுகளைக் குறைத்து, வருமானத்தை அதிகரித்துக் காட்டியும்தான் நீதிபதி குமாரசாமி ஜெயா-சசி கும்பலை விடுவித்திருக்கிறார். ஜெயாவின் வருமானத்தை அதிகரித்துக் காட்டுவதற்கு குமாரசாமி நம்பியிருந்த முக்கியமான துருப்புச் சீட்டு, அக்கும்பல் பெற்ற கடன்கள்தான். அந்த இடத்தில்தான், ஜெயா-சசி கும்பல் பெற்ற மொத்தக் கடன் 10,67,31,274 கோடி ரூபாய் என்பதற்குப் பதிலாக 24,17,31,274 கோடி ரூபாய் என மாற்றிப் போட்டு தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறார், குமாரசாமி.
ஜெயா-சசி கும்பல் வாங்கிய கடன்களைக் கூட்டிப் போடுவதில் மட்டும் மோசடி நடைபெறவில்லை. அதனையும் தாண்டி கடன்களை வருமானமாகக் காட்டும் விசயத்தில் ஏகப்பட்ட தகிடுதத்தங்களைத் தெரிந்தே செய்திருக்கிறார், குமாரசாமி. மூன்றாவது குற்றவாளியான சுதாகரன் தனக்கு 1.57 கோடி ரூபாய் கடன் அளிக்குமாறு இந்தியன் வங்கி, அபிராமபுரம் கிளைக்கு விண்ணப்பம் செய்ததில், அவருக்கு 1.33 கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டது. ஆனால், நீதிபதி குமாரசாமியோ வங்கி அளித்த கடன் தொகைக்கு மாறாக, சுதாகரன் கடனாகக் கோரியிருந்த 1.57 கோடி ரூபாயை வருமானமாகக் காட்டியிருக்கிறார்.
முதல் குற்றவாளியான ஜெயா, அதே இந்தியன் வங்கிக் கிளையிடமிருந்து ஆகஸ்டு 1996-இல் 90 இலட்ச ரூபாய் கடன் பெற்றார். வழக்கு காலத்திற்கு பிறகு பெறப்பட்ட கடனை வழக்கு காலத்தில் கிடைத்த கடனாகக் காட்டி, அதனை வருமானத்தில் சேர்த்திருக்கிறார் குமாரசாமி. இவ்வளவு கேவலமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் கணக்குப் போட்டு ஜெயா-சசி கும்பலை விடுவித்திருக்கும் இந்தத் தீர்ப்பில், இந்தக் கணிதப் பிழைகளைத் தாண்டியும் அதிர்ச்சி அளிக்கும் அம்சங்கள் பல உள்ளன.
குமாரசாமி: நீதிபதியா, ஜெயா விசுவாசியா?
“சொத்துக் குவிப்பு வழக்கு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு தி.மு.க.வால் போடப்பட்ட வழக்கு” என்பதுதான் ஜெயா-சசி கும்பலின் வாதம். இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்றியபொழுதே அ.தி.மு.க. கும்பலின் இந்த வாதத்தை உச்சநீதி மன்றம் புறக்கணித்துவிட்டது. ஆனால், நீதிபதி குமாரசாமி குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளப்பட்ட இந்த வாதத்தை மீண்டும் கிளறி, “சட்டப் போராட்டம் என்ற போர்வையில் அரசியல் இலாபங்களுக்காக வழக்குத் தொடுப்பதை ஊக்குவிக்கக் கூடாது” எனக் (பக்.739) குறிப்பிட்டு, ஜெயா கும்பலின் அவதூறுகளுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்.
ஜெயா மற்றும் அவரது பினாமிகள் சசிகலா, சுதாகரன், இளவரசி.
பிரம்மஸ்ரீ கிரிமினல் ஜெயா மற்றும் அவரது பினாமிகள் சசிகலா, சுதாகரன், இளவரசி.
2001-ல் தமிழக முதல்வராக ஜெயா பதவியேற்றவுடனேயே, சென்னையில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் இறங்கினார். அதன் ஒரு பகுதியாக, அவ்வழக்கு விசாரணையில் ஜெயாவுக்கு எதிராகச் சாட்சியம் அளித்தவர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு பிறழ்சாட்சியாக மாற்றப்பட்டனர். இந்த நிலையில்தான் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென அன்பழகன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்சநீதி மன்றம் இவ்வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியபொழுதே பிறழ் சாட்சியங்களை மீண்டும் விசாரிக்குமாறு அறிவுறுத்தியது. இந்த அடிப்படையில் பிறழ் சாட்சியங்கள் மீண்டும் விசாரிக்கப்பட்டு, ஜெயா-சசி கும்பலின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
நீதிபதி குமாரசாமி இது குறித்து தனது தீர்ப்பில், “சாட்சிகளைப் பிறழ் சாட்சிகளாகக் கருதாமல், அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள். அந்த சாட்சிகளிடம் தங்களுக்குச் சாதகமான முறையில் அரசுத் தரப்பு கேள்வி கேட்டுள்ளது. சாட்சிகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு விதமாக சாட்சி அளித்தால் அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்லதல்ல. இப்பிறழ் சாட்சியங்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமான அம்சங்களில் ஒன்றாகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிடுகிறார்.
தங்க, வைர நகைகள்
தங்க, வைர நகைகளாக மாறிய ஊழல் பணம்.
இப்படிச் சுற்றிவளைத்து சொல்வதற்குப் பதிலாக வழக்கை பெங்களூருக்கு மாற்றியதே தவறு என்று குமாரசாமி கூறியிருக்கலாம். ஏனென்றால், அவரது தீர்ப்பின் இந்த அம்சம் வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதன் அடிப்படையையே தகர்க்கிறது. இதன் மூலம், “நான் பத்து பவானி சிங்கிற்குச் சமம்” எனக் காட்டியிருக்கிறார், நீதிபதி குமாரசாமி.
கட்டிடச் செலவு
நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் 1991-96 காலக் கட்டத்தில் ஜெயா-சசி கும்பலின் ஒட்டுமொத்த செலவு – புதிய பங்களாக்களைக் கட்டியது, பழைய பங்களாக்களை நவீனப்படுத்தியது, வளர்ப்பு மகனின் திருமணச் செலவு, தமிழகமெங்கும் நிலங்களை வாங்கிக் குவித்தது என்ற வகையில் 55,02,48,215 ரூபாயாக மதிப்பிட்டிருந்தார். இதில் சரிபாதி வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணத்திற்கும், தோழிகள் உல்லாசமாக ஓய்வெடுப்பதற்கு பையனூர், கோடநாடு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் பங்களாக்களைக் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வீடு, கடைகள் எனப் பல்வேறு வகையான கட்டிடங்களைக் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் செலவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை தனது குற்றப் பத்திரிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களைக் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் ஜெயா-சசி கும்பல் அந்த ஐந்தாண்டுகளில் கிட்டதட்ட 27,79,88,945 ரூபாய் செலவழித்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருந்தது. முதல் குற்றவாளியான ஜெயா இக்கட்டிடச் செலவுகளுக்கு 3,62,47,700 ரூபாய் மட்டுமே தான் செலவழித்ததாக வாதாடினார். இரண்டு தரப்பு சாட்சியங்களையும் பரிசீலித்த நீதிபதி குன்ஹா அரசுத் தரப்பு அக்கட்டிடங்களில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை 1999-ம் ஆண்டு விலையில் மதிப்பீடு செய்திருந்ததைத் தள்ளுபடி செய்து, இந்தச் செலவை 22,53,92,344 ரூபாய் என நிர்ணயம் செய்தார்.
ஆனால், நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் கட்டிடச் செலவை வெறும் 5,10,54,060 ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார். நீதிபதி குன்ஹாவின் மதிப்பீட்டை வெட்டுவதற்கு அவர் குறிப்பிட்டுள்ள காரணம் வேடிக்கையானது மட்டுமல்ல, குதர்க்கமானதுமாகும். “அரசுத் தரப்பு பொதுப்பணித்துறையின் மதிப்பீட்டின்படி கட்டிடச் செலவை நிர்ணயித்திருக்கிறது. பொதுவாகவே, பொதுப்பணித்துறை, ஒப்பந்ததாரர்களுக்குக் காலம் தாழ்த்தி பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, தனது மதிப்பீட்டை அதிகமாகவே நிர்ணயிக்கும்” எனக் கூறியிருக்கும் குமாரசாமி தனது மதிப்பீட்டை எப்படி நிர்ணயித்தார் என்பதைத் தீர்ப்பில் சொல்லவில்லை. அவர் சொல்லாவிட்டாலும், ஜெயா காண்பித்த செலவும், குமாரசாமி நிர்ணயித்துள்ள செலவும் நெருக்கமாக இருப்பது மட்டும் பளிச்செனத் தெரிகிறது.
திருமணச் செலவு
சுதாகரன் திருமணம்
சுதாகரன் திருமணம் : ஜெயா-சசி கும்பல் அடித்த கொள்ளையின் பகிரங்க சாட்சி
ஜெயா, மூன்றாவது குற்றவாளியான சுதாகரனின் திருமணத்தை நடத்துவதற்கு 6,45,04,222 ரூபாய் செலவழித்ததாகப் பல்வேறு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றஞ்சுமத்தியது, தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை. ஆனால், ஜெயாவோ இத்திருமணத்திற்கு 28,67,520 ரூபாய் மட்டுமே தான் செலவழித்ததாகவும், மற்ற செலவுகளை மணமகள் வீட்டாரான சிவாஜி குடும்பத்தாரும், தனது கட்சிக்காரர்களும் கவனித்துக் கொண்டதாக ஒரு பச்சைப் பொயைத் துணிந்து சொன்னார்.
நீதிபதி குன்ஹா, தனது தீர்ப்பில் மணமகள் வீட்டார் மணமகனுக்கான 22 கோட்-சூட்டுகள் தைப்பதற்கு 1,41,025 ரூபாய் செலவழித்ததைத் தாண்டி வேறெந்த செலவையும் செயவில்லை என்பதைத் தக்க ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறார். குறிப்பாக, சிவாஜியின் மூத்த மகனும், மணமகளின் தாய் மாமனுமான ராம்குமார், “இந்தத் திருமணத்திற்காகத் தனி வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் வழியாக 90 இலட்ச ரூபாய்க்கு மேல் தான் செலவழித்ததாக”ச் சாட்சியம் அளித்தார். ஆனால், ராம்குமார் அந்த வங்கிக் கணக்கின் ஒரிஜினல் பாஸ்புக்கைக்கூட நீதிமன்றத்திடம் சாட்சியமாக அளிக்கவில்லை. மாறாக, வங்கிக் கணக்கு எண்கூடத் தெரியாத அளவிற்கு ஏதோவொரு பாஸ்புக்கின் ஜெராக்ஸ் காப்பியை சாட்சியமாக அளித்து, நீதிமன்றத்தை ஏமாற்ற முனைந்தது, ஜெயா கும்பல். ஜெயா கும்பலின் இந்த தகிடுதத்தங்களையெல்லாம் அம்பலப்படுத்தி ஒதுக்கித் தள்ளிய நீதிபதி குன்ஹா, தனது தீர்ப்பில் இத்திருமணத்திற்கு முதல் குற்றவாளியான ஜெயா செலவழித்த தொகை மூன்று கோடி ரூபாய் என நிர்ணயம் செய்தார்.
ஆனால், நீதிபதி குமாரசாமியோ வருமான வரித்துறையிடம் ஜெயா திருமணச் செலவாகக் காட்டிய இருபத்தெட்டு இலட்ச ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்ற கோடிக்கணக்கான ரூபாய் பெறுமான செலவுகள் அனைத்தையும் மணமகள் வீட்டாரும், அ.தி.மு.க. தொண்டர்களும்தான் செய்ததாகத் தீர்ப்பு எழுதியிருக்கிறார். திருமணச் செலவுகளை மணமகள் வீட்டார்தான் செய்தனர் என்பதற்கு அவர் எவ்வித ஆதாரத்தையும் காட்டவில்லை; கேட்கவுமில்லை. மாறாக, இந்து மத கலாச்சராம், பழக்கவழக்கங்களின்படி மணமகள் வீட்டார்தான் திருமணச் செலவுகளைச் செய்வார்கள் என மட்டை அடியாக அடித்து ஜெயா கும்பலைக் காப்பாற்றிவிட்டார்.
ஜெயா கும்பல், ராம்குமாரை முன்னிறுத்தி சிறப்பு நீதிமன்றத்தை ஏமாற்ற முனைந்ததைப் பற்றிப் பேசாத நீதிபதி குமாரசாமி, பந்தல் அலங்காரச் செலவுகளை அரசுத் தரப்பு அளவுக்கு மீறி மிகைப்படுத்திக் காட்டியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். “அரசுத் தரப்பு திருமணப் பந்தல்களை நேரடியாகப் பார்த்து மதிப்பீடு செய்யவில்லை. பந்தல்களின் வரைபடங்களை வைத்துக்கொண்டு செலவு கணக்கை மதிப்பீடு செய்துள்ளனர். வரைபடங்களின்படிதான் பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கும் என நிச்சயமாகக் கூறமுடியுமா?” எனத் தனது தீர்ப்பில் குமாரசாமி பாயிண்டுகளை அடுக்கியிருக்கிறார்.
சுதாகரன் திருமணம் 1995-ல் நடந்தது. சொத்துக்குவிப்பு வழக்கு 1996-ல் பதியப்பட்டு அதன் பிறகுதான் விசாரணை தொடங்கியது. இந்த நிலையில் பந்தலை நேரடியாகப் பார்த்து மதிப்பீடு செய்யவில்லை என ஒரு நீதிபதி கூறினால், அவருடைய தர்க்க அறிவு நம்மைத் திடுக்கிடத்தான் வைக்கிறது.
பரிசுப்பொருள்
கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா
ஜெயா-சசி கும்பலால் வளைத்துப் போடப்பட்ட கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா
இலஞ்சத்தின் இன்னொரு பெயர்தான் அன்பளிப்பு என்பது ஊரறிந்த உண்மை. அப்படிபட்ட அன்பளிப்புகளை வருமானமாக எடுத்துக் கொள்ளலாம் எனத் தனது தீர்ப்பில் கூச்சமின்றிக் கூறியிருக்கிறார், நீதிபதி குமாரசாமி.
1992-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் நாள் தனது 44-வது பிறந்த நாளைக் கொண்டாடியபொழுது, தனது கட்சியின் தொண்டர்கள் பணமாகவும் பொருட்களாகவும் ஏராளமான அன்பளிப்புகளைத் தனக்கு வழங்கிய வகையில் 2,15,00,012 ரூபாய் வருமானம் வந்தது. மேலும், வெளிநாட்டில் வசித்த ஒருவர் தனக்கு 77,52,059 ரூபாயை வங்கி வரைவுக் காசோலை மூலம் அன்பளிப்பாக அளித்தார். இந்த அன்பளிப்புகளுக்கு உரிய வருமான வரியைச் செலுத்தியிருக்கிறேன்.எனவே, இந்த அன்பளிப்புகளை வருமானமாகக் கருத வேண்டும் என்பது குற்றவாளி ஜெயா தரப்பு வாதம்.
“பொது ஊழியராக இருப்பவர் அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால், இலஞ்சம் வாங்குவதற்கு சட்டம் உருவாக்கி வைத்துள்ள தடைகளை அன்பளிப்பு என்ற வழியில் எளிமையாகக் கடந்துவிடுவார்கள்” என்ற வாதத்தைத் தனது தீர்ப்பில் முன்வைத்து ஜெயா-சசி கும்பலின் இந்த ‘வருமானத்தை’ ஒதுக்கித் தள்ளிய நீதிபதி குன்ஹா, ஜெயா பெற்ற அன்பளிப்புகள் குறித்து பலத்த சந்தேகத்தையும் தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.
“1987-88 முதல் 1992-93 வரையிலான ஆண்டுகளுக்கான தனது வருமான வரிக் கணக்கை, 1992 நவம்பரில் ஜெயா தாக்கல் செய்தபொழுது, அதில் தனது 44-வது பிறந்தநாளில் பரிசாகக் கிடைத்த ரொக்கம், நகைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சில ஆண்டுகள் கழித்துதான், தனக்குப் பிறந்த நாள் பரிசுகள் கிடைத்த விவரத்தைக் குறிப்பிட்டு வருமான வரித்துறைக்குக் கடிதம் எழுதி தெரியப்படுத்தி இருக்கிறார். அந்த சமயத்திலும்கூட எந்த பிறந்த நாளில் எவ்வளவு பரிசுகள் கிடைத்தன என்பது பற்றிய விவரங்களைக் குறிப்பிடவில்லை. ‘இந்த வருமானங்களை எந்த வழியில் வந்தது என்று தெரியாத வருமானங்கள்’ என வருமானவரித் துறை பதிவு செய்திருக்கிறது. மேலும், ஜெயாவிற்கு வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறப்படும் 77 இலட்ச ரூபாய்க்கான காசோலை குறித்து வழக்கும் நடந்து வருகிறது” எனத் தனது தீர்ப்பில் விவரித்துள்ள நீதிபதி குன்ஹா, இவற்றின் அடிப்படையில், “பரிசுப் பொருட்களாக வந்திருந்தாலும், அவற்றுக்குச் சரியான ஆதாரங்கள் இருந்தாலும்கூட, அவற்றை ஜெயலலிதா பெற்று தனது உடமையாக்கிக் கொண்டது ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றம்தான்” என அறிவித்தார்.
சுதாகரன் திருமணப் பந்தல்நீதிபதி குன்ஹாவின் வாதங்களில் ஒன்றுக்குக்கூட நீதிபதி குமாரசாமி பதில் அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, பரிசுப் பொருட்கள் பற்றித் தாமதமாக வருமான வரித் துறைக்குத் தெரிவித்திருப்பதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்ற முறையில் இந்த அன்பளிப்பு விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்டுள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்து 77 இலட்ச ரூபாய் பரிசாக வந்தது தொடர்பாக சி.பி.ஐ. தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதையும் அலட்சியப்படுத்திவிட்டு, ஜெயாவுக்கு 44-ஆவது பிறந்த நாளுக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களில் இருந்து ஒன்றரைக் கோடி ரூபாயை வருமானமாகக் கணக்குக் காட்டியிருக்கிறார்.
நமது எம்.ஜி.ஆர்.
பரிசுப் பொருள் விவகாரத்தைவிடப் பலமடங்கு மோசடிகள் கொண்டது நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை டெபாசிட் திட்டம். சொத்துக் குவிப்பு வழக்கு தம் மீது பாய்ந்த பிறகு, அதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தோடுதான் இப்படியொரு டெபாசிட் திட்டத்தை உருவாக்கியது, ஜெயா- சசி கும்பல். இதன் மூலம் தமக்கு 14 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் வந்ததாக ஜெயா-சசி கும்பல் வாதாடி வந்தது. இதற்குரிய ஆதாரங்கள் எதையும் காட்டாமல், துணிந்து வருமான வரித் துறைக்கு இந்த வசூல் தொடர்பான கணக்கினைக் கொடுத்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் உரிய ஆதாரங்களைக் கேட்டபொழுது, அதற்குரிய ரசீதுகளை காரில் கொண்டுவரும்பொழுது தொலைந்து போவிட்டதாக ஒரு அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டதோடு, இது தொடர்பாக புகாரும் பதியப்பட்டிருப்பதாக கதையளந்தது. பின்னர், மோசடிக்கு மேல் மோசடியாக, காணாமல் போன ரசீதுகள் திரும்பக் கிடைத்துவிட்டதைப் போல போலியான ரசீதுகளைத் தயாரித்து வருமான வரித் துறையிடம் அளித்தது.
இந்த மோசடிகள் ஒவ்வொன்றையும் ஆதாரங்களோடு நிரூபித்த நீதிபதி குன்ஹா, இந்த டெபாசிட் திட்டமே போலியானது எனத் தீர்ப்பில் உறுதிப்படுத்தினார். மேலும், 1991-96 கால கட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மூலம் தமக்கு 4.19 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைத்தது என ஜெயா-சசி தரப்பு வாதாடியது. இந்த வருமானத்தை நிரூபிப்பதற்குத் தரப்பட்ட வரவு-செலவு அறிக்கையும் போலியானது என விசாரணையின் போது நிரூபணமானதால், இந்த வருமானத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்தார் நீதிபதி குன்ஹா.
நீதிபதி குமாரசாமி நமது எம்.ஜி.ஆர். டெபாசிட் திட்டத்தின் மூலம் கிடைத்ததாகச் சொல்லப்பட்ட 14 கோடி வருமானத்தைக் கணக்கில் கொள்ளவில்லையென்றாலும், இது தொடர்பான குற்றவாளிகள் தரப்பு சாட்சியங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும் என ஜெயா கும்பலுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார். மேலும், ஜெயா பப்ளிகேஷன்ஸ் மூலம் 4 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்ற குற்றவாளிகளின் தரப்பு வாதத்தை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார்.
“வருமான வரித் துறைக்குக் கணக்கு தாக்கல் செய்து, வரியைக் கட்டிவிட்டார்கள்” என்ற ஒற்றை வாதத்தை முன்வைத்தே, ஜெயா-சசி கும்பலின் தில்லுமுல்லு கணக்குகள் அனைத்தையும் தனது தீர்ப்பில் வெள்ளையாக்கிவிட்டார், நீதிபதி குமாரசாமி. சுதாகரன் பெயரில் தொடங்கப்பட்ட சூப்பர் டூப்பர் நிறுவனம் ஆறே மாதத்தில் கடையைக் காலிசெய்துவிட்டது. ஆனாலும், அந்த நிறுவனம் தனது சந்தாதாரர்களிடமிருந்து வசூலித்ததாகச் சொல்லப்பட்ட ஒரு கோடி ரூபாயையும்; ஜெயாவும் சசியும் பங்குதாரர்களாக இருந்து நடத்தி வந்த ஜெராக்ஸ் கடையான சசி எண்டர்பிரைசஸ் மூலம் 25 இலட்ச ரூபாயும்; ஹைதராபாத் திராட்சை தோட்டத்திலிருந்து 52,50,000 ரூபாயும் வருமானமாக வந்ததாகக் கணக்குக் காட்டியிருக்கிறார், அவர்.
லெட்டர் பேடு கம்பெனிகள்
நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
ஜெயா-சசி கும்பலின் மோசடி வரவு-செலவு கணக்குகளை அம்பலப்படுத்தி, அவர்களை ஊழல் குற்றவாளிகள்தான் என நிறுவி தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.
1991-ம் ஆண்டில் தமிழக முதல்வராக ஜெயா பதவியேற்றபொழுது, ஜெயா-சசிகலா இருவரும் சேர்ந்து இரண்டு நிறுவனங்களை – ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் – மட்டும்தான் நடத்திவந்தனர். அதன் பிறகு கம்பெனிகளின் எண்ணிக்கை தடாலடியாக 32 ஆக அதிகரித்தது. புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் திட்டமிட்டே ஜெயாவைத் தவிர்த்த மற்ற மூன்று குற்றவாளிகளைப் பங்குதாரர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்களின் பெயரில் 52 வங்கிக் கணக்குகளும் தொடங்கப்பட்டன.
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான காலகட்டத்தில் (1991-96) ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர். மற்றும் புதிதாகத் தொடங்கப்பட்ட கம்பெனிகளுள் குறிப்பிட்ட ஆறு நிறுவனங்களுக்கு இடையே இலட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் குறுக்குநெடுக்குமாக நடந்தன. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் ஏதோ மிகப்பெரிய வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததைப் போலத் தோற்றம் உருவாக்கப்பட்டது.
நமது எம்.ஜி.ஆர்., ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், வினோத் வீடியோ விஷன், மஹாசுப்புலெட்சுமி கல்யாண மண்டபம் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளில் நடந்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவு அறிக்கைகள், இலாப நட்டக் கணக்குகள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது ஆடிட்டர்கள் அளித்த வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டது.
சசிகலாவுக்கும் இளவரசிக்கும் ஆடிட்டராக இருந்த பாலாஜி, “இந்த நிறுவனங்கள் எந்தக் காலகட்டத்திலும் எதையும் உற்பத்தி செய்யவுமில்லை. பொருட்களை வாங்கி விற்கவுமில்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில் மட்டும் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன” எனச் சாட்சியம் அளித்தார்.
போயசு தோட்டத்து வீட்டிலிருந்துதான் ஒவ்வொரு முறையும் இலட்சக்கணக்கான ரூபாய் பணம் பைகளிலும் சூட்கேஸ்களிலும் அடைக்கப்பட்டு வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதும், போயஸ் தோட்டத்தில் டிரைவராக வேலை பார்த்த ஜெயராமன்தான் வங்கிக்குச் சென்று இந்தப் பணத்தைப் போட்டிருப்பதும், சசிகலாதான் ஜெயராமனிடம் இந்த வேலைகளை ஒப்படைத்தார் என்பதும் சிறப்பு நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.
03-caption-2இவற்றுக்கெல்லாம் அப்பால், வடக்குக் கடற்கரை துணை பத்திரப் பதிவாளரும், தோட்டக்கலைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணனும் அளித்துள்ள சாட்சியத்தில், போயஸ் தோட்டத்து வீட்டில் வைத்து பதிவு செய்யப்பட்ட ஆறு பத்திரங்கள் யார் வாங்குகிறார் என்ற விவரம் இல்லாமல், விதிமுறைகளை மீறிப் பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
இவற்றின் அடிப்படையில்தான், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று குற்றவாளிகளும் முதல் குற்றவாளியான ஜெயாவின் பினாமிகளாகச் செயல்பட்டனர்; குற்றவாளிகள் நால்வரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டனர் என நிரூபித்தார், நீதிபதி குன்ஹா. “குற்றவாளிகள் நால்வரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர் எனக் கூறுவதற்கு இடமில்லை. ஜெயா மற்ற மூவரையும் தனது வீட்டில் மனிதாபிமான அடிப்படையில் தங்க அனுமதித்தார் என எடுத்துக் கொள்ளவும் முடியாது. மாறாக, ஜெயாவின் சொத்துக்களுக்கு பினாமியாகச் செயல்படுவது என்ற சதித் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்தின் அடிப்படையில் மட்டும்தான் குற்றவாளிகள் மூவரும் முதல் குற்றவாளி வீட்டில் தங்கி வந்தனர்” என்ற முடிவுக்கு வருகிறார், நீதிபதி குன்ஹா.
குன்ஹாவின் இந்த தர்க்க நியாயத்திற்குப் பதில் அளிக்காத நீதிபதி குமாரசாமி, “சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் தனித்தனியாகத் தேசிய வங்கிகளிடமிருந்தும் தனியாரிடமிருந்தும் கடன்களை வாங்கியுள்ளனர். இந்தக் கடன்கள் வழியாகத்தான் தங்களது பெயர்களில் சொத்துக்களை வாங்கியுள்ளனர். அவர்களுக்குப் பணம் வந்த வழியும் சட்டபூர்வமானது, அவர்களது நோக்கமும் சட்டபூர்வமானது. எனவே, இவர்கள் மூவரும் ஜெயாவிற்கு பினாமியாகச் செயல்படவுமில்லை; கூட்டுச் சதியிலும் ஈடுபடவுமில்லை. குற்றவாளிகள் மூவரும் முதல் குற்றவாளியுடன் ஒரே வீட்டில் வசித்தனர் என்பதைக் கொண்டு கூட்டுச் சதியில் ஈடுபட்டனர் என முடிவு செய்ய முடியாது” எனக் குறிப்பிட்டு குற்றவாளிகள் நால்வரையும் விடுவித்துள்ளார்.
கருப்புப் பண முதலைகள் அனைவரும் சட்டத்திற்குப் புறம்பாகத் தாம் சம்பாதித்த சொத்துக்களை வெள்ளையாக்குவதற்குக் கடன் என்ற வழியைப் பயன்படுத்திக் கொள்வது இன்று சர்வசாதாரணமாக நடந்துவரும் நிலையில், நீதிபதி குமாரசாமி குருட்டுத்தனமாக சசிகலாவும், சுதாகரனும், இளவரசியும் வாங்கிய கடன்களைக் காட்டி, அவர்கள் ஜெயாவின் பினாமிகள் அல்ல என வாதிடுகிறார்.
அரசு அதிகாரிகளை போயசு தோட்டத்துக்கு வர உத்தரவிட்டு, பெயர் குறிப்பிடாமல் ஆறு பத்திரங்களைப் பதிவு செய்ததை நீதிபதி குன்ஹா பினாமி குற்றத்துக்கும், கூட்டுச் சதிக்கும் ஆதாரமாகக் காட்டுகிறார். ஆனால், நீதிபதி குமாரசாமியோ, “யார் வாங்குகிறார்கள் என்ற விவரம் இல்லாமல் பத்திரப் பதிவு நடந்திருப்பதை, சொத்துக்கள் குறைந்த மதிப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பதை”க் குற்றங்களாக, சதியாகக் கருதாமல், அவை குறித்து சம்மந்தப்பட்ட துறைதான் விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு நழுவிக் கொள்கிறார்.
1970-களில் உச்சநீதி மன்றம் கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி என்பவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் “ஒரு பொது ஊழியருக்கு 10 சதவீதம் வரை கணக்கில் வராத வருமானம் இருக்கலாம்” என வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பொருந்தும் வகையில் தனது தீர்ப்பை எழுதியிருக்கும் நீதிபதி நீதிபதி குமாரசாமி, அதற்காகவே ஜெயாவின் வருமானத்தையும் செலவுகளையும் தன்னிச்சையாக மாற்றி அமைத்திருக்கிறார்.
தேசிய வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட 10 கோடி ரூபாய் கடன்களைப் பட்டியல் போட்டுவிட்டு, அதனை மிகவும் அலட்சியமாக 24 கோடி ரூபாய் எனப் பிழையாகக் கூட்டிப் போடுகிறார். இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பு தமது வருமானத்திற்கு வரி கட்டிவிட்டோம் என வாதிடுவதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை எனப் பல முன்னுதாரணமான தீர்ப்புகள் இருந்தும், நீதிபதி குமாரசாமி அவற்றையெல்லாம் குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஜெயா-சசி கும்பலுக்குத் தனிச் சலுகை அளித்து, அவர்களது இலஞ்சப் பணத்தை வருமானங்களாகச் சேர்த்துக் கொள்கிறார்.
ஜெயா-சசி கும்பல் தம் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டவுடன், தமது வருமானத்தை அதிகரித்துக் காட்ட நமது எம்.ஜி.ஆர். டெபாசிட் திட்டம் உள்ளிட்டுப் பலவகையான போலியான, மோசடியான வரவு-செலவு அறிக்கைகளைத் தயார் செய்தது போலத்தான் இந்தத் தீர்ப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது. நாலும் மூனும் எட்டு என்ற கூட்டுப் பிழை நீதிபதி குமாரசாமியைக் கத்துக்குட்டித்தனமான கணக்குப் பிள்ளை எனக் காட்டிவிட்ட போதும், அப்பிழை ஒரு நீதிபதியின் பேனாவிலிருந்து வந்துவிட்டதால் சட்டபூர்வ தகுதியைப் பெற்றுவிட்டது.
                                                                                                                                            – செல்வம்

நன்றி:-
புதிய ஜனநாயகம், 
ஜூன் 2015

=======================================================================

ஈழத்துரோகி கருணாநிதி?

ஈழத்துரோகி



கருணாநிதி?

"ஈழத்தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக் கூட அசைக்க கருணாநிதி தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை" - பழ. நெடுமாறன், 

"தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃ
பார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன்." - சுப்பிரமணியன் சுவாமி, 'விகடன் மேடை' - 04.07.2012

மேற்காணும் இரு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறானவையாக உள்ளன. ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலைக் கூடக் கலைஞர் அசைக்கவில்லை என்கிறார் ஒருவர். தன் ஆட்சி அதிகாரம் முழுவதையும் அவர்களுக்காக அவர் பயன்படுத்தினார் என்கிறார் மற்றொருவர்.


இவை இரண்டும் எதிரெதிர்க் கருத்துகளாக இருந்தாலும், கருத்துகளை வெளியிட்டுள்ள இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான். கலைஞரைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது மட்டுமே இருவரின் விருப்பமும் ஆகும். எதிரெதிர்த் திசைகளில் நின்று கலைஞரைத் தாக்கும் இருமுனைத் தாக்குதல் இது.

ஒருவர் ஈழ விடுதலையை முழுமையாக ஆதரிப்பவர். மற்றவர் ஈழ விடுதலையை முழுமையாக எதிர்ப்பவர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர், மோதிக்கொள்ள மாட்டார்கள். இருவரும் இணைந்து கலைஞருடன் மட்டுமே மோதுவார்கள். இது வெகுநாள்களாக நடந்துகொண்டிருக்கும் குள்ளநரித்தந்திரம்.

அ.தி.மு.க.வின் துரோகத்தைக் கண்டித்தும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.மு.க. எடுக்கும் எல்லா நடவடிக்கையும் முழுமையாக ஆதரித்தும் அன்று அறிக்கை விட்ட அதே நெடுமாறன் அவர்கள்தான், "எம்.ஜி.ஆர். அப்போது நல்லது செய்தார் என்றும், கலைஞர் துரோகம் செய்தார்" என்றும் முற்றிலும் நேர் மாறாக இன்று பேசுகிறார். துரோகம் செய்த ஒரு கட்சிக்கா நெடுமாறன் தன் முழு ஆதரவையும் வழங்குவார்?

"அ.தி.மு.க. அரசு துரோகம் இழைக்கிறது" என்னும் தலைப்பின் கீழ் உள்ள இணைத்துள்ள பேட்டியின் கடைசிக் கேள்வி-பதிலை நன்றாகக் கவனிக்க வேண்டும். இதோ அந்தக் கேள்வி-பதில்:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தி.மு.க. போராட்டம் நடத்த உள்ளதே?

நெடுமாறன் : அதை வரவேற்கிறேன். அவர்கள் பணியை அவர்கள் செய்கிறார்கள். மற்ற கட்சிகளும் இது போன்று போராட வேண்டும். எங்கள் கட்சியும் இதுபற்றி விரைவில் கூடி முடிவெடுக்கும்.

அது மட்டுமின்றி, எல்லாக் கட்சிகளும், இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார். எல்லாவற்றையும் தாண்டி "தன் கட்சியே இனிமேல்தான் முடிவெடுக்க உள்ளது" என்கிறார். எனவே, நெடுமாறன் அவர்கள் கட்சிக்கே, ஈழப் பிரச்சினையில் தி.மு.க. தான் வழிகாட்டியாக இருந்திருக்கிறது என்பது அவரே தரும் செய்தி.

இன்று தி.மு.க.வையும், கலைஞரையும் கடுமையாகத் தாக்கும் நெடுமாறன், அன்று எம்.ஜி.ஆர். அரசு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதாகவும், தி.மு.க. தன் பணியைச் சரியாகச் செய்வதாகவும் கூறியிருப்பது மிகப் பெரும் முரண்பாடு இல்லையா? ஏன் இந்த முரண்பாடு? விடை மிக எளியது. அன்று அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்தார். 1984 இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆரை விட்டுப் பிரிந்து வந்து தி.மு.க.வுடன் அவர் கட்சி கூட்டணி அமைத்துக் கொண்டது.

அப் பொதுத் தேர்தலில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் (பழனி), மதுரை மத்தி, மானாமதுரை, லால்குடி, நத்தம், திருவையாறு உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் அவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. அப்போதே ஈழம் பற்றிப் பேச, அவருக்கு நாடாளுமன்றம் செல்ல ஒரு வாய்ப்பிருந்தது. அங்கு சென்று தன் தரப்பு வாதத்தை அழகாக அழுத்தம் திருத்தமாக மத்திய அரசாங்கத்திற்கு எடுத்து வைத்திருந்திருக்க முடியும். ஆனால் அதை தட்டி கழித்துவிட்டு பழனி பாராளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிடாமல், எஸ்.ஆர்.வேலுச்சாமி என்பவரை அத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்திவிட்டுத் தான் மதுரைச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஏறத்தாழ இரண்டாயிரம் வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

எனவே நெடுமாறன் அவர்களின், ஈழம் பற்றிய கருத்துகள், அவர் அவ்வப்போது சார்ந்திருக்கும் கூட்டணியைப் பொறுத்ததாகவே இருந்து வருகின்றன என்பது தெளிவாகின்றது. இதில் கலைஞரை குறை கூறுகிறார்.

இன்று தமிழகத்தில் ஈழ வியாபாரிகள் சீமான் [எ]சைமன் ,வேல்முருகன்,பழ.நெடுமாறன்,போன்றோருக்கு தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்சேவை திட்டுவதை விட,பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவை திட்டுவதை விட ஈழத்தமிழர் பிரச்னைக்காக இருமுறை பதவியை இழந்த ராஜீவ் காந்தி கொலையான போது எதோ இவர்தான் கொன்றது போல் கடும் அடக்குமுறைக்கு ஆளான கருணாநிதியை திட்டுவதும்-புழுதி வாரி தூற்றுவதும் எளிதாக இருக்கிறது.வாங்கிய காசுக்கு விடுதலைப் புலிகளுக்கு,மாவீரன் பிரபாகரனுக்கு  எதிரானவரை ஈழத்தாய் என்பதிலேயே அவர்களின் வியாபரத்தந்திரம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இப்போது கனி மொழி கூறியதாலேயே விடுதலைப்புலிகள் துப்பாக்கியை விட்டு விட்டு சரணானதாக புதுக்கரடி வந்துள்ளது.இவ்வளவு நாள் கழித்து வரக் காரணம்  ரா.கி.நகர் இடைத்தேர்தல் .
என்னவோ விடுதலைப்புலிகள் பிரபாகரனை விட கனி மொழியின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் போல் இந்த கரடி கத்திக்கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆருக்கு இணக்கமாக இருந்த பிரபாகரன் கடைசிவரை கருணாநிதியை கண்டு கொள்ளவே இல்லை.
டெசோ மாநாடு நடத்தி ஈழப் போராளிகளுக்கு நிதி வழங்கிய போது கருணாநிதியிடம் இருந்து நிதி வாங்க மறுத்தவர் பிரபாகரன்.
கருணாநிதிதான் ஈழப் போராட்டத்துக்கு தமிழினம் என்ற ஒரே காரணத்துக்காக வலிய சென்று ஆதரவினை அளித்து ராஜீவ் கொலையால் அசிங்கப்பட்டு பதவியையும் இழந்தார்.
ஆனால் விடுதலைப்புலிகள் கருணாநிதியை அவர் ஆதரவை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.அதுவும் உலகறிந்த உண்மை.
அப்படி பட்ட புலிகள் கருணாநிதி மகள் என்ற காரணத்தால் கனி மொழி அறிவுரைப்படி நடந்து கொண்டார்கள்,சரணடைந்தார்கள் என்பது இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை,அல்லது புளுகு என்பது வெளிப்படை.

இந்த அளவுக்கு கருணாநிதி மீது சேற்றை அள்ளி வீசக் காரணம்.

அவர் இந்த 92 வயதிலும் தமிழினத்தலைவராக இருப்பதுதான்.
அவரைக் கண்டு இன்னமும் தமிழின விரோதிகள் பயப்படுகிறார்கள் என்பதுதான்.
கருணாநிதியை சுற்றித்தான் இன்னமும் தமிழக அரசியல் சுழலுகிறது என்பதையே இந்த புளுகுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வேறு காரணம்.
இப்போதைக்கு இல்லை.
==================================================
அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக, எவரெஸ்ட் மலைச்சிகரம் மூன்று செண்டிமீட்டர் தென்மேற்காக நகர்ந்துள்ளது என சீனாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அந்த மலையின் உயரத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என சீனாவின் தேசிய கணக்கெடுத்தல், வரைபடங்கள் மற்றும் புவிசார் தகவல்களுக்கான நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவுகொண்ட அந்தக் கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக எட்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். உடமைகளுக்கு பெரும் சேதமும் அழிவும் ஏற்பட்டன.
அந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான நிலச்சரிவுகளும், பனிசரிவுகளும் ஏற்பட்டன.
இதே வேளை தலைநகர் காட்மாண்டு நகரமும்கூட தெற்கு நோக்கி இரண்டு மீட்டர்கள் நகர்ந்துள்ளது என நேபாள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்தக் கடுமையான நிலநடுக்கத்துக்குப் பிறகு எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் மீதும் ஏறும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன.
========================================================================

சனி, 13 ஜூன், 2015

தேர்தல் களத்தில்.வரலாற்று நாயகர்கள்

1957 அப்போது கேரளத்தின் முதலமைச்சர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் உலகத்திலேயே புரட்சியின் மூலமாக அல்லாமல் மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது கம்யுனிஸ்ட் முதலமைச்சர் தோழர் இ.எம்.எஸ்.இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநில அரசு மக்களுக்காக என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்தார். 
அப்போது இந்தியா விடுதலை அடைந்து 10 ஆண்டுகள்தான் ஆகி இருந்தது. அப்போது இ.எம்.எஸ். அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர், 
பிற்காலத்தில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து ஓய்வுபெற்ற மனித உரிமைப் போராளி கிருஷ்ணய்யர்.
கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பெரும் நில உடமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். 
இவர்களில் பலர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள். இவர்கள் இ.எம்.எஸ்.சையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் எதிர்த்து கலகக் கொடி பிடித்தனர். இவர்களின் பாச்சா ஒன்றும் இ.எம்.எஸ்.சிடம் பலிக்கவில்லை.
அப்போது கேரளத்தின் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே கத்தோலிக்க மத நிறுவனங்களின் ஆதிக்கத்தில்தான் இருந்தன. இவற்றின் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதோ கேரள மாநில அரசு. 
இக்கல்வி நிறுவனங்களை இ.எம்.எஸ் அரசு தனது சொந்தப் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. அப்பள்ளிகளை அதுவரை நிர்வகித்த நிர்வாகிகள் அகற்றப்பட்டனர்.
அதுவரை மழைக்குக் கூட பள்ளிக் கூட வராண்டாக்களில் ஒதுங்க அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்டோர் வீட்டுப் பிள்ளைகள் இப்பள்ளிக் கூடங்களில் லட்சக்கணக்கில் படிக்கத் துவங்கினர்.
தேயிலை, காபி, ரப்பர் தோட்டத் தொழிலாளர், விவசாயக்கூலித் தொழிலாளர் அனைவருக்கும் குறைந்தபட்சக் கூலி, இவர்கள் உயிரிழந்தால் இவர்களின் குடும்பப் பாதுகாப்பு உத்தரவாதச் சட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்தினார்.
 அவர் செய்த ஒவ்வொன்றையும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே செய்தார்.1957ல் இப்போது இருக்கிற அளவிற்கு செய்தி தொடர்பு நிறுவனங்கள் கிடையாது. ஆனால் கேரளத்தில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை செய்து வருகிற மக்கள் நலத்திட்டங்கள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காட்டுத் தீயாய் பரவின.
அப்போதைய இந்திய பிரதமர் மனிதருள் மாணிக்கம் என்று புகழ் பெற்றிருந்த ஜவஹர்லால் நேரு இ.எம்.எஸ்.சின் நடவடிக்கைகளினால் அச்சத்திற்கு உள்ளானார். அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அக்ராசனர் இந்திரா காந்தி.அவர் காங்கிரஸ் தலைவர்களையும் கத்தோலிக்க மத குருமார்களையும் கொண்ட ஒரு முன்னணியை அமைத்தார்.
அதற்கு கேரள மறு விமோச்சன கூட்டணி என்று பெயரிட்டார்.இந்தக் கூட்டணி வரலாறு காணாத வன்முறைகளை, ரத்தக் களறிகளை கேரளா முழுவதிலும் கட்டவிழ்த்துவிட்டது.
இந்நேரத்தில்தான் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தேவிகுளம் பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் இடம் காலியானது. ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒற்றை உறுப்பினர் மெஜாரிட்டியில்தான் இ.எம்.எஸ். அமைச்சரவை கேரளத்தில் பதவியில் இருந்தது.கம்யூனிஸ்ட் வேட்பாளராக ரோசம்மாபுன்னூஸ் நிறுத்தப்படுகிறார். 
இவர் தேர்தலில் ஜெயித்தால்தான் இ.எம்.எஸ்சின் கம்யூனிஸ்ட் அமைச்சரவை பதவியில் நீடிக்க முடியும்.ஆனாலும் இ.எம்.எஸ். கம்பீரமாக இப்படி அறிவிக்கிறார்: “தேவிகுளம் பீர்மேடு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதலமைச்சராகிய நானோ, எனது அமைச்சரவை சகாக்களோ செல்லமாட்டோம். யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவெடுக்க வேண்டியவர்கள் அந்த தொகுதி வாக்காளர்கள் மட்டும்தான்.”அந்தத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரோசம்மாபுன்னூஸ் அமோக வெற்றி பெற்றார்.
இப்படியும் இஎம்எஸ் நம்யூதிரிபாட் போன்ற ஒரு முதலமைச்சர் இந்தியாவில் இருந்திருக்கிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் இந்நிகழ்வு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே இன்னுமொரு வரலாற்று நாயகர் இருக்கிறார். 
 காமராஜர். 1954ல் இருந்து 1965 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் . 
இவர் ஒரு அமைதிப் புரட்சியாளர். 
இவர் தமிழகத்தை புயல் பாய்ச்சல் வேகத்தில் வளர்ச்சிப் பாதையில் இழுத்துச் சென்றார்.அவர் பொறுப்பேற்ற சமயம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் இடம் காலியாக இருக்கிறது. அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது.
அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஒரு பழைய ஜீப்பில் ஏறி வேலூருக்குத் தனியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் காமராஜர்.குடியாத்தம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக வி.கே.கோதண்டராமன் களம் காண்கிறார்.
1957ல் கேரள முதலமைச்சர் அந்த தேவிகுளம் பீர்மேடு தொகுதியின் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரோசம்மாவின் வெற்றியில் தான் தனது அமைச்சரவையின் உயிர்த் துடிப்பு இருக்கிறது என்பதை அறிந்திருந்தும் கூட அந்த தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு செல்ல மறுத்தார்.
 தனது அமைச்சரவை சகாக்களுக்கும் தடை விதித்தார்.
அந்த அளவிற்கு காமராஜருக்கு நெருக்கடி இல்லைதான். 
அவர் குடியாத்தத்தில் தோற்றுப் போனாலும் எம்எல்சி ஆகி தமிழக முதல்வராகத் தொடரலாம்.
அதற்கு அவருடைய தன்மானம் இடம் தரவில்லை.தான் போட்டி இடுகிற குடியாத்தம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு எந்த ஒரு அமைச்சரும், அதிகாரிகளும் வரக் கூடாது என்றார். உதவிக்கு அவர் எப்போதும் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிற வைரவன் மட்டும்தான்.குடியாத்தம் தொகுதியில் தனது திறந்த ஜீப்பில் கிராமம், கிராமமாகச் சென்று ஓட்டுக் கேட்டார். 
அப்போது பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். நான் இங்கே முதலமைச்சராக வரவில்லை. ஒரு வேட்பாளராக மட்டுமே வந்திருக்கிறேன். அதனால் நீங்கள் என்னிடம் மனு கொடுப்பது தவறு. நான் மனு வாங்குவதும் தவறு என்று கூறி மறுதளித்தார் காமராஜர்.அந்த மக்களிடம் காமராஜர் திருப்பிக் கேட்டார்:
இங்கே கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஓட்டுக் கேட்க வந்தால் இதே மாதிரி மனு கொடுக்காவா செய்வீர்கள்? 
கடைசி வரை குடியாத்தம் தொகுதி மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் அளிக்க மறுத்தார் காமராஜர்.
விடியற்காலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரை ஒரு பழைய ஜீப்பில் ஒவ்வொரு கிராமமாக குடியாத்தம் தொகுதி முழுக்கவும் சுற்றிச் சுற்றி வந்தார் காமராஜர்.
ஒவ்வொரு நாள் இரவிலும் அவருடைய பிரச்சாரம் எங்கு முடிகிறதோ அந்த ஊரில் உள்ள காங்கிரஸ்காரர் வீட்டில் இரவு உணவு உண்டு தூங்கினார் காமராஜர்.
அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வி.கே.கோதண்டராமன், இப்பகுதியின் விவசாயிகள், பீடித் தொழிலாளர்களின் நன்மைக்காக பல போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியர். இவர் சுதந்திரமாக கட்சி வேலை செய்த காலத்தை விடவும் சிறையில் இருந்த காலமும் தலைமறைவாக இருந்த காலமும்தான் அதிகம்.“கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் அப்பழுக்கற்றவர். 
மக்களை நேசிப்பவர். 
என்னைப் பற்றியும் உங்களுக்கே தெரியும். அனைத்தையும் யோசித்துப் பார்த்து வாக்களியுங்கள்” என்று பல ஊர்களில் பெருந்தன்மையாக பேசி காமராசர் ஓட்டு சேகரித்ததாக காமராஜரின் உதவியாளர் வைரவன் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
வைரவன் அந்நூலிலேயே ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். 
அன்று பிரச்சாரம் முடிந்த ஊரில் உள்ள ஒரு காங்கிரஸ்காரர் வீட்டில் ஜன்னல் கதவுகளை எல்லாம் திறந்து விட்டு தூங்கியிருக்கிறார் காமராஜர். அப்போது மழை பெய்திருக்கிறது. 
அந்த வீட்டு முற்றத்தில் கயிற்றுக் கட்டிலை போட்டு போர்வை தலை யணை எல்லாம் விரித்து வைரவன் தூங்கியது காமராஜருக்கு தெரியும்.மழை பெய்வதை அறிந்த காமராஜர் பட்டென எழுந்து முற்றத்திற்கு ஓடியிருக்கிறார். மழை பெய்வதை அறியாமல் பகலெல்லாம் அலைந்த களைப்பில் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் வைரவன்.“
அடே வைரவா அடே வைரவா எழுந்திரு... தலையணை, போர்வையை தூக்கிக்கிட்டு உள்ளே ஓடுடா” என்று வைரவனை வீட்டுக்குள் விரட்டி விட்டு, வைரவன் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலை காமராஜரே வீட்டிற்குள் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்.
1954ல் நடந்த இந்த நிகழ்வும் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பெருந்தலைவர் காமராஜ் என்கிற பெருமை மிக்க இரு வரலாற்று நாயகர்கள் தேர்தல் களத்தில் மாசு மருவின்றி எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத்தான் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

இன்றையத் தேர்தல் ஆணைய செயல்பாடு,நடைமுறைகளை
 யும் ஆளுங்கட்சியினரின் அடாவடி பிரச்சாரத்தையும் அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க.பார்க்க வேதனைதான் மிஞ்சுகிறது. முடியுமா?-

கருப்பன் சித்தார்த்தன்.
 நன்றி : ஜனசக்தி.
========================================================================
இந்த மாத்திரை தயாரிக்கப்பட்டது:04/2016.
காலாவதி நாள்:03/2018.
இந்திய மக்கள் நலனை ஆட்சியாளர்கள் பாதுகாக்கும் விதம் ரொம்ப நன்னாயிருக்கு.
மாத்திரை விலைகளை கூட்டும் சுகாதாரத்துறைக்கு இவைகளை கண்காணிக்க மட்டும் முடியாதா?
========================================================================
இன்று,
ஜூன்-14.

  • உலக வலைப்பதிவாளர் தினம்
  • சர்வதேச ரத்தம் வழங்குதல் தினம்
  • அமெரிக்க கொடி நாள்
  • ஆப்கானிஸ்தான் அன்னையர் தினம்
  • ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது(1962)

========================================================================


.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...