ஞாயிறு, 31 டிசம்பர், 2017

பாஜக,வின் .பிரமாண்டமான 2ம் பாகம்,

"ஆன்மிக அரசியல்"

 இன்றைய நாளிதழ்களைப் பார்த்தாலே ரஜினி கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பைத் தவிர உலகில் வேறு சம்பவங்களே நடைபெறவில்லை என்றுதான் தோன்றுகிறது.

அதிலும் தமிழ் இந்து நாளிதழ் முதல் பக்கத்தில் கடைசி பக்கம் வரை ரஜினி,ரஜினி தான்.வேறு செய்திகளே இல்லாததால் தூக்கி புறம்வைக்க வேண்டியதாயிட்டு.உண்மையில் தூக்கி கடாசினேன்.
30 ஆண்டுகளாக அரசியலை ரஜினி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.
ஆணடவன் சொன்னால் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தெரிந்தவரிடம் ஆண்டவன் அரைகுறையாக ஏதோ சொல்லிருக்கலாம் என்றுதான் தெரிகிறது.

கட்சி ஆரம்பிக்கப்போவதாக்வும்,சட்டமனறத்தேர்தலை 234 தொகுதிகளிலும் போர் தொடுக்கவும் போவதாக சொல்லும் ரஜினி அடுத்ததாக சொல்பவைதான் அவரின் குழப்ப மனதை வெளிக்காட்டுகிறது.
தேர்தலை சந்திக்க இருப்பதால் "தான் உடன்பட ரசிகர்கள் அரசியலே பேசக் கூடாது.மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது."இது ரஜினியின் ரசிகர்களுக்கான கட்டளை.



அரசியலே பேசாமல் கட்சி துவக்குவது இந்திய அரசியல் வரலாற்றிலே இது முதல் முறை" என்று சொல்லலாம்.
ஆனால் அப்படி அரசியல் பேசாமலேயே ,ஆன்மிகம் என்று சொல்லி இன்று இந்தியாவையே அலறவைக்கும் அமைப்பும் இருக்கிறது.

அதுபலருக்கும் தெரிந்திருக்கும்.இன்னமும் தெரியாதவர்கள் கடைசி வரிக்கு வரும் போது தெரிந்து கொள்ளலாம்.
மக்களுக்கு எதுவுமே செய்யாமல் போராடாமல் சட்டமன்றத்தேர்தலை சந்தித்து முதல்வராகும் ரஜினியின் கொள்கை கீழ்க்கண்ட காதல் திரைப்பட வசனத்தை சார்ந்தே நிற்கிறது.

"முதல்ல  இந்த காமெடியன்,வில்லன் ரோல் எல்லாம்  "?

"அதெல்லாம் வேண்டாம் .ஸ்ட்ரைட்டா  ஹீரோதான்"

அல்லது மக்களிடம் தனக்குள்ள சூப்பர் ஸ்டார் மகிமையை வைத்து "நோகாமல் நொங்கு தின்பது "என்று கூட சொல்லலாம்.
இப்போதுள்ள சிஸ்டம் சரியில்லாமல் இருப்பதால் ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக வேறு பயங்காட்டுகிரர் .
இவரது இமயமலை ,பாபா ஆன்மிகம் அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் ரஜினியோ மதம் வேறு ,ஆன்மிகம் வேறு என்று சொல்லி அதிரவைக்கிறார்.

தோசைதான் ஆனால் அரிசி வேறு ,உளுந்து வேறு என்றுதான் இதற்கு பொருளை எடுத்தாள வேண்டும் போல்.
இங்கு தோசைதான்  மதம்.
ஆனால் ரஜினியின் உள் நோக்கமும்,அவரை அரசியலில் இப்படி இறங்க வைப்பதின் ரகசியமும் அவரின் குழப்ப வார்த்தைகளிலேயே தெரிகிறது.


மதமின்றி ஆன்மிகம் இல்லை.
இங்கு இந்து ஆன்மிகத்தில் அரசியல் செய்ய பாஜக,இந்து முன்னணிகள் உள்ளன.
இஸ்லாமிய ஆன்மிகத்துக்கு முஸ்லீம் லீக்,ம.ம.க ,என்று பல,,
கிறித்தவ ஆன்மிகத்துக்கு கிறிஸ்த ஐக்கிய முன்னணி உட்பட பல.

இதில் ரஜினி ஆன்மிக அரசியல் எதுவாக இருக்கும் என்பதை அறிய இமயமலை போய் தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கூட்டிக்கழித்துப்பார்த்தால் ரஜினி தனது ஆப்த நண்பர் சிரஞ்சீவியின்  பிரஜா சக்தி கட்சி பாணியை கையிலெடுப்பார் என்றே தெரிகிறது.

சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்து ஒன்றிரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனது முதல்வர் கனவு முடங்கியதால் காங்கிரசில் கட்சியை இணைத்து விட்டு ஒதுங்கியது போல் நடவடிக்கையைத்  தான் ரஜினியும் எடுப்பார் என்றே கணிக்க முடிகிறது.
இங்கு காங்கிரசுக்குப் பதில்  பாஜக .

இன்னொரு பக்கம் இருந்து பார்த்தால் தமிழகத்தில் காலை அல்ல விரலை கூட  பதிக்க இயலா பாஜகவுக்கு  கட்சிகளுக்கு எதிராக கூட இல்லாமல் நோட்டாவுக்கு எதிராக கூட வாக்குகளை பெற இயலா நிலை.

அவர்களுக்கு மாற்று முகம் தேவை.அரசியல் ஆசை,முதல்வர் பதவிமேல் ஆசை உள்ள ரஜினி சரியாவார்.
ஆனால் ரஜினி பாஜகவில் நேரடியாக சேர்ந்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள்.ஆனால் அவர் தேர்தலில் விஜயகாந்த் நிலையடைவார்.

அல்லது அடுத்த கங்கை அமரன்.

காரணம் பாஜகவின் ஆன்மிக அரசியல் அப்படி .
ஆன்மிக அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ்,சின் புதிய படைப்பான பாஜகவின் இரண்டாம் பாகம் 2.0  பிரமாண்டமான தயாரிப்புதான் ரஜினி கட்சி .
திரைக்கு வரும் இரண்டாம் பாகங்கள் அனைத்துமே  வெற்றி பெற்றுவதில்லை.

இவ்வளவு நாள் ரஜினி சொல்லாத கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பு (மட்டும்தான்)இப்போது  சொல்ல காரணங்கள் மூன்று.

1.பாஜக தான் தமிழகத்தில்  வளர்வது(முஸ்லீம் லீக் அளவாக மட்டுமே இருக்கும்) கானல் நீர் என்ற உண்மையை உணர்ந்ததது.
நேரடியாக இணையாமல் தனிக்கட்சி ஆரம்பித்து செல்வாக்குடன் சென்று தமிழகத்தில்  ஆன்மிக அரசியல் செய்வது . அதாவதுகாவியாக்குவது.

2.காலா ,2.0 சந்தைப்படுத்தல்.

3. மற்றோரு ரசிகக் கூட்டமான  அதிமுக குழப்பங்களில் ஆதாயம் அடைவது.
==========================================================================================
இணைய கலாய்ப்புகள் 
ஆன்மீக அரசியலுன்னா என்னா? 1)நாட்டுக்கு பிரட்சினை வந்தா முதல்வர் கோயிலில் தியானம் இருந்து தீர்ப்பார் 2)இயற்கை பேரிடர் வந்தால் மக்கள் இலவசமா இமயமலைக்கு பிரார்த்தனைக்கு அனுப்பப்படுவர் 3)ராகுகாலத்தில் மக்கள் வெளிவரக்கூடாது 4) அரசு அலுவலகங்கள் நல்ல நேரம் பார்த்தே திறக்கப்படும்

 அமைச்சரவை பட்டியல்

குடும்ப நலத்துறை - தனுஷ்

கலாச்சாரத் துறை - ஐய்ஸ்வர்ய்யா தனுஷ்.

பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி துறை - அனிருத்.

வீட்டு வாடகை மற்றும் பள்ளிக் கல்வி - லதா ரஜினிகாந்த்.

😷😷😷




வியாழன், 28 டிசம்பர், 2017

ஊடகங்களின் தலையாயப் பணி

குறிஞ்சி மலர் பல ஆண்டுகள் இடைவெளிவிட்டு பூக்கிறதோ இல்லையோ மதுரைக்கார உடன்பிறப்பு அழகிரி இடையிடையே திமுகவை ஒழிப்பது ,ஸ்டாலின் தலைமை பற்றி குரல் கொடுப்பதற்கு தவறுவதில்லை.
அவரை திமுகவினரே மறந்து கட்சிப் பணியாற்றுகையில் தினமலர் போன்ற பத்திரிகைகள் அழகிரிக்கு கொம்பு சீவி விடுவதில் அயராது பணியாற்றிக்கொண்டுதான் இருந்தன,இருக்கின்றன.
 எல்லாம் போகட்டும் திமுகவில் இருந்து தலைவராலேயே  நீக்கப்பட்டவர் இப்படி திமுக வறட்சி பற்றி பேச உரிமை இருக்கிறதா?
அப்படி இருந்தாலும் அப்படி பேசும் தகுதி அழகிரிக்கு இருக்கிறதா?
ஸ்டாலின் முழுத் தலைமையில் 2016 தேர்தலை திமுக சந்தித்தது.
அப்போது இந்த அழகிரி திமுக தொண்டர்களை பாஜகவுக்கும்,அதிமுகவுக்கும் வாக்களிக்க அறிக்கைவிட்டவர்.பேட்டியளித்தவர் என்பதை திமுகவினருக்கு,தமிழநாட்டினரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அந்த தேர்தலில்தான் 89 என்ற அளவில் திமுகவை ஸ்டாலின் வெற்றி பெற வைத்தார்.
அதுவும் எப்படி பட்ட சூழல்.?
மத்திய மோடி அரசின் ஆதரவு,தேர்தல் ஆணையத்தின் நிபந்தனையற்ற ஆதரவு,அரசு அதிகாரிகள்,காவல்துறையினர் கொத்தடிமைத்தன பணிகள்,அனைத்துக்கும் மேலாக வாக்குக்கு மடை திறந்து விடப்பட்ட பணம்.
120 க்கும் மேலான திமுக முன்னணி 11 மணியளவில் வாக்குகள் பாதி கூட எண்ணப்படாத நிலையில் பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு முதல்வரானதும் வாழ்த்துகள்  என்ற உடனே சர,சர வென மாறியது.
ராதாபுரம் உடன்பட 7 தொகுதிகள் திமுக வென்றதாக கூறப்பட்ட நிலையில் தபால் வாக்குகள் செல்லாது என கூறி அதிமுகவை அதிகார  பூர்வமாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.எதிர்த்த திமுகவினர் துணை ராணுவத்தை வைத்து வெளியே தூக்கி எறியப்பட்டனர் .

இப்படி எல்லாம் பல இடையூறுகளுக்குப் பின்னர்தான் 89 இடங்கள் கிடைத்தன.

ஆனால் அதற்கு முன்னர் 2011 இல் இதே அழகிரி இருக்கையில்தான் அதுவரை தக்க வைத்திருந்த எதிர்க்கட்சி இடத்தை கூட விஜயகாந்த் கட்சியிடம் இழந்து நின்றது.

அப்போது அழகிரி தனது செல்வாக்கை எங்கே முடக்கி வைத்திருந்தார்?
 முந்தைய மதுரை மாநகராட்சி தேர்தலில் தனது சொந்த வட்டத்தில் அழகிரி நிறுத்திய அவரது ஆதரவாளர் திமுக சார்பில் நின்று பரிதாபமாக தோற்றுப்போனாரே அதற்கு அஞ்சா நெஞ்ச அழகிரி என்ன சொல்கிறார்.

ஒரு வட்டத்திலேயே அதுவும் குடியிக்கும் பகுதியிலே தனது ஆதரவாளரான திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியாத அழகிரி வாக்குக்கு 12000/-,6000/-என்று விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆர்.கே,நகர் இடைத்தேர்தலை திமுகவின் இமாலய தோல்வி என்பது எந்த வகையான மதிப்பீடு ?

அவருடைய திருமங்கலம் பணம் கொடுக்கும் முறையை விட அடுத்தக்கட்ட நம்பகமான ஹவாலா முறைக்கு தினகரன் போன பின் தினகரனுக்கு வெற்றி என்பது கிட்டாமல் போகுமா என்ன?

வாக்காளர் எண் குறிப்பிட்ட 20 ரூபாய் தாளைக் கொடுத்து  வாக்களித்தப்பின்னர்  12000 என்றால் அடித்தட்டு மக்கள் வாழும் தொகுதியில் அனைத்து வாக்குகளும் எங்கே விழும்.?
அது அவர்களின் ஒரு மாத ஊதியம் அல்லவா?ஒரு வீட்டில் 4 வாக்குகள் இருந்தால் 48,000/-இரண்டுபவுனுக்கு நகை எடுத்து விடலாமே.

வாடிக்கையான அதிமுக தொகுதியிலேயே 6000/- கொடுத்து,இரட்டை இலை சின்னத்தில் நின்றும் கூட அதிமுக தோற்றிருக்கிறது.
இவர்களுக்கிடையே ஸ்டாலின் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்தும் 12000/+குக்கரை புறந்தள்ளி திமுக பெற்ற வாக்குகள் 25000 .அதில் ஒவ்வொரு வாக்கும் விலைமதிக்கமுடியாதவை அல்லவா?

12000/,6000/-கொடுப்பதை இந்த கையாலாகாத தேர்தல் ஆணையம் தடுத்திருந்தால் நிலை என்னவாயிருக்கும்?
அனைத்து வாக்குகளும் உதய சூரியனை நோக்கி அல்லவா பாய்ந்திருக்கும்.

தொகுதிமக்களின் வறுமையை விலைபேசி வாக்குகளை வாங்கி பெற்ற வெற்றிக்கு பெயர் என்னவாயிருக்கும்.
விலைக்கு விற்றவர்கள் தொகுதிக்கு ஏதாவது கேட்டு கையை நீட்டி பேச முடியுமா?
ஒரு தொகுதியில் 12000+குக்கர் கொடுத்தவர் பொதுத்தேர்தலில் இப்படி கொடுக்க முடியுமா?

ஒவ்வொரு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெல்லும் என்பது எழுதப்படா விதியாக தமிழகத்தில் உள்ளது திருமங்கலம் புகழ் அழகிரிக்கு தெரியாதா?
திமுக ஆட்சி காலத்தில் பெண்ணாகரத்தில் அதிமுக காப்புத்தொகையை இழந்தது தெரியாதா அழகிரிக்கு.?
அதன்பின் வந்த தேர்தலில் அதிமுகதான் ஆட்சி அமைத்ததும் தெரிந்திருக்குமே?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தினகரன்,எடப்பாடி அணிக்கு வாழ்வா?சாவா?நிலை.அதில் வெற்றிக்கு எந்த நிலைக்கு செல்ல அவர்கள் தயார்.
அதிமுகவுக்கு ஆணையம்,மோடி,அதிகாரிகள்,காவல்துறையினர் கூட்டு.மேலாக 6000 வாக்குக்கு விலை,இரட்டை இலை..
அப்படியிருந்தும் அதிமுக தோல்வி. காரணம் ஏலத்தொகை 12000/-குக்கர்.ஹவாலா முறையில் வாக்குப்பதிவு குக்கர் என்றால் 12,000 நிச்சயம் என்ற நிலை.
இவைகளை மீறி வாக்குக்கு பணம் தரும் வேலையை  திருமங்கலத்தில் அழகிரி ஆரம்பித்து வைத்ததை ஆர்.கே.நகரில் ஸ்டாலின் முடித்து வைத்திருக்கிறார்.அதற்கு தந்த விலைதான் காப்புத்தொகை இழப்பு.
ஆனால் பெற்ற 25000 வாக்குகள் என்பதில் ஒவ்வொரு வாக்குமே பலலட்சம் பெருமானமானது.
திமுகவுக்கு பெருமை தருவது.
திருமங்கலத்தில் திமுகவுக்கு ஏற்பட்ட திருமங்கல பார்முலா கறை தற்போது துடைத்து எறியப்பட்டுள்ளது .
அந்தவகையில் திமுக மாபெரும் வெற்றியைத்தான் பெற்றுள்ளது.
பாஜகவுக்கு சென்ற தேர்தலில் வாக்கு கேட்ட அழகிரிக்கு திமுக,ஸ்டாலின் பற்றி தற்போது பேச எந்த வித தகுதியோ,அருகதையோ இருப்பதாக தெரியவில்லை.

அவர் திமுகவை விட்டு தலைவர் கலைஞரால் நீக்கப்பட்டவர்.
மீண்டும் திமுகவில் சேர்க்கும் அளவு அவரின் நடவடிக்கைகளும் இல்லை.திமுக தொண்டர்கள் யாரும் அவரை ஒரு பொருட்டாக எண்ணவுமில்லை.
அழகிரி மக்கள் ஆதரவு உள்ளவர்,அவர் தலைமையேற்றால் திமுக வெற்றி பெறும் என்ற மாயையை உருவாக்குவது  ஊடகங்கள்தான்.
அவர்களின் குறியே திமுகவை அழிப்பதுதான்.
அதுதான் திமுக ஆரம்பிக்கப் பட்ட நாள் முதல் ஊடகங்களின் தலையாயப் பணியாக இருந்து வந்தது.இருக்கிறது.
அது சம்பத்,எம்ஜிஆர்,ஜெயலலிதா என்று வந்து அழகிரியில் மையம் கொண்டுள்ளது.

புதன், 27 டிசம்பர், 2017

தோழர்நல்லக்கண்ணு,

திருவைகுண்டத்தில், 1925 டிச., 26ல் பிறந்தார். 
தனது  18வது வயதில், இ.கம்யூ., கட்சியில் சேர்ந்தார். 


அக்கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட போது, நெல்லையில் சதி வேலையில் ஈடுபட்டதாக, அவர் மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் சிறையில் அடைப்பட்டு கிடந்தார்.
நாடு சுதந்திரம் அடைந்த போது விடுவிக்கப்பட்டார். 

சாதிய கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். அதற்காக, தன் வாழ்க்கையை சிறையிலும், தலைமறைவு வாழ்க்கையிலுமே கழித்தவர். 
ஆனால் இவரது வயதான  மாமனாரையே   சாதி கலவரத்தில் கொலை செய்து விட்டனர்.

13 ஆண்டுகள், இ.கம்யூ., கட்சியின், மாநில செயலராக பணியாற்றியவர். விவசாய தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்தார். 
சமூக சேவைக்காக, தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெற்றவர். 

தனது 80வது பிறந்த நாளில் தனக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை அப்படியே கட்சிக்கு வழங்கி விட்டார்.

இவரின் சாதிஒழிப்பு போராட்டங்களை பாராட்டி அரசு அளித்த அம்பேதகர் விருதுடன் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயில் 50,000 ஐ கட்சி விவசாயிகள் பிரிவுக்கும்,மீதி 50,000ஐ மிக வறுமையில் வாடும் நிவாரணம் கேட்டு கட்சி மூலம் விண்ணப்பித்த தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கும் பகிர்ந்து வழங்கிவிட்டார். 

அப்படி கொடுத்த இவருக்கு சொந்தமாக சிறிய வீடு கூட கிடையாது.தனது மகள் வீட்டிலும்,கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களிலும்தான் தங்குகிறார்.


92 அகவையடையும் தோழர் நல்லக்கண்ணு மனைவி ரஞ்சிதம் கிறிஸ்தவர்.
ஆனால் இவரை மனதை பின்னர் இவரின் கொள்கைபடியே வாழ்ந்தவர்.


தனக்கு பைபிளில் உள்ள கதைகளை அவ்வப்போது தனது மனைவி கூறிவந்ததாக நல்லக்கண்ணு நினைவு கூறுகிறார்.


ரஞ்சிதம் சிலகாலம் முன்னர்தான்  இயற்கையடைந்தார். 

=========================================================================================

மாயப் பணம்

 "பிட்காயின்"
மாயப்பணம் என்ற உடன் ரா.கி.நகர்,தினகரன் உங்கள் நினைவுக்கு வரலாம்.அதில் தப்பே இல்லை.
ஆனால் நாம் இப்போது பார்ப்பது குக்கர் காயின் அல்ல பிட்காயின் .

இதுதான் இன்று உலகம் முழுக்க ஆக்கிரமித்துவரும் கையிலே வாங்கி உணர,காணக்கிடைக்காத பணம்.மாயப்பணம்.
இதில் வரவு செலவு வைக்கலாம் .பொருட்களை வாங்கலாம்.ஆனால் மீதிப்பணம் கணக்கிலேயே இருக்கும்.கைகளில் தட்டுப்படா பணம் இது.

இந்தியாவில் பொருளாதார அறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைவு. 
அவர்களில் அதிக பொருளாதார அறிவு உள்ளவர்கள் மத்தியிலும் பிட்காயின் என்பது  அறியப்படாத,குழப்பமான  ஒன்றாகும். 
ஆனால் பிட்காயினை பிரபலப்படுத்த  bitcoin-india.org என்ற இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அது போக பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடிய பயன்படுத்தக்கூடிய 25 ம்  மேற்பட்ட இணையதளங்கள் உள்ளன.


சட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை. 
ஆனால், பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் பிட்காயின்களை பயன்படுத்துகின்றன. 
பிட்காயின்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகிறது போன்ற கேள்விகள் உங்களுக்கு எழுவது சரியானதே?வரும் காலங்களில் இந்த பிட்காயின் நம் வாழ்க்கையில் பல விளைவுகளை உருவாக்க வாய்ப்புகள் அதிகம்.
மின்னணு பணம் என்று சொல்லி அலைகிற மோடி அரசு பிட்காயினை சட்டப்பூர்வமாக அங்கிகரிக்கும் அபாயத்தை புறந்தள்ளிவிட முடியாது.
தற்போதே இந்தியாவில், இந்த பிட்காயின் கரன்சி பரிவர்த்தனைக்கு தடை இல்லை.
 இதில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று மட்டுமே  ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இந்தியாவில் பிட்காயின்களில்   முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. 
பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். 
மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.
வலைதளங்களில் புழங்கும், 'பிட்காயின்' போன்ற மெய்நிகர் கரன்சிகளின் பரி வர்த்தனைக்காகவே பலர், சமீபகாலமாக, நிறுவனங்களை துவக்கி வருவது தெரிய வந்துள்ளது.
வலைதளங்களில் மட்டும் புழங்கும், 'பிட்காயின், எத்திரியம், லைட்காயின்' உள்ளிட்ட, மெய்நிகர் கரன்சிகளை கட்டுப்படுத்த, எந்தவொரு அமைப்பும் இல்லை.

இதன் பரிவர்த்தனைக்காக, வலைதள நிறுவனங்கள் பல உருவெடுத்து வருகின்றன. 
பல வலைதளங்கள், அவற்றின் பலதரப்பட்ட சேவைகளுக்கு ஈடாக, மெய்நிகர் கரன்சிகளை பெற்றுக் கொள்கின்றன.

தற்போது, பலர் மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைக்காக, அலுவலக கட்டமைப்புடன், தனி நிறுவனங்களையே துவக்கி வருகின்றனர். 

இந்த வகையில், சில வாரங்களில், 'பிட்காயின்' என்ற பெயரை இணைத்து, 'பிட்காயின் இந்தியா, பிட்காயின் பஜார், பிட்காயின் எக்ஸ்சேஞ்ச், பிட்காயின் இந்தியா சாப்ட்வேர் சர்வீசஸ்' என்ற பெயர்களில், பலநிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பல நிறுவனங்கள், 'காயின்' என்ற சொல்லை இணைத்து, 'இந்திகாயின், பாரத்காயின், ஸ்வச்காயின்' என, நுாதன பெயர்களையும் பதிவு செய்து உள்ளன.ஒரு நிறுவனம், தனிநபர் மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்களின் பழுது நீக்கும் பணியை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
புலனாய்வு பத்திரிகை தொழிலை ஊக்குவிப்பதாக, ஒரு நிறுவனம் சொல்லிக் கொள்கிறது.

பல் சிகிச்சைக்கு என, மெய்நிகர் கரன்சிகளை வழங்குவதாகவும், இடைத்தரகரின்றி, குறைந்த செலவில் சேவையும், சுலபமாக காப்பீடும் பெறலாம் என, ஒரு நிறுவனம் கூறுகிறது.வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும்,பாலுறவு கருவிகள் வர்த்தகத்திற்கும், 'செக்ஸ் காயின்'களை வழங்குவதாக, ஒரு நிறுவனம் தெரிவிக்கிறது.

இது மட்டுமின்றி, மெய்நிகர் கரன்சிகளுக்கு என, 'கிரிப்டோ அட்வைசர்ஸ், கிரிப்டோ லேப்ஸ், கிரிப்டோ மைனிங்,கிரிப்டோ யோ காயின் இந்தியா' போன்ற ஆலோசனை நிறுவனங்களும் முளைத்துள்ளன.
மத்திய அரசு, மெய்நிகர் கரன்சி கொள்கையை, விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை, மெய்நிகர் கரன்சி நிறுவனங்கள் பெருகத்தான் செய்யும். முதலீட்டாளர்களும், நுகர்வோரும் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

'பிட்காயின்' சந்தைகள், முறைகேடான பணப் பரிமாற்றத்திற்கு துணை புரிவதாக வந்த புகாரை அடுத்து, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட ஐந்து நகரங்களில் உள்ள, ஒன்பது பிட்காயின் சந்தைகளில், சமீபத்தில், வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

அதில், 'ஜெப்பே' பிட்காயின் சந்தையின் விற்றுமுதல், ஒரே ஆண்டில், 1,000 கோடி ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துஇருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தாண்டு ஆகஸ்டு மாதம் பிட்காயின்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. நாணய அலகுகளாக ஆன்லைனில் கொள்முதல் செய்ய பொதுவாக செலவிடப்படும் கிளாசிக் பிட்காயின்கள் எனப்படும் BCT ஒரு வகையாகவும், BCH எனப்படும் ஹார்ட் ஃபோர்க் பிட்காயின் மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டது. கிளாசிக் பிட்காயின்கள் 1 முதல் 0.1, 0.01, 0.001 ஆகிய மதிப்புகளில் உள்ளன. இது குறைவான பணத்தில் பிட்காயின்களை வாங்க உதவுகிறது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் 1000 டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு பிட்காயினின் மதிப்பு, தற்போது 10,000 டாலர்களை கடந்துவிட்டது. 2013ன் பிற்பகுதியில் முதல் முறையாக 1,000 டாலர்களை கடந்த பிட்காயின்களின் மதிப்பு அதன் பிறகு தொடர்ந்து சரியத்தொடங்கி தள்ளாடி தற்போது திடீர் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக, சில நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் பிட்காயின்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதன் மதிப்பு திடீரென உயர்ந்து வருவதற்கான காரணம் தெளிவாக இல்லை.


இம்மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்' டெரிவேட்டிவ்' எனப்படும் நிதி ஒப்பந்த வணிக நிறுவனமான சிஎம்இ குழுமம், தான் 2017ன் இறுதிக்குள் பிட்காயினை அடிப்படையாகக் கொண்ட ஃப்யூச்சர்ஸ் டெரிவேட்டிவ் என்ற ஒரு நிதிச்சந்தை பண்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பிட்காயின் மீதான நம்பிக்கைக்கு ஊக்கமளித்தது.
மேலும், சர்ச்சைக்குரிய திட்டமான Segwit2xஐ கைவிடுவதற்கு தீர்மானித்ததும் பிட்காயின்கள் மதிப்பேற்றதின் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.
தற்போது பிட்காயின் சார்ந்த பரிமாற்றங்களை செய்வதற்கு உதவும் தொழில்நுட்பமான பிளாக்செயின், மேலும் திறம்பட செயல்படுவதற்கு இது உதவியிருக்கும்.
இம்முடிவானது பிட்காயின் சமூகம் இரண்டாக பிளவுபடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.
பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு தொடர்ந்து நிற்காமல், திடீரென்று கீழிறங்கும் என்று பல தொழில்துறை பார்வையாளர்கள் நம்புகின்றனர்.
தற்போது பரபரப்பான செய்தியாக இருக்கும் பிட்காயின்களில் முதலீடு செய்வதற்கு பலர் விருப்பத்துடன் உள்ளார்கள். ஆனால் நிதி வல்லுனர்கள் இந்த ஆர்வம் சரியா என்பதில் சந்தேகம் கொண்டுள்ளனர். ஏனெனில், இதுவரை பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட இந்த திடீர் எழுச்சிக்கான உண்மையான காரணம் அறியப்படவில்லை.
மேலும், முற்றிலும் ஆன்லைனில் நடக்கும் பிட்காயின் வர்த்தகத்தை மேற்பார்வை செய்வதற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பும் இல்லை. பிட்காயின் வர்த்தகங்கள் ஆன்லைன் வாயிலாக இரண்டு பேர் அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையில் நடைபெறுகின்றன.
பிட்காயின்களின் மதிப்பு எவ்வளவு வேகமாக உயர்ந்ததோ அதே வேகத்தில் வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். 
உலகம் முழுவதும் உள்ள பிட்காயின் பயன்பாட்டாளர்கள் இதுகுறித்த வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர். அவர்களை பொறுத்தவரை பிட்காயின்களே எதிர்காலத்தின் நாணயம்.
பெரும்பாலான நாடுகளில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிட்காயின்கள் இணைய வழி பணப்பரிமாற்றத்திற்கு உபயோககரமானது. 
ஆனால், பலர் பிட்காயின்களை ஒரு முதலீடாக பார்கின்றனர். முதலீட்டிற்கு கிடைத்த வருவாய் காரணமாகவே பிட்காயின் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காரணம் பிட்காயின் என்ற இணைய  தளம் உருவாக்கியவர்கள் யாரென்றே தெரியாத நிலைதான் தற்போதும்.அதை உலகளவில் ஆங்காங்கே நிர்வகிப்பவர்கள் வெளிப்படையாக தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.
அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. 
மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.
கடந்த 2009ம் ஆண்டு பிட்காயின் தொடங்கப்பட்டது. 2010யில் ஒரு பிட்காயினின் மதிப்பு வெறும் 0.0003 டாலர்கள்தான். அதன் பிறகு திடீர் ஏற்றத்தை கண்டது. இதன் காரணமாகவே பிட்காயின் குறித்த எச்சரிக்கையை வல்லுநர்கள் விடுகிறார்கள்.
சமீபத்தில் உலகம் முழுவதுமுள்ள கணினிகள் ரான்சம்வேர் வைரஸால் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த காலகட்டத்தில் பிட்காயின்கள் மூலமாகவே ஹாக்கர்கள் பணம் திரட்டியதாக நம்பப்படுகிறது. நீங்கள் பிட்காயினின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்தால் அதில், நீங்கள் பிட்காயின் அல்லது எவ்விதமான வளரும் தொழில்நுட்பங்களை கொண்டும் பணக்காரராக நினைக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுளது தெரியும்.
"நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக தோன்றுகிற, அடிப்படை பொருளாதார விதிகளை மீறும் வகையில் இருப்பவற்றைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பிட்காயின்கள் மிகவும் விரைவான விகிதத்தில் இதுவரை வளர்ச்சியுற்றாலும், அதன் வளர்ச்சி தொடரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இதன் வழிமுறைகள் அனைத்தும் போட்டித்தன்மையுடன் செயல்படக்கூடியது என்பதால் இலாபத்திற்கான உத்தரவாதமும் இல்லை," என்றும் பிட்காயின் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 26 டிசம்பர், 2017

தினகரனை விட அதிகம்தான்

தினகரன் வழங்கிய, 20 ரூபாய், 'டோக்கனை' நம்பி ஓட்டளித்த, ஆர்.கே.நகர் மக்கள், பணம் கேட்டு, தினகரன் ஆதரவு பொறுப்பாளர்களை நச்சரித்து வருகின்றனர். 
இதனால், பொறுப்பாளர்களில் பலர் வீடுகளில் தங்காமல், வெளியிடங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்.
சென்னை, ஆர்.கே.நகரில், வாக்காளர்களின் ஓட்டுகளை கவர, 20ம் தேதி நள்ளிரவு, ஆர்.கே.நகர் முழுவதும், 20 ரூபாய் நோட்டுகள், 'டோக்கனாக' வழங்கப்பட்டன. 

'தினகரன் வெற்றி பெற்றால், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என, தினகரனின் பொறுப்பாளர்கள் வாக்குறுதியளித்து, அதில் உள்ள சீரியல் எண்களை எழுதி சென்றுள்ளனர். 

ஆர்.கே.நகர் மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக, தினகரன் இருப்பதால், அவர் பணம் கொடுப்பார் என நம்பி, மக்களும் ஓட்டளித்தனர். 

தினகரன் வெற்றி பெற்றதால், ஆர்.கே.நகர் மக்கள் குஷியில் உள்ளனர். 20 ரூபாய் டோக்கனுக்கு, பணம் கிடைக்கும் என்ற உற்சாகத்திலும் உள்ளனர். 

அத்துடன், பணம் சப்ளை செய்த பொறுப்பாளர்களை, மொபைல் போனில் அழைத்து, '10 ஆயிரம் ரூபாய் எப்போ தருவீங்க?' என, கேட்க துவங்கி உள்ளனர். 

அவர்களில் சிலர், 'இன்று அல்லது நாளை தருவோம்' எனக் கூறி, சமாளித்து வருகின்றனர். 

மற்ற சிலர், வீடுகளில் தங்காமல், மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து, வெளியிடங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். இருப்பினும், தினகரனின் தேர்தல் பொறுப்பாளர்கள் தந்த, 20 ரூபாய் நோட்டை, பொக்கிஷமாக பலர் பாதுகாத்து வருகின்றனர்.

எங்கள் வீட்டில், ஆறு ஓட்டுகள் உள்ளன. 'குக்கருக்கு' ஆதரவாக பிரசாரத்திற்கு போனதால், எங்களுக்கு, அ.தி.மு.க.,வினர், 6,000 ரூபாய் தரவில்லை. ஜெ., விசுவாசியான எங்களுக்கு, பணம் கொடுக்காததால், கோபத்தில் குக்கருக்கு ஓட்டு போட்டோம்.


தினகரன் கண்டிப்பாக, 10 ஆயிரம் ரூபாய் தருவார். 'எப்படியும் நன்றி தெரிவிக்க, ஆர்.கே.நகருக்கு வருவார் என்பதால், அதற்கு முன் பணம் கொடுத்து விடுவோம்' என, அவரின் பொறுப்பாளர் தெரிவித்து உள்ளனர். 

எனவே, இன்று அல்லது நாளைக்குள் பண'ம் வரலாம் என்று பலர் காத்திருக்கின்றனர். 

பணம் வாங்கி வாக்களித்த  இளைஞர்கள் சிலரிடம் அது தவறில்லையா என கேட்டபோது "ஒரு மாற்றத்தை அதாவது  தி.மு.க., - அ.தி.மு.க., அல்லாத ஒருவர் வர வேண்டும் என, எதிர்பார்த்து  குக்கருக்கு தான் ஓட்டு போட்டேன். 
20 ரூபாய் டோக்கனுக்கு, நாளை பணம் கொடுப்பதாக, எங்கள் பகுதி பொறுப்பாளர் தெரிவித்து உள்ளார். பணம் வந்தால், 'லேப் - டாப்' வாங்குவேன்".என்று பெருமையாகக் கூறினார். 

பணத்துக்கு வாக்களித்து விட்டு மாற்றத்தை விரும்பி திமுக,அதிமுகவுக்கு வாக்களிக்காமல் தினகரனுக்கு வாக்களித்ததாக மாணவர் கூறுவது மிகவும் வேடிக்கை,வேதனை.
ஒரு சுயேட்சை வேட்பாளர் வென்று என்ன மாற்றத்தைக்கொண்டுவருவார் என்று மாணவர் எதிர்பார்த்தார்.

அவர் உண்மையில் எதிர்பார்த்தது மாற்றத்தை அல்ல அதிக பணத்தை.லேப்டாப் வாங்க தனது வகை விற்றுள்ளார்.வருங்கால தலைவரான மாணவர்களே பணத்துக்கு வாக்கை கொடுத்து விட்டு மாற்றம்,முன்னேற்றம்,ஊழல் ஒழிய வேண்டும் என்று வீர வசனம் பேசுவது இந்திய அதிலும் முக்கிய தமிழக அரசியல் போக்கை கவலையுடன் பார்க்க வைக்கிறது.வடக்கே மதத்தை காட்டி வாக்குகள் தமிழகத்தில் பணம்.



திமுக-அதிமுக வராமல் மாற்றம் எதிர்பார்ப்பவர்கள் அதிமுகவில் இருந்தவர் அங்கு இன்னமும் ஆட்சியை கைப்பற்ற போராடுபவர் என்ற நிலையில் உள்ள தினகரனுக்கு வாக்களிப்பது மாற்றம் தரும் மனமாற்றமா?

அப்படி பட்ட உண்மை நிலையில் இருந்தால் பணத்தை எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும்.எத்தனை சுயேட்சைகள்,நாம் தமிழர் என்று போட்டியில் இருந்தனர்.அவர்களில் ஒருவருக்கு வாக்களிப்பதுதானே சரியானதாக இருக்கும்.

ஊழல் பேர்வழி என்று உலகறிந்த பல வழக்குகளை எதிர் கொண்ட தினகரனுக்கு வாக்களித்ததுஅதுவும் பணத்தை ஆயிரக்கணக்கில் வாங்கிக்கொண்டு  மாற்றத்தை கொண்டுவர என்ற வாக்கு மூலம் மிகப்பெரிய ஏமாற்றுத்தனம்.

வாக்குப்பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தாக சொல்லும் மக்களை விட இந்த மாற்றம் விரும்பிகள்தான் மிகப்பெரிய ஊழல்வாதிகள்.
அது தினகரனை விட அதிகம்தான் .

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

படு தோல்வி.

தேர்தல் ஆணையத்தின் படு தோல்வி.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதெல்லாம் ஓடி மறைந்து விட்ட காலம் இது.
வாக்குக்கு பணம் மறைமுகமாக கொடுத்த காலம் போய்.
இன்று வாக்குக்கு பணம் வாங்குவது வாக்காளர் உரிமை என மாறி விட்டது.

வெளியில் வாக்குக்கு பணம் வாங்குவதை அசிங்கம் என்று நாணயமாக பேசுபவர்கள் கூட வாக்குக்கு நிர்ணயிக்கும் தொகை 5000,1000 என்று தெரிந்த உடன் மனம் அலைபாய்கிறது.
அவர் வீட்டில் 3 வாக்குகள் இருந்தால் 30,000/-ஆயிற்றே.
ஆர்.கே,நகர் இடைத்தேர்தல் அசிங்கம் இந்திய அளவில் அவமானம்.


அவமானம்  யாருக்கு என்பதில் யாருக்குமே ஐயம் வேண்டாம்.
அனைத்துப்புகழுமே இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே.
ஒரு தேர்தலில் பணம் பட்டுவாடா நடக்கிறது என்றால் அதை தடுப்பது யார்?

எதிர் தரப்பினர் பணம் கொடுப்பவர்களை பிடித்துக்கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை.இதில் எ மக்கள் வரிப்பணத்தில் குளிர் வாகனங்களில் தேர்தல் பார்வையாளர்கள்,கணக்கு அதிகாரிகள் என ஒரு கூட்டம்.
துணை ராணுவம் வரை ஆயிரக்கணக்கில் வைத்தும் பணம் பட்டுவாடா தடுக்க முடியவில்லை என்றால் அது யாரின் கையாலாகத் தனம்.?

உள்ளூர் அதிகாரிகளும் ,காவல்துறையினரும் ஒத்துழைக்கவில்லை என்பது சர்வாதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் சொல்வது சரியான காரணமாக அமையாது.
காரணம் தேர்தல் அறிவிக்கப் பட்டவுடனே தேர்தல் நடைமுறையில் அனைத்து அதிகாரவர்க்கமும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது.அவர்களை மாற்றுவது,நடவடிக்கைகள் எடுப்பது என  முதல் எல்லா அதிகாரமும் தேர்தல் ஆணையத்திடம்தான்.

ஆர்.கே.நகரில் நடந்தது இந்தியா முழுக்க அறிந்ததுதான்.
சென்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக ஒரு அணியின் வேட்பாளர் தினகரன் 89 கோடிகள் வரை வாக்கு வாங்க அள்ளிவிட்டார் அதை தடுக்க முடியவில்லை என்பதால்தான் தேர்தலே ஒத்தி வாய்ப்பு.
சரி.அதுவரை தேர்தல் ஆணையம் பல கோடிகள் செலவிட்டும் தேர்தலையே ஒத்திவைக்க செய்த குற்றவாளியின் மீது இன்றுவரை தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?

அவர் மீதும் அவருக்காக பணம் பட்டுவாடா செய்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி,விஜய பாஸ்கர் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்க சொன்னதாம்.தமிழக தேர்தல் ஆணையம் ராஜேஷ் லக்கானி தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி விட்டாராம்.
இதுதான் தினகரன் பழைய பணப்பட்டுவாடா மீது எடுத்த நடவடிக்கை.அவ்வளவுதான்.


இந்த பணப்பட்டுவாடா குற்றவாளிகள் மீது என்ன நவடிக்கை எடுத்தார்கள் என்பதை கவனிப்பது யார்?
அதைவிட மோசமான இந்திய தேர்தல் ஆணைய நடவடிக்கை,சென்ற இடைத்தேர்தலையே ஒத்திவைக்க களமிறங்கி பணம் கொடுத்து மாட்டிக்கொண்ட தினகரனை இந்த இடைத்தேர்தலில் நிற்க  எப்படி அனுமதித்தது.
எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியும் கூட நிற்க அனுமதித்தது என்ன நியாயம்.

கையெழுத்து போட்டுவிட்டு அது என் கையெழுத்தில் என்றும் அதன் பின் மதுஸுதனன் மிரட்டலில் அப்படி சொன்னேன் என்றும் அதன் பின்பும்  தான் கையெழுத்திடவில்லை என்ற திலீப்பின் வாக்குமூலத்தை வைத்து நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்த ஆணையம் அதை விட  மிகப்பெரிய தவறை,சென்ற தேர்தலையே ஒத்தி வைக்க காரணியான தினகரனை போட்டியிட அனுமதித்தது ஏன்?
ஆக தினகரன் அதன் பின்னராவது நாணயமாக நடந்தாரா ?என்றால் இல்லைதான் .
குக்கரில் பணம் கொடுக்கிறார் என்ற குற்ற சாட்டு.

அவர் சார்பாக ,அதிமுக சார்பாக பணம் கொடுத்தவர்களை திமுகவினர் ,தேர்தல் பார்வையாளர்கள் பிடித்து கொடுத்தால் அவர்களுடன் வாக்குவாதம் செய்து பொதுமக்களே விடுவிக்க வைக்கிறார்கள்.சாலை மறியல் முதல் காவல் நிலையம் முற்றுகை வரை.

காரணம் அடுத்தவீடு வரை வாக்குக்கு 6000 கொடுத்து விட்டு 4 வாக்குகள் இருக்கும் தன வீட்டுக்கு கொடுக்கவிடாமல் செய்வது சரியா?24000 என்றால் சும்மாவா?என்ற வயிற்றெரிச்சல்தான்.

மக்களை இந்திய வாக்காளர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்?தேர்தல் ஆணையம்தான்.
ஏழைகள் நிறைந்த இந்தியாவில்,அதுவும் அன்றாட வேலைக்காரர்கள் வாழும் தொகுதியில் இது போன்று நடக்கத்தான் செய்யும்.காரணம் இது அவர்களின் இரு மாத சம்பளத்தை விட அதிகம்.

அதிலும் தினகரன் இன்றைய தேர்தலில் வாக்குக்கு  பணம் கொடுத்தலில் புதிய வழிகாட்டலை காட்டியுள்ளார்.அதற்கு ஹவாலா முறை என்று பெயர். இதுவரை கடைபிடித்த அழகிரியின் திருமங்கல முறையை விட இது கொஞ்சம் பாதுகாப்பு.

தேர்தலுக்கு முன்னர் வரிசை எண் உள்ள இருபது ரூபாய் தாள்களை வீடுகளுக்கு கொடுப்பது என்ன வெறும் இருப்பதா என்றவர்களை "குக்கருக்கு வாக்களித்து விட்டு அதை அலைபேசியில் சத்தியத்துடன் 20 ரூ தாளின் எண்களை  சொல்லி விட்டு  (ஹவாலா முறையில்) வந்து அந்த எண் 20ரூபாயை கொடுத்து விட்டு6000த்தை  வாங்கி செல்லாம் என்ற எளிய உத்திரவாதம்தான்,உதய சூரியன்,இரட்டை இலையை விட்டுவிட்டு குக்கரை நோக்கி பலர் கைகளை திருப்பி உள்ளது.


வாக்களிப்பு அன்றே பணம் பட்டுவாடா ?இப்போ என்ன செய்வீங்க என்பதுதான் தினகரனின் ஹவாலா பாணி .
இதற்கு அவரின் அந்நிய செலவாணி மோசடி பணம் அந்நிய நாடுகளுக்கு மாற்றிய அனுபவம்தான் காரணமாக இருந்திருக்கும்.
100ரூபாய் பிரியாணி பொட்டலுத்துக்காக மட்டுமே  வெயிலில் ஜெயலலிதா வருகைக்காக காத்து தங்கள் உயிரை இழக்கும் அளவு இருந்த  மக்களுக்கு இது எவ்வளவு எளிமையான பணவரவு.

வாக்காளர்களை   வாங்காதே கைது என்று தடுக்கும் ஆணையம் கொடுப்பவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பார்த்தால் பெரு வட்டம்தான்.

தேர்தல் அறிவித்ததுடன் தேர்தல் ஆணையம் தனது பணியை எந்த சமரசமும் இல்லாமல் செய்தாலே போதும்.
தீவிரவாதம் தலைதூக்கியுள்ள காஷ்மீர் ,நக்சல்பாரிகள் கைவசமுள்ள பகுதிகளில் எல்லாம் கூட தேர்தலை நடத்திக்காட்டியதுதான் இந்த தேர்தல் ஆணையம் அதற்கு ஆர்.கே.நகர் எல்லாம் சும்மாதான்.
அங்கு தேர்தலை நடத்த ஏன் இவ்வளவு திணறல்.?
ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிடுகையில் ஆளுங்கட்சிக்கு  அனுமதித்த விதி மீறல்கள் அனுமதித்தான் தொடர்கிறது.

இனி தேர்தல்களை ஒழுங்காக நடத்த முடியாதா?
கண்டிப்பாக முடியும்.அதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தேவை சேஷன் போன்ற முதுகெழும்பு.

தேர்தல் அறிவிக்கும்போதே எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள்,காவலர்கள் பட்டியலை கொடுக்கிறது.
ஆனால் அந்த பட்டியலை ஆணையம் கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறது.காரணம் சிலருக்கு ஆதரவான அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தில் இருப்பதுதான்.

தலைமை தேர்தல் ஆணையரிடம் கொடுத்தாலும் அதே நிலைதான்.காரணம் மோடியின் நண்பர்,அவர் குஜராத் முதல்வராக இருக்கையில் உதவியாளர் என்பது  போன்ற காரணத்தால் தலைமைக்கு வந்த ஜோதி போன்றோரால் தான்.

தேர்தல் நடைமுறை வந்தவுடனே எதிர்க்கட்சிகள் இலக்கண அதிகாரிகளை மாற்றினால் போதுமே.மற்றவர்களுக்கு ஒரு ஒழுக்க உணர்வு வந்துவிடுமே.

அதைவிட்டு,விட்டு  இப்போதைய ஆர்.கே .நகர் தேர்தலில்  தேர்தல் நடக்க ஒருநாள் இருக்கையில் துணைக்காவல் ஆணையரை மாற்றியதுபோல் பெயரளவில் மாற்றுவது என்ன பயன்.
எல்லா சட்டவிரோதங்களும் நடந்து முடிந்திருக்கும்.
குதிரை திருட்டு போன பின் லாயத்தை மூடி பூட்டு போடுவதால் என்ன பயன்.
 சென்ற முறை தேர்தலை நடத்தமுடியாமல்  ஒத்திவைக்க அறிக்கை விடுத்த பிரவின் நாயரையே கொண்டுவந்து என்ன சாதித்தது ஆணையம்?

 நாலாயிரம்,12000 வரை அதிகரித்ததுதான் லாபம்.

இந்த முறை அதிகம் பணம் பட்டுவாடா என்று பார்வையாளர்கள் அறிக்கை தந்த பின்னரும்.தேர்தலை ஒத்திவைக்காமல் "சவாலாக ஏற்று தேர்தலை நடத்துவோம் "என்பது எவ்வளவு பெரிய மக்காளாட்சி ஏமாற்று வேலை.

இந்திய தேர்தல் ஆணையம் இப்படி நடந்து கொள்வதால் மக்களாட்சி,வாக்குப்பதிவுகள் எல்லாமே ஊழல் கறைபடிந்து மறைந்து போகும்.
இதே நிலை தொடர்ந்தால் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக நடந்து கொண்டால் இனி மக்கள் வரிப்பணத்தை கொட்டி நடக்கும் தேர்தலே வேண்டாம்.தொகுதிகளை ஐந்தாண்டுகள்  குத்தகைக்கு சீலிட்ட உறை யில் கேட்பு முறை வைத்து விடலாம்.
அதிக பணம் கொடுப்பவர்களுக்கு தொகுதி.அரசுக்கு வருமானம்.

இவ்வளவு நோகலுக்கும் காரணம் சமீபகால இந்திய தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்தான்.

இமாசல பிரதேச தேர்தலுடன் நடக்க வேண்டிய குஜராத் தேர்தல் தேதியை பிரதமர் மோடி குஜராத்துக்கு பல சலுகைகள் அறிவித்தப் பின்னர் அறிவித்தது.

பரப்புரை முடிவில் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்ததற்காக ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டது.
ஆனால் அதே போல் பேட்டி கொடுத்த பாஜக தலைவர்கள் அருண் ஜெட்லீ ,ராஜ்நாத் சிங்குக்கும் விளக்கம் கேட்காதது.


தேர்தலில் வாக்களித்து விட்டு கையை காட்டிக்கொண்டு ஊர்வலமாகப் போன பிரதமர் மோடியை எந்த கேள்வியும் கேட்காமல்,நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
என்று பல.
ஆனால் தேர்தல் ஆணைய ஒருபக்க சார்பை மக்களிடம் வெட்டவெளிச்சமாக்கியது "மோடி,அருண் ஜெட்லீ,ராஜ்நாத் சிங் மீது ராகுல்காந்தி போன்று நடவடிக்கை எங்கே" என்று காங்கிரஸ் கேட்டவுடன்
அவசரமாக ராகுல்காந்தி மீதான விளக்கம் கேட்பை திரும்ப பெற்ற இந்திய தேர்தல் ஆணைய செயல் தான்.

ஆனால் வாக்குக்கு காசு கொடுப்பவர்களை தடுக்க முடியாமல்,அப்படி கொடுத்து தினகரன் போல் மாட்டிக்கொண்டவர்கள் மீதும் கூட  நடவடிக்கையே எடாமல் "வாக்களிக்க காசு வாங்குபவர்களை கைது செய்ய ஆலோசிக்கிறோம்" என்ற ஆணைய அறிவிப்புதான் ஆணையத்தின் கையாலாகத் தனத்தை காட்டுகிறது.

காசு கொடுக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையத்தை மதித்து சொல்லும் கட்சிகளுக்கு "திமுக காசு தராது" என்று பகிரங்கமாக அறிக்கை விட்ட ஸ்டாலினை பாராட்டி ஆர்.கே .நகர் மக்கள் கொடுத்தது போல் அதிகம் கொடுத்த சுயேச்சைக்கு முதலிடமும் பரவாயில்லாமல் கொடுத்த அதிமுகவுக்கு இரண்டாம் இடமும், கையை விரித்து மட்டுமே காட்டிய திமுகவுக்கு மூன்றாம் இடமும் என்ற நிலைதான்.

சனி, 23 டிசம்பர், 2017

வராக்கடன் சுமை

தனியார்மயமா தீர்வு?


* பொதுத்துறை வங்கிகளிலுள்ள அரசின் பங்குகளை 33 சதவீதத்திற்கு குறைக்க வேண்டுமென்று தொழிலதிபர்கள் அமைப்பான சி.ஐ.ஐ கோரியுள்ளதே!

ஆமாம். பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் சுமையும், மூலதனத் தேவையிலேற்படுகிற மோசமான நெருக்கடியும் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன. ஒரு புறம் அந்நெருக்கடியைச் சமாளிக்க கூடுதல் மூலதன அளிப்பை அரசு தருவதற்கான விவாதம் நடந்தேறுகிறது. 

மறுபுறமோ பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதே தீர்வு என்கிற வாதமும் ஆர்வத்தோடு முன் வைக்கப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளில் மெத்தனம், திறமையின்மை, ஊழல் இருக்கிற தென்றும் தனியார் உடமையானால் அது தானாகவே திறமையை, சீரான நிதி நிர்வாகத்தை, திறம்பட்ட செயல்பாட்டைக் கொண்டு வந்து விடும் எனவும் ஓர் கருத்தை முன் வைக்கிறார்கள். ஆனால் இந்திய அனுபவம் அதற்கு மாறானது.

* அது என்ன இந்திய அனுபவம்?

இன்றைய வங்கித் தொழில் நெருக்கடிக்கு முழு முதற்காரணம் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களே! வராக்கடன் சுழலில் சிக்க வைத்தவர்களும் அவர்களே! வங்கிகளின் வராக்கடன் 5,50,000 கோடிகளில் 90 சதவீதமானவை அரசு வங்கிகள் தந்த கடன்களே. ஆனால் அதில் கிட்டத்தட்ட 100 சதவீதமும் தனியார்கள் கட்டத்தவறிய கடன்களே.

“ கிரெடிட் சூசி ” வெளியிட்டுள்ள ‘கடன்களின் இல்லம்’ என்ற அறிக்கை இந்திய வங்கிகளின் கடன்கள் பற்றிய ஆழமான ஆய்வைச் செய்துள்ளது. இந்த ஆய்வு ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறது. “ சந்தை எழுச்சி ” இருந்த காலத்தில் தனியார் பெரும் தொழிலகங்கள் அதீத ஆசையோடு செய்த முதலீடுகளே காரணம் என்பதே அதன் செய்தி.
* யார் யார் இந்நெருக்கடியின் காரண கர்த்தாக்கள்?

உலக நிதி நெருக்கடிக்கு பிந்தைய ஐந்து ஆண்டுகளில் (2007 - 12) இந்தியாவின் மிகப்பெரும் 10 தொழிலகங்கள் கடன் சார்ந்த விரிவாக்கத்தில் ஈடுபட்டது. ஒரு சில பெரிய பெயர்களைச் சொல்லலாம். ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி, வேதாந்தா, எஸ்ஸார், ஜெய்பி, லாங்கோ போன்ற நிறுவனங்கள் மின்சாரம், உலோகம், ஆதாரத் தொழில்களில் மெகா முதலீடுகளை செய்தன. 

உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதங்களின் வளர்ச்சி விகிதங்கள் நிலைத்து நீடித்து நிற்குமென்ற நம்பிக்கையில் கடன் கிணற்றுக்குள் குதித்தார்கள் . 
அவர்களின் கடன்கள் 1 லட்சம் கோடிகளிலிருந்து 5,50,000 கோடிகளாக ஐந்து மடங்கு உயர்ந்தது. சிலர் அயல் நாட்டு நிறுவனங்களைக் கூட வாங்கினர். உள்நாட்டு வங்கிகளும் “ இந்தியப் பெருமிதம் ” பேசி இத்திட்டங்களுக்கு பணத்தை வாரி இறைத்தன. 

10 தொழிலகங்களின் கடன்கள் மட்டும் மொத்த வங்கிக் கடனில் ஐந்தாண்டுகளில் 6 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக வளர்ந்தன.


* அவர்களுக்கு என்ன நேர்ந்தது?

2013 ல் உலகளாவிய பொருளாதார நெருக்கடி உள்நாட்டின் நிதிச்சந்தையையும் நகர முடியாத தேக்கத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. ஊழல்களும் இத்திட்டங்களைச் சிதைத்தன. பல திட்டங்கள் ஆரம்ப நிலையிலேயே உயிரை விட்டன.

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் சுருங்கிப் போய்விட்டதால் கடன் வலைக்குள் சுருண்டுவிட்டன. 2012ல் கடன் வட்டியையாவது செலுத்த முடிகிற நிலைமையில் இருந்த இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் கடன்களை வாங்கின. 2015 நிதியாண்டில் இது 7.3 லட்சம் கோடிகளைத் தொட்டது. இவை வராக்கடன்களாக மாறிப் போயின.

* இவ்வளவு பெரிய நெருக்கடி இப்போதுதான் தெரிகிறதா?

2013 நிதியாண்டிற்குப் பிறகு சிக்கல் நிறுவனங்களுக்கு கடன் தருவதை நிறுத்தினாலும், கடன் மறுசீரமைப்பு என்ற பெயரால் வராக்கடனைக் குறைத்துக் காண்பிக்கிற நடைமுறைகள் கையாளப்பட்டன. பிறகு ரிசர்வ் வங்கி கொஞ்சம் ஸ்குரூக்களை டைட் பண்ண ஆரம்பித்தது. இதற்குப் பின்னர்தான் நெருக்கடியின் முழுப் பரிமாணம் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.

ஆனால் மேலோட்டமாக அரசு வங்கிகள் எச்சரிக்கையாக கடன் தந்திருக்க வேண்டும், திட்டங்கள் குறித்து சரியான மதிப்பீடுகளைச் செய்திருக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அரசு வங்கிகளின் எச்சரிக்கையற்ற கடன் நிர்வாகம் குற்றம் எனில், அதீதமான நிதி இடர்களை ஆசையின் காரணமாக மேற்கொண்டு இச்சிக்கலுக்கு காரணமாக இருந்த பெரும் தொழிலகங்களும் குற்றவாளிகள் அல்லவா!

* இருந்தாலும் வங்கி உயர்மட்ட நிர்வாகிகளும் பொறுப்பு ஏற்க வேண்டுமே!

அவர்களின் தவறுகளுக்கும் உள்நோக்கங்கள் இருந்திருக்கலாம். பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் அரசியல் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கலாம். அல்லது கைமாறாக ஏதாவது எதிர்பார்த்திருக்கலாம். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பேசும்போது அரசு வங்கிகளின் கடன் முடிவுகளில் அரசியல் தலைவர்களின் தொலைபேசி அழைப்புகள் பெரும் பங்கு வகித்துள்ளன என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் எவ்வளவு அரசியல் தலையீட்டால், எவ்வளவு கையூட்டுக்காக, எவ்வளவு தவறான மதிப்பீடுகளால் என வராக்கடன்களைப் பிரிப்பதற்கு ஆழமான ‘ரேகை’ ஆய்வு தேவைப்படுகிறது.

*தனியார்வங்கிகளின் நிலைமை என்ன?

கார்ப்பரேட்டுகளின் இடர் கடன்களுக்கு தனியார் வங்கிகளும் தப்பவில்லை. ரிசர்வ் வங்கி அவர்களை
நெருக்குகிற வரை இத்தகவல்கள் வெளிவராமல் இருந்தன. மார்ச் 2017 ல் தனியார் வங்கிகளின் கடனிலும் 9.3 சதவீதம் இடர் கடன்களாக மாறியுள்ளது என்ற உண்மை வெளியே வந்துள்ளது. 

ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, ஆர்.பி.எல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியன கடந்த சில காலாண்டுகளில் தங்களின் பாரம்பரியக் கடன்கள் பல இடரில் சிக்கியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளன. ஏன், அந்நிய நிதி நிறுவனங்களின் கடன்கள் கூட சிக்கலுக்கு ஆளாகியுள்ளதை ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி, ஜெய் பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

* அரசு நிறுவனங்கள் வங்கிக் கடன்கள் வாங்கியிருக்குமே!

மின்சாரம், உலோகம், ஆதாரத் தொழில்களில் ஈடுபட்ட தனியார் பெரு நிறுவனங்கள் வராக்கடன் சுமைக்குப் பெரும் காரணங்களாக உள்ளன. ஆனால் இதே ‘சந்தை எழுச்சி’ காலத்தில் (2007- 12) என்.டி.பி.சி, கோல் இந்தியா, என்.எம்.டி.சி, நால்கோ, என்.பி.சி.சி போன்றவை அதிக ஆசைப்படாமல் முதலீடு செய்து வலுவான இறுதிக் கணக்குகளோடு திகழ்கின்றன. 
எனவே தனியார் மயம் நல்ல நிர்வாகத்தைத் தரும் என்பது உண்மையும் அல்ல... நெருக்கடிக்கு தீர்வும் அல்ல...
                                                                                                              - ஆர்த்தி கிருஷ்ணன்
                                                                                                                                                                               ( பிசினஸ் லைனில் )
 "மோசடி கண்காணிப்பு குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி கடந்த நிதியாண்டில் (2016-17) மட்டும் வங்கிகளுக்கு நிதி மோசடி காரணமாக 16,786 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது."
                                                                                                                                         -ரிசர்வ் வங்கி 
=======================================================================================
===========================================================================================================================


நாடு முழுவதும் 10பைசாவில் பேசவைத்த ஆ.ராசா கெட்டவர். 
இட்டிலிக்கு வரி போட்ட மோடி நல்லவர்.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...