புதன், 12 செப்டம்பர், 2018

கங்கையில் குளித்தால்

    ‘கதி மோட்சம்’!                                                                                                                                   

                                                                                                                                         -சேது ராமலிங்கம்

சிறப்புக் கட்டுரை: கங்கையில் குளித்தால் ‘கதி மோட்சம்’!

"கங்கையில் மூழ்கி எழுந்தால் கதி மோட்சம் கிட்டும் என்பார்கள். ஆனால், கங்கையில் குளித்தாலே தீராத நோய்கள் வந்து மரணமடையும் நிலை உருவாகிவிட்டது. அந்த அளவுக்கு கங்கை முழுவதும் மனித உடல்களும் சாம்பலும் எலும்புகளும் மலமும் கழிவுநீரும் மிதக்கின்றன. உலகிலேயே அதிகமான மாசுள்ள நதியாக இன்று கங்கை மாறிவிட்டது. கங்கையைத் தூய்மைப்படுத்தக் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்னவாயிற்று?"
2014இல் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்ய வாரணாசி தொகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவர், “நானாக இங்கு வரவில்லை. கங்கை அன்னை அழைத்துத்தான் வந்தேன்” என்று தெரிவித்தார்.
இன்னும் ஐந்தாண்டுகளில் கங்கை அன்னைக்குச் சேவை செய்து அதை துாய்மைப்படுத்துவதே தனது வாழ்நாள் லட்சியம் என்றும் உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்டார். கங்கையைப் புனித நதியாகக் கருதும் கோடிக்கணக்கான இந்துக்கள் இதை நம்பினர். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.
உச்ச நீதிமன்றமே பலமுறை கண்டித்தும் இன்னும் கங்கையில் எப்போதும் போல அசுத்தங்களும் மாசுக்களும் அழுகிய பிணங்களும் மிதக்கின்றன.
இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் கங்கை புனித நதியாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர்த்து கங்கை பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. நாட்டிலேயே மிகப் பெரிய நதியான கங்கை, இமயத்திலிருந்து உற்பத்தியாகி 2,525 கிமீ தொலைவு பாய்ந்து ஓடுகிறது.
நாட்டின் 40 விழுக்காடு மக்கள் கங்கையினால் பயனடைகின்றனர். நாட்டுக்குப் பெரிய அளவில் சமூக, பொருளாரதார மற்றும் சுற்றுச்சூழல்ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாக இந்த நதி திகழ்கிறது.

நமாமி கங்கைத் திட்டம்
கங்கையைத் தூய்மைப்படுத்த முன்னதாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவில்லை. இதற்காகக் கோடிக்கணக்கான பணம்தான் வீணாகியது.
மோடி பிரதமரானதும் நமாமி கங்கைத் திட்டத்தை அறிவித்தார்.
 அந்தத் திட்டத்தின்படி கங்கையிலுள்ள உயிரியல்ரீதியான அசுத்தங்களைச் சுத்தப்படுத்த வேண்டும். அதனையொட்டியிலுள்ள கிராமங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
நதியின் படுகையில் காடுகள் வளர்க்க வேண்டும். கங்கை பாயும் மாநிலங்களான உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார், மேற்கு வங்கம் ஆகியவற்றில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், இவை நடக்கவில்லை.
இந்த மாநிலங்கள் அனைத்தும் நாளொன்றுக்கு 12,000 லிட்டர் கழிவுநீரை கங்கையில் கொட்டிவருகின்றன.
ஆனால் , திட்டத்தின்படி அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலைகள் நாளொன்றுக்கு 4,000 லிட்டரை மட்டுமே சுத்திகரிக்கும் திறன் கொண்டவை.
அதிலும் 1,000 லிட்டர்தான் சுத்திகரிக்க முடியும். கங்கையிலுள்ள 80 விழுக்காடு மாசானது சுத்திகரிக்கப்படாதது. இதில் 20 விழுக்காடு உத்தரப் பிரதேசத்திலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கரும்பு, பேப்பர் தொழிற்சாலைகள் ஆகியவற்றால் கொட்டப்படுபவையாகும்.
மோடி இந்தத் திட்டத்தை அறிவித்து நான்காண்டுகளாகிவிட்டன. ஆனால், கங்கையோ எப்போதும் போல அசுத்தம் நிரம்பி வழிவதாகவே உள்ளது.

குறைவான சுத்திகரிப்பு ஆலைகள்
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட மத்திய அரசின் கணக்குத் தணிக்கைக் குழுவின் 2017ஆம் ஆண்டின் அறிக்கையின்படி 1379 மில்லியன் லிட்டர் கழிவுநீரை வெளியேற்றத் திட்டமிடப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை.
2017 ஆகஸ்ட் வரை அமைக்கப்பட்ட 86 சுத்திரிகரிப்பு ஆலைகளில் 35 ஆலைகள்தான் செயல்படுகின்றன.
அதேபோலக் கழிவுகளில் உருவாகும் ஒருவித கிருமிகளின் அளவும் மிக அதிகமாக இருந்துவருகிறது. இந்தக் கிருமிகளின் அளவு 3,000 ஆக இருந்தது. நதியின் இறங்குமுகத்தில் அது 46,167 ஆக இருந்தது.
ஒரு நதியில் பாதுகாப்பாகக் குளிக்க வேண்டும் என்றால் அந்நதியில் கிருமிகளின் அளவு 100 மில்லிலிட்டருக்கு 500 என இருக்க வேண்டும்.

மத்தியக் கணக்குத் தணிக்கை அமைப்பின் அறிக்கையின்படி நதியில் மிதக்கும் மலத்திலிருந்து வரும் கிருமிகளின் அளவு ஆறிலிருந்து 334 மடங்கு வரை இருப்பதாகக் கூறியுள்ளது.
இது மிகவும் அபாயகரமான அளவாகும். இதன் விளைவாக தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் கங்கை நதியைப் பயன்படுத்த வேண்டாம், அதனால் உடல்நலம் பாதிக்கப்படும் என்று ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகளை வைப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

நமாமி கங்கைத் திட்டம் என்று கொண்டுவரப்பட்ட திட்டத்துக்கு ரூ.20,601 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி இதன் கீழ் அமல்படுத்தப்படவுள்ள 193 சுத்திகரிப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால், இதில் 20 விழுக்காடுதான் அதாவது ரூ.4,254 கோடிகள்தான் செலவழிக்கப்பட்டுள்ளது. இதற்காக 4031.41 கிமீ தொலைவுக்குக் கழிவுநீர்ப் பாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டன.
ஆனால், 1114.75 கி.மீ தொலைவுதான் இப்பாதை அமைக்கப்பட்டது. கழிவுநீர்ப் பாதைகள் அமைக்கப்படாததால் மிகப் பெரிய அளவில், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மாசுக்களும், ரசாயனப் பொருட்களும், இறந்தவர்களின் சடலங்களும் மலங்களும் குவியல் குவியலாக மிதக்கின்றன.
2014இல் 31 சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டன.
ஆனால், இவை மிகக் குறைந்த திறன் கொண்டவையாக இருந்தன. இந்நிலைமை நமாமி கங்கைத் திட்டம் ஆரம்ப நிலையிலேயே உள்ளது என்பதைக் காட்டுகிறது.

ஆண்டுக்கு 33,000 சடலங்கள் எரிப்பு
இதைத் தவிர, புனித நகரமான வாரணாசி, கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் அதிக கவனத்திற்குரியதாக இருந்தது. ஏனென்றால் இங்கிருந்துதான் பெருமளவில் அசுத்தங்கள் கங்கையில் கொட்டப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் 33,000 உடல்கள் கங்கையின் கரைகளில் சிதை மூட்டப்படுகின்றன. அதற்காக 16,000 டன் மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி, 900 டன் சாம்பல் கங்கையில் கொட்டப்பட்டுக் கரைக்கப்படுகிறது.
இத்துடன் பாதி எரிந்த உடல்களும் கங்கையின் கிளைகளான ஹரிச்சந்திரா, மணிகர்ணிகா ஆகியவற்றில் மிதக்க விடப்படுகின்றன என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கங்கை நதிக் கண்காணிப்பு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் பிடி திருப்பதி கூறுகிறார். அண்மையில் ஃப்ரன்ட்லைன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1972இல் இருந்து கங்கையை ஆய்வு செய்துவரும் திருப்பதி, தேசிய கங்கை நதிப் படுகை அமைப்பில் உறுப்பினராகவும் இருந்துவருகிறார். இவ்வமைப்பானது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் 2009இல் உருவாக்கப்பட்டது. அப்போது சடலங்களை மிதக்கவிடும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிறந்த கட்டுமானத்தை உருவாக்குவதாக அரசு கூறியது. ஆனால் இப்பிரச்சினையைச் சமாளிக்க ஒரே ஒரு மின்மயானம்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
அதுவும் சரிவர செயல்படுவதில்லை. எனவே கங்கையைத் தூய்மைப்படுத்துவதாகக் கூறுவது வெறும் பிரச்சாரமாகவே உள்ளது. அதற்கு மேல் அங்கு ஒன்றும் நடப்பதில்லை. கங்கை நீரானது அதே மோசமான தரத்துடன்தான் நீடிக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இது தவிர, கங்கையின் நீரோட்டம் குறைந்தால் நீரோட்டத்தில் மாசுக்கள் அதிகமாக அடித்துச் செல்லப்படாமல் தங்கிவிடுகின்றன. இதனால் மாசுக்கள் பல மடங்கு பெருகிவிடுகின்றன. ஆனால், அவற்றைச் சுத்திகரிப்பதற்கான கட்டுமானங்களோ 1986இல் நிறுவப்பட்டவைதான்.
அதற்குப் பின்னர் எந்த வசதியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறுகிறார் திருப்பதி. இந்த மாசுக்கள் குறைய வேண்டுமானால் அடித்துச் செல்லப்பட வேகத்துடன் கூடிய நீரோட்டம் தேவை என்றும் அவர் கூறுகிறார்.

கிருமிகளின் அளவு மிக அதிகம்
பனாரஸ் பல்கலைக்கழகத்தின் மின்னணுத் துறையின் பேராசிரியரும் சங்கத் மோச்சன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் தலைவருமான வி.என்.மிஸ்ரா, கங்கை நீரின் தரத்தைக் கடந்த 30 ஆண்டுகளாகக் கண்காணித்து வருகிறார்.

நமாமி கங்கைத் திட்டமானது வெறும் கோஷமாகிவிட்டது; அதனால் நீரின் தரம் உயரவில்லை என்கிறார் அவர் (ஃப்ரன்ட்லைன்). ஃபவுண்டேஷன் சேகரித்த தகவல்களின்படி 2016இல் கங்கையில் மிதக்கும் மலத்திலுள்ள கிருமிகளின் அளவு 100 மில்லிலிட்டருக்கு 41,00,000ஆக இருந்துள்ளது.
கங்கை வருணா நதியுடன் சங்கமிக்கும் இடத்தில் 100 மிலிட்டருக்கு 53,00,000ஆக இருந்துள்ளது. ஆசி, வருணா ஆகிய நதிகள் நகரின் வழியாகச் செல்வதால் நகரின் கழிவுகளையும் கங்கையில் கொண்டு சேர்க்கின்றன.
பேராசிரியரின் கூற்றுப்படி இந்தப் பிரச்சினைக்கு அரசு நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வு எதையும் மேற்கொள்ளவில்லை. வாரணாசி நகரில் கழிவுநீர் ஓடும் பாதைகள் கடந்த 100 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. இன்னொரு பாதை கட்டப்பட்டு வருகிறது.
ஆனால், கங்கையின் நீரோட்டத்திற்கேற்ப அது கட்டப்படவில்லை. இன்னொரு பக்கம் மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது. அதனால் அந்தக் கழிவுநீர்ப் பாதைகளும் குழாய்களும் எப்போது முறையாக இயங்கப் போகின்றனவோ தெரியவில்லை.

கங்கையில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் தீரும், மோட்சம் கிட்டும் என்னும் நம்பிக்கை பெரும்பாலான இந்துக்கள் மத்தியில் ஆழமாக உள்ளது.
இன்று கங்கை இருக்கும் நிலையில் அதில் மூழ்கிக் குளித்தால், உயிரையே குடிக்கும் நோய்கள் வரக்கூடிய நிலையில்தான் இந்த ஜீவ நதி உள்ளது. அந்த அளவு கடுமையான அசுத்தங்களையும் மாசுக்களையும் அது சுமந்துவருகிறது.

கங்கையில் மூழ்கினால் ‘கதி மோட்சம்’ ஏற்படும் என்பது இந்த வகையில் யதார்த்தமாகி வருகிறது.
நன்றி: பிரன்ட்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...