சனி, 3 செப்டம்பர், 2011

பார்த்து நடந்துக்கோங்க........,


ன் லோக்பால் வேண்டும் என்று கோரி அண்ணா ஹசாரே 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததை ஆங்கில ஊடகங்கள் ஆகஸ்ட் க்ராந்த்தி என்றன. சில தமிழ் ஊடகங்களில் கூட இப்போது கடந்த மாதம் நடந்த கூத்துகளை ஆகஸ்டு புரட்சி என்றே குறிப்பிடுகின்றனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும். மேற்படி ஆகஸ்டு புரட்சியின் போது நாளொரு நிலைப்பாடும் பொழுதொரு கொள்கையும்  எடுத்து குழப்புவதற்குப் பெயர்போன காங்கிரஸையே அண்ணா குழப்பியடித்தார்.
                              
மூன்றே நாளில் மசோதா வேண்டும் என்றார். இந்த மாதத்துக்குள் மசோதா நிறைவேற வேண்டும் என்றார். பிரதமரை ஜன்லோக்பாலில் கொண்டு வர வேண்டுமென்றார். அதை அப்படியே விட்டு விட்டு அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவைத் திரும்பப் பெற்றே ஆக வேண்டும் என்றார். பிறகு அந்தக் கோரிக்கையை திராட்டிலில் விட்டு விட்டு எங்கள் லோக்பாலையும் சேர்த்து கொஞ்சம் கவனிங்க என்றார். கடைசியில் அத்தனை நாட்கள் கேட்டதையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு மூன்று கோரிக்கையில் வந்து நின்றார்.
அந்த மூன்று கோரிக்கையுமே மொக்கைக் கோரிக்கைகள் என்று தனியே சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறோம். இப்படி அண்ணா ஹசாரே மாறி மாறி பேசிக் கொண்டிருந்த சமயத்தில் இதில் இருக்கும் இடியாப்பச் சிக்கல்களை அவிழ்க்க களமிறக்கப்பட்டவர் தான் பிரணாப் முகர்ஜி. அந்த சமயத்தில் அரசியலில் போடப்படும்  முடிச்சுகளையெல்லாம் அவிழ்க்கும் தெள்ளியதோர் முடிச்சவிழ்க்கி என்று ஆங்கில ஊடகங்கள் அவரை போற்றிப் புகழ்ந்தன. அப்போது அண்ணாவுக்கும் பிரணாபுக்கும் இடையே தூதுப் புறாவாக செயல்பட்டவர் விலாஸ்ராவ் தேஷ்முக்.
கபில் சிபலும், சிதம்பரமும் பேட் பாய்ஸ் என்றும், விலாஸ் ராவ் தேஷ்முக்கும் பிரணாபுமே குட்பாய்ஸ் என்றும் அண்ணா கும்பல் இவ்விருவருக்கும் நற்சான்றிதழ் வழங்கியிருந்தது. விலாஸ்ராவ் தேஷ்முக் நமக்குப் புதியவரல்ல. முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் – தற்போது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான கேபினட் அமைச்சர். இவரை 2g ஸ்பெக்ட்ரம் ஊழலை விட பெரியது என்று சொல்லப்பட்ட ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல் மூலம் நாட்டு மக்கள் சிறப்பாக அறிவார்கள். ராம்லீலா மைதான மேடையில் அண்ணாவும் விலாஸ்ராவும் கட்டிப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கூட கொடுத்தார்கள். அதில் அண்ணா அம்சமாக சிரித்திருப்பார் – மராத்தி மானூஸ் சிரிப்பாய் சிரித்தது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
இன்னொரு ‘நல்லவரான’ பிரணாப் முகர்ஜி பற்றி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையில் கடந்த 30-ம் தேதி ஒரு செய்தி வந்துள்ளது.
பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் செபி அமைப்பின் சேர்மனாக இருந்த யு.கே சின்ஹா என்பவருக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அவரது ஆலோசகரான ஓமிதா பவுலும் சில பெரிய நிறுவனங்கள் தொடர்பான தாவாக்களைக் கையாள்வது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளனர். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், அனில் அம்பானியின் அடாக், ராஜஸ்தான் வங்கி, சஹாரா குழுமம் உட்பட சில பெரிய கார்பப்ரேட் நிறுவனங்கள் தொடர்பான முறைகேடுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ‘பார்த்து பக்குவமாக’ நடந்து கொள்ளுமாறு நிதியமைச்சர் பிரணாப் அழுத்தம் கொடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, மேற்படி நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை கவனித்து வரும்  ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆபிரகாமிடம் நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் படி இந்நிறுவனங்கள் தொடர்பான விஷயங்களில் நீக்குப் போக்காக நடந்து கொள்ள வேண்டும் என்று யு.கே. சின்ஹா அறிவுறுத்தியுள்ளார். ஆபிரகாம் அதற்கு மறுக்கவே அவர் மேல் பல்வேறு பொய்யான புகார்களைக் கிளப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். ஆபிரகாம் தனது தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்து கடன் பெற்று வாங்கிய வீடு பற்றி குடைச்சல் கொடுத்துள்ளனர். பின்னர் தீவிர விசாரணைகளின் முடிவில் அவர் வீடு வாங்கியதில் முறைகேடுகள் ஏதும் இல்லை என்று தெளிவு படுத்தப்பட்டது.
அடுத்து, ஜூலை 20-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள ஆபிரகாமுக்கு மேலும் இரண்டாண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்ததை ரத்து செய்துள்ளனர். இப்படி பல்வேறு வகைகளில் அவர் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆபிரகாம், ஜூன் 1-ம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் நடந்த விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டு பிரதமர் அலுவலகத்திற்கும் மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளார். நல்லவரான பிரதமர், புகாரின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதைக் கிளப்பிய அதிகாரியின் பெயரோடு சேர்த்து அந்தக் கடிதத்தை அப்படியே நிதியமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.
பெரிய நிறுவனங்களின் ஊழல் முறைகேடுகள் பற்றிய புகாரில் தனது பெயர் வெளிப்படையாக்கப் பட்டதால் தனது உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று அச்சமடைந்துள்ள ஆபிரகாம், தற்போது விஷயத்தை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். பத்திரிகைகளில் விவகாரம் நாற்றமடிக்கத் தொடங்கியதும் இது தொடர்பாக பேட்டியளித்துள்ள யு.கே.சின்ஹா, ஆபிரகாமுக்கு சமீப காலமாக மனநிலை சரியில்லை என்று திமிர்த் தனமாக கருத்துத் தெரிவித்திருக்கிறார். பிரணாப் முகர்ஜி இன்னமும் வாயைத் திறக்கவில்லை.
ஆக, இங்கே ஊழல் என்பதன் பிறப்பிடம் என்பது கார்ப்பெரேட் தரகு முதலாளிகள் தான் என்பது இந்த விவகாரத்திலும், இதற்கு முன் வெளியான அநேகமான ஊழல்களிலும் வெளிப்படையாகவே தெரிகிறது. எதார்த்தம் இவ்வாறு இருக்க, அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு கோஷங்கள் அனைத்திலும் இந்த பகல் கொள்ளை கும்பலை மிகுந்த கவனத்துடன் தவிர்க்கிறார். இந்த நன்றிக் கடனுக்காகத் தான் அண்ணாவின் தம்பிகள் கண்டுபிடித்துள்ள மிஸ்டுகால் புரட்சிக்கும் எஸ்.எம்.எஸ் புரட்சிக்கும் ரிலையன்ஸ் தயங்காமல் ஸ்பான்சர் செய்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...