சனி, 3 செப்டம்பர், 2011

அனிதாவும்-ஆல்நாத் தப்பியதும்,


                            

கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைதாகி தற்போது சிறையில் உள்ள, முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க,,எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணனுடன் கைதான அவரது உதவியாளர் தப்பியோடியது, ‘வேறு ஒரு’ வில்லங்க காரணத்துக்காக என்ற பேச்சு தி.மு.க. வட்டாரங்களில் அடிபடுகின்றது.
இவர்கள் கூறும் காரணப்படி, இந்த தப்பியோடல், முற்று முழுதாக ஒரு செட்டப்!
திருச்செந்தூர் தொகுதி, தி.மு.க. எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், ஆறுமுகநேரி, தி.மு.க. நகர செயலர் சுரேஷ் என்பவரை கொலை செய்ய முயற்சியில் சம்மந்தப்பட்டுள்ளார் என்பதுதான் வழக்கு. இந்தக் குற்றச்சாட்டில் அனிதா கைது செய்யப்பட்டபோது, அவருடன் அவரது உதவியாளர் ஆல்நாத் என்பவரையும், போலீசார் கைது செய்தனர். சுரேஷ் போலவே இந்த ஆல்நாத்தும் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனிதாவும், ஆல்நாத்தும், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே அனிதா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் சிலவற்றில் சோதனையிட்ட போலிஸார், அங்கே எந்தவித ஆதாரத்தையும் எடுக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. தவிர, அனிதாவுக்கு எதிரான சாட்சிகளைத் தேடும் முயற்சியிலும் போலிஸ் வெற்றி பெறவில்லை என்று தெரியவருகின்றது.
இப்படியான நிலையில் இந்த கேஸ், நீதிமன்றத்தில் நின்று பிடிக்காது என்ற தகவல் சென்னைக்கு தெரிய வந்தபோது, இதில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது சென்னையின் கோபப் பார்வை பதிந்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது. வழக்கு விசாரணையின்போதோ, அல்லது ஜாமீன் மனு விசாரணையின்போதோ, அனிதா வெளியே வந்துவிட்டால், நிலைமை இன்னமும் மோசமாகி விடலாம் என்ற நிலையிலேயே, ஆல்நாத்தின் தப்பியோடல் அரங்கேறியிருக்கிறது.
சிறையில் இருந்த ஆல்நாத், நள்ளிரவு நேரத்தில் திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதாகவும், அதனால் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறுகிறது போலிஸ். அவருக்கு காவலாக மூன்று சிறைத்துறை போலீசார், பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இரவு ஏதும் நடக்கவில்லை.
நேற்று மதிய நேரத்தில், பாத்ரூம் அழைத்துச் செல்லப்பட்ட போது, காவலுக்கு நின்றிருந்த போலீஸ்காரரை தள்ளிவிட்டு மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடிவிட்டார் ஆல்நாத் என்கிறது போலிஸ்.
இந்தச் சம்பவம் பற்றி தூத்துக்குடி தி.மு.க. வட்டாரங்களில், “ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விஷயம்தான் இது” என்கிறார்கள். அனிதாவுக்கு எதிராக ஆல்நாத், வாக்குமூலம் கொடுக்க சம்மதித்து விட்டார் என்று கூறும் அவர்கள், “ஆதாரங்களோ, வேறு சாட்சிகளோ இல்லாத நிலையில், ஆல்நாத்தின் வெறும் வாக்குமூலத்தை மாத்திரம் வைத்து நீதிமன்றத்தில் கேஸை வெற்றி கொள்ள முடியாது என்பதாலேயே இந்த ஏற்பாடு” என்கிறார்கள்.
                           
“விசாரணைக் கைதி தப்பிச் சென்றால், அவர்மீதுள்ள குற்றச்சாட்டு மேலும் இறுகும். அதே குற்றச்சாட்டில் அவருடன் கைதாகியுள்ள அனிதாவையும் அது பாதிக்கும். அந்த நிலையில், அனிதாவுக்கு எதிராக ஆல்நாத் வாக்குமூலம் கொடுத்தால் அது பவர்ஃபுல்லாக இருக்கும்” என்பதே அவர்களது ஊகம்.
இந்த ஊகம் சரியாக இருந்தால், ஆல்நாத் மிக விரைவில் போலிஸாரிடம் பிடிபட வேண்டும்.
                 -இராகு,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...