சனி, 10 டிசம்பர், 2016

லஞ்சம் வாங்கிய மோடி?

பாஜக அரசின்  பிரதமர் என்ற முறையில், ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் மிகப்பெரிய எதிரி என்று மோடி மக்கள் மத்தியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு வருகிறார். தான் ஒரு நெருப்பு எனவும் தன்னை ஊழலும் லஞ்சமும் நெருங்க முடியாது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். 
அதையும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஊழல் இல்லாத ஆட்சிதான் தனது மிகப்பெரிய சாதனை எனவும் அவர் சொந்தம் கொண்டாடுகிறார். ஆனால், அவர் குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் பல முறைகேடுகள் நடந்தன. 
அவற்றை சில ஊடகங்கள் 2014க்கு முன்னரே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.
தற்பொழுது மோடியே நேரடியாக லஞ்சம் பெற்றார் எனும் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் பிரதான ஊடகங்கள் அதை வெளியிட மறுக்கின்றன. 
மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது சஹாரா குழுமம் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்திடம் சுமார் 55.2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது என பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றம் சாட்டுகிறார். இதே குற்றச்சாட்டை தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.
எனினும் இதுவரை மோடி இதற்கு பதில் அளிக்கவில்லை. கார்ப்பரேட்டுகளின் பணம் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் பைகளுக்குள் ஆழமாக ஊடுருவும் என்பதை இந்த ஆவணங்கள் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகின்றன.நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரிக்கும் எவரும் ஊழல் செய்யாமல் இருக்க முடியாது. மோடி அரசாங்கமும் இதற்கு விலக்கு அல்ல. 
அரசாங்க அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் அதிகாரத்திற்கு அஞ்சும் ஊடகங்களின் மவுனம் மூலமும் இந்த உண்மைகளை தற்காலிகமாக மூடிமறைக்கலாம். ஆனால் மக்களிடமிருந்து நிரந்தரமாக மறைக்க முடியாது.
ஆதித்யா பிர்லா குழுமத்திடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
2013ம் ஆண்டு நிலக்கரி ஊழல் தொடர்பாக மத்தியபுலனாய்வு துறை ஆதித்யா பிர்லா குழு மத்திற்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்தில் சோதனை நடத்தியது. 
அப்பொழுது ஹிண்டால்கோவின் முதன்மை அதிகாரி சுபேந்து அமிதாப்பின் அலு வலகத்தில் இருந்து ரூ 25 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரது கணினியில் இருந்து பல ரகசியத் தகவல்களும் கைப்பற்றப்பட்டன.
அதில் ஆதித்யா பிர்லாகுழுமம் தமது தொழில் திட்டங்களுக்கு சுற்றுபுற சூழல் தடையில்லா சான்றிதழ் பெற ‘‘ஜெ’’ (J) என்பவருக்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு இருந்தது. (அப் பொழுது இந்த துறைக்கு ஜெயந்தி நட ராஜன் அமைச்சர். ஆனால், ‘‘ஜெ’’ என்பது எவரை குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை.) மேலும் ‘குஜராத் சி.எம். (CM) – 25 கோடி – 12 கொடுக்கப்பட்டது- மீதி 13?’ எனும் ஒரு பதிவும் இருந்தது. இன்னும் ஹவாலா பணம் குறித்தும் பல விவரங்கள் கைப்பற்றப்பட்டன.
 இந்த விவரங்கள் லஞ்சம் – ஊழல் நடந்திருப்பதை தெளிவுபடுத்துகின்றன. எனினும் புலனாய்வுத் துறை இது குறித்து எவ்வித வழக்கையும் பதியவில்லை.
விசாரணையும் நடத்தவில்லை. மாறாகஇந்த விவரங்களை வருமான வரித்துறைக்குஅனுப்பியது. வருமான வரித்துறை ஓரளவு விசாரணையை நடத்தியது. 
சுபேந்து அமிதாப் பலமுறை விசாரிக்கப்பட்டார். குஜராத் சி.எம். எனில் யார் எனும் கேள்விக்கு அவர் குஜராத் அல்கலி கெமிக்கல்ஸ் (Gujarat Alkalis and Chemicals) என்பதையே குறிக்கும் என்று கூறினார்.
 சி.எம். (CM) என்பது எதனை பொருள்படுத்துகிறது எனும் கேள்விக்கு அவரிடம் திருப்திகரமான பதில் இல்லை. சி.எம். (CM) எனில் CHIEF MINISTER என்பதே பொருள் என்பது தெளிவு.
இதற்கு மேல் இந்த விசாரணை நகர வில்லை.வருமான வரித்துறை மேற்கொண்டு விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அல்லது மீண்டும் புலனாய்வுத்துறைக்கு அந்த ஆவணங்கள் மேற்கொண்டு விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். எதுவும் நடைபெறவில்லை. 
பிரச்சனை புதைக்கப்பட்டது. பின்னர் ஆதித்யா பிர்லா குழுமம் வருமான வரித்துறையிடம் இந்த வழக்கை முடித்துவைக்க அணுகியது. அவ்வாறு முடித்துவைக்கப்பட்டால் இந்த ஆவணங்கள் முழுவதும் மீண்டும் ஆதித்யா பிர்லா குழு மத்தின் கைகளுக்கே சென்றுவிடும். இந்த ஊழல் நிரந்தரமாக மறைக்கப்பட்டுவிடும்.
சஹாரா ஆவணங்கள்
சஹாரா ரெய்டுகள் 2014ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி நடைபெற்றது. சஹாரா குழுமத்தின் பல்வேறு அலுவலகங்களிடமிருந்து சுமார் ரூ.137 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கும் கணினியில் இருந்து சில விவரங்கள் கைப்பற்றப்பட்டன. 
அதில் பல அரசியல்வாதிகளுக்கு தரப்பட்ட பணம் பற்றிய பதிவுகள் இருந்தன.
அதில் கீழ்கண்ட பதிவுகள் மோடிக்கு தந்ததாக விவரங்கள் குறிக்கப்பட்டிருந்தன.30.10.2013 – ரூ. 2.5 கோடி; 12.11.2013 – ரூ.5.1 கோடி; 27.11.2013- ரூ.2.5 கோடி; 29.11.2013- ரூ. 5 கோடி; 22.02.2014- ரூ.5கோடி இது மட்டுமல்லாது மோடிக்கு மேலும் சில தேதிகளில் பணம் தரப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.40 கோடி ரூபாய் மோடிக்கு தரப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. 

தேதி வாரியாக இந்த பதிவுகள் உள்ளன. மேலும் இந்த தொகைகள் முழுதும் அகமதாபாத்தில் வைத்து தரப்பட்டுள்ளன. 
இந்த தொகை ஜெய்ஸ்வால் எனும் ஒரு நபர் மூலமாக தரப்பட்டது எனவும் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சஹாரா குழுமம் மோடிக்கு மட்டுமல்ல; பா.ஜ.க. முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான்(மத்தியப் பிரதேசம்)- ரூ.10 கோடி, ராமன் சிங்(சத்தீஸ்கர்)- ரூ 4 கோடி மற்றும் காங்கிரசின் ஷீலா தீட்சித்திற்கு ரூ 1 கோடி எனவும் பணம் தரப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் பாஜக பொருளாளர் ஷைனாவுக்கும் ரூ.3கோடிக்கும் அதிகமாக தரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை துணை இயக்குநர் அங்கிதா பாண்டே எனும் பெண் அதிகாரி கையெழுத்திட்டுள்ளார். அதனை உறுதி செய்து இரண்டு சாட்சிகள் மட்டுமல்லாது சஹாரா அதிகாரிகளும் கையெழுத்து இட்டுள்ளனர். 
இந்த ஆவணங்களில் உள்ளது அங்கிதா பாண்டேவின் கையெழுத்துதானா என்பதை உறுதி செய்யுமாறு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடிதம் எழுதினார்.
அங்கிதா பாண்டேவின் இரு வேறு கையெழுத்துக்களை ஒப்பிட்டு சஹாரா ஆவணங்களில் இருப்பது அங்கிதா பாண்டேவின் கையெழுத்துதான் என்பதை தில்லி அரசாங்கம் தடவியல் ஆய்விக்கு பிறகு உறுதி செய்தது.இதுகுறித்து எக்னாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லியின் ஆசிரியர் பரஞ்ஜய் குஹா இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதியன்று அங்கிதா பாண்டேவுடன் தொலைபேசியில் பேசியபொழுது, தான் நீண்ட விடுப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
மேலும் பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு தனக்கு அனுமதியில்லை எனவும் இந்த ஆவணங்கள் குறித்து ஆம் அல்லது இல்லை என்பதைச் சொல்ல இயலாது எனவும் அங்கிதா பாண்டே கூறினார். மோடியையும் இதர அரசியல்வாதிகளையும் காப்பாற்ற இந்த பெண் அதிகாரி விடுப்பில் அனுப்பப்பட்டார் என்பதை கூறத்தேவை இல்லை.
                                                                                                                         தொகுப்பு : அ.அன்வர் உசேன்
                                                                                                                                    ஆதாரம்: -1) Wire இதழுக்கு பிரஷாந்த் பூஷன் அளித்த பேட்டி.                                                                                                                                                     2) News click.com
குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க மறுக்கும் மோடி
ஆதித்யா பிர்லா மற்றும் சஹாரா குழு மங்களின் மீது நடந்த வருமானவரித் துறையின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் கே.வி.சவுத்ரி எனும் அதிகாரி. இவர்தான் இந்த விசாரணையை குழி தோண்டிப் புதைக்க முயன்றவர் எனும் குற்றச்சாட்டு உள்ளது. இவர் அரசுத்துறைகளின் ஊழல்களை விசாரிக்கும் மத்திய கண்காணிப்பு குழு (Central Vigilance Commission) எனும் அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
மோடி மற்றும் ஏனையோர் மீது உள்ள லஞ்ச குற்றச்சாட்டுகளை மறைத்த திருப்பணிக்கு பரிசாகவே இந்தப் பதவி தரப்பட்டது என்பது வெள்ளிடை மலை. ஊழலை மறைத்தவர் ஊழல் ஒழிப்பு அமைப்புக்கு தலைவர். 
என்னே மோடி அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு கடமை! 
இவரின் இந்த நியமனத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கூடுதல் ஆதாரம் கேட்கும் நீதிமன்றம்
இந்த லஞ்ச விவகாரம் குறித்து மத்திய கண்காணிப்பு குழு, அமலாக்கப் பிரிவு, வருமானவரித் துறை, கறுப்புப் பணம் குறித்த சிறப்பு புலனாய்வு குழு, மத்திய புலனாய்வு குழு ஆகிய அமைப்புகளுக்கு ஆதாரங்களுடன் பிரஷாந்த் பூஷன் கடிதம் எழுதினார். 
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எக்னாமிக் அன்டு பொலிட்டிகல் வீக்லியும் காரவன் பத்திரிகையும் இந்த ஆவணங்கள் குறித்து மோடி, சவுகான், ராமன்சிங், ஷீலா தீட்சித் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பினர். 
ஆனால் ஆனால் எவருமே பதில் அனுப்பவில்லை. உச்சநீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. கூடுதலான ஆதாரங்கள் கொண்டுவரும்படி நீதிமன்றம் கூறிவிட்டது.
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...