சனி, 10 ஜனவரி, 2015

பாதை தெரியலை பார்.?

  • பொருளாதார அபாய கட்டத்தில் இந்தியா. 
  • வேலைகள் பறி போகின்றன. 
  • புதிய வேலை வாய்ப்புக்கும் வழியில்லை.
  • தொழிற்சாலைகளு ம்  மூடப்பட்டு வருகின்றன -

 பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழப் புக்கு ஆளாகின்றனர் புதிய வேலை வாய்ப்புக்கும் வழியில்லை.
இந்நிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவில் தலை தூக்கும் அபாயத்தில் நாடு இருக்கிறது. இளைஞர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:
வளர்ச்சி வளர்ச்சி என்ற வசீகரமான குரலைக் கொடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மக்கள் மத்தியிலே பெரியதோர் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
ஏழரை 
இந்த ஏழரை மாதங்களில் மதவாத ஓங்காரக் குரலேயன்றி, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மோதல்களை உண்டாக்கும் போக்கு அல்லாமல்,  பொரு ளாதாரத் துறையிலோ, தொழில் வளர்ச்சியிலோ, வேலை வாய்ப்பிலோ, கல்வி மேம்பாட்டிலோ, மக்களின் சுகாதார வளர்ச்சியிலோ குறிப்பிடத்தக்க சாதனையைச் சொல்லி மார்தட்ட முடியுமா?
பணவீக்கம் 
பணவீக்கம் குறைந்தது என்று சொல்கிறார்கள்; உலகச் சந்தையில் பெட்ரோலிய கச்சாப் பொருள்கள் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக உலகளவில் ஏற்பட்ட மாற்றமே அல்லாமல் இந்த ஆட்சியின் வளர்ச்சித் திட்டங் களால் விளைந்த பலன் அல்ல என்பது பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கான பால பாடமாகும்.
கடந்த டிசம்பர் இறுதியில் அதற்கு முன்அய்ந்தாண்டு களில் என்றுமே இல்லாத அளவுக்குப் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 55 டாலர் என்ற விலைக்குக் குறைந்தது. இதன்படி இந்தியாவில் லிட்டர் ஒன்று  ரூ.35-க்கு விற்க வேண்டும்.  ஏன் இதைக் குறைக்கவில்லை?
விலையை உயர்த்தியது ஏன்?
என்ன விபரீதம் என்றால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை இதுவரை மூன்று முறை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. வீட்டுக்குப் பயன்படுத்தும் எரிபொருளின் விலையும் உயர்த்தப்பட்டது; கேட்டால் சொல்லப்படும் காரணம் என்ன தெரியுமா? இதன்மூலம் ஆறாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது; அதைக் கொண்டு 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலைகள் போடலாம்; உள் கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தலாம் என்ற வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக்கியானங் களை கூறுகிறார்கள்.
உப்பு அதிகம் போனால் தண்ணீரை ஊற்றுவது, தண்ணீர் அதிகம் போனால் உப்பை அள்ளிக் கொட்டுவதுதான் மோடி அரசின் பொருளாதாரமா?
இன்னொரு பக்கத்தில் இலாபம் கொழிக்கும் பொதுத் துறைகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது; வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில் அரசுத்துறைகளை விற்பதற்கென்றே அருண்ஷோரி  (Minister for Disinvestment) என்ற அமைச்சர் இருந்தார் - இப்பொழுது அருண்ஷோரி போய் அருண்ஜேட்லி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார். (வெளிப்படையாக அப்படியொரு துறை இல்லை - அவ்வளவுதான்) பிஜேபி எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த, துறைகளின் பங்குகளை எல்லாம் இப்பொழுது கண்மூடித் தனமாக விற்றுக் கொண்டு இருக்கிறது.
கார்ப்பரேட்டுகள் ஆட்சி
கார்ப்பரேட்டுகளின் கைவலுத்த முதலாளித்துவ ஆட்சியாக வாயு வேகத்தில் இறக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்க அதானிக்கு இந்தியாவின் ஸ்டேட் வங்கி மூலம் ரூ.6200 கோடி கடனை வழங்கிட பிரதமர் மோடி துணை போகிறார் என்பதையும் கவனித்தால் இந்த உண்மையின் பலம் எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
வேலை வாய்ப்பு 
மோடி காந்திநகரில்  (பிரவாசி பாரத் திவஸ்) வெளி நாட்டுவாழ் இந்தியர் தினத்தை கொண்டாடிக்கொண்டு  இருக்கும்போது  தொழிலாளர் துறை அமைச்சகம் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வழங்கியுள்ளது.   இந்தியாவில் வேலைவாய்பின்மை 4.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்குள் வேலை யில்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
நகர்ப்புறங்களில் முக்கியமாக தொழிற்சாலைகள் எவ்வித காரணமுமின்றி மூடப்பட்டு வருகிறது. மோடி தலைமையில் ஆன பாஜக அரசின் புரிதலற்ற பொரு ளாதாரக்கொள்கை காரணமாக அனைத்து மட்டங்களிலும் வேலைவாய்ப்பின்மை பெருகி வருகிறது.
வட இந்திய பல்வேறு மாநிலங்களில் 100  நாள் வேலை வாய்ப்புத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன்பட்டு வந்த 60 விழுக்காடு மக்கள் வேலை வாய்ப்பிழந்தவர்களாகிவிட்டனர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் 5.7 விழுக்காடு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது.
வேலைவாய்ப்பின்மை கிராமப்புறங்களைப் பொறுத்தவரை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தின் மூலம் 83 விழுக்காடு பெண்களும் 67 விழுக்காடு ஆண்களும் பயனடைந்து வந்தனர்.
நகர்ப் புறங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தினசரிக்கூலிகளின் நிலையும் பரிதாபமாக உள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பல்வேறு கட்டுமானப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதை நம்பியுள்ள 43 விழுக்காடு மக்கள்  வேலைவாய்ப்பின்றி வாடுகின்றனர்.
இவர்களின் பெரும்பாலானோர் தினசரி கூலிகளாக பணிபுரிகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கை காரணமாக எதிர்வரும் ஆண்டுகளில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில்  வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மூடப்பட்ட அரசுத்துறை நிறுவனங்கள்
  • 2014 செப்டம்பர் ஹிந்துஸ்தான் வாட்ச் லிமிடெட் மூடப்பட்டதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 17,000 தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
  • ஏர்.இந்தியா, ஓ.என்.ஜி.சி, போன்ற அரசுத்துறை நிறுவனங்களின் பல்வேறு பிரிவுகள் இழுத்து மூடப்பட்டன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வேலைவாய்ப்பிழந்து நிற்கின்றனர்.
  • நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் காரணமாக அதைச் சார்ந்த 30,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர்.
  • ரெயில்வேயை தனியார் மயமாக் கவில்லை என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக தனியாரிடம் விட ஒப்பந்தம்.
  • காப்பீட்டுத்துறைகளில் அந்நிய மூலதனம் அதிகரிப்பு.
 தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள்
சர்வதேச அளவில் தகவல் தொடர்புத்துறை அதிநவீன மயமாக்கப்பட்டு வருவதால் பெரும்பாலான நாடுகள் தங்களது தேவைகளைத் தாங்களே மிகவும் குறைந்த செலவில் பூர்த்தி செய்துகொள்கின்றன. 
இதன் காரணமாக (அய்.டி) தகவல் தொழில் நுட்பத் துறையைச்சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வருகிறது.
இந்த வரிசையில் கடந்த 3 மாதங்களாக விப்ரோ, எல்&டி, டாடா கன்சல்டன்சி மற்றும் ஹக்சார்வே போன்ற பெரிய தகவல் தொழில் துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் நாடு முழுவதும் தங்களது கிளை நிறுவனங்களில் பலவற்றை மூடியுள்ளன. 
இதனால் நாடு முழுவதும் ஒருலட்சத்திற்கும் அதிக மானோர் வேலையிழந்துள்ளனர். இவர்களில் இளைஞர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.   
தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்களில் கதவடைப்பு காரணமாக இத்துறையைச் சேர்ந்த ஆண்களில் 57 விழுக் காடும் பெண்களில் 42 விழுக்காடும் வேலையிழந்துள்ளனர்.
இதில் வேடிக்கை இந்நிறுவனங்கள் லாபத்தில் உள்ளன.பணியாளர்களுக்கு சம்பளத்தை குறைக்கவே இவ்வாறு செயல் படுகின்றன.
அய்.டி தொழிலாளர்களுக்கு சங்க அமைப்பு இல்லாததால் டி .சி.எஸ் போன்றவை தறிகெட்டு செயல்படுகிறது.25000 பணியார்களை தகுதீல்லாதவர்கல் என முத்திரையிட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.இதை மத்திய,மாநில அரசுகள் கண்டு கொள்ளவே இல்லை. இதில் வேடிக்கை.அதே டி.சி.எஸ்.நிறுவனம் புதிதாக 55000 பேர்களை வேலைக்கு சேர்க்க ஆணை அனுப்பியுள்ளதுதான்.

இந்தியாவில் இந்த நிலை என்றால் தமிழ்நாட்டில் நிலை   அதல பாதாளத்தில் குப்புற வீழ்ந்து கிடக்கும் பரிதாப நிலை!
நோக்கியா, பிஒய்டி ஆகிய மின்பொருள் தொழிற் சாலைகள் மூடப்பட்டு விட்டன. ஃபாக்ஸ்கான் தொழிற் சாலை மூடப்படுகிறது; பிளக்ட்ரானிக், சான்மினா போன்ற தொழிற்சாலைகளில் ஆள் குறைப்புச் செய்யப்படுகிறது. இவற்றின் மூலம் 25,000 பேர் வேலையை இழக்கின்றனர் என்றால் 25,000 குடும்பங்கள் நடு வீதிக்கு வருகின்றன என்று பொருள்.
என்விஎச் இந்தியா தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கி இதுவரை தமிழ்நாட்டில் 50 ஆயிரம் தொழிலாளர்கள்  வெளியேற்றப் பட்டுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் தலை தூக்கினால் நாட்டில் இளைஞர் மத்தியில் வன்முறை தலைதூக்கும் அபாயமும் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு பக்கத்தில் வேலை வாய்ப்புப் பறிப்பு; இன்னொரு பக்கத்தில் அரசுத்துறைகள் தனியார்த் துறைகளுக்கு கைமாறும் போக்கு;  தனியார் துறைகளில் இடஒதுக்கீடு இல் லாமையால்  போராடி போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டுக்கு ஆழக் குழிபறிப்பு! உயிர் காக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெட்டு,  (20 சதவீதம் குறைப்பு ரூ.6000 கோடி வெட்டப்பட்டுள்ளது) உலகில் எய்ட்ஸ் (எச்.அய்.வி.) பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பாகம் இந்தியாவில் உள்ளனர்; 
ம த்திய அரசின் விபரீத போக்கால் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட் டுள்ளது. அறிவிக்கப்பட்ட இரயில்வே துறை வளர்ச்சித் திட்டங்களும் முடக்கம்!
இந்த ஆபத்துகளின் இரும்புப் பிடியில் நாடு அபாய கட்டத்தைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது மக்களின் கவனம் இந்தப் பக்கம் வராமல் தடுக்க மற்றொரு பக்கத்தில் இந்துத்துவாவாதிகளின் மதவாதக் கூச்சல்!
கி.வீரமணி
இவற்றை எல்லாம் முறியடிக்க வேண்டியது மக்கள் நலன்மீது அக்கறை கொண்டவர்களின் அவசியமான அடிப்படைக் கடமையாகும். மக்கள் மத்தியில் பிரச்சினைகளைக் கொண்டு போகவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதையும் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதைத் தடுக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற உரிமைக் குரல் எழுப்பவும், சமூக நீதியை நிலை நாட்டவும்  போராட வேண்டிய நிலையில் தான் நாடு இருக்கிறது.
மேற்கத்திய மாயை கலாச்சாரத்தை புகுத்தி இன்றைய இளைஞர்களை நாட்டின் நிலையை கண்டித்து போராட இயலாதவாறு மூளைச்சலவை செய்துள்ளன மத்திய மாநில ,அரசுகள் அவர்களின் ஆதரவு கார்ப்பரேட் ஊடகங்களும்.
மொத்தத்தில் இந்தியா வேலை வாய்ப்பு புதிதா க உருவாக வில்லை,வேலை பார்த்தவர்களின் வேலையும் பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கின்றனர்,அரசு நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப் படுகின்றன,மறுபக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உறைந்து கொண்டிருக்கின்றன,மக்கள் வாழ்வுக்கு தேவையான ஊதியம் மறுக்கப்ப்டுகினறன்,விலைகளை குறைக்கும் மானியங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.
ஆக இந்தியா  முட்டுச்சந்தில் இருக்கிறது.இதை சென்ற காங்கிரசு அரசு செய்ய ஆரம்பித்தது.மோடி அரசு முனைந்து அழிவ நோக்கி இந்தியாவை தள்ளுகிறது.
அதன் நோக்கம் கையில் திரிசூலத்துடன்  இந்தியாவை இந்து தேசமாக்குவதுதான்.
கி.வீரமணி,
=====================================================================
சிறு குழந்தையிலிருந்தே தேசிய கொடி என்றால் சட்டென்று எல்லோருக்கும்  ஞாபகம் வருவது "கொடி காத்த குமரன்" என்ற பெயரை தான்!

ஆம், சாகும் தருவாயிலும் நமது தேசிய கொடியை தரையில் விழாமல் தாங்கி பிடித்தவர் அல்லவா!  இன்று அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. 
அக்டோபர்  4, 1904 அன்று  பிறந்தார்.
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே  குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர இயலவில்லை. ஆதலால் கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்தார்.

1923ஆம் ஆண்டு தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை திருமணம் செய்து கொண்டார். கைத்தறியில் போதிய வருமானம் கிடைக்கப்பெறாததால் ஈங்கூர் என்னும் ஊரில் கந்தசாமி கவுண்டர் நடத்திய பஞ்சு மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

பிறகு காந்திய சிந்தனையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட குமரன், தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானார்.

1932 ஆம் ஆண்டு காந்தியை கைது செய்தது ஆங்கிலேய அரசு. இதன்படி காங்கிரஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டு இருந்தது. ஊர்வலங்கள், போராட்டங்கள், பொது கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. அந்நாட்களில் பாதுகாப்பு சட்டம் என்று ஒன்று இருந்தது. இதன்மூலம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியிருந்தது.

இந்த கட்டுபாட்டுகளை  எல்லாம் மீறி 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி ஓர் ஊர்வலம் நடைபெற்றது.  தியாகி பி.எஸ்.சுந்தரம் அந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையில் திருப்பூர் குமரன், இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், அப்புக்குட்டி, நாராயணன், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.  இந்த ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்றது.

ஊர்வலம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீஸ்காரர்கள் ஊர்வலத்தில் ஈடுப்பட்டவர்களை தடியடியுடன் சரமாரியாக தாக்கினர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன.

திருப்பூர் குமரனின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டு கொட்டியது. 
ஆனாலும்உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவர் கையில் பிடித்திருந்த பிடி தளரவேயில்லை. 
கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் கீழே விழவேயில்லை. போலீஸ்காரர்கள் அவர்கள் அணிந்திருந்த பூட்ஸ் காலால் உதைத்தனர். சிலர் உடலின் மீது ஏறி மிதித்தனர். 
சுய நினைவை இழந்த குமரன் அப்போதும் அவரின் பிடி தளரவிடவேவில்லை.

கடைசி அவர் கொடி அவர் கைகளிலேயே இருந்தது.  
படுகாயமடைந்த குமரன் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள்  ஜனவரி 11, 1932 அன்று உயிர் நீத்தார். 
அன்று முதல் குமாரசாமியாகவும், திருப்பூர் குமரமாகவும் இருந்த குமரன், "கொடி காத்த குமரன்" என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்திய அரசு இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு அக்டோபரில்   அவரின் நினைவாக தபால் தலையை வெளியிடப்பட்டது.

                                                                                                                                                                                     - ஜி.கே.தினேஷ் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...