திங்கள், 20 ஆகஸ்ட், 2018

வீணான 40 டன் நாணயங்கள்!

அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக, நிலுவையில் உள்ள 40 டன் மலேசிய நாணயங்கள் மாற்றப்படாததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .
"திருப்பதி தேவஸ்தானத்திடம் மலேசியாவைச் சேர்ந்த சில்லறை நாணயங்கள் 40 டன் அளவுக்கு மாற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. அவற்றை மாற்றிக் கொள்ள தேவஸ்தானம் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. தற்போது, மலேசியாவின் ஒரு ரிங்கட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17-ஆக உள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு வரை தேவஸ்தானம், வெளிநாட்டு நாணயங்களை அவற்றின் எடைக்கு ஏற்ப விற்று, இந்திய ரூபாயாக மாற்றி வந்தது.
அதைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு வரை நாணயத்தின் மதிப்பை வைத்து, அதற்கு ஏற்ற வகையில் இந்தியப் பணமாக தேவஸ்தானம் மாற்றி வந்தது. அதன்பின், வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடைமுறை நின்று போனது. அதனால், அவை தேவஸ்தானக் கருவூலத்தில் மலைபோல் குவியத் துவங்கின.

வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடவடிக்கையை தேவஸ்தானம் கடந்த 2012இல் மீண்டும் மேற்கொண்டது.
நாணயங்களின் மதிப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரியது. வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற ஏஜென்சிகளுக்கு மட்டுமே வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் அதிகாரம் உள்ளது.
அதன்படி, கோடக் மகீந்திரா வங்கி மட்டும் ஒப்பந்தப்புள்ளி அனுப்பியது. அதில் ஒரு சென் மலேசிய நாணயத்திற்கு 4 பைசா, 5 சென்னிற்கு 12 பைசா, 10 சென்னிற்கு 40 பைசா, 20 சென்னிற்கு ஒரு ரூபாய், 50 சென்னிற்கு ரூ.2.80, ஒரு ரிங்கட்டிற்கு 40 பைசா என்ற ரீதியில் அளிக்கத் தயாராக உள்ளதாக அந்த வங்கி குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதை தேவஸ்தானம் நிராகரித்தது. அதன்பின், நடப்பு ஆண்டு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரியது. அப்போது கோடக் மகீந்தரா, சென் காயின்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் உள்ளிட்டவை ஒப்பந்தப்புள்ளி அனுப்பின.
அதில் இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் நிறுவனம், ஒரு ரிங்கிட்டிற்கு 5 பைசாவும், கோடக் மகீந்தரா, 49 பைசாவும் அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தன. ஒரு ரிங்கட்டின் மதிப்பு ரூ.17 ஆக இருக்கும் நிலையில், வெறும் 49 பைசா மட்டும் அளிப்பதா? என்று தேவஸ்தானம் அதை நிராகரித்தது. ஆனால், மலேசிய நாட்டில் பணமதிப்பிழப்பு செய்து பயன்பாட்டில் இல்லாத நாணயங்களுக்கு, எவ்வாறு முழு மதிப்பு அளிப்பார்கள் என்பதை தேவஸ்தான அதிகாரிகள் யோசிக்கத் தவறிவிட்டனர். மலேசியா தனது பணத்தை மதிப்பிழப்பு செய்தபோது, அதற்கென அளிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சில்லறை நாணயங்களை தேவஸ்தானம் மாற்றியிருந்தால் இது போன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.
ஆலய அதிகாரிகளின்  அலட்சியப் போக்கால் திருப்பதிக்கே பட்டை நாமம். பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...