ஞாயிறு, 31 ஜூலை, 2011


தமிழக அரசை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்
                                            

அ.தி.மு.க அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் நாளை அறப்போராட்டம் நடக்கிறது.
வடசென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தி.மு.க.வினர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடும் அ.தி.மு.க அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1ம் திகதி அறப்போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க தலைமை அறிவித்தது. போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என கோவையில் நடந்த பொதுக்குழுகூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி மாவட்ட தலைநகரங்களில் நாளை போராட்டம் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். சென்னையில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வடசென்னை மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடக்கும் போராட்டத்துக்கு தி.மு.க பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
இதில் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ சேகர்பாபு மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்கின்றனர். தென்சென்னை மாவட்ட தி.மு.க சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சுதர்சனம் தலைமையிலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதேபோல மற்ற மாவட்டங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர். தி.மு.க போராட்டம் நடக்கும் இடங்களில் பொலிஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

போலி விசா மோசடி: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

விசா தரகர்களின் மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா வரும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்களை சேர்த்த மோசடியில் அமெரிக்காவிலுள்ள நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைகழகம் சிக்கியுள்ளது. இங்கு விதிமுறைகளை மீறி மாணவர்கள் சேர்க்கப்படிருந்ததை அந்நாட்டு புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், அந்த பல்கலைகழகத்தில் அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம், அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த பல்கலைகழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் வேறு பல்கலைகழகத்தில் சேர்ந்து கொள்ள அனுமதி அளிப்பதாக அமெரிக்க அரசு உறுதி கூறியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா வந்து படிக்க திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் விசா தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு எச்சரித்துள்ளது. இதுபோன்ற, மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்திதொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது, மோசடி விசா சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளது.
விசாரணை நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் கூற இயலாது. மோசடி விசா மற்றும் போலி ஆவணங்களை விற்கும் தரகர்களிடம் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அமெரிக்கா வர திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் மோசடி விசா வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார்.

ஜொள்ளிந்தியா[ஜொள்+இந்தியா]


ஹீனா ரப்பானி கார் - எஸ்.எம்.கிருஷ்ணா
எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் ஹீனா
விவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!
34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட்! மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு! தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு!
தமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது?” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.
  • “பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.
  • “மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.
  • “அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.
  • “காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே.
  • புதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி.
  • “ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி.
என்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.
79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம்.
இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு! இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி!
இரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ! பெனாசீர் பூட்டோ போல பாக்கின் பஞ்சாப் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நிலவுடமை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீனா. இந்தியாவைப் போல பாக்கிலும் இத்தகைய பாரம்பரிய பணக்காரக் குடும்பங்களே அரசியலிலும், தொழிற்துறையிலும் கோலேச்சுகின்றன.
அந்த வகையில் ஹீனாவின் வருகை ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அவர் அமைச்சராக்கப்பட்ட நேரம்தான் முக்கியமானது. பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.
இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது. டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர் அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார். அப்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மேடையில் மட்டும்தான் இந்திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
சரி பாக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அப்படி என்ன பேசி சாதிக்கப் போகிறார்கள்? வந்த செய்திகளைப் பார்க்கும் போது “இதுவரை பேச்சு வார்த்தை திருப்தி அளிக்கிறது, இனி தொடர்ந்து பேசுவதற்கு ஊக்கமூட்டுகிறது” இதுதான் அந்த சாதனையின் சிகரம். பேசுனோம், பேசிகிட்டு இருக்கோம், பேசுவோம் என்பதுதான் சாதனை என்றால் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகளையே அமைச்சராக்கலாமே?
தீவிரவாதத்தை எதிர்க்க இருநாடுகளும் இணைந்து பணிபுரிய பேசுவார்களாம். பணிபுரிவது இருக்கட்டும், மும்பை 26/11 தாக்குதலுக்காக பாக்கில் உள்ள குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா கேட்டால், சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கான இந்திய குற்றவாளிகளை பாக் கேட்கிறது. மும்பையில் கொல்லப்ப்பட்டது இந்தியக் குடிமகன்களென்றால், சம்ஜூத்தாவில் கொல்லப்பட்டது பாக் குடிமகன்கள். அடுத்து காஷமீர் பிரச்சினை குறித்து இந்தியா ஏதாவது வாயைத் திறந்தால் மாட்டிக் கொள்ளும். முழு காஷ்மீரத்து மக்களும் ஏகோபித்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போது அங்கும் பாக்கின் கையே ஓங்கி நிற்கிறது. தற்போது காஷ்மீர் மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஹீனா சந்தித்ததை இந்திய அரசு கண்டித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள் இதனாலொன்றும் ஹீனாவை அவ்வளவாக கண்டித்து விடவில்லை. மேலும் இந்தியா வந்து காஷ்மீர் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு ஒரு தில் வேண்டுமே?
ஆக இறுதியில் என்னதான் பேசினார்கள்? இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே? அதைத் தீர்ப்பது எப்படி? பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது, அதை யார் கேட்பது? மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன.
ஒன்று மட்டும் உண்மை. இந்திய பாக் கவுரவப் பிரச்சினைகள் இருநாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதை வைத்து மக்களை திசைதிருப்புவதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அழியாத சாக்கு. அதனால்தான் நேற்று வரை பாக் காஷ்மீரில் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்று சாமியாடிய இந்திய ஊடகங்கள் இன்று பாக்கிலிருந்து வந்திருக்கும் தேவதையை ஆராதிக்கின்றன. அந்த வகையில் இந்த பேச்சு வார்த்தையில் முழு வெற்றி அடைந்திருப்பது பாகிஸ்தான்தான்.
இந்திர பதவிக்கு ஆப்பு வைத்த மாமுனிவர்களின் தவத்தை கலைத்த ரம்பா, ஊர்வசி, மேனகை என உலகின் முதல் ஜெள்ளாயுத்தை தயாரித்த இந்த புண்ணிய பூமிக்கு இது  வெட்கக்கேடல்லவா? அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே? அப்படி ஒன்றும்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே? ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா? இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியாதா என்ன?
கமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் நாட்டில் அழகிகளுக்கா பஞ்சம்? அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு! ஜொள் ஹிந்த்.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...