செவ்வாய், 2 ஜனவரி, 2018

சிரஞ்சிவி vs ரஜினி,

“நான் அரசியலுக்கு வருவது உறுதி.சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி’’ என்று ரஜினி அறிவித்த மறு நொடியே மாநில மற்றும் தேசிய அளவிலான ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு நொடிக்கு நொடி முறிப்புச் செய்திகளை வெளியிட்டன. 
ரஜினி நடித்து விரைவில் வெளிவருவிருக்கிற காலா, எந்திரன் - பகுதி 2 ஆகிய திரைப்படங்களுக்கு இதனால் நல்ல விளம்பரமும் கிடைத்து விட்டது. ரஜினியின் அறிவிப்பு குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் வரவேற்றும் வாழ்த்தியும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது ஜனநாயக அரசியலின்வெளிப்பாடு. 
அதேநேரத்தில் ரஜினிகாந்த் அறிவிப்பு தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு அவர் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும், கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்று சொல்லட்டும். அதன் பின்னர் கருத்து தெரிவிக்கிறோம்’’ என்றுஅனைத்து அரசியல் கட்சித்தலைவர் களும் சொல்லிவிட்டனர்.

எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்து அரசியலில் கொடிகட்டிப்பறந்தபோது திரைப்படத் துறையினர் பலர் அதிமுகவில் இணைந்தனர். 
அப்போது ரஜினிகாந்த் பத்துப் படங்களை கூடத் தாண்டவில்லை என்றாலும் “அபூர்வ ராகங்கள்,’’ “மூன்று முடிச்சு’’ போன்ற இரண்டு படங்கள் மூலமாக தமிழகத்தில் நன்கு அறிமுகமாகி இருந்தார். 

‘திரைப்படத்துறையை சேர்ந்த பலர் அதிமுகவில் சேருகிறார்களே நீங்களும்ஏன் சேரக்கூடாது’’ என்று அப்போது பத்திரிகையாளர்கள் ரஜினியிடம் கேட்டபோது “அரசியல் எல்லாம் எனக்கு வேண்டாம்பா’’ என்று கூறினார். 

இருப்பினும் பல வெற்றிப் படங்களுக்கு பிறகு தமிழக திரைப்படத்துறையில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என இரு துருவங் களைப் போன்று கமல், ரஜினி என்ற நிலை உருவானது. இருப்பினும் ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படம், தியானம், ஆன்மீகம் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தினார். இடைப்பட்ட காலங்களில் தமிழகத்தில் எத்தனையே அரசியல் நிகழ்வுகள் நடந்தன. 

சமூகத்தில் நாமும் ஒரு அங்கம்தான் என்று திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் குரல் கொடுத்தபோதும் ரஜினிகாந்த் அமைதியாக காத்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஜெயலலிதாவின் செல்வாக்கு வளர்ந்தது. 
1991 மே மாதம் ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார். 
1991 முதல் 1996 வரை ஒரு மன்னராட்சி போல் தமிழகம் இருந்தது. ஜெயலலிதாவை எதிர்த்து பேசுவோரும் எழுதுவோரும் தண்டிக்கப்பட்டனர். 

தராசு போன்ற பல பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு எல்டிடிஇ-யிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவரது வீடு அவர் செல்லும்பாதை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. அண்ணாசாலையில் பல இடங்களில் லெவல்கிராசிங்குகளில் உள்ள கேட்டுகள் போன்று அமைக்கப்பட்டன. இந்தகெடுபிடிகள் போயஸ் கார்டன் வரை நீடித்தது. ஜெயலலிதாவின் அண்டை வீட்டுக்காரர் ரஜினிகாந்த். இந்த கெடுபிடிகளில் சிக்கியவர் களில் அவரும் ஒருவர். இதனால் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு ஆட்சி முடியும் போது அதாவது 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக முதல்முறையாக குரல் கொடுத்தார்.

ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சியால் தமிழக மக்கள் பெரும் கொடுமைக்கு ஆளாகியிருந்தநேரத்தில் ரஜினியின் வாய்ஸ் திமுகவுக்கும் ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமாகா-வுக்கும் பெரிதும் உதவியதோடு அந்த தேர்தலில் அந்தக் கூட்டணி பெரும் வெற்றிபெறவும் உதவியது. மக்களின் கோப அலையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படகு சுக்கு நூறாக உடைந்தது. ஜெயலலிதாவும் தப்பவில்லை. 
ஆன்மிக அரசியல் ?

அவரும் தோற்றுப்போனார். இதன் பின்னர்தான் ரஜினிகாந்த் செல்வாக்கு பேசுபொருளானது. ஆனால் அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. 
இரண்டாண்டுகள் கழித்து 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற மக்களவைத்தேர்தலில் ரஜினிகாந்த் வாய்ஸ் எடுபடவில்லை. அவர் ஆதரித்த போதும் திமுக - தமாகா கூட்டணி படுதோல்வியடைந்தது. அந்தப் பின்னடைவுக்கு பின்னர் அரசியல் குறித்து மீண்டும் மவுன சாமியாராக மாறிய ரஜினி காந்த், அவ்வப்போது இமயமலைக்கு சென்று வந்தார். 

அவர் சாமியாராகப் போகிறார், அரசியலுக்கு வரமாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. இருப்பினும் அவர் நடித்து வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்திலும் குறிப்பிட்ட சில வசனங்கள் இடம் பெற்றன. அது அப்போதைய ஆட்சியாளர்களை மறைமுகமாகத் தாக்குவதைப் போலவும், இவர் அரசியலுக்கு வருவதை முன்னறிவிப்பது போலவும் இருந்ததால் படம்வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. 

தமிழகத்திற்கு வேறு எந்தவகையிலும் அந்த வசனங்கள் உதவவில்லை என்பது வேறு விசயம். ஊடகங்களை எப்போதாவது அவர் சந்திக்கும்போது எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்று கேள்விக்கு “அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றில்லை. முதலமைச்சர் ஆகாமலேயே சேவை செய்யலாம்’’ என்பதே தனது பதிலாகச் சொல்லி வந்தார்.

1998 மக்களவைத் தேர்தலுக்கு பிறகுவந்த அடுத்தடுத்த தேர்தல்களில், ரஜினிகாந்த்எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோபொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 
இருப்பினும் 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தாம் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார்.

ஆனாலும் அவரது வாய்ஸ் எடுபடவில்லை. மக்களின் மனநிலையை ஒட்டி இருந்தபோதுதான் அவரது வாய்ஸ் எடுபடும் என்பதற்கு இது ஒரு சாட்சியம்.
இப்போது போன்றே 2008ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். 2010ல் எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். ஆனால் ஏதும் அறிவிக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு லிங்கா பட இசை வெளியீட்டின்போது "அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்" எனக் கூறி மீண்டும் சஸ்பென்ஸ் வைத்தார்.தற்போது 3 ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லியிருக்கிறார். 

இப்போதும் அவர் சட்டப் பேரவைத்தேர்தலின் போதுதான் கட்சி தொடங்குவேன் என்ற சொல்லியிருப்பதன் மூலம் தனது முடிவை தள்ளிப்போட்டிருக்கிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சி ஆரம்பித்துவிட்டேன் என்று இப்போது சொல்லியிருந்தால், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டி யிருக்கும். 
இன்னும் 16 மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை சந்திக்கவேண்டும். எனவே தான் தனது ரசிகர்களையும் தக்க வைத்துக்கொள்ளவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்தும் மீளவேண்டும் என்பதற்காக 2021 தேர்தலை கைகாட்டுகிறார். இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவியாய் தவித்துக்கொண்டிருக்கும் பாஜக, வருமான வரி ரெய்டு என்ற பயத்தைக் காட்டி அதிமுக ஆதரவுடன் தமிழகத்தில் சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிடமுடியாதா, 2019ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் அதிமுகவை மிரட்டி சீட்டுகளை கைப்பற்ற முடியாதா என்று முதலில் கணக்கு போட்டது. 

ஆனால் அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் உள்ள வெறுப்பை பார்த்து இனி இந்த கட்சி தேறாது என்ற நிலைக்கு வந்திருக்கலாம்.எனவே ரஜினியை பின்னால் இருந்து இயக்கிப்பார்க்கலாம் என்று திட்டம் திட்டுகிறதோ என்ற ஐயப்பாடும் பலமாக எழுந்துள் ளது. காரணம் தற்போதைக்கு ஆன்மீக அரசியலுக்கு பாஜக-தான் ரஜினிக்கு தோதான தோஸ்தாக இருக்கக்கூடும். 

ஆனால் மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடுகளும் மக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. எனவே பாஜகவுடன் கூட்டு என்று அறிவித்தால் போணியாக மாட்டோம் என்பதை உணர்ந்துள்ள ரஜினி, குருமூர்த்தி போன்ற அரசியல் தரகர்களின் வழிகாட்டுதலில் முதலில் தனிக்கட்சி, பின்னர் பாஜக ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். “சாதி, மதவாத கட்சிகளுடன் சேர மாட்டேன்” என்று அவர் இப்போது அறிவித்திருப்பதன் உட்பொருள் பற்றி பல கோணங்களில் விளக்கமளிக்கப்படுகிறது.

ரஜினியின் நண்பர் சிரஞ்ஜிவி ஆந்திராவில் தெலுங்குதேசம், காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்து தனிக்கட்சி தொடங்கினார்.
2009 சட்டப்பேரவைத்தேர்தலில் மொத்தமுள்ள 295 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றிபெற்றார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 2011ல் காங்கிரஸ் கட்சியில் தனது பிரஜா ராஜ்யம் கட்சியை கரைத்து இன்று வெறும் ஒரு நடிகராக மட்டும் அவர் இருக்கிறார். 
2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிரஞ்ஜிவி தீவிரப்பிரச்சாரம் செய்தபோதும் அக்கட்சி படுதோல்வியடைந்தது. 

பெரும்பாலான வேட்பாளர்கள் காப்புத் தொகையையே இழந்தனர். 
சிரஞ்ஜிவிக்கு ஏற்பட்ட கதி ரஜினிக்கும் ஏற்படுமா என்பதற்காக 4 ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் எடுக்கப்போகும் (?) நிலைப்பாட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
நன்றி:தீக்கதிர்,                                                                                                                        --அ.விஜயகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...