செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

"ஸ்பெக்ட்ரம் ஊழல்"





ஒரு இட்டுக்கட்டப்பட்ட பார்ப்பனீயப் புனைவு.

ஐயையோ, 1,76,000 கோடி ரூவா ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்த எடுத்துக்கிட்டு கருணாநிதி ஓடிட்டாரு, உலகத்திலேயே பெரிய ஊழல் இதுதான், பாருங்க, தி.மு.க வும் அதன் தலைவர்களும் எப்படி நாட்டைச் சூறையாடீட்டாங்க, 
ஐயோ, அங்கே வலிக்குது, இங்கே வலிக்குது, குத்துது, கொடையுது, இன்றைக்குக் காலை வரைக்கும் இந்தியப் பார்ப்பனீயமும், முதலாளித்துவ பனியாக்களும், அவர்களால் விளம்பரம் அது இதுவென்று காசு பார்க்கிற "சோ கால்ட்" தேசியத் தொலைக்காட்சிகளும் கூவின கூவலில் ஒட்டு மொத்த தேசமும், ஏன் தி.மு.க தொண்டர்களும் கூட ஒரு கணம் அசந்து வாயைப் பிளந்து விட்டார்கள். 
ஒருவேளை இருக்குமோ???
சிக்கல் எங்கே இருந்து ஆரம்பமாச்சு, COAI என்கிற தொலைத்தொடர்புக் கூட்டமைப்பு (ஏர்டெல், ஏர்செல், ஐடியா, ரிலையன்ஸ், டெலினார், வீடியோகான் மற்றும் வடாபோன் நிறுவனங்கள் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கிற ஒரு தொலைத்தொடர்பு மாபியாக் கும்பல்) இந்தியாவில் இருக்கிறது, 
இந்தக் கும்பலின் மிக முக்கியமான வேலை இந்தியாவின் பணம் காய்க்கும் மரமாகிய தொலைத்தொடர்புத் துறையில் புழங்கும் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை அரசியல் லாபிகளின் மூலமாகவும், தொலைதொடர்புத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் பல்வேறு பலன்களைக் கொடுத்துத் தனது வசப்படுத்திக் கொள்வது.
பினாமிகளின் பெயரிலும், வெவ்வேறு போலி நிறுவனப் பெயர்களிலும் உரிமம் பெறுவதற்கான பதிவுகளைச் செய்து கொள்வது என்று ஏகபோகமாக ஒரு தேசியச் சுரண்டலாகவே இதைச் செய்து வந்தன. 
தொலைத் தொடர்புத் துறையில் பெரிய அளவில் புரட்சி ஏற்பட்டு அலைபேசி யுகம் துவங்கிய காலம் ஏறத்தாழ பிரமோத் மகாஜனின் காலம். பாரதிய ஜனதாக் கட்சி வழக்கம் போலவே தேசியக் கொள்ளை அடிப்பதின் ஒரு பகுதியாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெருமளவில் ஊழல் செய்தது.
அம்பானிகளும், பார்தி மிட்டல்களும் தங்களுக்குச் சாதகமான ஆர்.எஸ்.எஸ் களவாணிகளுடன் கூட்டுச் சேர்ந்து அலைக்கற்றையைத் தங்களுக்குத் தேவையான வகையில் பயன்படுத்திக் கொண்டார்கள். 2007 ஆம் ஆண்டு மே மாதம் அலுவலகத்துக்குள் நுழைந்த சில நாட்களிலேயே இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை நான்கைந்து முதலாளிகளின் கைகளில் சிக்கி இருப்பதை உணர்ந்து கொண்டு சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் ஆ.ராஜா.
தொலைத்தொடர்புத் துறையின் ஏகபோக ராஜாக்களான C O A I யின் கூலிகள் தள்ளி வைக்கப்படுகிறார்கள், மிகப்பெரிய அளவில் ஊழலும், தேசியச் சூரையும் நிகழும் துறையின் நுட்பமான செயல்பாடுகளைப் பற்றி மிகுந்த ஆர்வத்தோடும், துணிவோடும் கவனித்துக் காய் நகர்த்துகிறார், வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் C O A I க்கு ஆப்படிக்கிறார். 
C O A I ஆ.ராசாவின் சீரமைப்பு நடவடிக்கைகளால் கொஞ்சம் கலவரமடைகிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆ.ராசவைக் குறித்து ஒரு புகாரளிக்கிறது. இந்தப் புகார் குறித்து விசாரிக்கச் சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் வாகனவதி மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆ.ராசா மூவரும் டிசம்பர் 3, 2007 இல் சந்திக்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜியிடம் வாகனவதி தெளிவாகச் சொல்கிறார், C O A I சிண்டிகேட் கூடுதலாக GSM அலைக்கற்றை ஒதுக்கீடு வேண்டும் என்று கோருவதாகவும், TRAI யின் புதிய பரிந்துரைகளின் படி அப்படிக் கொடுப்பது சாத்தியமற்றது என்றும் விளக்கமளிக்கிறார், 
தேச நலன்களுக்கு எதிராக, அரசின் கொள்கை முடிவுகளுக்கும் TRAI வழிகாட்டுதலுக்கும் முரணாகச் செயல்பட முடியாது என்கிற செய்தியை அங்கே ஆ.ராசாவும் தயக்கங்கள் இன்றி வெளிப்படுத்தினார்.
அதற்குப் பிறகு ஆ.ராசா, இந்த C O A I கூட்டமைப்பின் ஏகபோக உரிமைகளையும், தேசியக் கொள்ளையையும் கட்டுப்படுத்தப் பல்வேறு துறை சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்கிறார், புதிய பல நிறுவனங்களுக்கு அலைக்கற்றையின் கதவுகளைத் திறந்து போட்டியை உருவாக்கும் மிக எளிய வேலையைத் தான் ஆ.ராசா தொடர்ந்து செய்தார், 
உண்மையில் அப்படியான ஒரு சூழலும் தொலைத் தொடர்புத் துறையில் உருவாக்கப்பட்டது, ஆ.ராசா தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கருத்தை வலியுறுத்துகிறார், 
நவம்பர் 2 - 2007 முதல் டிசம்பர் 26, 2007 வரை நான்கு கடிதங்களையும், விளக்கங்களையும் பிரதமருக்கு அளிக்கிற ஆ.ராசா உறுதியாகவும், தெளிவாகவும் இப்படிச் சொல்கிறார்.
வினோத் ராய் 
"ஏற்கனவே உரிமம் வைத்திருக்கக் கூடிய அலைபேசி நிறுவனங்களின் தேவைகள் போக புதிய நிறுவனங்களுக்கு நம்மால் அலைக்கற்றையைப் பகிர முடியும், அது தொலைத் தொடர்புத் துறையில் மிகச் சிறந்த போட்டியை உருவாக்கும், தரமான சேவை நாட்டு மக்களுக்குக் கிடைக்கும். 
ஆகவே, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற முறையைப் பின்பற்றப் போவதாகவும் தெரிவிக்கிறார்.
சொன்னபடியே செய்தும் காட்டுகிறார், பீதியில் உறைந்து நின்றன கூட்டமைப்பு நிறுவனங்கள், தங்கள் பல ஆண்டு கால மேலாதிக்கம் தடுக்கப்படுவதையும், ஏகபோகம் நிலைகுலைவதையும் உணர்ந்து கட்டணக் குறைப்பையும், தரமான சேவை முறைகளையும் குறித்துச் சிந்திக்கின்றன. 
ஒரே ஆண்டில் இந்தியாவின் கடைசிக் குடிமகனும், ஏழை விவசாயியும் பயன்பெறும் வகையில் அலைபேசிக் கட்டணங்கள் குறையத் துவங்கின.
"இன்கமிங்" அழைப்புகளுக்கும் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த நிறுவனங்கள் தடாலடியாக நொடிக்கு ஒரு பைசா என்கிற நிலைக்கும், இரவுகளில் இலவசம் என்கிற ஆடித் தள்ளுபடி நிலைக்கும் தள்ளப்பட்டன, 
திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற சமூக நீதி கண்ட மக்கள் இயக்கம் தேசத்தின் மக்களுக்கான அழுத்தமான தனது பணியைச் செய்து காட்டியது.
அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஐந்து மிக முக்கியமான பகுதிகளை நம்மால் அவதானிக்க முடியும்:
1) முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற முறைமையைப் பின்பற்றியது.
2) பழைய அரசுகள் நிர்ணயம் செய்த அதே கட்டணங்களையே ஆ.ராசாவும் நிர்ணயித்தார்.
3) TRAI வழிகாட்டுதலையும், பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்தின் நெறிப்படுத்தலையும் ஆ.ராசா புறக்கணித்தார், தான் தோன்றித்தனமாகச் செயல்பட்டார்.
4) அக்டோபர் 1, 2008 என்று கெடு வைக்கப்பட்ட விண்ணப்பம் செய்யும் கடைசி நாளை தன்னிச்சையாக மாற்றினார்.
5) ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற போன்ற பெரு நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாகவே இந்த ஊழலில் ஈடுபட்டார்.
முதல் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தெளிவாக அறிவார், நவம்பர் 2, 2007 ஆம் ஆண்டு இந்த முறைமையைத் தான் பின்பற்றப் போவதாகவும், வெளிப்படையான ஊழலற்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் என்கிற உறுதிமொழியை பிரதமருக்கு ஆ.ராசா வழங்கி இருக்கிறார், 
தொலைத்தொடர்புத் துறையின் உள்ளார்ந்த நடவடிக்கைகளில் தான் தலையிட விரும்பவில்லை என்றும், அந்த நேரத்தில் தவறுகள் நிகழ்வதைப் போன்ற எந்த ஒரு சமிக்ஞைகளும் இல்லை என்றும் மன்மோகன் சிங் பின்பு பிப்ரவரி 16, 2011அன்று ஊடகங்களிடம் சொல்கிறார்.
இந்த முறைகளில் இருக்கும் பல்வேறு நன்மைகளைக் குறித்தும், தான் ஏன் இந்த முறைமையைப் பின்பற்றப் போவதாகவும் ஆ.ராசா பல முறை பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் மூலம் விளக்கி இருக்கிறார், பிரதமர் மற்றும் பிற அமைச்சகங்களோடு கூட்டங்களை நடத்தி இருக்கிறார். 
இந்தச் சந்திப்புகளையும், கூட்டங்களையும் சி.பி.ஐ வழக்கில் இருந்து மறைத்திருப்பதையும், சில முக்கியமான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் போக்குக் காட்டுவதையும் தனது இறுதிக் கட்ட வாதங்களின் போது ஆ.ராசா உறுதியாக வைத்தார்.
இரண்டாவதாக, பழைய கட்டணங்கள், ஏன் பழைய கட்டண முறையையே ஆ.ராசா முன்னெடுத்தார், CAG அறிக்கையின் மிக முக்கியமான குற்றச்சாட்டே, "அதிக விலை நிர்ணயம் செய்திருந்தால் நாட்டுக்கு 1,76,000 கோடி லாபம் கிடைத்திருக்கும்", என்பதுதான். 
ஆனால், நாட்டின் தொலைத்தொடர்புக் கொள்கை என்ன சொல்கிறது என்றால்,
"முன்னேற்றமும், வளர்ச்சியும் மட்டுமே தொலைத் தொடர்புத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும், பொருளீட்டல் இரண்டாம் பட்சமாகவே கருதப்பட வேண்டும்".
இலவசம், மற்றும் மானியங்களால் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், இன்றைய ஓரளவுக்கான தேசிய வளர்ச்சி விகிதம் என்பது அப்படியான மானியங்களால் தான் உண்டானது என்கிற அடிப்படை உண்மையை இங்கே புரிந்து கொள்ள வேண்டும். 
அப்படித்தான் ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயம் செய்தார். 
அதன் பலனாகவே ஒன்பது புதிய நிறுவனங்கள் அலைபேசி சேவை வழங்க இந்தியச் சந்தைக்குள் நுழைந்தன. 
அதன் காரணமாகவே ஒரு கூலித் தொழிலாளியும், ஏழை விவசாயியும் அலைபேசிப் பயன்பாட்டை அறிந்து கொண்டு பயனடைய முடிந்தது.
அதாவது, நாட்டின் இலவச மருத்துவத் திட்டங்களுக்காக ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 2,30,000 கோடி செலவிடப்படுகிறது, இந்தத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மருந்துகளை விற்பனை செய்தாலோ, ஏலம் விட்டாலோ அரசுக்கு குறைந்தது 
ஒரு 1,00,000 கோடி லாபம் கிடைக்கும், வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது, மருத்துவ அமைச்சரைக் கைது செய்யுங்கள், பிரதமரைக் கைது செய்யுங்கள் என்று சிறுபிள்ளைத்தனமாகச் சொல்வதைப் போலவே ஒரு அறிக்கையை வினோத் ராய் தலைமையிலான தணிக்கைக் குழு வெளியிட்டது.
அதுமட்டுமில்லாமல், முரளி மனோகர் ஜோஷி போன்ற அம்பானிகளுக்கு நெருக்கமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வினோத் ராயைச் சந்தித்தது, அறிக்கையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது போன்ற நுட்பமான பார்ப்பனீய அரசியலும் இதில் கலந்திருக்கிறது. 
ஆ.ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலராக இருந்த "ஆசீர்வாதம் ஆச்சாரி" மீது ஏற்கனவே சொத்துக் குவிப்புக் குற்றச் சாட்டுகளும், ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்ததையும், அவர் C O A I கூட்டமைப்பின் முதலாளிகளுக்கு உளவாளியாக இருந்து பல பயன்களை அனுபவித்ததையும் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
மூன்றாவதாக, TRAI வழிகாட்டுதல், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சக ஆலோசனைகள் புறக்கணிப்பு என்கிற குற்றச்சாட்டு, ஆதாரமற்றது மட்டுமில்லை சாத்தியம் இல்லாதது, 
நாட்டின் எந்த அமைச்சகமும் பிரதமர் அலுவலக வழிகாட்டுதலையும், நெறிகளையும் கடந்தே வந்தாக வேண்டும், மேலும், எழுத்துப் பூர்வமான தொடர்புகளும், நேரடிக் கூட்டங்களும் நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
வழக்கின் சாதகத் தன்மைக்காக சி.பி.ஐ யால் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்றங்கள் பதிவு செய்துள்ளன. TRAI வழிகாட்டுதலின் படியும், அரசின் கொள்கை முடிவுகளின் படியுமே ஆ.ராசா தனது துறையின் முடிவுகளை எடுத்தார் என்பதை இன்றைய குடியரசுத் தலைவரே நேரடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நான்காவதாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளை மாற்றினார் என்கிற குற்றச்சாட்டு, தொலைத் தொடர்புத் துறை போன்ற மிகப்பெரிய அமைச்சகங்களில் எப்போதெல்லாம் சில தகுதியான, வழமையான நிறுவனங்கள் தகவல் தொடர்புகளில் சிக்கல் ஏற்பட்டு வாய்ப்புப் பெறாத நிலை ஏற்படும் போது தேதிகளை மாற்றுவதும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதும் இயல்பான நடைமுறைகள்.
இது அமைச்சகத்தால் மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. ஸ்வேன் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது
 அவ்வாறானா ஒரு நிகழ்வாகவே கருதப்பட வேண்டும். மற்றபடி ஸ்வேன் அல்லது யூனிடெக் நிறுவனங்களோடு ஆ.ராசாவுக்கு அலுவலக உறவுகளைத் தாண்டிய எந்த உறவும் இருந்தது என்பதை சி.பி.ஐ இன்று வரை உருப்படியான எந்த ஆதாரங்களைக் கொண்டும் நிரூபிக்கவில்லை.
கடைசியும், மிக முக்கியமானதுமான குற்றச்சாட்டு, அம்பானிகளுக்கும், மிட்டல்களுக்கும் ஆ.ராசா உதவினார் என்கிற முட்டாள்தனமான குற்றச்சாட்டு, இந்த வழக்கையும், ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகளையும் துவக்கியதே இந்த நிறுவனங்கள் தான், மேலும், தொடர்ந்து ஆ.ராசா இந்த நிறுவனங்களின் சிண்டிகேட்டை நான் உடைத்தேன், 
அவர்கள் ஏகபோகமாக அனுபவித்து வந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலமான முறையற்ற லாபத்தை நான் நிறுத்தினேன், அதன் பலன் இந்த நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் போய்ச் சேர உதவினேன் என்று தெளிவாக ஊடகங்களிலும், நீதிமன்றங்களிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
உண்மையிலேயே இந்த நிறுவனங்களுக்கு அவர் உதவி இருப்பாரேயானால் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தொடர்ந்து சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை. 
ஆக, சுப்பிரமணியம் சாமி போன்ற குருட்டுத்தனமான, யூகங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளை வைக்கும் போலி அறிவு ஜீவிகளின் வாதம் இங்கே லாஜிக்கலாக எந்த முக்கியத்துவமும் பெறவில்லை.
மொதல்ல 1,76,000 கோடின்னு பெரிசா ஊளையிட்டாங்கே, அப்புறமா, 97,410.74 கோடின்னாங்கே, அப்புறம் இல்ல 30,000 கோடின்னாங்கே, அப்புறம் மறுபடி இல்ல, செல்லாது செல்லாது 50,000 கோடின்னு மொதல்ல இருந்து அழிச்சுட்டு ஆரம்பிச்சாங்கே, 
இந்த வழக்கையே சாக்கா வச்சு சி.பி.ஐ ல இருக்குற பலபேரு வெளிநாடுகளுக்கு டூர் அடிச்சு நாட்டு மக்களோட வரிப்பணத்த நாசம் பன்னுனாங்கே, அங்கே சுத்தி, இங்கே சுத்தி எந்த ஆதாரங்களும், கிடைக்காம இப்போ நீதிமன்றத்துல நிக்கிறாங்கே.
நாட்டின் மிகப்பெரிய நம்பகத்தன்மை கொண்ட வணிகரும், சிந்தனையாளருமான டாட்டா திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதினார், அவர் சொன்ன சொற்களே எப்போதும் தி.மு.க வுக்கும், சமூக நீதியின் மீது நம்பிக்கை கொண்ட, உயர்ந்த மானுடக் கொள்கைகள் கொண்ட திராவிட இயக்கத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் கிடைத்த பரிசு. 
அவர் சொல்கிறார்.
"அலைக்கற்றை விஷயத்தில் ஆ.ராசாவின் கொள்கைகள் சட்ட ரீதியாக மிக வலுவானவை, முற்போக்கானவை, காரணங்களோடு கூடிய மேன்மைக்குரியவை".
மேலும் நீதிமன்றத்திலேயே ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகத் தொடர வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கடிதத்தை தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நீங்கள் எழுதினீர்களா என்று கேட்டபோது, சளைக்காமல் சொன்னார்.
"இந்த தேசத்தின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் பாரபட்சமற்ற, யாருக்கும் சாதகமற்ற முற்போக்கான கொள்கைகள் வேண்டும், தவிர சுயநலக் குழுக்களிடம் மடங்காத நேர்மையும், நெஞ்சுரமும் கொண்டவராக இருக்க வேண்டும். அத்தகைய ஒருவர் இந்த நாட்டின் மிக முக்கியமான தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நீடிக்க வேண்டும் என்று உளமார விரும்பினேன்".
                                                                                             0அறிவழகன் கைவல்யம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...