செவ்வாய், 3 ஏப்ரல், 2018

உயிரெடுக்கும் எமன்?

ஸ்டெர்லைட் தாமிர ஆலை  நிறுவனம் தான் வெளியேற்றும் கழிவுகள், அதிலுள்ள வேதிப் பொருட்கள், அதன் பின் விளைவுகள் ஆகியன பற்றி உண்மைக்கு புறம்பாக அல்லது பாதி உண்மைகள் அல்லது வேண்டுமென்றே திரித்து கூறுவது போன்ற நடவடிக்கைகளில் ஸ்டெர்லைட்டும்,அதனிடம் வாங்கிய காசுக்காக தமிழ்நாடு அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஈடுபட்டு வருகிறது. 

ஆகவே ஸ்டெர்லைட் ஆலை உபயோகிக்கும் வேதிப்பொருட்கள்,தாது மணல் குறித்த உண்மைகளை போராடுபவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும்  கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஸ்டெர்லைட் எவ்வளவு பெரிய நாசகார ஆலை என்பதும் அதற்கு ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு பொதுமக்கள் உயிருடன் விளையாடுகிறார்கள் என்பதும் விளங்கும்.


தாதுப் பொருள்

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு தாதுப்பொருள், கடல் மார்க்கமாக வெளிநாடுகளிலிருந்து ஆண்டிற்கு 12 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. 
இதன் பெயர் காப்பர் கான்சண்ட்ரேட். 
கரித்துகள் போன்றிருக்கும். 
சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட கனிமத்தை வறுத்து மிகவும் சிறிய துகள்களாக அரைக்கப்பட்டு வருகிறது. இந்தத் துகள்கள் 100 மைக்ரோ மீட்டர் அளவுக்கும் குறைவாக அரைக்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் 100 என்றால் 10 மைக்ரோ மீட்டர் துகளும் இருக்கும். 

அதற்கு குறைவான துகள்களும் இருக்கும். துகள் அளவு குறையக் குறைய சரக்கு கொண்டு வருவது லாபகரமாக இருக்கும். 
2.5 மைக்ரோ மீட்டர் முதல் 10 மைக்ரோ மீட்டர் வரையிலான துகள்கள் சுவாசத்தின் மூலமாக நுரையீரலில் சென்று தங்கிவிடும். அதன் பின் வெளியில் வராது. 

இவை எஸ்.பி.எம். எனப்படும் தூசு - மாசு ஆக (பார்ட்டிகுலேட்) வகைப்படுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பாவில், ஒன்பது நாடுகளில் 2013 ஆம் ஆண்டு 3,12,944 பேர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த வகை மாசுகளில் (பார்ட்டிகுலேட்) பாதுகாப்பான அளவு என்ற ஒன்று கிடையாது எனத் தெரிவித்துள்ளனர். அதன் படி 10 மைக்ரோ மீட்டர் அளவுள்ள தூசின் அளவு காற்றில் ஒரு கனமீட்டரில் 10 மைக்ரோகிராம் (1மைக்ரோ கிராம் என்பது ஒரு மில்லி கிராமில் ஆயிரத்தில் ஒரு பங்கு) அதிகரித்தால் 23 சதவீதம் புற்று நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கிறது.

இந்த துகள்களில் 2.5 மைக்ரோ மீட்டர் அளவுள்ளவை அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தும். இவை நுரையீரலில் தங்கி வினையாற்றும். 

ஆகவே, இந்த வகை துகள்கள் ஒரு கனமீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் என்ற அளவில் அதிகரித்தால் அவை 36 சதவீதம் நுரையீரல் புற்று நோய் ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டிற்கு 12 லட்சம் டன் தாது சுமார் 1 லட்சம் லாரிகளில் சாலை வழியாக சுமார் 25 கி.மீ.தூரம் எடுத்துச் செல்லப்படுகிறது. 
அப்பொழுது காற்றில் பரவும் மாசுகளை சுவாசிப்பவர் நிலைமை என்ன என்பது குறித்து மத்திய - மாநில மாசுக்கட்டுபாட்டு வாரியங்கள் எவ்வித முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடும் செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. 

தற்போது இரண்டு மடங்கு உற்பத்தி அதிகரிப்பு என்றால் இந்த மாசுபடுதல் இரட்டிப்பாகலாம். அல்லது நான்கு மடங்குக்கூட ஆகலாம்
.
கந்தக-டை-ஆக்ஸைடு

தாதுப் பொருளில் அதிகபட்சமாக 36 சதவீதம் தாமிரம் உள்ளது. சுமார் 33 சதவீதம் கந்தகம் உள்ளது. சிலிக்கேட் ஆக்ஸைடுகள் மற்றும் இரும்பு மீதம் உள்ளது. 
ஆகவே, முதலில் தாமிர ஆலையில் இந்த தாது உருக்கப்படும் போது தாமிரம் மாட்டி எனப்படும் அசுத்தமான தாமிரமாக பிரிகிறது. 
ஸ்லாக் எனப்படும் கழிவுகள் அடியில் பிரிந்து விடும். கந்தகம் காற்றில் உள்ள ஆக்சிஜனோடு சேர்ந்து கந்தக-டை-ஆக்ஸைடாக மாறும். 

இது கண் எரிச்சலை உருவாக்கும். மனிதத் தோலை துளைத்து புண்ணாக்கும். சுவாசித்தால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கும். 
மிக அதிகமாக சுவாசிக்க நேர்ந்தால் மரணம் சம்பவிக்கும். 
இதனை மேலும் ஒரு ஆக்ஸிஜன் ஏற்றி, சல்பர் ட்ரை ஆக்ஸைடாக மாற்றி, அதனை கந்தக அமிலமாக மாற்றுவார்கள். 
இவற்றில் ஒவ்வொரு வேதிப் பொருளுமே மிகவும் அதிகமாக அரிப்புத் தன்மை கொண்ட பொருளாகும். 

இந்த வாயு செல்லும் வழிகள் எல்லாம், பெரும்பாலும் குறிப்பிட்ட எஃகு(மைல்டு ஸ்டீல்) பயன்படுத்தப்பட்டிருக்கும். இதர இரும்பை பயன்படுத்தினால், அவை மிக விரைவில் அரிக்கப்பட்டுவிடும்.

 அந்தளவிற்கு அரிக்கும் தன்மை கொண்டவை. 

காப்பர் உருக்காலையின் உப பொருளான கந்தக-டை-ஆக்ஸைடு பயன்படுத்தப்பட்டு கந்தக அமிலம் தயாரிக்கப்படுகிறது. நளொன்றிற்கு 3600 டன் கந்தக அமிலம் தயாரிக்கப்படுகிறது என்றால், நாளொன்றிற்கு கிட்டத்தட்ட 2340 டன் அளவிற்கு கந்தக-டை-ஆக்ஸைடு உற்பத்தியாகும். கந்தக அமிலம் உற்பத்தி ஆகும் தொழிற்சாலை மிக மோசமான அரிப்புத் தன்மை கொண்ட அமிலத்தால் பல சமயம் நின்று விடும் தன்மை கொண்டது. 

அது எங்குமே தொடர்ந்து ஓடும் தன்மை கொண்டது கிடையாது. அப்படி காப்பர் உருக்காலைக்கு அடுத்து உள்ள கந்தக அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலை படுத்துவிட்டால் அப்பொழுது காப்பர் உருக்காலையிலிருந்து வரும் கந்தக-டை-ஆக்ஸைடு நிலை என்னவாகும்? 
கந்தக-டை-ஆக்ஸைடு வாயு என்பதால் சேமித்து வைக்க முடியாது. 

மேலும்,காப்பர் உருக்காலையை நினைத்த போது நிறுத்த முடியாது. அதன் வெப்பநிலை போன்ற பல காரணிகளால் அதனை துவக்குவதும் நிறுத்துவதும் அமிலத் தொழிற்சாலை போன்று செய்ய முடியாது. இங்குதான் வருகிறது பிரச்சனை. 

கந்தக அமிலம் பிளாண்ட் மீண்டும் துவக்கப்படும் வரையில் இந்த கந்தக-டை-ஆக்ஸைடு காற்றில்தான் திறந்து விடப்படும். அதுவே பல சமயங்களில் கண் எரிச்சல் தொண்டைக் கமறல் போன்றவற்றிற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

கந்தக-டை-ஆக்ஸைடு பாதிப்புகள்:

கந்தக-டை-ஆக்ஸைடு தோலில் அரிப்பு ஏற்படுத்தும், கண், மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் போன்றவற்றை பாதிக்கும். 
அதிகமான கந்தக-டை-ஆக்ஸைடு நுரையீரல் குழாய்களில் வீக்கம் ஏற்படுத்தும், மூச்சுவிட சிரமம் ஏற்படுத்தும், குறிப்பாக உழவு வேலை போன்ற கடினமான உடலுழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு.

இதன் காரணமாக மூச்சை இழுத்து விடும் போது வலி ஏற்படுத்தி இருமல் உண்டாக்கும். தொடர்ந்து ஆஸ்துமா பாதிக்கும். 
குழந்தைகள் கந்தக-டை-ஆக்ஸைடு சுவாசிக்க நேர்ந்தால் அவர்களுக்கு இளம் வயதிலேயே ஆஸ்துமா தாக்கும்.

புளோரின்ஃபுளோரைடு

பாஸ்பாரிக் அமில தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் இந்த வாயு எரிச்சலுட்டும் தன்மை கொண்டது. மூச்சுத் திணறல் ஏற்படும். 
இது கடலில் உள்ள பவளப் பாறைகளை அழிக்கும் தன்மை கொண்டது.

ஆர்சனிக்

கிறிஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து சிகிச்சை முறையில் ஆர்சனிக் விஷம் பற்றி குறிப்பு உள்ளது. 
வரலாற்றில் மிக நீண்ட காலத்திற்கு விஷம் வைத்து கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள் ஆர்சனிக். 
நெப்போலியனை சிறை வைத்த போது, அந்த சிறையின் சுவர்களில் ஆர்சனிக் பூச்சு இருந்தது. 

நெப்போலியன் இறப்பிற்கு அதுவும் ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. 

மிகக் குறைந்த அளவில் இருந்தாலே இந்த வேதிப் பொருள் பல நோய்களை உருவாக்க வல்லது. நமது உடல் செல்லில் உள்ள மைட்டோகாண்ட்ரியா என்ற பகுதிதான் சக்தி மையம் (எனர்ஜி சென்டர்). ஆர்சனிக் அந்த மையத்தை தாக்கி அழித்து விடும். 
ஆகவே, செல் உணவு கிடைக்காமல் அழிந்து போகும். 

இந்த வகையில் உயிரையே மெல்லக் குடிக்கும் விஷமாகும் இது.
 இது ஒரு புற்று நோய் தூண்டும் பொருள் (கார்சினோஜினிக்). தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தால் இது உடலில் புற்று நோய் வருவதற்கான காரணியாக அமையும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

தண்ணீரில் 10 கோடியில் 5 பங்கு (0.05பிபிஎம்) என்பதே உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ள ஆர்சனிக் அளவு (டி.எல்.வி). 

ஆனால், 2005 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தால் சுற்று வட்டார கிணறுகளில் ஆர்சனிக் அளவு கூடியுள்ளதா என்பதை ‘நீரி’ அமைப்பு மாதிரி எடுத்து பரிசோதித்த போது, 10 கோடியில் 8 பங்கு - அதாவது அனுமதிக்கப்பட்டதை விட அரை மடங்கு அதிகமாக இருந்தது.

மேலும், இந்த ஆலையின் மண்ணை பரிசோதித்த போது அது ஒரு கோடியிலேயே 1320 பங்கு இருந்ததாக (132 பிபிஎம்) ‘நீரி’ அறிக்கை தெரிவிக்கிறது. மழை நேரங்களில் தண்ணீர் இந்த தொழிற்சாலை வழியாக ஓடி வெளியில் வரும் போது, இந்த விஷப் பொருட்களையும் ஏற்றி வரும். 
அது பல இடங்களில் பரவுகிறது. 

ஆக, கழிவுகளை அவர்கள் ஆலை வளாகத்திலேயே கொட்டி வைத்திருப்பது என்பது, மழை வரும்வரை காத்திருக்கிறோம் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

காரீயம்

தற்போது குழாய்கள்கூட காரீயம் இல்லாமல் இருக்க வேண்டும் என பிளாஸ்டிக் குழாய்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். காரீயம் புற்று நோயைத் தூண்டுகிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்ததாலேயே காரீயம், மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து விலக்கப்பட்டது. 
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் நீரி தீர்ப்பு பற்றி குறிப்பிடும் போது, காரீயம் அளவு அதிகமாக உள்ளதாக ‘நீரி’ அறிக்கையை சுட்டி காட்டியுள்ளது.

காட்மியம்

சிறுநீரகங்களை தாக்கி செயலிழக்கச் செய்யும் தன்மை வாய்ந்த தனிமம். இது பத்து லட்சத்தில் 0.5 பங்கு வரையிலும் அனுமதிக்கப்பட்ட அளவு. 

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் ‘நீரி’ சோதனையில் காட்மியம் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக இருந்ததாக தெரிவிக்கிறது.
                                                                                                                               -க.ஆனந்தன்    (தீக்கதிர்)
#ஸ்டெர்லைட்டை மூடு #

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...