திங்கள், 2 ஏப்ரல், 2018

#ஸ்டெர்லைட்டை மூடு #

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் ஆரம்பம் முதல் 
தூத்துக்குடி நகரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு தொழில்நிறுவனங்களை கொண்டதாகவே இருக்கிறது. 
அனைத்து நிறுவனங்களும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. தூத்துக்குடி உப்பு வளம், மீன்வளம், விவசாயம் என மக்களுக்கான வாழ்வாதாரத்தை கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. எனவே புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்போது ஏற்கனவே பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் புதிய தொழில்கள் உருவாக்கப்படுவது சரியான அணுகுமுறையாக இருக்கும். 
சில தொழில்கள் பாதுகாப்பானது என்று ஆரம்பத்தில் புரிதல் இருந்தாலும் அனுபவம் வேறுவிதமாக இருக்கும்போது பாதிப்புகளை சரிசெய்வதற்கான முயற்சிகளை பலர் மேற்கொள்கிறார்கள். 
உதாரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் சாம்பல் முழுவதும் நீரில் கரைக்கப்பட்டு, நீண்டு நெடுங்காலமாக கடலுக்குள் அனுப்பப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் சாம்பலை கடலுக்குள் செலுத்தும் முறை சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் புரிதல்கள் மேம்பட்டதன் காரணமாகவும் சாம்பலுக்கான வணிக மதிப்பு அதிகரித்ததன் காரணமாகவும் நிறுத்தப்பட்டுவிட்டது. 
ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை தனது அரக்கத்தனமான பண பலம், அதிகார பலம், லாப வெறிக்கு முன்னர் அனைத்தும் துச்சம் என்கிற அதன் மனோ நிலையே இன்று அனைத்துப் பகுதி மக்களும் அந்நிறுவனத்திற்கு எதிராக அதை மூடப்பட்டே தீர வேண்டும் என்று போராடுவதற்கான காரணம். 
கடந்த மார்ச் மாதம் 24ந் தேதி நடைபெற்ற எழுச்சிகரமான அந்த பிரம்மாண்டப் போராட்டம் இனியும் தாமதிக்க முடியாது, எதை எதிர்கொண்டாலும், என்ன விலை கொடுத்தாலும் ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டும் என்கிற அனுபவ அறிவின் வெளிப்பாடு.
வளர்ச்சித் திட்டம் எப்படி இருக்க வேண்டும்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒவ்வொரு அரசும் மேற்கொள்ள வேண்டும் என உறுதியாக வலியுறுத்துகிறது. 
ஆனால் அந்த வளர்ச்சி மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் எதிர்கால தலைமுறையின் வாழ்வதற்கான உரிமையையும் பறிக்கக் கூடாது என்பதை அதைவிட கூடுதலாக வலியுறுத்துகிறது. எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் இயற்கையின் சமநிலையை பாதிப்பது தான். ஆனால் இயற்கை தன்னளவில் சமநிலையை மீட்டுஎடுப்பதற்கான வலிமையையும், இயல்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
 அதை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு அதன் சம நிலை பாதிக்கப்படும் போது அதன் விளைவாக சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் நிரந்தரமாக பாதிக்கிறது, ஊனமாக்குகிறது. 
எனவே தான் நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் உள்ளடக்கியதாகவே எந்தவொரு குறிப்பிட்ட வளர்ச்சி திட்டமும் இருக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
கிரிமினல் ஸ்டெர்லைட்
தனது இயக்கத்தை 1995 ஆம் ஆண்டு துவக்கிய போது ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து எஸ்.ஓ.2வாயு மிக அதிகமாக காற்றுவெளியில் கலந்து அருகில்உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உபமின்நிலையங்களில் பணிபுரிந்தோர் கொத்து, கொத்தாக மயங்கி விழுந்தனர். 
காப்பர் கான்சன்ட்ரேட் எனப்படும் தாமிரதாதுவின் மூன்றில் ஒரு பகுதி தாமிரமும், மூன்றில் ஒருபகுதி சல்பர் தாதுவும், மீதமுள்ள ஒரு பகுதி இரும்புத்தாதுவும் உள்ளடங்கியது. காப்பரை பிரித்தெடுக்கும் போதுசல்பர் முறையாக பிரித்தெடுக்கப்படாததால் காற்று வெளியில், எஸ்.ஓ.2 என்கிற வாயு கலந்து வளிமண்டலத்தை நாசமாக்கியதோடு மக்களின் நலத்திலும் கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. இத்தனைக்கும் சல்பியூரிக் அமிலத்திற்கு போதுமான சந்தை இருந்த போதும், நீண்ட நெடுங்காலமாக அதை அமைக்காமல் ஒட்டுமொத்தசல்பர் டை ஆக்சைடையும் சுற்றுச்சூழலை பாதிக்கிற வகையில் வெளியே விட்டது ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கிரிமினல் குற்றம். 
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் புதிதாக சல்பியூரிக் ஆலை 2004 ஆண்டிலும், அதன் விரிவாக்கம் 2005 ஆண்டிலும் இயங்க ஆரம்பித்தது. 
அதுவரையிலும் நீடித்த லட்சக்கணக்கான டன் சல்பரில் இருந்து வெளியேறிய சல்பர் டை ஆக்சைடு சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில், காற்றில் எவ்வித தடையுமின்றி மாசுபடுத்த அனுமதிக்கப்பட்டு வந்தது. இதே போன்று தாமிரத்தை பிரித்து எடுத்த பிறகு மூன்றில் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய காப்பர் சிலாக்எனப்படும் கழிவும் மிகப்பெரும் பகுதி இரும்புக்கான மூலப்பொருளாகும். தாமிரக் கழிவும் சேர்ந்து இருப்பதால் எந்த இடத்திலும் இதை தங்கு தடையின்றி கொட்டவோ அவற்றை வேறுயாருக்கும் விற்கவோ அனுமதிக்கப்படவில்லை. 
மாவட்ட நிர்வாகத்தின் கையில் வைத்துக் கொண்டு இப்போது பல லட்சக்கணக்கான டன் காப்பர் கழிவுகளை பள்ளமான பகுதிகளில் நிரப்பி நிலத்தடி நீரையும், மண்ணையும் மாசுப்படுத்துகிற கைங்கரியத்தை செய்திருக்கிறார்கள்.
முதுகெலும்பற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
இந்த நிறுவனத்தில் 2013 இல்ரூ.1900 கோடி லாபம் ஈட்டப்பட்டுள் ளது. 
ஆனால் இந்த நிறுவனம் சில கோடிகள் மட்டுமே செலவாகக் கூடிய ஆலையின் சுற்றுப்புறத்தில் 250 மீட்டர் அளவிற்குபசுமை வளையம் அமைக்க வேண்டுமென்பதைக்கூட இன்றுவரையிலும் நிறைவேற்றவில்லை. இதிலிருந்தே இந்த ஆலைஎந்த அளவிற்கு சட்டங்களையும், நிர்வாகத்தையும், மக்கள் வாழ்வாதாரத்தையும், நலனையும் துச்சமாக மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு லாபம்கொழிக்கிற இந்த ஆலைக்கு 250 மீட்டர் கூடவேண்டாம், 25 மீட்டராவது பசுமை வளையம்அமைத்துக்கொள் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வளைந்து கொடுத்திருப்பது அவர்களின் ஆதிக்கத்தையும் தமிழக அரசு மற்றும் அமைப்புகளின் முதுகெலும்பற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது. 
இதற்கு இந்த நிறுவனம் சொல்லும்காரணம் சிப்காட் வளாகத்தில் உள்ள இதரஆலைகளுக்கு அல்லது நிறுவனங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லையே என்பதாகும். வேறு எந்தஆலையையும் விட ஆபத்தானது இந்த ஆலை என்கிற காரணத்தினால் தான் இந்தகட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 
ஆனால் இதர ஆலைகளைப்போலவே தன்னையும் பார்க்க வேண்டுமென்று அவர்கள் சொல்வதன் நோக்கம் லாப வெறி அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
கடல் உயிரிகள் அழிந்தாலும் கவலையில்லை
வேறு எந்த ஆலைக்கும் இல்லாத இன்னொரு கட்டுப்பாடும் இந்த ஆலைக்கு விதிக்கப்பட் டுள்ளது. அதாவது, 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுதனது ஆணை எண்: 962, நாள்: 10.9.1986ன் மூலம் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளைதேசிய கடல் உயிரியல் பூங்கா என்று அறிவித்திருக்கிறது. இதிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தான்தாமிர தொழிற்சாலை கட்டப்பட வேண்டும் என்கிறநிபந்தனையை ஆரம்பத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் விதித்திருந்தது. 
ஆனால் இந்த நிர்வாகம்அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இதே 4 கிலோமீட்டார், 7 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் வரை 4 தீவுகள் இருக்கும் இடங்களில் கட்டியிருக்கிறது. 
குறைந்தபட்சம், இடத்தைக் கூட மாற்றிக் கொள்வதற்கு அந்த நிறுவனம் தயாரில்லை. கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தாலும் கவலையில்லை, தனது லாபக் கொள்ளையை அதிகரிப்பதற்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்திருக்கிறது. 
உச்சநீதிமன்றம் கூட தனதுதீர்ப்பில், “ஆரம்பத்தில் இதை நிபந்தனையாக்கிய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பின்னர் இதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. 
ஒருவேளை மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் இதை மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்தால் அதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்று கூறியிருக்கிறது. ஆனால் இந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கடல் உயிரியல் பூங்கா அரசாணையை மத்தியஅரசாங்கம் அறிவிக்கை செய்திருக்க வேண்டும். அவ்வாறுசெய்யாததால் அது தங்களை கட்டுப்படுத்தாது என்று வாதிட்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம் அறிவிக்கை செய்யாததாலேயே உயிரியல் பூங்கா இல்லாமல் போகுமாஎன்று கேட்பதற்கு பதிலாக, சட்டத்தின் பொந்துக்குள் நுழைந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதித்தது.
பெயர்ந்து வந்து நின்ற மரங்கள்
ஆலையின் உள்பகுதியில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில்பசுமை வளையம் அமைத்திருக்கப்பட வேண்டும். ஆனால் 2012ஆம் ஆண்டு வரை அத்தகைய எந்த முயற்சியிலும் அந்த நிறுவனம் ஈடுபடவில்லை. மாறாக, 2012 ஆம் ஆண்டுஉச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ‘நீரி’ அமைப்பு இந்த ஆலையை ஆய்வு செய்ய வேண்டுமென்றும், ஆய்வு செய்யும் போதுஉயர்நீதிமன்றத்தின் மனுதாரர்களாக இருந்த க.கனகராஜ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மற்றும் நேஷனல் டிரஸ்ட்ஃபார் கிளீன் இன்டியா ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தது. 
அந்த ஆய்வுக்காகச் சென்ற போது வெளியிடங்களிலிருந்து மரங்களை பெயர்த்து வந்து ஆலைக்குள் நிற்க வைத்திருந்தனர். இதுகுறித்து குறிப்பிட்ட போது நீரி, தற்போது என்ன நடக்கிறது, மூன்றில்ஒரு பகுதி பசுமை வளையம் இருக்கிறதா என்பது தான் தனது வரையறை என்று ஒதுங்கிக் கொண்டது. அதை பதிவு செய்ய சொன்னபோது நீரி மறுத்துவிட்டது. 
ஆலை ஆரம்பிக்கும் போதே விதைபோட்டிருந்தால் 18 வருட காலத்தில் அவை ஒரு பசுங்கூடமாக மாறியிருக்க முடியும். அதைக்கூட செய்வதற்கு அந்த நிர்வாகம் தயாரில்லை. 
ஆரம்ப காலத்தில் தூத்துக்குடியில் இப்படி ஆலைகள் வருகிறபோது தொழிற்சாலைகள் உள்ள இரண்டு இடங்களிலும், குடியிருப்பு பகுதியிலுமாக காற்றுவளி மாசுபாட்டை அறிந்து கொள்வதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் வந்த பிறகு அதையும் கணக்கில் எடுத்து புதிய இடங்களில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதற்கு முன்வரவில்லை. இத்தனை பிரச்சனைகளுக்கு இடையிலும் 2007 மற்றும்2008 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் காற்றில் சல்பர் ஆக்சைடு அதிகமாக உள்ள முதல் பத்து இடங்களில் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் தூத்துக்குடி இருந்தது. 
அந்த அளவிற்கு ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியின் ஒட்டுமொத்த மக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் காரியத்தை தொடர்ந்து கொண்டேஇருக்கிறது.
போஸ்டர்களைக் கிழிக்கும் போலீஸ்
ஸ்டெர்லைட் துவக்கப்பட்ட போது நேஷனல் டிரஸ்ட் ஃபார் கிளீன் இண்டியா என்கிற ஒரு அரசு சாரா அமைப்பு தான் தாமிர ஆலையில் பிரச்சனைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தது. பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். 
ஆனால் அப்போதைய நிலையில் தனது பண பலத்தின் காரணமாக சுற்றியுள்ள ஊர்களில் அதிகாரம் படைத்த சிலருக்கு ஒப்பந்தங்கள் அளிப்பதன் மூலமாக ஸ்டெர்லைட் நிர்வாகம் தனக்கு எதிராக சுற்றுப்புற மக்கள் போராடாதவாறு பார்த்துக் கொண்டது. இதேபோன்று அரசு நிர்வாகத்தையும், காவல்துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் அது கொண்டுவந்துவிட்டது. 
இந்த காரணத்தினால் தான் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது குறித்தான கோரிக்கையோடு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை காவல்துறை ஒன்றுவிடாமல் கிழித்திருக்கிறது; இந்தப் போராட்டங்களோடு எந்த சம்பந்தமும் இல்லாமல், வயிற்றுப்பாட்டிற்காக ஸ்டெர்லைட் ஆதரவோ, ஸ்டெர்லைட் எதிர்ப்போ எந்த கருத்துக்களையும் தாங்கியிருந்தாலும் சுவரொட்டி ஒட்டுவதை தன் வாழ்வாதாரமாக கொண்ட எளிய மனிதர்களை சுவரொட்டி ஒட்டியதற்காக கையை முறித்திருக்கிறது. கையை முறித்ததை வெளியில் சொன்னால் வெளியே வர முடியாத அளவிற்கு வழக்குப்போட்டு உள்ளே தள்ளிவிடுவதாகச் சொல்லி கை ஒடிக்கப்பட்ட நபர் பைக்கிலிருந்து விழுந்ததால் கை ஒடிந்து போனதாக சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார்.
மாவட்ட நிர்வாகம் அல்ல... ஸ்டெர்லைட் நிர்வாகம்
மாவட்ட நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை இது மாவட்ட நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா? 
அல்லது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா? என்று தூக்கியெறிந்ததும் நாம் பார்க்க முடிந்தது.
 பல மாதங்களாக ஆலை இயங்குவதற்கான அனுமதியைப் பெறாமலேயே ஆலையை இயக்கிக் கொண்டிருந்ததும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததும், அதன் காரணமாகவே உச்சநீதிமன்றம் ரூ. 100 கோடி அபராதம் விதித்த போது அனுமதியின்றி இயக்கியதற்காகவும் சுற்றுச்சூழலை சீரழித்ததற்காக அபராதம் விதித்ததாக தீர்ப்பளித்தது. 
எந்த அளவிற்கு ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பிடி அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருந்தது என்றால் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு புதிய பிரமாண பத்திரம் தயாரிப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்தியக் கூட்டத்தில் விவாதங்களை ஸ்டெர்லைட் நிர்வாகம் கேட்பதற்கு ஏதுவாக தமது செல்போனை ஆன் செய்து, ஒரு டி.எஸ்.பி.யே ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார் என்பதிலிருந்து விளங்கும். 
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், அங்குள்ள தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபிதிகள் எலிப்பி தர்மாராவ், பால்வசந்த குமார் ஆகியோர் எந்த பதவி உயர்வும் இன்றி ஓய்வுபெற வேண்டிய நிலை இருந்தது.
அனுபவத்தால் விளைந்த எழுச்சி
மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட நான்கு மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த போது உயர்நீதிமன்றம் அந்த ஆலையை நிரந்தரமாக மூடவும், ஆலையில் உள்ள தொழிலாளர்களை தமிழக அரசு உரிய இடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது. 
ஆலை நிர்வாகம் சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்திக் கொண்டு தங்களது செல்வாக்கையும் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் இதற்கு தடைபெற்றுவிட்டது. இந்நிலையில் தான் 2013ஆம் ஆண்டுக்கு பிறகு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள் மந்த நிலையில் இருந்தன. ஆனால் அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள் அழைத்த போதெல்லாம் அதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ளாத மக்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து இப்போது இடைவிடாத போராட்டத்தையும், தொடர் இயக்கங்களையும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். 
ஆலைக்கழிவுகள் கால்வாயில் விடப்படுவதால் அந்த நீரை குடித்த கால்நடைகள் செத்துப்போனது, ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் தொடர்ச்சியாக மூச்சுத் திணறல் ஏற்படுவது, நிலத்தடி நீரும், இயற்கை நீரும் மாசுபட்டிருப்பது குழந்தைகளுக்கு வரும் நோய்கள் குணமின்றி தொடருவது, இறப்புக்கான வயதிற்கு முன்னதாகவே பல பேர் மரணமடைவது, தாமிரக்கழிவு கொட்டப்பட்ட இடங்களில் ஆடு மாடு மேய்த்தவர்களின் காலின் தோலும், சதையும் அரிக்கப்பட்டு நிரந்தரப் புண்ணாகியிருப்பது, இவையெல்லாம் கோபத்தை கிளர்ந்தெழச் செய்து போராட்டத்தை வலுப்படுத்தியிருக்கிறது. 
ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலம் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தை குவித்த பிறகும் அந்தப் பகுதியில் மண் வளத்தை, நீர்வளத்தை, காற்று மண்டலத்தை மக்கள் வாழ்வாதாரத்தை, உடல் நலனை பாதிக்கச் செய்யும் தனது கழிவுகளை கட்டுப்படுத்துவதற்கோ, குறைப்பதற்கோ எந்த நடவடிக்கையையும் அந்த நிறுவனம் மேற்கொள்ளவில்லை.இத்தனை மோசமான நிலையில் இந்த ஆலையை விரிவாக்குவதற்கு இப்போது மத்திய, மாநில அரசுகள் அனுமதியளித்திருக்கின்றன. 
இது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்ற நடவடிக்கை. அது தான் எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போல ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் ஒற்றை மனிதனாய் எழுந்து “மூடு ஸ்டெர்லைட்டை - காப்பாற்று தூத்துக்குடியை” என்று போராட வைத்திருக்கிறது. 
இந்தப் போராட்டம் நியாயமானது - வென்றே ஆக வேண்டும்.
க. கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர்,சிபிஐ(எம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...