சனி, 17 பிப்ரவரி, 2018

போர்ப் பரணி?

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், முசாபர்பூரில் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில், இராணுவம் தன்னுடைய படைவீரர்களைப் பயிற்றுவிக்க ஆறு முதல் ஏழுமாதங்கள் எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் தன்னுடைய ஊழியர்களை,போர்க்களத்திற்கு இரண்டு அல்லது மூன்றுநாட்களில் தயார் செய்திடும் என்று கூறியிருக்கிறார்.

இவரது இந்தக்கருத்து மிகவும் விரிவானஅளவில் கண்டனங்களைப் பெற்றிருக்கின்றது. இந்திய இராணுவம் தங்கள் படைவீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதைவிட மிகவும் சிறப்பாக ஆர்எஸ்எஸ் செய்திட முடியும் என்று ஆர்எஸ்எஸ்தலைவர் கூறியதன் மூலம் இந்திய இராணுவத்தை அவமதித்துவிட்டார் என்பது பிரதானவிமர்சனமாகும். 


இந்த விமர்சனம் சரியானதே என்ற போதிலும், இவ்வாறு இவர் கூறியிருப்பதற்கான நோக்கம் மிகமிக ஆழமான ஒன்று.இராணுவம் பற்றிய ஆர்எஸ்எஸ்-இன் கண்ணோட்டத்தையும், சமூகத்தை இராணுவமயமாக்குவது தொடர்பாகவும் ஒரு முக்கியமான அம்சத்தை இந்தக் கூற்று வெளிப்படுத்தியிருக்கிறது.

இவரது உரை தொடர்பாக எழுந்துள்ள விமர்சனத்திற்குப்பதிலளிக்கும் விதத்தில் ஆர்எஸ்எஸ் ஒரு விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது: ‘‘பகவத்ஒரு சூழ்நிலை உருவாகுமானால், மற்றும் அரசமைப்புச்சட்டம் அனுமதித்தால், ஆர்எஸ்எஸ் தன் ஊழியர்களுக்கு ஒழுக்கத்தைக் கட்டுப்பாட்டைமுறையாகக் கற்றுத்தரும் அதே சமயத்தில், இந்திய இராணுவம் சமூகத்தைத் தயார் செய்திடஆறு மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்றுதான்கூறினார்.

 இதுவும், மத்திய உள்துறை இணைஅமைச்சர், கிரண் ரிஜிஜு, இது தொடர்பாக அளித்துள்ள தற்காப்பு விளக்கமும் பகவத்தின் கருத்தில் மறைந்திருக்கும் அம்சத்தை வெளிப் படுத்தி இருக்கின்றன. 

ரிஜிஜு தன்னுடைய ட்விட்டர்பக்கத்தில், “ஒரு நபரைப் படைவீரராகப் பயிற்றுவிக்க வேண்டுமானால் ஆறு முதல் ஏழு மாதங்களாகும் என்றும் அரசமைப்புச்சட்டம் அனுமதிக்குமானால் அதனை ஆர்எஸ்எஸ் ஊழியர்கள்அதற்கான திறமையை ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள், என்றுதான் பகவத்ஜி கூறினார்,” என்றும்குறிப்பிட்டிருக்கிறார்.

பகவத்தைப் பாதுகாத்திடுவதற்காக இவ்வாறு இவர்கள் கூறியுள்ள விளக்கங்களிலிருந்து இவர்கள், தங்களையும் அறியாமல், ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தின் பின்னே ஒளிந்துள்ள உண்மையை வெளிப்படுத்திவிட்டார்கள். 

“அரசமைப்புச் சட்டம் அனுமதிக்குமானால்,” இராணுவத்தை நடத்திடும் வேலையை ஆர்எஸ்எஸ்-ஏ எடுத்துக்கொள்ளும் என்பதும், சமூகத்தை இராணுவமயப்படுத்திடும் என்பதுமாகும். இது,ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உலகநோக்கான “இந்து ராஷ்ட்ரம்” என்பதுடன் ஒருங்கிணைந்ததாகும். இந்துத்துவா கருத்தாக்கத்தை உருவாக்கிய வி.டி.சாவர்க்கரின் முகப்பு மேற்கோள் வாசகம், “இந்துக்களை இராணுவமயமாக்கு, தேசத்தை இந்துமயமாக்கு,” என்பதாகும்.

சாவர்க்கரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி,ஆர்எஸ்எஸ்-இன் நிறுவனரான ஹெட்கேவாரும்கூட, இந்துக்களை இராணுவமயப்படுத்தும் இத்தகைய சிந்தனைக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டிருந்தார். 


இந்து மகா சபையின் தலைவராக இருந்த அவருடைய ஆசான், பி.எஸ். மூஞ்சே, இத்தாலிக்குப் பயணம்செய்து, பாசிச சிந்தனையுடனும், பாசிச இராணுவபயிற்சி நிறுவனங்களுடனும் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டார். பின்னர் மூஞ்சே இந்தியாவிற்குத் திரும்பியபின் 1943இல் நாசிக்கில்போன்சாலா இராணுவப் பள்ளியை அமைத்தார். 

அந்தப் பள்ளியும், கல்லூரியும் இப்போதும் நாசிக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இராணுவத்தில் சேரவிரும்பும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கின்றன. இந்தநிறுவனத்தை நடத்தி வரும் மத்திய இந்து மிலிட்டரி எஜுகேஷனல் சொசைட்டி தற்போதுஆர்எஸ்எஸ் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. 

மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த லெப்டினன்ட் கர்னல் எஸ்.பி. புரோஹித், போன்சாலா இராணுவப் பள்ளியில் இராணுவத்தில் அதிகாரிகளாக(Short Service Commission Officers)சேரவிரும்புகிறவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை (special coaching clas)நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவை, இந்துத்துவாவைப் பின்பற்றக்கூடிய ஒரு இராணுவப் படையாக மாற்ற வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ்-இன் விருப்பமாகும். 

பகவத்தைப் பொறுத்தவரை, இந்திய ராணுவத்தில் உள்ள படைவீரனும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ள சுயம்சேவக்கும் ஒரேமாதிரிதான் செயல்பட வேண்டும். இப்போதுள்ள அரசமைப்புச்சட்டத்தின்கீழ், அவ்வாறு இராணுவத்தையும், ஆர்எஸ்எஸ்-ஐயும் ஒன்றிணைப்பது சாத்தியமல்ல. 
அதனால்தான், ஆர்எஸ்எஸ் இயக்கமும், கிரண் ரிஜிஜுவும் அளித்துள்ள விளக்கங்கள் மூலமாக, அரசமைப்புச்சட்டம் அனுமதிக்குமானால், ஆர்எஸ்எஸ் நாட்டின் இராணுவ விவகாரங்களில் மூக்கை நுழைத்திடும் என்று கூறியிருக்கிறார்கள். 

இதன் உட்பொருள் மிகவும்அச்சுறுத்தக்கூடியவை, ஆபத்தானவை. 

அதாவது, இவ்வாறு நடப்பதற்காக அரசமைப்புச்சட்டத்தையே மாற்றியமைக்க வேண்டும் என்று இவர்கள் கூறத் தொடங்கிவிட்டார்கள்.

இதானால் ஒன்றுபட்ட இந்தியா வுக்குத்தான் ஆபத்து.

இவ்வாறு பேசுபவர்கள் இந்திய மக்கள் நலனுக்காகப் போராடும் நக்சல் பாரிகளை ,அவர்கள் மக்கள் படையையும் அனுமதிப்பார்களா?
அல்லது இவர்கள் இந்துத்துவாக்கு போரிடுவதைப்போல் ,முஸ்லிம்களுக்க்காப் போரிடுவதாகக் கூறிக்கொள்ளும் ஜிகாதிகளையும்,சிமி,போன்ற அமைப்புகளையும் ஒத்துக்கொள்வார்களா?

அவைகள் மத தீவிரவாத இயக்கங்கள் என்றால் ஆர்.எஸ்.எஸ் மட்டும் புனிதம் காக்கும் போர்வீரர்களா?
இரண்டுமே மத தீவிரவாத அமைப்புகள்தான்.இந்தியாவுக்கு ஆபத்தை தருவதுதான்.

வெளிநாட்டு பாம்பு கடித்தால் மட்டும் மரணம்.உள்நாட்டு பாம்பு கடித்தால் மார்க்கண்டேய வரமா?
இரண்டுமே விடம்தான்.
இரண்டுமே அழிக்கப்பட்ட வேண்டியதுதான்.
அதாவது படம் எடுத்தாடி  கொத்தத்  தயாரானால்.

புனிதப் போர் என்ற  தீவிரவாதிகள் கொத்த ஆரம்பித்தால் அவர்களை அழிக்க ஆரம்பித்துள்ளது உலகு.
இங்கோ ஆர்.எஸ்.எஸ். படம் எடுக்க ஆரம்பித்து விட்டது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...