சனி, 14 அக்டோபர், 2017

ஊழல் எதிரி மோடி...!

பிஜேபி அமித் ஷா & மோடி தொடர்புடைய குஜராத் மாதவ்புரா வங்கி ஊழல்...
மாதவ்புரா கூட்டுறவு வங்கி குஜராத்தின் மிகப்பெரிய கூட்டுறவு வங்கியாக இருந்தது. 2000ஆம் ஆண்டில் அதில் சுமார் 50 ஆயிரம் முதலீட்டாளர்கள் இருந்தனர். வங்கியிடம் சுமார் 1300 கோடி ரூபாய் இருந்தது. கேதன் பரேக், மும்பையின் ஸ்டாக் புரோக்கர்.
மாதவ்புரா வங்கி, கேதன் பரேக்குக்கு 1030 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது. இன்னும் சில புரோக்கரேஜ் நிறுவனங்களுக்கும் கடன் வழங்குகிறது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, பங்குச் சந்தை தரகர்களுக்கு வங்கிகள் 15 கோடிக்கு மேல் கொடுக்கக்கூடாது.
மாதவ்புரா வங்கியின் பணத்தைக்கொண்டு கேதன் பரேக் உள்ளிட்டவர்கள் 2001 ஆரம்பத்தில் பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டபோது செமையாக காசு பார்த்தார்கள்.
ஆனால் பங்குச்சந்தை ஊழல் வெடித்தது. சரிவு ஏற்பட்டது.
மாதவ்புரா வங்கி கேதன் பரேக்குக்கு பெரும்தொகை கடன் கொடுத்த விவகாரம் 2001 மார்ச்சில் வெளியாகிறது.
வங்கியில் பணம் போட்டவர்கள் திருப்பி எடுக்க வருகிறார்கள். ஆனால் பணம் இல்லை.


ரிசர்வ் வங்கி ஆய்வு செய்கிறது. வங்கியின் நிர்வாகிகள், தமது இஷ்டத்துக்கு தமக்குத் தெரிந்தவர்களின் பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. வங்கியிடமிருந்த 1300 கோடி ரூபாய் மதிப்பில் 1200 கோடி ரூபாய் ஸ்வாகா என்று தெரிகிறது. மார்ச் 14ஆம் தேதி நிர்வாகக் குழு கலைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் சார்பில் நிர்வாகி நியமிக்கப்படுகிறார். ஆகஸ்ட் மாதம், பத்தாண்டுகளில் வங்கியை சீரமைக்க ஒரு திட்டம் வகுக்கப்படுகிறது.
வங்கியின் சேர்மன் ரமேஷ் சந்திர பரேக் என்பவரின் மகன் வினீத் சந்திர பரேக் என்பவர் பங்குச் சந்தையில் 50 கோடி ரூபாய் இழந்தார். அவருக்கு வங்கிப் பணம் தரப்பட்ட விவகாரம் பின்னர் தெரிய வந்தது. (11 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த (!) வினீத் சந்திர பரேக் கைது செய்யப்பட்டார் என்று 2016 ஜனவரி 8ஆம் தேதி செய்திகள் தெரிவிக்கின்றன.)
முக்கிய மோசடி செய்தவர் கேதன் பரேக். 1030 கோடி ரூபாய். வழக்கு தொடரப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 380 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று அவர் சொல்கிறார். நீதிமன்றமும் அனுமதித்து பெயிலில் விடுகிறது.
அவர் சொன்னபடி பணம் தரவில்லை என்பதால் அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் 2003இல் மாதவ்புரா வங்கி உச்சநீதிமன்றத்தில் ஒரு எஸ்எல்பி மனு போடுகிறது.
அட பரவாயில்லையே என்கிறீர்கள் இல்லையா...? இனிதான் இருக்கிறது திருப்பம்.
*
ஊழல் விவகாரம் வெடித்து, நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாக்க் குழு அமைக்கப்படுகிறது அல்லவா? அதில் ஒரு டைரக்டராக இருந்தவர் அமித் ஷா. ஆமாம், இன்றைய பாஜக தலைவர் அமித் ஷாவேதான்.
இப்போதைக்கு இந்த விஷயத்தை இங்கே நிறுத்தி விட்டு இன்னொரு விஷயத்துக்கு வருவோம்.
*
2005 ஆகஸ்ட் 1.
குஜராத் மாநில அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், சிஐடி, குல்தீப் ஷர்மா மூன்று பக்க அறிக்கை ஒன்றைத் தயாரிக்கிறார், அதை குஜராத் மாநில தலைமைச் செயலர் சுதீர் மன்கட் என்பவருக்கு அனுப்புகிறார். ஊழல் ஒன்று நடந்திருப்பதற்கான ஆரம்ப ஆதாரங்கள் இருப்பதை நிறுவி, அது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.
அரசு அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஷர்மா உடனே சிஐடி டிபார்ட்மென்ட்டிலிருந்து தூக்கியடிக்கப்படுகிறார். குஜராத் ஆடு மற்றும் கம்பளி மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்!
ஊழல் குற்றச்சாட்டு யார் மீது தெரியுமா? அமித் ஷா மீது.
ஆமாம், இன்றைய பாஜக தலைவர் அமித் ஷா மீதுதான்.
அன்று குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அவரது வலது கரமாக – உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மீதுதான் அந்தக் குற்றச்சாட்டு.
“நா காவூங்கா, நா கானே தூங்கா” (நான் ஊழல் செய்ய மாட்டேன், செய்ய விடவும் மாட்டேன்) என்று இன்று முழங்குகிற மோடி, தனது அரசின் காவல் துறை அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை டிஜிபியை தூக்கியடித்தார் என்பது வரலாறு.
ஐந்தாண்டுகள் அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அமித் ஷா மீதான குற்றச்சாட்டு என்ன தெரியுமா? மாதவ்புரா வங்கியை நாசம் செய்த முக்கியக் குற்றவாளி கேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட லஞ்சம் வாங்கினார் என்பதுதான். அதற்கான ஆதாரங்களை தெளிவாக அறிக்கையில் வைத்திருந்தார் சிஐடி டிஜிபி.
1030 கோடி ரூபாய் மோசடி செய்த கேதன் பரேக் 380 கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லி திருப்பித்தர ஆரம்பித்திருந்தார். ஆனால் மூன்றாண்டு காலத்தில் அந்தப்பணம் வராததால், அவருடைய பெயிலை ரத்து செய்ய வேண்டும் என்று மாதவ்புரா வங்கி உச்சநீதிமன்றத்தில் எஸ்எல்பி (SLP (criminal) No. 1701/2003) போட்டது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அமித் ஷா இங்கே எங்கே வருகிறார் என்பதை சிஐடி டிஜிபி வைத்த அறிக்கையிலிருந்து விவரமாகப் பார்ப்போம்.
மாதவ்புரா வங்கியின் டைரக்டராகவும் இருந்த அமித் ஷா, 2004 ஆகஸ்ட் 31ஆம் தேதி, வங்கி அதிகாரிகள், காவல் துறை டிஜிபி உள்ளிட்டோரை அழைத்து ஒரு கூட்டம் நடத்துகிறார். “கேதன் பரேக் மூன்றாண்டுகளுக்குள் 380 கோடி செலுத்தவில்லை. எனவே அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்கிறார்.
ஆனால் அக்டோபர் முதல் வாரத்தில் கிரீஷ் தானி என்கிற அரசியல் தரகர் ஒருவர் அமித் ஷா - கேதன் பரேக் இடையே ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். அதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட எஸ்எல்பி-யை மாதவ்புரா வங்கி திரும்பப் பெற்றுக் கொள்கிறது!! உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்கிறது! ஜாமீன் போய்விடுமோ என்ற அச்சம் தேவையில்லாமல் சுதந்திர மனிதர் ஆகிறார் கேதன் பரேக்.

ஆக, ஆகஸ்ட் மாதம் கேதன் பரேக் பெயிலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய அமித் ஷா, அக்டோபர் மாதம் வழக்கை ரத்து செய்கிறார் என்றால், இடையில் நடந்தது என்ன?
2004 அக்டோபர் 1ஆம் தேதி கேதன் பரேக் அகமதாபாத் வருகிறார். கேதன் பரேக் – தானி – அமித் ஷா ஆகிய மூவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளை முன்வைத்து, மூவரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். கேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட அமித் ஷா லஞ்சம் வாங்கினார். அமித் ஷா, குஜராத் அரசில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். எனவே அவருடைய நடத்தை குறித்த எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. எனவே மாதவ்புரா வங்கி விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்து வரும் சிபிஐ இதையும் விசாரிக்க வேண்டும் என்கிறார்.
கேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட அமித் ஷா லஞ்சம் வாங்கினார் என்பதற்கு என்ன ஆதாரம்?
கேதன் பரேக்கை விடுவிக்க, அமித் ஷா இரண்டரை கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று அகமதாபாதைச் சேர்ந்த ஹஸ்முக் ஷா என்பவர் எழுத்துவடிவிலான புகார் கொடுத்தார். அந்தப் புகாரைத் தொடர்ந்துதான் விசாரணை நடைபெற்று, ஆகஸ்டில் கேதன் பரேக்குக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு அக்டோபரில் அவருக்கு ஆதரவாக வழக்கு திரும்ப்ப் பெறப்பட்டது என்பதை சிஐடி அறிக்கை தெளிவாகக் காட்டியது.
ஆனால் பத்தாண்டுகள் அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் அமித் ஷாவைக் காப்பாற்றியவர் நரேந்திர மோடி.
கேதன் பரேக்குக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர் – இன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி
சிறிதும் பெரிதுமான முதலீட்டாளர்களைக் கொண்டிருந்த மாதவ்புரா வங்கியின் லைசென்சை ரிசர்வ் வங்கி 2013இல் ரத்து செய்கிறது. கூட்டுறவு வங்கிகளின் ஊழல் என்று வரும்போது இப்போதும் ரிசர்வ் வங்கியால் உதாரணம் காட்டப்படுவது மாதவ்புரா வங்கிதான்.
*
கொசுறாக இன்னும் பல தகவல்களை சொல்லலாம்.
1030 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு 390 கோடி ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு இந்த வழக்கில் தண்டனையே இல்லாமல் தப்பி (வேறு வழக்கில் ஓரிரண்டு ஆண்டுகள் மட்டும் தண்டனை அனுபவித்து) சுதந்திரமாக உலவுகிறார் கேதன் பரேக்.
*
2001 மார்ச் 9ஆம் தேதி ஊழல் விவகாரம் வெடித்ததும் வங்கியின் தலைவர் ரமேஷ், மும்பை மேலாளர் ஜகதீஷ் பாண்டியா இருவரும் கைது செய்யப்படுகிறார்கள். இதன் முக்கிய சதிகாரராக இருந்த வங்கியின் சிஈஓ தேவேந்திர பாண்டியா ஏப்ரல் 26ஆம் தேதி கைது செய்யப்படுகிறார்.
ஒன்றரை மாதம் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த தேவேந்திர பாண்டியா, எப்படியாவது பெயில் வாங்கி விடலாம் என்ற எண்ணத்துடன் இந்தோரிலிருந்து அகமதாபாதுக்கு இரவில் வந்து சேர்ந்தவரை கைது செய்தோம் என்றார் அப்போதைய உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா. இந்த ஹரேன் பாண்டியா யார், என்ன ஆனார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
*
2001இல் குஜராத்தில் முதல்வராக இருந்தவர் கேஷுபாய் படேல். ஹரேன் பாண்டியா குஜராத்தில் விரைவாக வளர்ந்து வந்த இளம் பாஜக - ஆர்எஸ்எஸ் தலைவர். பாஜக அரசு ஊழலில் சிக்கி செல்வாக்கை இழந்து கொண்டிருந்த நேரத்தில்கூட தனது தொகுதியில் தொடர்ந்து அபார வெற்றி கண்டு வந்தவர். படேலின் வலது கரமாக இருந்தவர்.


2001 அக்டோபரில் நரேந்திர மோடி முதல்வர் ஆகிறார். முதல்வர் ஆகி விட்டதால் பாதுகாப்பான ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும். அவருக்குக் கண்ணில் படுகிறது ஹரேன் பாண்டியாவின் தொகுதி. ஹரேன் பாண்டியா மறுக்கிறார். அதைத் தொடர்ந்து ஹரேன் பாண்டியா ஓரம் கட்டப்படுகிறார்.
2002 குஜராத் கலவரம் நிகழ்கிறது. அரசுத் தரப்பில் என்ன செய்தார்கள் என்று ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயரின் தலைமையிலான தனிநபர் விசாரணைக் குழுவுக்கு ஹரேன் பாண்டியா ஒரு ரகசிய வாக்குமூலம் தருகிறார்.
மோடியின் முதன்மைச் செயலர் பாண்டியாவைக் கண்காணிக்க உத்தரவிடுகிறார். பாண்டியா வாக்குமூலம் கொடுத்த்து உண்மைதான் என்று தெரிய வருகிறது. தனிநபர் விசாரணைக் குழுவுக்கு வாக்குமூலம் என் கொடுத்தீர்கள் என்று கட்சித் தலைமை ஹரேன் பாண்டியாவைக் கேட்கிறது. ஹரேன் பாண்டியா அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். ஆகஸ்டில் அவுட்லுக் பத்திரிகைக்கு பெயரில்லாத அமைச்சர் பெயரால் பேட்டி தருகிறார். தன் பெயர் வெளியே வந்தால் கொல்லப்படுவோம் என்றும் சொல்கிறார்.
2002 டிசம்பர் குஜராத் தேர்தலில் ஹரேன் பாண்டியாவுக்கு அவருடைய தொகுதியை தர முடியாது என்கிறார் மோடி. ஆர்எஸ்எஸ் பாஜக இரண்டின் தலைமைகளும் மோடியை நிர்ப்பந்தம் செய்கின்றன. ஆனால் தனக்கு நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்கிறார் மோடி. இரண்டு நாட்கள் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியில் கட்சி மோடிக்கு அடங்கிப் போகிறது. ஹரேன் பாண்டியாவுக்கு சீட் மறுக்கப்படுகிறது.
அரசியலிலிருந்து ஒதுங்கி அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்த ஹரேன் பாண்டியா, 2003 மார்ச் 26ஆம் தேதி, வழக்கமாக நடைபயணம் போகும் இடத்தில் காரில் பிணமாக்க் கிடக்கிறார். வழக்கு ஊத்தி மூடப்பட்டது. அவரை யார் கொலை செய்தார்கள் என்று இன்றுவரை தெரியாது. அந்தக் கொலை, சாட்சியங்கள், வழக்கு ஆகியவற்றைப் பற்றி கடைசியில் உள்ள இணைப்பில் படித்துப்பாருங்கள். நமது காவல்துறை / நீதித்துறை குறித்து அருமையான புரிதல் கிடைக்கும்.
*
இரவு உறக்கம் வராமல் எதையெதையோ தோண்டி எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும்போது இப்படியும் ஒரு செய்தி கண்ணில் பட்டது —
குஜராத் சிஐடி ஏடிஜிபி மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது ஒரு மெட்ரோபொலிடன் நீதிமன்றம். மாதவ்புரா வங்கியின் 1100 கோடி ஊழல் விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் கூறியது.
இந்தச் செய்தியின் தேதி - 2017 மே 7
ஊழல் ஒழிந்து விட்டதுதானே!
By Shahjahan R

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரூபாய் 80,00,00,000 ஊழல்

ஊழலுக்கு எதிராகப் பேசிப் பேசித் தன்னை ‘மிஸ்டர் கிளீன்’ என்று காட்டிக் கொண்டவர் மோடி.
பெங்களுர் எடியூரப்பா தொடங்கி மும்பையைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வரை ஊழல் பேசப்பட்டது.
இப்பொழுது ஜீ.... பூம்பா பூதத்தைப் போல ‘ஜெய் ஷா குண்டால்’ என்ற மாபெரும் ஊழல், அமித்ஷா மகன் வடிவில் உருவெடுத்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் ரூபாய் 50,000 இல் நிறுவனம் தொடக்கம். முதலாண்டில் 6,230 ரூபாய், 2013 இல் 1,724 ரூபாய், 2014 இல் 18,728 ரூபாய் இழப்பு ஏற்பட்ட இந்த நிறுவனத்திற்கு 2015 - 2016 நிதியாண்டில் மட்டும் 80 கோடி ரூபாய் வரவு செலவு ஆகியுள்ளது.
இது எப்படிச் சாத்தியமானது-? இதற்குப் பின்புலமாக இருந்தவர் அன்றய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல். இது எப்படி மிஸ்டர் கிளீன் மோடிக்குத் தெரியாமல் போயிருக்கும்.
பாஜக மோடி ஆட்சியின் மிகப் பெரும் ஊழல் மட்டுமன்று, அதிகார வரம்பு மீறலும் இதில் உள்ளடங்கிருக்கிறது.
பத்துமடங்கு வருமானம் உயர்ந்தாலே அத்தனை துறைகளையும் பயன்படுத்தி விசாரணை செய்யும் மோடி, ஜெய் ஷா நிறுவன வருமானம் ஒரே ஆண்டில் மட்டும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதை மோடி விசாரணை நடத்தாதது ஏன் என்று ராகுல்காந்தி குரல் எழுப்-புகிறார். இவர் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்.
ஆனால், பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவே இந்த ஊழலுக்கு எதிராக அறிக்கை வெளியிடுகிறார்.

அமித் ஷா மகன் ஜெய் ஷாவைப் பாதுகாக்க மத்திய அமைச்சர் இவ்விவகாரத்தில் இறங்கி உள்ளதாகவும் -
இந்த மாபெரும் ஊழல் குற்றச்சாட்டில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட் ஜென்ரல் துஷார் மேத்தா, இந்தத் தனிநபர் வழக்கில் எப்படி வாதாடலாம், மத்திய சட்ட அமைச்சகம் இதற்கு எப்படி அனுமதி அளித்தது, இது மிகப்பெரும் விதிமீறல், ஊழல் என்கிறார்கள் யஷ்வந்த் சின்ஹா, சந்துருகன் சின்ஹா.
முந்தய காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழலுக்கு எதிராக என்று சொல்லி அன்னா அசாரே, கிரன்பேடி போன்றோரை வைத்துப் போராட்டம் நடத்தினார் மோடி.
இன்று அசாரேயைக் காணவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிரன்பேடிக்குக் கிடைத்துவிட்டது.
ஜெய் ஷா ஊழலுக்கு மோடி வாய்திறக்காமல் இருப்பது ஏன்-? விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன்-?.
பதில் சொல்லும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
பாஜக ஆட்சியின் சரிவுக்கு விழுந்த பெரிய அடி இது.
 கருஞ்சட்டைத் தமிழர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...