செவ்வாய், 14 மார்ச், 2017

தாவுத் இப்ராகிமை தப்பவிட்ட மோடி அரசு !



பாகிஸ்தானைச் சேர்ந்த அல்டாஃப் கனானியின் முழுநேரத் தொழிலே சர்வதேச ஹவாலா பணப் பரிமாற்றம் செய்வது தான். 
இவரது ‘கனானி பணப் பரிமாற்ற நிறுவனம்’ பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சட்டவிரோதமான ஹவாலா பணப் பரிவர்த்தனைகளைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்திருக்கிறது. 
சீனா, கம்போடியா, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த மாஃபியா கும்பல்களுக்கும், அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்டு பின்னர்  பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட தாலிபான், லஷ்கர்-ஈ-தொய்பா, ஜெய்ஷ்-ஈ-முகம்மது, அல்கொய்தா உள்ளிட்ட குழுக்களுக்கும், தாவூத் இப்ராகிம் போன்ற நிழலுலக தாதாக்களுக்கும் ஹவாலா பணப் பறிமாற்றச் சேவைகளை பல ஆண்டுகளாகச் செய்து வந்திருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு கடந்த 2015-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பனாமாவில் கனானியைக் கைது செய்தது. 
ஹவாலா பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் கனானிக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடனும், இந்தியாவின் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுடனும் தொடர்பு இருப்பதை அமெரிக்க அரசின் கருவூலத் துறை உறுதி செய்துள்ளது.
மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு நிதி முறைகேடுகள் அமெரிக்காவில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. சான்றாக இந்தியாவில் இராணுவத்திற்கு வாங்கும் தளவாடங்களுக்கு ஒரு பன்னாட்டு நிறுவனம் தரகு வேலை செய்து தயாரிப்பு நிறுவனத்திடமும், விற்பவரிடமும் கமிஷன் வாங்கினால் குற்றம். 
அதுவே அமெரிக்காவில் சட்டப்பூர்வ தொழிலாக – லாபி – நடக்கிறது. பிறகு தனது தேவைக்கேற்ப தாலிபான்களை கஞ்சா உற்பத்தி செய்ய வைப்பது, ஆயுதங்கள் – நிதி அளிப்பது, பிறகு தடை செய்வது என அமெரிக்கா உலகமெங்கும் செயல்படுகிறது.

தாவுத் இப்ராகிமை தப்ப விட்டது ஏன்?
இவர்களைப் பொறுத்தவரை ஜனநாயகரீதியாக தேர்தல் நடக்கும் ஈரான் சர்வாதிகார நாடு, சர்வாதிகாரியாகவே ஆளப்படும் சவுதி அரேபியா நேச நாடு. 
ஆகவே ஜனநாயகம், நிதி முறைகேடுகள், பயங்கரவாதம் என்பதற்கு அமெரிக்கா சொல்லும் விளக்கம் அதன் வல்லாதிக்க நலனோடு தொடர்புடையவை. 
இப்படித்தான் பாகிஸ்தான் கனானியை அவர்கள்  கைது செய்து வழக்கு போட்டிருக்கிறார்கள். 
இந்த வழக்கில் தாவுத் இப்ராகிம் குறித்தே நாம் பார்க்க இருக்கிறோம். காரணம் இந்தியாவில் காங்கிரசு அரசோ இல்லை பாஜக அரசோ இரண்டுமே பாக்கில் மறைந்திருக்கும் தாவுத் இப்ராகிமை பிடித்துக் கொண்டு வந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதாக ஆறு வாரத்திற்கு ஒரு முறை சபதம் எடுக்கின்றன. அதுவும் சங்கிகளின் பா.ஜ.க-வின் சவுண்டு இன்னும் அதிகம்.
கடந்த ஆண்டு கனானியுடனான தாவூத்தின் தொடர்பு குறித்து அமெரிக்க அரசுத் துறையின் 31-வது சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாடு அறிக்கையில், பண மோசடி மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் குறித்துப் பேசும் இரண்டாம் பாகத்தில் பதிவு செய்யப் பட்டிருந்த தகவல்கள், இந்த ஆண்டு மார்ச் 3 அன்று வெளியிடப்பட்ட 32-வது ஆண்டறிக்கையில் காணப்படவில்லை.
கனானியுடனான தாவூத் இப்ராகிம் தொடர்பு குறித்த தகவல்கள், இந்த ஆண்டு அறிக்கையிலிருந்து  நீக்கப்பட்டிருந்தன. காரணம் இருவருக்குமிடையிலான உறவை நிறுவும் ஆதாரங்களை அமெரிக்க அரசால் இந்தியாவிடமிருந்து வாங்க முடியவில்லை. 
இது குறித்து அதே அறிக்கையில் விளக்கமளித்திருக்கும் அரசுத் துறை, தாவூத் உள்ளிட்ட ஹவாலா நிதி மோசடியாளர்கள் குறித்து தகவல்களும் துப்புகளும் கொடுத்தும், விசாரணைத் தரவுகளை வைத்து அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க இந்திய அரசால் முடியவில்லை என்று கூறியுள்ளது. 
மேலும், இந்தியா சட்டரீதியான உதவிக் கோரிக்கைகளுக்கு பெருமளவில் உதவினாலும் அதற்கு முன் உள்ள “அமைப்புரீதியான சவால்களைச்” சமாளிக்க முடியாமல் திணறுவதாகக் கூறியுள்ளது.
வெறிநாயைக் கொல்வதென்றாலும் விசாரித்துத்தான் கொல்ல வேண்டும் என்ற ‘நீதி’க்கேற்ப அமெரிக்காவிலே எல்லாம் ‘சட்டப்படி’ சரியாக இருக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். தாவுத் இப்ராஹிம் விசயத்தில் இந்தியா சொதப்பியதால் அது ஏன் என்ன என்று சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் அந்த அறிக்கை, இந்தியாவில் ஹவாலா பணத்தைக் கட்டுப்படுத்துவது, குறித்தும் முறைகேடான பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து உறுதியான சட்டங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளது.  
சமீபத்தில் மோடியால் மக்களின் தலையில் இடியாய் இறக்கப்பட்ட பணமதிப்பு நீக்க அறிவிப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது, இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கோ,  ஹவாலா பண மோசடிகளைத் தடுப்பதற்கோ துளியும் உதவாது என்பதையும், முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் கல்வி நிலையங்கள், ட்ரஸ்டுகள், ரியல் எஸ்டேட், கட்சிநிதி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலேயே இந்தியாவில் நடக்கின்றன என்று தெரிவிக்கிறது. 
அதோடு இத்தகைய முறைகேடான பணப் பறிமாற்றங்களை முடக்க எவ்வித நடவடிக்கைகளும் அரசு சார்பில் எடுக்கப்படுவதில்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறது இந்த அறிக்கை.

கருப்புப் பணத்தை பணமதிப்பழிப்பின் மூலம் சாதிப்பேன் என சவடால் அடிக்கும் மோடி.
ஆக மொத்தம் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினரால் ஆண்டவனாக தொழப்படும் அமெரிக்க அரசே மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை காறித் துப்பிவிட்டது.
ஊழலை ஒழித்து, கருப்புப்பண பேர்வழிகளையும், ஹவாலா பேர்வழிகளையும் அடியோடு ஒழித்துக்கட்டுவதே தமது இலட்சியம் எனக் கூறி ஆட்சியைப் பிடித்தவர் மோடி. 
வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்க ணக்கிலும் 15,00,000 ரூபாயை போடுவேன் எனச் சவடால் அடித்தவர் மோடி. 
அப்படிப்பட்ட ’ஹவாலாப் பண எதிர்ப்புப் போராளி’யான மோடியே திணறும் அளவிற்கு ‘அமைப்புரீதியான சவால்கள்’ அப்படி என்ன தான் வந்துவிட்டன ?
ஆட்சியில் அமர்ந்ததும், எல்லா நாடுகளையும் ஒரு முறையாவது சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்த மோடியை, கருப்புப்பணத்தை எப்போது பிடித்துக் கொண்டு வருவீர்கள் என்று மக்கள் கேட்டவண்ணமிருந்தனர். 
அச்சமயத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்ட கருப்புப்பண இந்தியர்களின் பட்டியல் மக்கள் மத்தியில், “கைப்புள்ள கைல அருவாளோட கெளம்பிட்டான் ..
 இன்னைக்கு எத்தனை தலை உருளப் போகிறதோ..”  என்று ஒரு ஆவலை ஏற்படுத்தியது.
பெயர்ப்பட்டியலில் உள்ள கருப்புப் பண முதலைகளிடம் இரகசியமாக விசாரணை நடத்தி அபராதம் மட்டும் வசூலிக்கப்படும் என்றும், அவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியாது என்றும் உச்சநீதிமன்றத்திலேயே அறிவித்து மக்களுக்கு கரியைப் பூசினார் மோடி. 
“அப்போ அந்த 15 இலட்ச ரூபாய் பணம் ?” என்று கேட்ட மக்களிடம் அது தேர்தலுக்காக எடுத்து விட்ட உதார் என்று வெளிப்படையாக பேசினர் பாஜக தலைவர்கள்.

பனாமா லீக்ஸ் அம்பலப்படுத்திய கருப்புப்பண நாயகர்கள் – ஹரீஸ் சால்வே, டாஃபே நிறுவன உரிமையாளர் மல்லிகா சீனிவாசன், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன்
அடுத்ததாக பனாமா நாட்டு வங்கிகளில் கருப்புப்பணத்தைப் பதுக்கிய இந்தியர்களின் பட்டியல், இணைய ஹேக்கர்களால் வெளியானது. அமிதாப் பச்சன், ஐஸ்வரியாராய், ஹரிஷ் சால்வே, டாஃபே குழுமத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதானி குழுமத்தின் வினோத் அதானி என ஒரு பெரும் பட்டியலே வெளியானது. 
இவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் வராமல் பெயரளவிலான விசாரணையோடு ஊற்றி மூடியது மோடி அரசு.
இது தான் ஹவாலா மூலம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மோடி பிடித்துக் கொண்டு வந்த இலட்சணம். அன்புநாதனின் ஆம்புலன்ஸ் விவகாரமும், போயஸ்தோட்டத்தின் கண்டெய்னர் விவகாரமும் தான் மோடியின் உள்நாட்டு ஹவாலாப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் இலட்சணங்கள்.
அடுத்து மும்பை குண்டுவெடிப்பு தொடங்கி இந்தியாவின் வர்த்தக தலைநகரத்தை கட்டுப்படுத்துகிறார், பாலிவுட் திரையுலகத்தை ஆட்டிப் படைக்கிறார், இந்தியாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு உதவுகிறார், பாக்கின் ஐ.எஸ்.ஐ-தான் அவரை மறைத்து வைத்திருக்கிறது என்று தாவுத் இப்ராஹிம் குறித்து இங்கே ஊடகங்களும், இந்துத்துவா அமைப்பினரும் அடிக்கடி உச்சரிப்பார்கள். 
எனில் தேசபக்தியை ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்திருக்கும் மோடி அரசு உடனே தேவையான தரவுகளை வழங்கி அமெரிக்கா மூலம் தாவுத் மீதும், பாக் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
ஒருவேளை தாவுத் பிடிபட்டால் அதனால் பாதிக்கப்படும் பிரிவினரில் பாஜக முதலாளிகளும் உண்டோ? இல்லையென்றால் அமெரிக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். 
ஒரு இனோவா கார் மூலம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றிய சூப்பர் மேன் மோடிக்கு, இத்துப்போன அரசு அலுவலக கோப்புக்களை கூட அமெரிக்காவிற்கு அனுப்ப முடியவில்லையா?
கருப்புப்பணத்தை ஒழிக்கப் போவதாகவும், வரி மோசடியை கழுத்தைப் பிடித்து ஒடுக்கப் போவதாகவும் மோடி விட்ட அத்தனை சவடால்களும் வெறும் வாயால் சுட்ட வடை தான் என்று ஏற்கனவே அம்பலமாகியிருக்கிறது.  தற்போது அதனையே சர்வதேச அளவில் சுட்டிக் காட்டி அம்பலப் படுத்தியிருக்கிறது அமெரிக்காவின் சமீபத்திய  அறிக்கை.
                                                                                                                                                   -நந்தன்
செய்தி ஆதாரம்:
  • US Money Laundering Report Drops Dawood Reference, Hits India for Ignoring ‘Investigative Leads
  • நன்றி:வினவு 

சனி, 25 பிப்ரவரி, 2017

அந்தர்பல்டி வைகோ


🔉
"தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் உருவாக்கி வளர்த்த தன்மான இயக்கத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுகிறேன்" என மேடைக்கு மேடை மார்தட்டிக் கொள்ளும் வைகோ ஒவ்வொருமுறையும் மாற்றிமாற்றிப் பேசி அரசியல் களத்தில் அடித்த அந்தர் பல்டிகள் கொஞ்சநஞ்சமல்ல... சாம்பிளுக்குக் கொஞ்சம் இங்கே...
🔉 எந்த ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்து நடைபயணம் போனாரோ, அதே ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தபோது ஆரம்பித்ததுதான் வைகோவின் இந்த 'டமால் டுமீல்' அரசியல் விளையாட்டு.
*🔉பா.ஜ.க ஆட்சியில் கூட்டணி தர்மமெனக் கூறி 'பொடா'சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வைகோவுக்கே 'பொடா' சட்டம் பூமராங்காகப் பாய்ந்தது.
🔉 "காலம் எங்களைக் காயப்படுத்தியது. அதே காலம், எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது. என்னைப் பார்க்க அன்பு மேலோங்க 'தலைவர்' கலைஞர் வந்ததால் என் மனச்சுமை நீங்கியது. இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது" எனக்கூறி கருணாநிதிக்கே புல்லரிக்க வைத்த வைகோ அடுத்த சில வருடங்களில் தி.மு.க.வுக்கு எதிராகவே திரும்பினார்.
🔉 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு பிரிப்பதில் தி.மு.க உடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, 'பொடா' சட்டத்தில் உள்ளேதள்ளிய, ஒருகாலத்தில் "Unlawful prevention activities -ன் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் ம.தி.மு.க விடம் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ நன்மை பயக்கும் எந்தத் திட்டங்களும் இல்லையென்பதால் அந்தக் கட்சியைத் தடை செய்யவேண்டும்" எனக்கூறிய 'அன்புச்சகோதரி' ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தார். அதற்கு என்ன தர்மக்கணக்கு வைத்திருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
🔉 2011 தேர்தலின்போது அதே 'அன்புச் சகோதரி' ஜெ. தான் விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தரமறுக்க, தன்மானம் தலை தூக்க, "கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவி பெறவேண்டிய அவசியம் ம.தி.மு.க வுக்கு இல்லை" என துண்டை மடித்துத் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார்.

🔉 தி.மு.க ஐநூறு கோடி பேரம் பேசியதாக எழுப்பிய குற்றச்சாட்டை எப்போதும் வாபஸ் பெறமாட்டேன் என வாக்குமாறாமைக்கு வாய்ச்சொல்லால் முட்டுக்கொடுத்த வைகோ, கருணாநிதியின் சாதியைப் பேட்டியில் குறிப்பிட்டுப் பிறகு சுதாரித்து, "தாயுள்ளம் கொண்டு அண்ணன் கருணாநிதி மன்னிக்க வேண்டும்" என அறிக்கை விட்டார்.
🔉 "இது மாற்றத்திற்கான கூட்டணி; தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் கூட்டணி" என அதார் உதார் ரவுசு விட்டு, கோவில்பட்டி தொகுதியில் மனுத்தாக்கல் செய்வது திடீரென அதையும் வாபஸ் வாங்குவது என மாத்தி மாத்தி மங்காத்தா விளையாடி, கூட்டணிக் கட்சிகளுக்கே கிலி கொடுத்தார். கூடச் சேர்ந்த பாவத்துக்குக் கூட்டணி சகாக்களுக்கும் வாக்கிங் போவதும், வாலிபால் விளையாடுவதுமாக விளையாட்டுக் காட்டி முட்டுச் சந்தில் போய் மடாரென மோதவிட்டார்.
🔉 "தேர்தலில் தி.மு.க வீழ்ந்ததே எனது ராஜதந்திரத்தால்தான்" என சொன்னதும் நண்டு சிண்டெல்லாம் கமுக்கமாகச் சிரித்தபடி கலாய்க்க, 'அண்ணனுக்கு என்ன ஆச்சு..?' எனச் சொந்தக் கட்சிக்காரர்களே கேட்கப் போய் கொஞ்சம் அரண்டுதான் போனார்.
🔉விவசாயிகளின் பிரச்னைகள் தீரும்வரை பச்சைத் தலைப்பாகையை அவிழ்க்க மாட்டேன் என உருக்கமாகச் சத்தியம் செய்த இவர் அப்படியே அப்பீட்டாகி கொஞ்சநாளில் தலைப்பாகை இல்லாமல் திரும்பி வந்தார். தலைப்பாகையைக் காணோம்!
🔉 ‘கேப்டன்தான் தமிழக முதல்வராக வேண்டும்’ என்றவர், ‘விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று சொன்னது தப்புதான்’ என்று தாறுமாறாய்த் தண்டால் எடுத்தார்.
🔉 அதுவும் போதாதென்று, அப்போலோவில் அம்மாவைப் பாரக்கப் போன கேப்பில் 'லண்டன் டாக்டர் எனக்கு விசிட்டிங் கார்டு கொடுத்தார்..' எனச் சின்னப்புள்ளைத்தனமாக பெருமைபேசியும், காவிரி மருத்துவமனையில் ரவுண்டு கட்டப்பட்டும் சென்றவருடக் கடைசியில் ரொம்பவே கலங்கிப் போனார். 'எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரே..'ன்னு மக்கள் பரிதாபமாகப் பார்க்க, 'என்னம்மா அங்க சத்தம்..?' எனக் கேட்டபடி நைஸாக எஸ்ஸாக ம.ந.கூ. இப்போது மல்லாக்கக் கிடக்கிறது.
🔉அப்புறம் அய்யனார் போல அரிவாளைத் தூக்கிக்கொண்டு சீமைக்கருவேல மரங்களை வெட்டிச் சாய்க்கக் கிளம்பியவரை 'கொஞ்சநாளாவது பஞ்சாயத்து நிம்மதியா இருக்கலாம்...' என மொத்தத் தமிழக மக்களும் சேர்ந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
🔉 'எம்.ஜி.ஆர், அண்ணாவின் படத்தைக் கொடியில் போடவில்லை என்றால் அண்ணா படமே உலகிற்குத் தெரிந்திருக்காது' என இப்போது எடக்குமடக்காகப் பேசி எத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். 'அ.தி.மு.க வை யாரும் அழிக்க விடமாட்டேன்..!' என வீராவேசமாக முழங்கிய தலைவரைப் பார்த்து, 'சொந்தக் கட்சி சிரிப்பாய்ச் சிரிக்கிது... அங்க அத்த அரிசிவாங்கக் காசில்லாம அல்லாடயிலே ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூபாயா..?' என மக்களே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்கள்.
🔉 மைக்கைக் கிட்டே கொண்டுபோனாலே எக்குத்தப்பா எதையாவது பேசி, கடைசியில் கட்சியையே நட்டாற்றில் இறக்கிவிட்டு அப்போவும் 'எல்லாம் என் ராசதந்திரம்லே..!'ன்னு சொல்லுவாரோ என்னவோ..?

வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஜெயா தொலைக்காட்சி உரிமையாளர் ?

செப்டம்பர் 27, 2014 தமிழகத்தின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாததோர் நாள். 

அன்றுதான், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, வி.என். சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரையும் ஊழல் வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹா சிறைக்கு அனுப்பினார். 
நால்வருக்கும் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1991 - 1996 ம் ஆண்டில் ஜெ முதலமைச்சராக இருந்த போது 66.65 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த வழக்கில் விதிக்கப் பட்ட தண்டனை இது. 
செப்டம்பர் 27 ல் சிறைக்கு அனுப்பபட்ட நால்வரும், அக்டோபர் 17 ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடுத்து, 18 ம் தேதி விடுதலையாகி சென்னை வந்தனர். 
நால்வரும் 22 நாட்கள் சிறையிலிருந்த இந்த காலகட்டத்தில் நடந்த முக்கியமானதோர் நிகழ்வுதான் தற்போது வெளியில் வந்திருக்கிறது. அதுதான் ஜெயா டிவியை சசிகலா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
அதாவது இந்த 22 நாட்களில் ஜெயா டிவி யின் 75 சதவிகித பங்குகள் சசிகலா பெயருக்கு மாறியிருக்கின்றன. 
கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தில் Ministry of Corporate Affairs இது சம்மந்தமாக தாக்கல் செய்யப் பட்டிருக்கும் தஸ்தாவேஜீகள் அல்லது ஆவணங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன. செப்டம்பர் 27 ம் தேதி நால்வரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 1 ம் தேதி மாவிஸ் சாட்காம் Mavis Satcom என்ற கம்பெனி தன்னுடைய பங்கு பரிவர்த்தனையில் பெரியதோர் மாற்றத்துக்கு அங்கீகாரம் கோரியும், அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும் நோட்டீஸ் வெளியிட்டது. (For a Board Resolution to approve transfer of shares). 
மாவிஸ் சாட்காம்தான் ஜெயா டிவி யை நடத்திக் கொண்டிருக்கிறது. 
அக்டோபர் 10 ம் தேதி 6,59,200 பங்குகள், அதாவது மாவிஸ் சாட்காம் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 75.8 சதவிகித பங்குகள், வெங்கடேஷ் மற்றும் மருதப்ப பழனிவேலு என்ற இரண்டு இயக்குநர்களிடமிருந்து சசிகலாவுக்கு மாற்றப்பட்ட (transfer) முடிவுக்கு இந்த நிறுவனத்தின் Board அங்கீகாரம் கொடுக்கிறது. 
அக்டோபர் 10 ம் தேதி நடைபெற்ற Board Meeting ன் நடவடிக்கைகள் அதாவது Minutes பற்றி இதனது மேனேஜிங் டைரக்டர் பிரபா சிவகுமார் கையெழுத்திட்ட குறிப்பு இவ்வாறு கூறுகிறது: 'நிறுவனத்தின் தலைவர் Board க்கு கொடுத்திருக்கும் தகவலில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் தங்களது பங்குகளை மாற்றிக் கொடுக்கும், மனுக்களை Form நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். 
இந்த மனுக்களை தீர ஆராய்ந்த Board இந்த பங்குகளை மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதென்று முடிவு செய்கிறது. The Board after due deliberation passed the following resolution: Resolved that the approval be and hereby given to the undernoted transfers'. இதன்படி ஜெயா டிவி 1999 ல் ஆரம்பிக்கப் பட்ட காலத்திலிருந்து இயக்குநராக இருந்த வெங்கடேஷ் 2,19, 400 பங்குகளையும், 2006 ல் இயக்குநராக சேர்ந்த பழனிவேலு 4,39,900 பங்குகளையும் சசிகலாவுக்கு மாற்றிக் கொடுத்து விட்டார்கள். 
இதன்மூலம் நிறுவனத்தில் சசிகலாவின் பங்குகள் 7.01, 260 ஆக உயர்ந்து விட்டது. இது கிட்டதட்ட மொத்த பங்குகளில் 80.76 சத விகிதமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த பங்கு பரிவர்த்தனையின் மொத்த ரூபாய் மதிப்பு என்னவென்று குறிப்பிடப் படவில்லை. 
இதில் சுவாரஸ்யமான மற்றோர் விஷயம் செப்டம்பர் 2013 வரையில் இந்த நிறுவனத்தில் சசிகலாவுக்கு எந்த பங்குகளும் இல்லை. ஆனால் 2013 - 14 கால கட்டத்தில் அப்போது இயக்குநர்களாக இருந்த மூவரிடமிருந்து 42, 860 பங்குகளை சசிகலா வாங்கியிருக்கிறார். 
இதில் முக்கியமான விஷயம் சிறையில் இருந்த காலகட்டத்தில் ஒருவரது பெயரில் இதுபோன்று ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதுவும் 75 சத விகித பங்குகளை மாற்ற முடியுமா என்பதுதான். இதில் சட்டப்படி தவறு இல்லையென்று கம்பெனி விவகாரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை நன்கறிந்தவர்கள் சிலர் கூறுகின்றனர்.
 'சிறையில் இருக்கும் ஒரு நபர் ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக ஆக முடியாதென்று கம்பெனிகள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் எந்த சட்டப் பிரிவும் தெளிவாக எதனையும் குறிப்பிடவில்லை. ஆகவே சசிகலா சிறையில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு மாற்றிக் கொடுக்கப் பட்ட பங்குகள் விவகாரத்தில் சட்ட முறைகேடுகள் ஏதும் நடந்தது என்று நாம் சொல்லி விட முடியாது,' என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கம்பெணி விவகாரங்கள் மற்றும் ஷேர் மார்கெட் பற்றி நன்கறிந்த முதலீட்டு ஆலோசகர் ஒருவர். 
மற்றோர் பங்கு முதலீட்டு ஆலோசகர் சொல்லுவது சற்று வித்தியாசமாக இருக்கிறது. 'இதுபோன்ற பங்கு பரிவர்த்தனைகளில் குறிப்பிட்ட ஆவணங்களில் பங்குகளை விற்பவர்களும், வாங்குபவர்களும், (அதாவது யார் பெயரில் பங்குகள் மாற்றப் படுகிறதோ அவர்களும்) கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவிஸ் சாட்காம், பங்குகள் மாற்றப் படுவதற்கான transfer Board ன் தீர்மானத்துக்கான நோட்டீஸை அக்டோபர் 1 ம் தேதிதான் கொடுக்கிறது. 
இதற்கு அங்கீகாரம் கொடுத்த அறிவிப்பு அக்டோபர் 10 ம் தேதி இயக்குநர் பிரபா சிவகுமார் கொடுத்த அறிக்கையில் இருக்கிறது. 
அப்படியென்றால் தன் பெயரில் பங்குகள் மாற்றப் பட்டதற்கான ஆவணங்களில் ச சிகலா எப்போது கையெழுத்துப் போட்டார்? 
அவர் செப்டம்பர் 27 ம் தேதிக்கு முன்பே கூட கையெழுத்து போட்டிருக்கலாம். நமக்குத் தெரியாது. அந்த உண்மை தெரியாமல் நாம் எதுவும் சொல்ல முடியாது'. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், 2013 வரையில் மாவிஸ் சாட்காமில் எந்த பங்குகளையும் வைத்துக் கொண்டிராத சசிகலா 2014 அக்டோபரில் திடீரென்று 80 சதவிகித பங்குகளுக்கு எப்படி அதிபதியானார் என்பதுதான். 
சட்டப்படி சசிகலா செய்ததில் எந்த தவறும் இல்லை என்பது உண்மையாகவே இருக்க கூடும்தான். ஆனால் அஇஅதிமுக வின் ஊதுகுழலாகவும், பிரச்சார பீரங்கியாகவும் இருக்கும் ஜெயா டிவி எப்படி நன்கு திட்டமிட்ட முறையில் சசிகலா வின் கட்டுப்பாட்டுக்குள போனது என்பதுதான் முக்கியமான விஷயம். 
அதுவும் ஜெயலலிதாவும், சசிகலா வும் சிறையில் இருந்த காலகட்டத்தில் இந்த முக்கியமான சம்பவம் நடந்தேறியிருப்பதுதான் கவனிக்கத்தக்கது. 
                                           
                                                                                              - ஆர்.மணி

சனி, 10 டிசம்பர், 2016

அயோக்கிய சிகாமணிகள்!



500,1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார் மோடி.அதற்காக 6 மாதங்கள் திட்டமிட்டதாகவும்.அதை மிகப்பிரம ரகசியமாக வைத்திருந்ததாகவும் மோடி,ராஜ்நாத் சிங் போன்றவர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டார்கள்.
ஆனால் நாட்டில் நடப்பதைப்பார்த்தால் அவர்கள் ரகசியம் என்ன லட்சணம் என்பதும்,அவர்கள் அப்பாவி மக்களிடம் மட்டும்தான் அதை ரகசியமாக வைத்து சொந்தப பணத்தை எடுத்து செலவிடவே முடியாதபடி ஆப்பு வைத்திருப்பது தெரிகிறது.
பாஜகவினர் இந்தியா முழுக்க ஆடிய திரு விளையாட்டல் இதோ:-
 8ந்தேதி ரூ.500, ரூ.1000 பண மதிப்பு நீக்கம் என்ற அறிவிப்பு வெளியாகி சரியாக ஒரு மாதகாலம் ஆகியுள்ளது. நாடே ஏடிஎம் முன் நிற்கிறது.

 ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களும், அவற்றின் பிரமுகர்களும் தான் இந்த ஒரு மாதத்திலும் அதற்கு முன்பும் தங்களிடமிருந்த கறுப்புப் பணத்தை பல்வேறு வழிகளை கையாண்டு வெள்ளையாக மாற்றியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

பீகார்

கடந்த நவம்பர் 25ம்தேதி பீகார் மாநில பாஜகவின் சார்பாக நிலம் வாங்கப்பட்டது குறித்த சர்ச்சை எழுந்தது. அம்மாநில பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுசில் மோடி, பாஜக வாங்கியுள்ள நிலம் குறித்த சர்ச்சை தேவையற்றது என்றும், நாங்கள் கடன் பெற்று நிலங்களை வாங்கியுள்ளோம் என்றும் கூறியிருந்தார். 

ஆனால் அடுத்த நாள் (நவம்பர் 26) முழு விவரமும் வெளிவந்தது. சுசில் மோடி சொன்ன கூற்றுகள் அனைத்தும் பொய் என்பது அம்பலமானது. பிரதமர் நரேந்திர மோடியின் நவம்பர் 8ந்தேதி அறிவிப்புக்கு முன்னரே ரூ.2 கோடிக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனையாக பாஜக நிலம் வாங்கியதாக பீகார் மாநில வருவாய்த்துறையிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. 
அதன்படி பீகார் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ரூ.2.07 கோடிக்கு 5 இடங்களில் நிலங்களை பாஜக வாங்கியுள்ளது.

இந்நிலங்களை வாங்குவதற்காக அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கையொப்பமிட்டு அனுப்பப்பட்ட ஒப்புதல் கடித நகலும் ஆதாரமாக வெளிவந்துள்ளது. 
• பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திகா சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவருமான சஞ்சீவ் சார்ஜிஸ்ஷா, மாநில துணைத் தலைவர் லால் பாபு பிரசாத், மாநில பொருளாளர் திலீப் ஜெய்ஸ்வால் ஆகியோரது பெயர்களில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.

பாஜகவின் மேற்குவங்க மாநில கிளையின் சார்பாக நவம்பர் 1 முதல் 8ம்தேதிக்குள் ரூ.3 கோடி ரூபாய் பாஜகவின் வங்கி சேமிப்பு கணக்கில் க/கு எண் (554510034) இந்தியன் வங்கி மத்திய கொல்கத்தா கிளையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் சஞ்சீவ் காம்போஜ் நவம்பர் 6 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு 2 நாட்கள் முன்பாகவே இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய ரூ.2000 கரன்சி நோட்டுகளோடு தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

ரிசர்வ் வங்கி வெளியிடுவதற்கு முன்பாக பாஜகவின் மூத்த தலைவருக்கு புதிய ரூ.2000 நோட்டு எப்படி கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்தது.

கர்நாடகா

நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகள் இல்லாமல் மக்கள் தவித்து கொண்டிருக்கையில் பாஜகவின் கர்நாடக மாநில தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி 650 கோடி செலவில் திருமணத்தை நடத்தினார். 
பாஜகவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் தலைவர்கள் சப்தமில்லாமல் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை புரோக்கர்களை வைத்து மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தின.

தமிழ்நாடு

கடந்த நவ. 26ஆம் தேதி தமிழகத்தில் சேலத்தை அடுத்துள்ள அஸ்தம்பட்டியில் காவல்துறை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.20.55 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் நோட்டுக்கள் (கணக்கில் வராத பணம்) பிடிபட்டது. 

பிடிபட்டவர் சேலம் மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்டச் செயலாளர் ஜே.வி.ஆர். அருண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் மீதான மக்களின் விமர்சனத்திற்கு தனது முகநூல் பக்கத்தில் மிக கடுமையான பதில் பதிவை வெளியிட்டவர்.

. ‘தேசத்தைக் காப்பாற்ற 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கடா’ என்று மக்களை வசைபாடிய தேசபக்தர் இவர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அக்டோபர் மாதத்தில் ரூ.2 கோடி பெறுமான நிலங்களை பாஜக வாங்கியுள்ளது. இந்த நிலங்கள் கட்சியின் அலுவலக செயல்பாட்டுக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் அம்மாநிலத்தில் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளுக்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2 கோடிக்கு திடீரென நிலங்களை வாங்கி குவித்திருப்பது ஏன் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

ஒடிசா

ஒடிசா மாநிலத்தில் எப்போதுமில்லாத வகையில் கடந்த ஐந்து மாத காலத்திற்குள் 18 மாவட்டங்களில் பாஜகவின் மாவட்ட அலுவலக செயல்பாட்டிற்காக ரொக்கப் பரிவர்த்தனையின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆ.எஸ்.சுர்ஜேவாலா அம்பலப்படுத்தியுள்ளார். 
பாஜக தலைமையிடம் இருந்த கறுப்புப் பணம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
அதன்படி பாஜகவின் பொறுப்பாளர் சுரேந்திர நாத் லத் என்பவரது பெயரில் கேந்திர பாரா மாவட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வாங்கப்பட்டுள்ளது. 
கடந்த செப்டம்பர் மாதத்தில் சுரேந்திர நாத் லத் 0.23 ஏக்கர் ஜகத் சிங்பூரில் ரூ.8.25 லட்சத்திற்கும் நிலம் வாங்கியுள்ளார். அக்டோபர் மாதத்தில் பெர்ஹாம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே 10,000 சதுர அடியிலான நிலம் ரூ.20 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளது.

உ.பி., 
ஹரியானா

உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்திலும் பாஜக நிலங்களை வாங்கி குவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக மத்திய அமைச்சர் 300 ஏக்கர் நிலங்களை ரொக்கப் பரிவர்த்தனையின் மூலம் வாங்கி, கறுப்புப் பணங்களை வெள்ளையாக மாற்றியுள்ளார்.
கேரள மாநிலத்தில் , மக்கள் ஊழல் தொடர்பான் புகார்களை தெரிவிக்க புதிதாக இரண்டு அலைபேசி  செயலிகளை கேரள அரசு உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 
சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர்  பினராய் விஜயன் , ’அரைசிங்கேரளா’ மற்றும் ’விசில் நவ்’ என்ற இரண்டு மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தினார். 
பின்னர் இது குறித்து அவர் , "இந்தஇரு  செயலிகளை கொண்டு மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் ஊழல் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் . இவை இரண்டும் கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் வடிவமைத்துள்ளனர்.ஊழல் தொடர்பான தகவல்களை கொடுப்பவர்களுக்கும் , குற்றவாளிகளை பிடிக்க உதவுபவர்களுக்கும் விசில்ப்ளோவர் விருது வழங்கப்படும் "என அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக(கொடி)?


லஞ்சம் வாங்கிய மோடி?

பாஜக அரசின்  பிரதமர் என்ற முறையில், ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் மிகப்பெரிய எதிரி என்று மோடி மக்கள் மத்தியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு வருகிறார். தான் ஒரு நெருப்பு எனவும் தன்னை ஊழலும் லஞ்சமும் நெருங்க முடியாது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். 
அதையும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஊழல் இல்லாத ஆட்சிதான் தனது மிகப்பெரிய சாதனை எனவும் அவர் சொந்தம் கொண்டாடுகிறார். ஆனால், அவர் குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் பல முறைகேடுகள் நடந்தன. 
அவற்றை சில ஊடகங்கள் 2014க்கு முன்னரே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.
தற்பொழுது மோடியே நேரடியாக லஞ்சம் பெற்றார் எனும் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் பிரதான ஊடகங்கள் அதை வெளியிட மறுக்கின்றன. 
மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது சஹாரா குழுமம் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்திடம் சுமார் 55.2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது என பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றம் சாட்டுகிறார். இதே குற்றச்சாட்டை தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.
எனினும் இதுவரை மோடி இதற்கு பதில் அளிக்கவில்லை. கார்ப்பரேட்டுகளின் பணம் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் பைகளுக்குள் ஆழமாக ஊடுருவும் என்பதை இந்த ஆவணங்கள் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகின்றன.நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரிக்கும் எவரும் ஊழல் செய்யாமல் இருக்க முடியாது. மோடி அரசாங்கமும் இதற்கு விலக்கு அல்ல. 
அரசாங்க அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் அதிகாரத்திற்கு அஞ்சும் ஊடகங்களின் மவுனம் மூலமும் இந்த உண்மைகளை தற்காலிகமாக மூடிமறைக்கலாம். ஆனால் மக்களிடமிருந்து நிரந்தரமாக மறைக்க முடியாது.
ஆதித்யா பிர்லா குழுமத்திடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
2013ம் ஆண்டு நிலக்கரி ஊழல் தொடர்பாக மத்தியபுலனாய்வு துறை ஆதித்யா பிர்லா குழு மத்திற்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்தில் சோதனை நடத்தியது. 
அப்பொழுது ஹிண்டால்கோவின் முதன்மை அதிகாரி சுபேந்து அமிதாப்பின் அலு வலகத்தில் இருந்து ரூ 25 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரது கணினியில் இருந்து பல ரகசியத் தகவல்களும் கைப்பற்றப்பட்டன.
அதில் ஆதித்யா பிர்லாகுழுமம் தமது தொழில் திட்டங்களுக்கு சுற்றுபுற சூழல் தடையில்லா சான்றிதழ் பெற ‘‘ஜெ’’ (J) என்பவருக்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு இருந்தது. (அப் பொழுது இந்த துறைக்கு ஜெயந்தி நட ராஜன் அமைச்சர். ஆனால், ‘‘ஜெ’’ என்பது எவரை குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை.) மேலும் ‘குஜராத் சி.எம். (CM) – 25 கோடி – 12 கொடுக்கப்பட்டது- மீதி 13?’ எனும் ஒரு பதிவும் இருந்தது. இன்னும் ஹவாலா பணம் குறித்தும் பல விவரங்கள் கைப்பற்றப்பட்டன.
 இந்த விவரங்கள் லஞ்சம் – ஊழல் நடந்திருப்பதை தெளிவுபடுத்துகின்றன. எனினும் புலனாய்வுத் துறை இது குறித்து எவ்வித வழக்கையும் பதியவில்லை.
விசாரணையும் நடத்தவில்லை. மாறாகஇந்த விவரங்களை வருமான வரித்துறைக்குஅனுப்பியது. வருமான வரித்துறை ஓரளவு விசாரணையை நடத்தியது. 
சுபேந்து அமிதாப் பலமுறை விசாரிக்கப்பட்டார். குஜராத் சி.எம். எனில் யார் எனும் கேள்விக்கு அவர் குஜராத் அல்கலி கெமிக்கல்ஸ் (Gujarat Alkalis and Chemicals) என்பதையே குறிக்கும் என்று கூறினார்.
 சி.எம். (CM) என்பது எதனை பொருள்படுத்துகிறது எனும் கேள்விக்கு அவரிடம் திருப்திகரமான பதில் இல்லை. சி.எம். (CM) எனில் CHIEF MINISTER என்பதே பொருள் என்பது தெளிவு.
இதற்கு மேல் இந்த விசாரணை நகர வில்லை.வருமான வரித்துறை மேற்கொண்டு விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அல்லது மீண்டும் புலனாய்வுத்துறைக்கு அந்த ஆவணங்கள் மேற்கொண்டு விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். எதுவும் நடைபெறவில்லை. 
பிரச்சனை புதைக்கப்பட்டது. பின்னர் ஆதித்யா பிர்லா குழுமம் வருமான வரித்துறையிடம் இந்த வழக்கை முடித்துவைக்க அணுகியது. அவ்வாறு முடித்துவைக்கப்பட்டால் இந்த ஆவணங்கள் முழுவதும் மீண்டும் ஆதித்யா பிர்லா குழு மத்தின் கைகளுக்கே சென்றுவிடும். இந்த ஊழல் நிரந்தரமாக மறைக்கப்பட்டுவிடும்.
சஹாரா ஆவணங்கள்
சஹாரா ரெய்டுகள் 2014ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி நடைபெற்றது. சஹாரா குழுமத்தின் பல்வேறு அலுவலகங்களிடமிருந்து சுமார் ரூ.137 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கும் கணினியில் இருந்து சில விவரங்கள் கைப்பற்றப்பட்டன. 
அதில் பல அரசியல்வாதிகளுக்கு தரப்பட்ட பணம் பற்றிய பதிவுகள் இருந்தன.
அதில் கீழ்கண்ட பதிவுகள் மோடிக்கு தந்ததாக விவரங்கள் குறிக்கப்பட்டிருந்தன.30.10.2013 – ரூ. 2.5 கோடி; 12.11.2013 – ரூ.5.1 கோடி; 27.11.2013- ரூ.2.5 கோடி; 29.11.2013- ரூ. 5 கோடி; 22.02.2014- ரூ.5கோடி இது மட்டுமல்லாது மோடிக்கு மேலும் சில தேதிகளில் பணம் தரப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.40 கோடி ரூபாய் மோடிக்கு தரப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. 

தேதி வாரியாக இந்த பதிவுகள் உள்ளன. மேலும் இந்த தொகைகள் முழுதும் அகமதாபாத்தில் வைத்து தரப்பட்டுள்ளன. 
இந்த தொகை ஜெய்ஸ்வால் எனும் ஒரு நபர் மூலமாக தரப்பட்டது எனவும் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சஹாரா குழுமம் மோடிக்கு மட்டுமல்ல; பா.ஜ.க. முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான்(மத்தியப் பிரதேசம்)- ரூ.10 கோடி, ராமன் சிங்(சத்தீஸ்கர்)- ரூ 4 கோடி மற்றும் காங்கிரசின் ஷீலா தீட்சித்திற்கு ரூ 1 கோடி எனவும் பணம் தரப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் பாஜக பொருளாளர் ஷைனாவுக்கும் ரூ.3கோடிக்கும் அதிகமாக தரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை துணை இயக்குநர் அங்கிதா பாண்டே எனும் பெண் அதிகாரி கையெழுத்திட்டுள்ளார். அதனை உறுதி செய்து இரண்டு சாட்சிகள் மட்டுமல்லாது சஹாரா அதிகாரிகளும் கையெழுத்து இட்டுள்ளனர். 
இந்த ஆவணங்களில் உள்ளது அங்கிதா பாண்டேவின் கையெழுத்துதானா என்பதை உறுதி செய்யுமாறு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடிதம் எழுதினார்.
அங்கிதா பாண்டேவின் இரு வேறு கையெழுத்துக்களை ஒப்பிட்டு சஹாரா ஆவணங்களில் இருப்பது அங்கிதா பாண்டேவின் கையெழுத்துதான் என்பதை தில்லி அரசாங்கம் தடவியல் ஆய்விக்கு பிறகு உறுதி செய்தது.இதுகுறித்து எக்னாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லியின் ஆசிரியர் பரஞ்ஜய் குஹா இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதியன்று அங்கிதா பாண்டேவுடன் தொலைபேசியில் பேசியபொழுது, தான் நீண்ட விடுப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
மேலும் பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு தனக்கு அனுமதியில்லை எனவும் இந்த ஆவணங்கள் குறித்து ஆம் அல்லது இல்லை என்பதைச் சொல்ல இயலாது எனவும் அங்கிதா பாண்டே கூறினார். மோடியையும் இதர அரசியல்வாதிகளையும் காப்பாற்ற இந்த பெண் அதிகாரி விடுப்பில் அனுப்பப்பட்டார் என்பதை கூறத்தேவை இல்லை.
                                                                                                                         தொகுப்பு : அ.அன்வர் உசேன்
                                                                                                                                    ஆதாரம்: -1) Wire இதழுக்கு பிரஷாந்த் பூஷன் அளித்த பேட்டி.                                                                                                                                                     2) News click.com
குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க மறுக்கும் மோடி
ஆதித்யா பிர்லா மற்றும் சஹாரா குழு மங்களின் மீது நடந்த வருமானவரித் துறையின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் கே.வி.சவுத்ரி எனும் அதிகாரி. இவர்தான் இந்த விசாரணையை குழி தோண்டிப் புதைக்க முயன்றவர் எனும் குற்றச்சாட்டு உள்ளது. இவர் அரசுத்துறைகளின் ஊழல்களை விசாரிக்கும் மத்திய கண்காணிப்பு குழு (Central Vigilance Commission) எனும் அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
மோடி மற்றும் ஏனையோர் மீது உள்ள லஞ்ச குற்றச்சாட்டுகளை மறைத்த திருப்பணிக்கு பரிசாகவே இந்தப் பதவி தரப்பட்டது என்பது வெள்ளிடை மலை. ஊழலை மறைத்தவர் ஊழல் ஒழிப்பு அமைப்புக்கு தலைவர். 
என்னே மோடி அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு கடமை! 
இவரின் இந்த நியமனத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கூடுதல் ஆதாரம் கேட்கும் நீதிமன்றம்
இந்த லஞ்ச விவகாரம் குறித்து மத்திய கண்காணிப்பு குழு, அமலாக்கப் பிரிவு, வருமானவரித் துறை, கறுப்புப் பணம் குறித்த சிறப்பு புலனாய்வு குழு, மத்திய புலனாய்வு குழு ஆகிய அமைப்புகளுக்கு ஆதாரங்களுடன் பிரஷாந்த் பூஷன் கடிதம் எழுதினார். 
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எக்னாமிக் அன்டு பொலிட்டிகல் வீக்லியும் காரவன் பத்திரிகையும் இந்த ஆவணங்கள் குறித்து மோடி, சவுகான், ராமன்சிங், ஷீலா தீட்சித் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பினர். 
ஆனால் ஆனால் எவருமே பதில் அனுப்பவில்லை. உச்சநீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. கூடுதலான ஆதாரங்கள் கொண்டுவரும்படி நீதிமன்றம் கூறிவிட்டது.
=================================================================================

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...