புதன், 14 ஜூன், 2017

தலை வெட்டி சாமியார்.

பாரத் மாதா கீ ஜே என்று முழங்காதவர்களின் தலையை துண்டிப்பேன் என்று கடந்த 2016-ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாபா ராம்தேவுக்கு எதிராக பிணையில் வெளி வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்தை இந்தியர்கள் அனைவரும் முழங்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். 
அதே கருத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பும் வலியுறுத்தியது.


இந்நிலையில் பாரத தாயை வணங்குவோம் என்ற அர்த்தம் கொண்ட பாரத் மாதா கீ ஜேவை முழங்குவதற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதாவது கடவுளை தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பாபா ராம்தேவ், பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்தை முழங்காதவர்களின் தலையை துண்டிப்பேன் என்று கருத்து தெரிவித்திருந்தார். 


இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து முன்னாள் உள்துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சுபாஷ் பத்ரா ஹரியாணா மாநிலம் ரோத்தக் நீதிமன்றத்தில் பாபா ராம்தேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கானது இன்று கூடுதல் குற்றவியல் தலைமை நீதிபதி ஹரீஷ் கோயல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஆஜராகுமாறு பாபா ராம்தேவுக்கு உத்தரவிட்டும் ஆஜராகவில்லை. 

எனவே அவருக்கு பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இவர் என்ன சாமியாரா, தாதாவா?

இவர் முகத்தைப்பார்த்தாலே ஆன்மிகம் சார்ந்தவர்களுக்கான சாந்தமான குணம் தெரியவில்லையே?
தாடி,முடியை நீக்கினால்  புழலில் தங்கியிருக்கும் எங்களூர் ரவுடி போலவே இருப்பாரா என்றே தெரிகிறது.
இன்றைய உலகில் தனது மனைவி,குழந்தைகளிடம் கூட ஒருவர் தனது கொள்கைகளை,கருத்துக்களை திணித்து அவற்றை கடை பிடிக்க சொல்லும் நிலை இல்லை.அது சென்ற தலை முறையுடன் முடிந்து போனது.
ஆனால் இந்த வியாபார காந்த சாமி சொல்வதை சொல்லாவிட்டால் தலை எடுக்கும் அளவுக்கு அதிகாரம் எப்படி வந்தது?

அதை மேடையிலேயே பகிரங்கமாக சொல்லும் அளவு தைரியம் அதுவும் ஒரு மதம் சார்ந்த துறவி என்று சொல்லிக்கொண்டு பல்லாயிரம் கோடிகளை சட்டவிரோதமாக சம்பாதித்த இந்த மனிதனுக்கு எப்படி வந்தது.

இந்தியா என்ன இவன் அப்பன் வீட்டு சொத்தா?
 வெறும் யோகா சொல்லிக்கொடுத்தே பல்லாயிரம் கோடிகளை இந்த சாமி சம்பாத்தித்தது எப்படி.?மோடியின் வருமானவரித்துறை நோண்டுமா?
கோடிகளில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ள இந்த சாமிக்கு சொந்தமான பதஞ்சலி  நிறுவனத்துக்கு எதற்காக பல கோடி  பெறுமான அரசு நிலங்கள் கைமாற்றப்பட்டன.?
மோடி சொல்வாரா?

விவசாயிகளை சந்திக்கவே நேரமில்லாமல் துன்பப்படும் பிரதமர் மோடி தரமற்ற மருந்து பொருட்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ,அரசு புறம்போக்கில் கட்டப்பட்ட பதஞ்சலி தொழிற்சாலையை திறந்துவைக்க தனி விமானத்தில் வந்தார் .அதற்கு நேரம் கிடைத்தது எப்படி?

அதற்கு தமிழக விவசாயிகள் ஆர்.எஸ்.எஸில் சேர்ந்தால் பிரதமர் மோடிக்கு  போதுமா?
என்னவோ இந்த வழக்கில் சாமியார் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.இவன் சாமியார் என்றோ,பிரதமர் மோடிக்கு சகா என்றோ நீதிபதி விதிவிலக்கு தரக்கூடாது.

அப்படி கொடுத்தால் இந்த சாமியார் நாளை உண்மையிலேயே யார் தலையையாவது வெட்டி விடுவான்.

================================================================================

தமிமுன் அன்சாரி விவகாரம் 

ரம்ஜான் நோன்பு இருக்கும் தூய மனதோடு கூறுகிறேன்,நான் கூவத்தூர் முகாமுக்கு போகவில்லை என்பது நாடறிந்த செய்தியாகும். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் செங்கோட்டையன் எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது நாகரிகமான முறையில் ஆட்சிக்கான ஆதரவை மட்டும் கேட்டார்.


உங்களின் தொகுதி மற்றும் சமுதாய கோரிக்கைகளையும் தாருங்கள் என்றார் நாங்களும் கொடுத்தோம். 

உங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றியாக எதிர்காலத்தில் எங்கள் கட்சிக்கு வாரியப் பதவிகளை தாருங்கள் என்று சொல்லி அனுப்பினோம். 
அப்போது மஜக தலைவர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

சரவணன் எம்எல்ஏவின் குற்றச்சாட்டை 100 சதவீதம் மறுக்கிறோம். நிராகரிக்கிறோம். 


பண பேரத்தில் நாங்கள் ஈடுபடவில்லை அரசியலில் நேர்மையை கடைபிடிக்கிறோம். இறைவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன் நாங்கள் நேர்மையானவர்கள். வாளை எடுத்து எங்கள் இதயத்தை பிளந்து காட்ட முடியாது.

அரசியலில் நேர்மையை கடைபிடித்த காமராஜர், கக்கன் வழியை பின்பற்றியே எங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த 2 தினங்களாகவே பணம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. 


என் மீதான இந்த அபாண்ட குற்றச்சாட்டு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் அரசியலுக்கு வந்தோம், நமக்கு இதுவெல்லாம் தேவையா என்பது போன்ற மனநிலை உருவாகியிருக்கிறது. எங்கள் கட்சிக்கு வாரியத் தலைவர் பதவி கேட்டது மட்டும்தான் உண்மை என்றும் தமிமுன் அன்சாரி உருகியுள்ளார்.

ரமலான் நோன்பு இருந்தால் மட்டும் ஒருவர் உத்தம புத்திரனாகி விட  முடியுமா,குற்றமே செய்யா மனித்தப் புனிதராகி விடலாமா .
அல்கொய்தா ,ஐ.எஸ்.தீவிரவாதிகள் கூட ஐந்து வேளைதொழுகிறார்கள்.நோன்புகள் இருக்கிறார்கள்.

ஆனால்  தங்கள் தீவிரவாத தாக்குதலில் மனித உயிர்களை போக்கடிக்காமல் இருக்கிறார்களா?கக்கன்,காமராஜர் பெயரை எல்லாம் சொல்லி அவர்களை தரம் தாழ்த்தவேண்டாம். யாருக்கு ஆதரவு என்று மக்களிடம் கருத்து கேட்ட விதமே பெரும் நாடகம்.

நீங்கள் தொலைபேசி வந்தவுடன் பெட்டியை கடாசி விட்டு  தலை மறைவாகி விட்டு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் நீங்கள்.தேர்தல் நேரம் உங்களுக்கு கிடைத்த வேட்பாளர் மற்றும் இன்ன பிற பலன்களுக்காக மனித நேய மக்கள் கட்சியையே உடைத்து வெளிவந்து ஜெயலலிதா ஆசியுடன் வென்ற மக்கள் தொண்டன் நீங்கள்.

ஊழல் உறுதியாகி உள்ளே சென்ற ஜெயலலிதா குமாரசாமி கணக்கினால் வெளியே வந்த வுடன் சுத்த தங்கமாக புனிதவாதியாக வருவதாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து பா பாடிய உங்களுக்கு ஊழல் என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கலாம்.

"நான் பணத்துக்காக அரசியல் செய்யவில்லை என்ற நீங்கள்தான் வாரியத்தலைவர் பதவியை கேட்டேன்" என்று வாக்கு மூலம்  தந்துள்ளீர்கள்.பணமாக வேண்டாம் தங்கமாக தாருங்கள் என்பதற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசங்கள் உள்ளது ?

வாரியத்தலைவர் பதவி எதற்கு மக்களுக்கு உதவிகளை வாரி  வழங்கவா?
நாங்கள் நம்பி விட்டோம்.

ஆனால் அமைசசர் பதவியை கொடுக்க முடியாதவர்களை சமாதானம் செய்யவே இங்கு வாரியத்தலைவர் பதவிகள் கொடுக்கப்படுகின்றன.அது எதற்காக என்று தெரியாத சின்னப்பிள்ளைகள் அல்ல தமிழ் நாட்டு மக்கள்.

நேர்மையை அரசியலில் இன்றளவும் கடை பிடிக்கப்போய்தான்,உங்களைப்போல் நெளிவு சுழிவு தெரியாததால்தான்  ஜவகருல்லா ச.ம.உ. ஆக முடியாமல்  அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
============================================================================================
அதிமுக அடிமைகள் அடித்துக்கொண்டு அணியணியாக அலைவதெல்லாம் கோடிகளைகாப்பாற்றத்தான்.யாரு,யாரை ஆட்சியையும் கவிழ்க்க மாட்டார்கள்.

வெளியே மார் தட்டுவதோடு சரி.கவிழ்ந்தால்அனைவரின் வருமானமும் போய்விடும்.மேலும் பாஜக அரசால் வருமான வரி ஆய்வும் நடக்கும்.

எனவே மீதிநாட்களையும் நித்திய கண்டம் பூர்ணாயுசு கணக்கில் கடத்திக் கொ ள்வார்கள்.

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தாலும்,வாக்களிக்க விட்டாலும் அதன் பின்னர் பாஜக பேச்  சை கேட்காவிட்டால் ஆட்சி அம்பேல்தான்.இன்றைய அதிமுக நிலை தலையில்  மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடு நிலைதான்.
ஓடும்வரை ஓடட்டும் என்று அடித்துபிடித்து காலத்தை ஓட்டுவார்கள்.பிரதமர்,ஆளுநர் ,காவல் துறை,தேர்தல் ஆணையம் ஆதரவு அதிமுகவுக்கு இருப்பதால் திமுக ஒன்றும் செய்ய முடியாது.

இதை திமுக செயல் தலைவர் தளபதி உணர்ந்துதான் ஓடும்வரை ஓடட்டும் என்று விட்டிருக்கிறார்.
ஆட்சி கவிழ்ந்த பின்னர் அதிமுகவாவது,ஆட்டு திமுகவாவது என்பதுதான் இன்றைய நிலை.
=============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...